Tuesday, November 27, 2007

மர்டர் மிஸ்ட்ரி - அத்தியாயம் ஈ

நல்லவேளை. காலமித்ரா இந்தமுறை லேண்ட் ஆன இடம் ஆள் அரவமற்று அமைதியாக இருந்தது. லொக்கேஷன் ஸ்கிரீன் "கடம்பூர்" என்று மினுக்கியது. காலமித்ராவை, ஒரு புதரின் பின்னே மறைவாக பார்க் பண்ணினேன். பின்பு அதிலிருந்து இறங்கி, நான் வந்துள்ள இடத்தை சுற்றி பார்த்தேன்.

கடம்பூர் நகர், சம்பூவரையர் என்னும் சிற்றரசர்கள் ஆட்சி செய்த இடம். சோழ நாட்டிற்கு கீழே, கடம்பூர் எல்லைக்குள் மட்டும், வரி வசூலித்து, ஆட்சி நிர்வாகம் செய்ய அனுமதி உடைய சிற்றரசு. தொலைவில் அரண்மனை கோட்டைச் சுவர் நீண்டு, உயர்ந்து இருந்தது. அதற்கு உள்ளே புலிக்கொடி பறந்தது. கோட்டை மதிலுக்கு வெளியே அகலமான அகழி இருக்க, அதனுள்ளே சேறும், நீறும், முதலையும் இருந்தது.

அகழியை ஒட்டி சிறிது தூரம் நடந்தேன். அரண்மனைக்கு உள்ளே எப்படி செல்வது? முகப்பு வாயில் வழியே நுழைந்தால், காவலனின் பல கேள்விகளுக்கு பதில் கூற வேண்டியது வரும். அது ரிஸ்க். காலமித்ராவில் அட்சரேகை டிகிரி செகண்டில் சிறிது மாற்றம் ஏற்படுத்தி உள்ளே செல்லலாம். எனினும், காலமித்ராவை அரண்மனைக்கு உள்ளே பாதுகாப்பாய் மறைத்து வைப்பது எளிதல்ல. என்ன செய்யலாம்? யோசித்துக் கொண்டே நடந்தேன்.

ஒரு பாழடைந்த அய்யனார் கோவில் தென்பட்டது. அந்த இடத்தில் ஒரு கோவில் இருந்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில் அருகில் யாரும் வசிப்பது போலவே தெரியவில்லை. மக்கள் உபயோகிக்கும் வழிப்பாதை கூட அருகில் எதுவும் இல்லை. இத்தகைய இடத்தில், ஒரு கோயில் இருந்தால் இவ்வாறு பாழடைந்துதான் இருக்கும்.

கடவுளை நம்பினோர் கை விடப்படார். அரண்மனைக்கு உள்ளே செல்ல ஒரு மார்க்கம் வேண்டும் என்று மனதில் அய்யனாரிடம் வேண்டினேன். பின்பு அய்யனார் சிலையை இடமிருந்து வலமாய் சுற்றி வந்தேன். அப்போது, சிலையின் கையில் உள்ள வாள் எனக்கு வித்தியாசமாகப்பட்டது. அருகில் சென்று பார்த்தேன். அதன் வாள் பிடி பித்தளையில் செய்திருக்க, கைப்பிடியையும், வாளையும் இறுக்கிப் பிடிக்கும் செம்புக் குமிழ் பெரிய அளவில் வித்தியாசமாய் இருந்தது. குமிழை என் விரல்களால் பற்றினேன். அதில் சிறிது ஆட்டம் இருந்தது. ஏதோ உந்துதலில், அந்தக் குமிழை ஒரு சுழற்று சுழற்றினேன்.

ர்...ர்...ர்...

ஒரு கதவு நகரும் ஓசை கேட்டது. சுற்றும் முற்றும் பார்த்தேன். கோவில் அருகில் உயர்ந்து வளர்ந்துள்ள ஒரு ஆலமரத்தின் அடியில், கீழ்தரை விலகிக் கொண்டிருந்தது. ஆச்சர்யம் மேலிட அதன் அருகில் சென்று பார்த்தேன். உள்ளே ஒரு படிக்கட்டு கீழ் நோக்கி இறங்கியது.

இதயம் படபடக்க, அதனுள் இறங்கினேன். பத்து படிகள் இறங்கியதும், வாளில் உள்ள குமிழ் போன்று, ஒரு செம்புக் குமிழ் சுவரில் இருந்தது. அதனை சுழற்ற, மேல் கதவு மூடிக் கொண்டது! கும்மிருட்டாய் ஆனது.

என் பென் டார்ச்சை எடுத்து ஆன் செய்தேன். பாதையோ மேலும் இறங்கிக் கொண்டே சென்றது. நானும் சத்தமே எழுப்பாமல் இறங்கினேன். ஓரிடத்தில் படிகள் நின்று போய், நேர்பாதையாக செல்ல ஆரம்பித்தது. இது நிச்சயம் அரண்மனைக்குள் செல்லும் சுரங்கப் பாதையாகத் தான் இருக்கும். அய்யனார் நமக்கு சரியானபடி வழி காட்டியுள்ளார் என்று எண்ணிக் கொண்டே நடந்தேன். பத்து நிமிடம் நடந்ததும் நேர்பாதை முடிவுக்கு வந்தது. மீண்டும் படிகள் மேல் நோக்கி ஏறியது. என் கால்களில் மெதுவான நடுக்கத்துடன் மேலே ஏறினேன். இந்த பாதை எங்கு முடிவுறும்? இதன் வாசல் எந்த அறையில் இருக்கும்? சம்புவரையர் அறையிலா? அல்லது அவரது மகள், மணிமேகலையின் அறையிலா?

ஏறிச் சென்ற படிகள் ஒரு இருட்டு அறையில் முடிந்தது. அந்த அறை பழைய உபயோகமில்லாத சாமான்களால் நிரம்பியிருந்தது. இந்த சுரங்கப் பாதை வாசல் எளிதில் தெரியாமலிருக்க ஒரு ஓவியம் மூலம் மறைத்திருந்தது. அதனை சிறிது நகர்த்தி வைத்தேன். அந்த அறையை மேலும் ஒருமுறை நன்கு பார்த்து விட்டு, பின்பு டார்ச்சை அணைத்தேன்.

அந்த அறையோடு சேர்ந்த மற்றொரு அறையில் வெளிச்சம் தெரிந்தது. அதன் வாசல் ஒரு திரையால் மூடப்பட்டு இருந்தது. நான் மெதுவாக பூனை போல நடந்து அந்த வாசலை அடைந்தேன். திரையை சிறிது விலக்கி எட்டிப்பார்த்தேன். உள்ளே, இரண்டு பெண்கள் பேசிக் கொண்டு இருந்தனர். தலையை உடனே உள்ளே இழுத்துக் கொண்டேன். வேறு வழியில் அந்த அறைக்கு செல்லலாமா என்று பார்த்தேன். அந்த அறைக்கு மேலும் ஒரு வாசல் இருந்தது. அதற்கும் திரை இருந்தது. அந்த வாசல் உள்ள இடத்தை, அறையில் உள்ள உடை மாற்றும் நிலைக் கண்ணாடி மூலம் மறைத்து வைத்திருந்தனர்.

நான் திரையை விலக்கி, நிலைக் கண்ணாடியின் பின்புறம் ஒளிந்து கொண்டேன். பின்பு கண்ணாடி பிரேமில் உள்ள டிசைன் இடைவெளி வழியாக அறையை கவனித்தேன்.

ஒரு மிகப்பெரிய படுக்கை அறை. விஸ்தாரமாய், அதே சமயம் அழகாகவும் இருந்தது. அறையின் நடுவே, யானை தந்தங்களினால் அலங்காரம் செய்யப்பட்ட ஒரு உயர்ரக கட்டில் இருந்தது. அதன்மீது மெத்தையும், விலையுயர்ந்த விரிப்பும் விரிக்கப் பட்டிருந்தன. சுவரில் வேட்டையாடி பதப்படுத்தப்பட்ட மிருகங்களின் தலைகள் இருந்தன. சுவர்கள், அழகிய ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நிலைக் கண்ணாடி, மேஜை, நாற்காலி என பலவித பர்னீச்சர்களும் ஆடம்பரமாக இருந்தன. ஆங்காங்கே அழகிய விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.

கட்டிலின் மீது அமர்ந்து கொண்டு இரு பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர். பகட்டான உடைகள், அணிகலன்களால் இருவருமே ஜொலித்துக் கொண்டிருந்தனர். ஒருத்தி பழுவேட்டையர் என்ற சிற்றரசரின் மனைவி நந்தினி. மற்றொருத்தி இந்த அரண்மனையின் செல்லப் பெண், சம்புவரையரின் மகள் மணிமேகலை. இவர்களில் யாரேனும் ஒருவர் கூட கொலைக் குற்றவாளிகளாக இருக்கலாம். ஏனென்றால், இந்த சிற்றரசர் குலத்தினர், ஆதித்த கரிகாலரிடம் வெறுப்பு காட்டியே வந்துள்ளனர்.

அப்போது வெளியே தடதடவென்று மதயானை நடந்து வருவது போல சத்தம் கேட்டது. உடனே மணிமேகலை அவசர அவசரமாய் அந்த அறையினுள் இருந்த ஒரு மறைவிடத்தில் மறைந்து கொண்டாள். கதவை திறந்து கொண்டு ஒரு வாலிபன் கம்பீரமாக நுழைந்தான்.

அட.. இது நம் ஹீரோ அதித்த கரிகாலர்! இவர் கடம்பூர் அரண்மனைக்குள் இருக்கிறார் என்றால்... இன்றுதான் சம்பவம் நடக்கப் போகிறதா?

எனக்குள் பரபரப்பு தொற்றிக் கொண்டது. முகம் குப்பென்று வியர்த்தது. உள்ளே நுழைந்த கரிகாலர், நந்தினியுடன் அமைதியாகவே பேசிக் கொண்டிருந்தார். எனினும் அவர் கையில் ஒரு வாள் இருந்தது. இந்த வாள்தான் அவர் உயிரை குடிக்கப் போகிறதா?

மணிமேகலையைப் பார்த்தேன். அவளோ தன் மறைவிடத்தில் இருந்து சிறிதும் வெளிக்காட்டாமல் இருந்தாள். அப்போது பின்புறம் லேசான சத்தம் கேட்க, திரையை விலக்கிப் பார்த்தேன். 'திக்'கென்று இருந்தது. சுரங்கப்பாதை வாசல் அருகே ஒருவன் நின்று கொண்டிருந்தான். ஆதித்த கரிகாலரும், நந்தினியும் பேசுவதை அவன் ஒட்டு கேட்டுக் கொண்டிருந்தான். யாரிவன்? எப்படி இங்கு வந்தான்? அவனை நன்றாக உற்றுபார்த்தேன். எனக்கு அவனை அடையாளம் தெரிந்தது. வந்தியத் தேவன். குந்தவையின் காதலன். ஆக, இவன்தான் ஆதித்த கரிகாலரை கொல்லப் போகிறானா?

நான் வந்த சுரங்கப் பாதை வழியாகத்தான் வந்தியத்தேவனும் வந்திருக்க வேண்டும். அடேய் வந்தியத்தேவா! நான் சந்தேகப்பட்டது சரியாகத்தான் உள்ளது. நீதான் கொலைகாரனா? ஆனால்... நீ யார் கையாள்? கரிகாலரின் தம்பி அருள்மொழி வர்மனுக்கா? அல்லது கரிகாலரின் சித்தப்பா உத்தமச் சோழருக்கா? இல்லை பழுவேட்டையர்களுக்கா? யாருக்காக நீ இந்த துரோகத்தை செய்யப் போகிறாய்?

இதற்கிடையே கரிகாலரின் பேச்சில் வேகம் கூட ஆரம்பித்தது. உச்சஸ்தாயில் கோபமாக பேசினார். நந்தினி ஏதோ சொல்ல முற்பட்டும், அதனை கவனிக்காமல், வெறித்தனமாய் பேசினார்.. போகப் போக நந்தினியும் கோபமடைய ஆரம்பித்தாள். இருவர் பேச்சிலும் பொறி பறந்தது.

நந்தினியா? வந்தியத்தேவனா? யாரந்த கருப்பு ஆடு? யாருடைய கை கொலை செய்யப் போகிறது? இருவரையும் மாறி மாறி கவனித்தேன்.

திடீரென்று சுரங்கப்பாதை வழியே மற்றொரு ஆஜானுபாகு உருவம் தோன்றியது. அந்த உருவம் வந்தியத்தேவன் பின்புறம் வந்து, இடது கையால், அவன் கழுத்தை சுற்றி இறுக்கியது.

இவர்... இவர்... பழுவேட்டையர் அல்லவா? பழுவூர் குலத்தின் அரசர் அல்லவா? அப்படியென்றால் பழுவேட்டையர்தான் கொலையாளியா? வந்தியத்தேவன் நல்லவன்தானா?

பழுவேட்டையர் குலத்தினர், விஜயாலயச் சோழர் காலத்தில் இருந்தே, சோழ பேரரசிடம் நெருக்கமாக இருந்தனர். விஜயாலயர், ராஜாதித்தர், அரிஞ்சயர், கண்டராதித்தர், சுந்தரச்சோழர் என அனைவர் காலத்திலும், பழுவேட்டையர்கள் உயர்ந்த பதவியில் அமர்த்தப்பட்டு, மரியாதையாக நடத்தப்பட்டனர். சோழ சிம்மாசனத்தை யார் அலங்கரித்தாலும், அவர்களுக்கு அடுத்த ஸ்தானத்தை உடையவர் பழுவூர் குலத்தினராகவே இருந்தனர்.

ஆனால், ஆதித்த கரிகாலர் இளவரசு பட்டத்தை அடைந்ததும், அவருக்கும், அப்போதைய பழுவேட்டையருக்கும் சிறுசிறு உரசல்கள், மனஸ்தாபங்கள் தோன்றின. அதனை பேசி தீர்ப்பதற்கு பதில், இருவருமே அதை மேலும் மேலும் வளர்த்தனர். பழுவேட்டையர், அளவுக்கு அதிகமாய் சோழப் பேரரசில் ஆதிக்கம் செலுத்துவதாய் கரிகாலர் எண்ணினார். நேற்று முளைத்த சிறு பையன் தன்னை மரியாதைக் குறைவாய் நடுத்துவதாக பழுவேட்டையர் எண்ணினார்.

இந்த ஆதிக்க போராட்டம் கொலை வரை இட்டுச் செல்வது ஒன்றும் அதிசயமில்லை.

வந்தியத்தேவன் தன் மீது தொடுக்கப்பட்ட திடீர் தாக்குதலால், முதலில் தடுமாறி நிலை குலைந்தான். பின்பு ஒருவாறு சமாளித்து அவர் பிடியை விலக்க போராடினான். என்ன நடக்கப் போகிறதோ? இருட்டு அறையில் நடப்பதை நன்கு கவனிக்க இரண்டு அடி முன்னே வந்ததும்தான் என் தவறை உணர்ந்தேன். உணர்ச்சிவசப்பட்டு, கண்ணாடி மறைவிலிருந்து வெளியே வர, என் மீது வெளிச்சம் பட்டது.

"ஏய்... யார் நீ?" ஆவேசத்துடன் என்னைப் பார்த்து கேட்டார் கரிகாலர்.

"நான்... நான்..." பதில் வராமல் தடுமாறினேன். பாண்டிய நாட்டு எதிரியாக இருப்பேனோ என்று நினைத்த அவர், என் மீது பாய்ந்து, தன் வலது கையால் என் கழுத்தைப் பிடித்து சுவற்றோடு அமுக்கினார். அவரின் வஜ்ர கைகளில் இருந்து என்னால் நகர முடியவில்லை. அவர் என்னை அப்படியே தூக்கினார். ஹக்... ஹக்... முச்சு திணறினேன். நெஞ்சை அடைத்தது. கண்கள் இருண்டன. எப்படியாவது தப்பிக்க வேண்டும்.. என்ன செய்வது? எப்படி தப்பிப்பது?

தற்பாதுகாப்புக்காக, என் இடுப்பில் இருந்த விஜயாலயர் கத்தியை உருவினேன். ஆதித்த கரிகாலர் இடது மார்பை நோக்கி வேகமாய் பாய்ச்சினேன். கரிகாலர் தன் பிடியை விட்டுவிட்டு, கண நேரத்தில் துடிதுடித்து என் கண் முன்னே இறந்து விழுந்தார். அதிர்ந்து போனேன் நான்.

நடந்த சம்பவங்களை கண்டு நந்தினியும் அதிர்ச்சியடைந்து இருக்க, மணிமேகலையோ நடந்ததே அறியாமல் தன்னிடத்தில் முடங்கி இருக்க, வந்தியத்தேவனும் கீழே மயங்கி கிடந்ததை கவனித்தேன்.

ஆனால், பழுவேட்டையரோ என்னை கவனிக்காமல், நந்தினியை நோக்கி, "அடிபாதகி, உன் கொலைப் பழியை நிறைவேற்றி விட்டாயே..." என்று கத்திக் கொண்டே வந்தார்.

பழுவேட்டையரின் எதிர்பாராத விஜயத்தால், மேலும் குழப்பமடைந்த நந்தினி திணறி நிற்க, நான் சத்தமில்லாமல் நகன்று, வந்த வழியே திரும்பி ஓடி வந்து, காலமித்ராவில் ஏறி 'ரிட்டன்' பட்டனை தட்டி 2058க்கு திரும்பி வந்தேன்.

ஆதித்த கரிகாலரின் சூடான ரத்தம் வழிந்து கொண்டிருந்த கத்தியை, நேப்பியர் பாலத்திற்கு கீழே, கூவத்தில் வீசி எறிந்து விட்டு, காலமித்ராவை TTOவில் ஒப்படைத்து விட்டு, என் வீட்டுக்கு வந்தும், என்னுடைய நடுக்கம் மட்டும் குறையவே இல்லை.

ஹலோ! சரித்திர ஆய்வாளர்களே! கரிகாலரை கொன்ற கத்தியை கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என்று கூவத்தை கிளறி, என்னை மாட்டிவிட்டு விடாதீர்கள்.

- எழுதியவர் ஸ்ரீதேவி
எழுத்தாளினிளர் ஸ்ரீதேவியை நேரடியாக பாராட்ட/திட்ட :- 9842422928

Friday, November 23, 2007

மர்டர் மிஸ்ட்ரி - அத்தியாயம் இ

காலமித்ரா வந்து இறங்கிய இடத்தில், எண்ணிக்கையில் அடங்காத அளவிற்கு மக்கள் இருந்தனர். நூற்றுக்கணக்கில் அல்ல. ஆயிரக்கணக்கில் அல்ல. லட்சக்கணக்கில் இருந்தனர்! அனைவரும் சாதாரண மக்கள் அல்ல. போர் வீரர்கள்! ஆம். கையில் வாளும், கேடயமும் தாங்கி உக்கிரமாக போர் புரிந்து கொண்டிருந்தனர். குதிரைகளோடு குதிரைகளும், யானைகளோடு யானைகளும் கூட, சண்டை போட்டுக் கொண்டிருந்தன. இறந்த உடல்களோ மலை போல குவிந்து கிடக்க, ரத்த சேறுகளும், சதை துண்டுகளும் பல இடங்களில் சிதறி கிடந்தன.

லொக்கேஷன் ஸ்கிரீன் "திருப்புறம்பயம்" என்று காட்டியதை பார்த்ததும், எனக்கு அனைத்தும் விளங்கியது. அடடா! திருப்புறம்பயம் போரின் நடுவே அல்லவா வந்துள்ளேன்! காலமித்ரா காற்றைக் கிழித்துக் கொண்டு இக்களத்தில் தோன்றியதால், மிகப் பெரிய சலசலப்பு ஏற்பட்டது. அதனை விவரிக்கும் முன், இங்கு நடைபெற்று முடிந்த நிகழ்வுகளை விளக்குவது மிக அவசியம்.

லேட்டர் சோழாஸ் என்று அழைக்கப்படும் பிற்காலத்திய சோழர் பரம்பரையின், பிரசித்தி பெற்ற முதல் மன்னர் விஜயாலயச் சோழர். கிபி ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், வடக்கே பல்லவர்களும், தெற்கே பாண்டியர்களும் கோலோச்சி இருந்தனர். சோழ நாடு மிகச் சிறிய அரசாய் அப்போது இருந்தது.

பாண்டியர்களுக்கும், பல்லவர்களுக்கும், சிறு சிறு பிரச்சனைகளில் அடிக்கடி போர் மூள்வது வழக்கம். அதேபோல் இம்முறையும் , பாண்டிய மன்னர் வரகுண வர்மனுக்கும், பல்லவ மன்னர் அபராஜித வர்மனுக்கும், திருப்புறம்பயம் என்னும் கிராமத்தில் போர் நடந்தது. சோழர் குலம் தழைத்தோங்குவதற்கு, பாண்டியர்கள் தோல்வி அடைவது அவசியம் என்பதை உணர்ந்த விஜயாலயர், இந்தப் போரில் பல்லவர்களுக்கு உதவியாய் களம் இறங்கினார். விஜயாலயச் சோழரின் வீரத்தினால்தான் இப்போரில் பல்லவர்களுக்கு வெற்றி கிட்டியது என்பது வரலாறு. இப்போருக்கு பின்பு சோழர்கள் தங்கள் எல்லையை விரிவுபடுத்தி, மேலும் இரண்டு தலைமுறைக்குள் பெரிய சாம்ராஜ்யத்தையே தோற்றுவித்தனர். நானூறு வருடத்திற்கும் மேலாக நீடித்த இந்த சாம்ராஜ்யத்திற்கு அடித்தளமாய் அமைந்ததே திருப்புறம்பயம் போர் வெற்றிதான்.

இத்தகைய பிரசித்தி பெற்ற போரின் நடுவேதான் காலமித்ராவுடன் நான் வந்துள்ளேன். இரண்டு நாட்கள் முடிந்து, மூன்றாவது நாளாக, இப்போது போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. இரண்டு நாட்களாய் நடந்த போரில், பல்லவர்களுக்கும், சோழர்களுக்கும்தான் சேதம் அதிகமாக இருந்தது. பல்லவர்களின் பிரதான தளபதிகள் கடுமையாக தாக்கப்பட்டு பாசறையில் முடங்கிக் கிடந்தனர். வீரத்திலும், எண்ணிக்கையிலும் பாண்டியர்களின் கையே ஓங்கி இருந்தது. மூன்று நாள் போர் களைப்பே தெரியாமல், மீன் படையினர் பல்லவர்களை துவம்சம் செய்து கொண்டிருந்தனர். பாண்டிய நாட்டுத் தளபதிகளும், தங்களுடைய படை வீரர்களை கட்டுக் கோப்பாக நடத்திச் சென்று, சோழர்களை நொறுக்கிக் கொண்டிருந்தனர். எஞ்சியிருந்த சோழர்களும், பல்லவர்களும் தோல்வி முகத்தில், பின்வாங்க தயாராய் இருந்தனர். பாண்டியர்களுக்கு வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் இருந்த அந்தக் கடைசி நேரத்தில்தான், நானும் காலமித்ராவும் திருப்புறம்பயம் போர்க்களத்தில் திடீரென்று தோன்றினோம்.

என்னுடைய திடீர் வருகையால், போர்க்களத்தில் குழப்பமும், சலசலப்பும் தோன்றியது. இவன் பேயா, பிசாசா, தேவனா, மனிதனா என்று பயந்தனர். இது என்ன ரதம்! வித்தியாசமாக இருக்கிறதே! இவன் அணிந்திருக்கும் உடையும் வித்தியாசமாக இருக்கிறதே என்றெல்லாம் பாண்டியப் படையினர் என்னைப் பார்த்து குழம்பினர்! திகைத்தனர்! மிரண்டனர்!

சோழர்களுக்கு உதவ, கடவுளே மனித ரூபத்தில் வந்துள்ளார் என்கிற அளவில் அங்கு பீதி கிளம்பியது. பாண்டியப் படையினர் பின்வாங்கி, பதறி, சிதறி ஓடினர். பலவித வதந்திகளும், கற்பனைக் கதைகளும் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவ, மொத்த பாண்டிய படையினரும், தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடியது. எஞ்சி நின்ற சிற்சில வீரர்களையும், சோழப் படையினர் விரட்ட, நிமிட நேரத்திற்குள் நிலைமை தலைகீழானது. பாண்டியப் படைக்கு தோல்வி! சோழர் படைக்கு வெற்றி! ஆஹா! திருப்புறம்பயம் போர் வெற்றிக்கு, நானும் அல்லவா ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளேன்! நினைக்கவே திரில்லாக இருந்தது.

அதற்குள் சோழ வீரர்கள் என்னை சூழ, காலமித்ராவில் இருந்து இறங்கி, அதன் கதவை பூட்டினேன். காலமித்ரா லாக் ஆகி இருக்கும்வரை, அதற்கு யாராலும் சேதம் விளைவிக்க முடியாது. நான் இறங்கியதும், சுற்றியுள்ள வீரர்களில் தலைவன் போல் இருந்தவன் என்னை அணுகி, தங்கள் அரசர் என்னை அழைப்பதாய் கூறினான்.

விஜயாலயர் என்னை அழைக்கிறார். அவரை நேரில் சந்திக்கப் போகிறேன். போர் வெற்றிக் களிப்பில், எனக்கு பரிசு ஏதும் கொடுப்பாரோ? என்றெல்லாம் யோசித்துக் கொண்டே சோழர் பாசறைக்கு நடந்தேன்.

போரில் தொண்ணூற்றாறு விழுப்புண்களை விஜயாலயர் பெற்றார் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. தொண்ணூற்றி ஆறு இருக்குமா என்று தெரியவில்லை. எனினும் கடுமையான காயங்கள் பல அவர் உடலில் இருக்க, மருத்துவர்கள் குழு, அவருக்கு மருந்து போட்டுக் கொண்டிருந்தது.

கை கூப்பி விஜயாலரை வணங்கினேன். ஆனால், அவரோ என் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் கண்களில் கோபம் கொப்பளித்தது. வார்த்தைகளில் நெருப்பின் சீற்றம் இருந்தது.

"யாரடா நீ?" என்று கேட்டார்.

"ஒரு வழிப் போக்கன்" என்றேன்.

"வழிப் போக்கனுக்கு போர்க்களத்தில் என்ன வேலை?"

"வேடிக்கை பார்க்க வந்தேன்!"

"போர் என்ன வேடிக்கை விஷயமா? எங்களுடைய வாள் பலத்தையும், புஜபலத்தையும் காட்டி வெல்ல வேண்டிய போர் அல்லவா இது? நீ ஏதோ சித்து வேலைகள் செய்து, பயமுறுத்தி அவர்களை விரட்டி விட்டாயே? மாய மந்திரத்தில் வெற்றி பெற்றார்கள் சோழர்கள் என்ற அவச்சொல் வரக் காரணமாக இருந்து விட்டாயே! துரோகி!" என்று கோபத்தில் வெடித்தார் விஜயாலயர்.

எனக்கு உதறல் எடுத்தது. பயத்தில் நடுங்கினேன். வியர்வை ஆறாய் ஓட ஆரம்பித்தது.

"நீ எந்த நாடு?"

"இந்திய நாடு"

"அது எங்கே இருக்கிறது? பல்லவ நாட்டிற்கு அருகிலா?"

"இல்லை. இந்திய நாட்டிற்குள்தான் பல்லவ நாடும், சோழ நாடும் உள்ளது!" என்று நான் கூறியதும், விஜயாலயருக்கு கோபம் தலைக்கேறியது.

"இவன் நிச்சயம் வேற்று நாட்டு ஒற்றன்தான். மாறு வேடத்தில், நம் புகழை கெடுக்க வந்துள்ளான். மந்திரங்கள் கற்றவனாகவும் உள்ளான். இவனை சும்மா விடக்கூடாது. இந்த அதிகப்பிரசங்கியை சிரச்சேதம் செய்யுங்கள்!" என்று தன் வீரர்களுக்கு கட்டளையிட்டார்.

விஜயாலயச் சோழரின் ஆவேசக் கட்டளையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நான், "ஐயா, நான் ஏதோ உளறியதை, பெரிய மனது பண்ணி மன்னிக்க வேண்டும். நான் ஒரு சாதாரண பயணிதான். ஒற்றன் அல்ல. பல்லவத் தலைநகரம் காஞ்சி மாநகருக்கு அருகே உள்ள சென்னை என்னும் குக்கிராமத்தில்தான் நான் வசிக்கிறேன்! நான் செய்த பிழைகளை தயவு கூர்ந்து பொறுத்து அருள வேண்டும்!" என்று மன்னிப்பு கேட்டதும், விஜயாலயச் சோழர் சிறிது நேரம் சிந்தித்தார்.

தன் தொண்டையை செருமிக் கொண்டு, "நீ ஒற்றன் அல்ல என்று ஒப்புக் கொள்கிறேன். எனினும், மாய மந்திரத்தில் சோழன் வெற்றி பெற்றான் என்ற அவச்சொல் வருவதில் எனக்கு விருப்பமில்லை. உனக்கு ஒரு வாய்ப்புத் தருகிறேன். என்னுடைய வீரன் ஒருவனுடன் நீ கத்திச் சண்டை போட வேண்டும்! நீ வெற்றி பெற்றால் உன்னை உயிருடன் விட்டு விடுகிறேன். இல்லையேல், உன்னை வென்று, எங்கள் மீது வரும் அவச்சொல்லை போக்கி விடுகிறேன்." என்று உரத்த குரலில் முழக்கமிட்டு, வஜ்ரவேலன் என்ற ஒரு வீரனை அழைத்தார்.

என்னடா இது! பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் மாறி விட்டது. தண்டனையில் இருந்து தப்பிக்க வழி தேடினால், சிக்கல் அதிகமாகிக் கொண்டே வருகிறது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல, பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. எப்படியாவது இங்கிருந்து தப்பி, காலமித்ராவிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, என் கையில் கத்தி ஒன்று திணிக்கப்பட்டது.

என்னுடன் கத்திச் சண்டை போட வஜ்ரவேலன் தயாரானான். வேறு வழியில்லை. நானும் கத்தியைச் சுழற்றி அவனுடன் சண்டை போட ஆரம்பித்தேன். ஒண்டிக்கு ஒண்டி என்பதால் எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. நானும் சம்மர் கோர்ஸில் சிலம்பம், டேக்வாண்டோ, கராத்தே போன்றவை பயின்றுள்ளேன். எனவே என்னால் முடிந்தவரை நன்றாகவே சண்டை போட்டேன். எனினும் வஜ்ரவேலன்ம் வித்தை தெரிந்தவனாக இருந்ததால், அவன் கையே ஓங்கியிருக்க, நான் தற்காப்பு மட்டுமே பண்ணினேன். பழங்கால எம்ஜியார் பட... இல்லை, இல்லை. எதிர்காலத்தில் வர இருக்கும் எம்ஜியார் பட வாள் சண்டைகள் என் நினைவுக்கு வர, சிறிது ஆக்ரோஷமாக சண்டையிட்டேன்.

நேரம் ஆக ஆக என் வேகம் குறைய ஆரம்பித்தது. இயற்கையிலேயே அவன் வீரனாய் இருந்ததாலும், சுற்றிலும் வீரர்கள் அவனுக்கு சப்போர்ட் பண்ணியதாலும், என் கைகள் தளர ஆரம்பித்தன. வெகு விரைவில், என் கத்தியை தட்டிவிட்டு விட்டு என்னை கொன்று விடுவான் வஜ்ரவேலன், என்று தோன்றியது. ஏதேனும் செய்ய வேண்டும். இல்லையேல் கதை கந்தலாகி விடும். மின்னல் போல ஒரு ஐடியா திடீரென்று தோன்றியது.

"பண்டைய தமிழர்கள் புறமுதுகு காட்டி ஓடும் நபர்களை தாக்க மாட்டார்கள்!"

இந்த எண்ணம் தோன்றியதுமே, சண்டையிலிருந்து சட்டென்று விலகி, சுற்றியுள்ள வீரர்களை தள்ளி விட்டு, திரும்பி பார்க்காமல் ஓட ஆரம்பித்தேன். ஓட்டம் என்றால் ஓட்டம்! அப்படியொரு ஓட்டம்! பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடினேன். ஓடிச்சென்று காலமித்ராவில் ஏறி அமர்ந்து, அதனை ஆர்டினரி மோடிற்கு மாற்றி, வெகு தொலைவிற்கு ஓட்டிச் சென்றேன். சோழ வீரர்கள் சிறிது தூரம் என்னை பின் தொடர்ந்து வந்தனர். பின்பு நின்று விட்டனர்.

ஒரு முப்பது நாற்பது கி..மீ. தொலைவு சென்றதும், ஆள் அரவமற்ற ஓரிடத்தில் நின்று என்னை ஆசுவாசப்படுத்தினேன். ஏதோ, இந்த மட்டிற்கு பிரச்சனை முடிந்ததே! இனி இதேபோல் தவறு செய்யக் கூடாது, என்று எண்ணிக் கொண்டேன். முதலில் என் உடைகளை மாற்ற வேண்டும்.

ஏற்கனவே வாங்கி வந்திருந்த சோழர் கால உடையில் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டேன். விஜயாலயர் கத்தியை இடுப்பில் செருகிக் கொண்டேன். தலைப்பாகையை சுற்றிக் கொண்டேன். ஷூவை கழற்றி விட்டு, மரச் செருப்பிற்கு மாறினேன். தலையை வேறு மாதிரி வகிடு எடுத்து சீவினேன். இப்போது கண்ணாடியில் என்னைப் பார்த்தால் எனக்கே அடையாளம் தெரியவில்லை. அசல் சோழ நாட்டு பிரஜை போலவே மாறி இருந்தேன்.

சோழ நாட்டு மேப்பை விரித்து வைத்து, கடம்பூர் அரண்மனை எங்கு உள்ளது என்று சரியாக குறித்துக் கொண்டேன். காலமித்ராவை டைம் மோடிற்கு மாற்றி, சரியான தேதியை டைப் செய்தேன். லொக்கேஷனுக்கு கடம்பூர் டிகிரியை எண்டர் செய்தேன். மீண்டும் ஒருமுறை அனைத்து டேட்டாவையும் சரிபார்த்துக் கொண்டேன். ஓகேதான் என்று உறுதியானதும், படபடக்கும் நெஞ்சோடு 'கோ' பட்டனை அழுத்தினேன்.

விர்ரூரூம்...

- எழுதிக் கொண்டிருப்பவர் ஸ்ரீதேவி
எழுத்தாளினிளர் ஸ்ரீதேவியை நேரடியாக பாராட்ட/திட்ட :- 9842422928

Monday, November 19, 2007

மர்டர் மிஸ்ட்ரி - அத்தியாயம் ஆ


காலமித்ரா அமைதியாய் ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தது. அதன் ஸ்கிரீனில் "இலக்கை அடைந்து விட்டோம்" என்று டிஸ்பிளே மினுமினுத்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன். தென்னை மரங்களும், பாக்கு மரங்களும் அடர்த்தியாய் வளர்ந்திருந்த ஒரு தோப்பின் நடுவே, காலமித்ரா நிலையாய் நின்று கொண்டிருந்தது. தொலைவிலோ, பச்சை பசேல் வயல்வெளிகளும் வாழைத் தோட்டங்களும், கண்ணைக் கவரும் வண்ணம் செழிப்பாக இருந்தது.

"இது என்ன இடமாக இருக்கும்?" என்று எனக்குள் எண்ணிக் கொண்டே, காலமித்ரா லொக்கேஷன் ஸ்கிரீனை பார்க்க, அது "அரிசிலாற்றங்கரை" என்று காட்டிக் கொண்டிருந்தது.

காலமித்ரா கதவை திறந்து கொண்டு, சோழ மண்ணில் குதித்தேன். உடல் முழுவதும் சிலிர்ப்பு ஏற்பட்டது. தொலைவில் நீர் பிரவாக ஓசை கேட்க, அத்திசையில் நடந்தேன்.

"ஆஹா! என்னவொரு ரம்மியமான காட்சி!" காவிரியின் கிளை நதியான அரிசிலாறு, சலசலவென்று வளைந்து நெளிந்து முழு வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது.

நம்முடைய காலத்திலோ, காவேரித் தண்ணீரை கண்ணால் பார்த்து ஐந்து வருடத்திற்கு மேல் ஆகிறது. நடுவர் மன்றம் என்றார்கள், இந்திய இறையாண்மைக் குழு என்றார்கள், பஞ்சாயத்து மன்றம் என்றார்கள். ஒவ்வொருவரும் ஒரு டி.எம்.சி. அளவை குறிப்பிட்டு, அதை கர்நாடகா திறந்து விட வேண்டும் என்றார்கள். எனினும், கர்நாடகா அசைந்து கொடுக்க வேண்டுமே?! "இந்த காவேரி பிரச்சனை எப்போதுதான் தீருமோ?" என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, "வீல்" என்று ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது.

ஏதோ ஒரு சோழர் குலப் பெண் ஆபத்தில் சிக்கியிருக்க வேண்டும். ஆற்று நீர் இழுத்துக் கொண்டு செல்கிறதா? என்றெல்லாம் பலவித சிந்தனை செய்து கொண்டே சத்தம் கேட்ட திசையை நோக்கி வேகமாகச் சென்றேன். ஆற்றங்கரையை ஒட்டி ஓங்கி வளர்ந்த ஒரு அடர்த்தியான மரத்தின் கீழே, சில பெண்கள் இருப்பதை கண்டேன். அவர்கள் முன் ஒரு இளைஞன், குதிரையோடு நின்று கொண்டிருந்தான். அவன், அந்த பெண்களை கலாட்டா ஏதும் செய்கிறானா? இல்லை, வேறு ஏதும் பிரச்சனையா? நானும் ஒரு மரத்தின் பின்னே மறைந்து கொண்டு அவர்களை கவனித்தேன்.

இப்போது பெண்களோ சிரித்துக் கொண்டிருந்தார்கள். இளைஞனோ ஏமாற்றமடைந்த முகத்தோடு இருந்தான். அந்தப் பெண்கள்தான், இளைஞனை கலாட்டா செய்கிறார்களா? அவர்கள் உற்சாக மிகுதியால் கத்தியதுதான் எனக்கு அலறல் சத்தமாய் கேட்டதா?

மொத்தம் ஆறு பெண்கள் அங்கு இருந்தார்கள். அவர்களின் நடுவே, ஆடம்பர உடைகள், ஆபரணங்களுடன் இரு பெண்கள் இருந்தனர். அதில் ஒரு பெண் மிகுந்த அழகுடன் இருந்தாள். இவள்தான் சோழர் குல இளவரசி குந்தவை தேவியாக இருக்குமோ?

காதை தீட்டி கொண்டு, அவர்கள் பேசுவதை கேட்க ஆரம்பித்தேன். அரைகுறையாய் காதில் விழுந்த வார்த்தைகளை வைத்து, அவள் குந்தவை என்றும், மற்றொரு ஆடம்பர உடை பெண், கொடும்பாளூர் இளவரசி வானதி என்றும், மற்ற பெண்கள் இவர்களின் தோழிகள் என்றும் அறிந்து கொண்டேன்.

குந்தவையின் அழகு என்னை பிரமிக்க வைத்தது. பொன் போன்று ஜொலிக்கும் நிறம், வட்ட வடிவ முகம், அகன்ற மையிட்ட கண்கள், குறும்புச் சிரிப்பு கலந்த பவளச் செவ்வாய், நீண்ட கருங்கூந்தல், கம்பீரத் தோற்றம். ஆஹா! குந்தவையின் அழகை மணியனோ, பத்மவாசனோ முழுமையாக காண்பிக்கவில்லை!

அப்படியென்றால் எதிரே உள்ள இளைஞன்தான் வந்தியத்தேவன் போலும். இவன் தான் குந்தவையின் காதலனாகி கரம் பிடிக்கப் போகும் அதிர்ஷ்டசாலியா? வந்தியத்தேவனை பார்த்தேன். அப்படியொன்றும் இவன் பிரமாதமாக இல்லையே. என்னையும் அவனையும் கம்பேர் பண்ணி பார்த்தேன்.

நானோ முடியை ஏற்றி சீவி, கலர் ஷேடிங் பண்ணி, நடுவில் சிறு பின்னல் போட்டு, லேட்டஸ்ட் ஸ்டைலில் இருந்தேன். அவனோ, வகிடு எடுத்து, முடியை இறக்கிவிட்டு சீவியிருந்தான். சொட்டை இருக்குமோ என்னவோ! என்னிடம் ரே-பென் கூலிங்கிளாஸ் உள்ளது. அவனிடம் பிளாட்பாரம் கிளாஸ் கூட கிடையாது. இரண்டு காதிலும், பாட்டியின் பாம்படம் போல ஏதோ ஒன்றை தொங்க விட்டிருந்தான். பேகி பேண்ட், டீ-ஷர்ட் சகிதம் நான் இருக்க, அவனோ அரைப் பாவாடை போட்டிருந்தான்! என் இடுப்பில், "நேனோ ஸிம்ப்யூட்டர் கம் டீவீ அட்டாச்டு" லேட்டஸ்ட் செல்போன் தொங்கிக் கொண்டிருந்தது. அவன் இடுப்பிலோ, ஒரு பழங்கால வாள் தொங்கிக் கொண்டிருந்தது. இத்தாலியன் லெதர் பூட்ஸை நான் போட்டிருக்க, அவனோ மரத்தால் ஆன செருப்பு போன்ற ஒன்றை போட்டிருந்தான்.

மொத்தத்தில் அவன் டொங்கல் போல் இருந்தான். இவனைப் போயா குந்தவை லவ் பண்ணப் போகிறாள். எந்தவிதத்திலும் இவன் எனக்கு சமானம் கிடையாது. நானே குந்தவையை டிரை பண்ணலாமோ, என்று யோசித்தேன்.

அப்போது விசா ஆபீஸரின் எச்சரிக்கை ஞாபகம் வந்தது.

"நீங்கள் செல்லும் காலத்தின் சம்பவங்களிலோ, நபர்களிடமோ இடையூறு செய்யக் கூடாது..."

உடனே என் மனதை மாற்றிக் கொண்டேன். நாம் வந்த வேலையை மட்டும் கவனிப்போம். குந்தவை, வந்தியத்தேவனை லவ் பண்ணுகிறாள் என்றால், அது அவள் தலைவிதி. அதற்கு நாம் என்ன செய்வது? பாவம் குந்தவை!! என்று பரிதாபப்பட்டுக் கொண்டேன்.

அப்போது வந்தியத்தேவன் கோபமாய் குதிரையில் ஏறிச் சென்றான். ஏதோ ஊடல் போலும். அவன் கண்ணில் பட்டுவிடாமல், மரத்தின் பின்னே ஒளிந்து கொண்டேன்.

இவர்களுக்கிடையே நடந்த பேச்சுக்களை கவனித்ததில், இப்போதுதான் இருவரும் அறிமுகம் ஆகிறார்கள். இனி இவர்கள் நண்பர்களாகி, காதலர்களாகி, அருள்மொழியை வந்தியத்தேவன் சந்தித்து, அதித்த கரிகாலன் கடம்பூர் சென்று, கொல்லப்பட எப்படியும் மூன்று மாதங்கள் ஆகும் என்று நினைக்கிறேன். அதுவரை என்ன செய்வது?

எனக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, இந்த வந்தியத்தேவன் எங்கு செல்கிறான் என்று பின் தொடர்ந்து, ஏதும் சதி செய்கிறானா என்று பார்க்கலாம். எனக்கு என்னவோ இவன்தான் ஆதித்த கரிகாலரை கொன்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது! இளவரசரின் தம்பி அருள்மொழிவர்மனுடன் கூட்டு சதி செய்து, கொலை செய்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இல்லையேல், இவன் உத்தமச் சோழரின் கையாளாக இருக்கலாம். இவனை பின் தொடர்ந்து சென்றால் ஏதும் விஷயம் தெரியும். எனினும், ஆதித்த கரிகாலர் கொலை நடக்க இரண்டு மூன்று மாதங்கள் ஆகும். அதுவரை நானும் இங்கேயே இருந்தால், எனக்கு ஒதுக்கப்பட்ட டைம் முடிந்து விடும். நானோ, உரிய நேரத்தில் காலமித்ராவை திருப்பி ஒப்படைக்க வேண்டும்.

இரண்டாவது வழி, காலமித்ராவிலேயே மூன்று மாதம் எதிர்காலத்தில் சென்று, ஆதித்த கரிகாலர் கொலை செய்யப்பட்ட நாளுக்கு சென்று பார்ப்பது. நான் இரண்டாவது வழியையே தேர்ந்தெடுத்தேன்.

காலமித்ராவிற்கு அருகில் சென்று, கதவை திறந்து, ஏறி அமர்ந்தேன். அது இன்னும் டைம் மோடில்தான் இருந்தது. அதன் 'தேதி இன்புட்'டில் மாற்றம் செய்தேன். காலமித்ரா பயணிக்க தயாரானதும், 'கோ' பட்டனை அழுத்த என் கை நகர்ந்தது. அப்போதுதான் தேதியை கவனிக்க, செல்ல வேண்டிய வருடத்தை நூறு வருடம் முன்பாக, '869' என்று தவறுதலாக டைப் செய்துள்ளது தெரிய வர, அதனை திருத்த வேண்டும் என்று நினைப்பதற்குள், கை தன்னிச்சையாக 'கோ' பட்டனை அழுத்த...

விர்ரூரூம்...


- எழுதிக் கொண்டிருப்பவர் ஸ்ரீதேவி
எழுத்தாளினிளர் ஸ்ரீதேவியை நேரடியாக பாராட்ட/திட்ட :- 9842422928

Thursday, November 15, 2007

மர்டர் மிஸ்ட்ரி - அத்தியாயம் அ

2058ம் வருடம் நவம்பர் மாதம் 18ம் தேதி, நீண்ட க்யூவில் மூன்று மணி நேரமாய் நின்று கொண்டிருக்கும் நான்(பெயர் வேண்டாமே!), அலுத்துப் போயிருக்கும் போது, ஒரு வழியாய் என் முறை வர, கையில் உள்ள அப்ளிகேஷனை, டேபிளில் உட்கார்ந்திருந்த ஆபீஸரிடம் நீட்டினேன். அதனை வாங்கி அவர், கவனமாக வாசிக்கத் தொடங்கினார்.

ச்சே. இந்த க்யூவிற்கு மட்டும் எங்கும் குறைவில்லை. ரேஷனிற்கும், தண்ணீருக்கும்தான் க்யூ என்றால், இதற்குமா? காலத்தில் பயணம் என்பது சமீபகால கண்டுபிடிப்புதான் என்றாலும், இதற்கு விசா வாங்குவதற்கு, இத்தனை பேர் காத்திருக்கிறார்கள். கால இயந்திரம் - கதையிலும் கற்பனையிலும் மட்டுமே வலம் வந்து கொண்டிருந்த டைம் மிஷினை, இரண்டு வருடத்திற்கு முன்பு நெதர்லாந்து விஞ்ஞானி டேரல் ஹாக் கண்டுபிடித்ததும், உலகமே வியப்பில் ஆழ்ந்தது. இந்த மிஷின் மூலம் நாம் விரும்பும் எந்த காலத்திற்கும் பயணம் செய்யலாம். கால இயந்திரத்தில் நாம் செல்ல விரும்பும் தேதி மற்றும் 1000km சுற்றளவிற்குள் உள்ள இடம், இவற்றை கூறிவிட்டு, 'கோ' பட்டனை அழுத்தினால், உடனேயே, வினாடி நேரத்தில், அந்த காலத்தில், அந்த இடத்தில் இருப்போம்.

கிளியோபாட்ரா நிஜமாகவே அழகுதானா என்பதை நேரிலே பார்க்கலாம்! ஹிட்லரின் சிறுவயது வாழ்க்கையை அருகில் இருந்து பார்க்கலாம்! திப்பு சுல்தானின் வீரத்தை வீடியோவில் ஷூட் பண்ணலாம்! எதிர்கால விஞ்ஞான முன்னேற்றங்களை இன்றே பார்க்கலாம். இந்த இயந்திரத்தால் ஏற்பட்டுள்ள நன்மைகள் அளவிட முடியாதது.

எனினும் இதில் பயணம் செல்வதோ, ஓட்டுவதோ அந்தந்த நாடுகளின் அரசாங்க கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அப்ளிகேஷன், புரொசீஜர், மாமூல் என்றுதான் காரியத்தை சாதிக்க வேண்டியுள்ளது. டைம் மிஷினை ஓட்டுவதற்கு ஆறு மாதமாய் பயிற்சி எடுத்து, ஒரு வழியாய், போன வாரம்தான் T.T.O ஆபிஸில் லைசென்ஸ் பெற்றேன். லைசென்ஸ் பெறுவதற்கு ஃ போட வேண்டும். அதாவது, அவர்கள் குறிப்பிடும் இரண்டு எதிர்காலத்திற்கு சென்று அங்குள்ள T.T.O ஆபிஸில் கையெழுத்து மற்றும் ஆபீஸரின் புகைப்படம் முதலியவற்றை பெற்றுக் கொண்டு, நம்முடைய காலத்திற்கு திரும்பி வர வேண்டும். இவை எதிர்கால T.T.O ஆபீஸர்களின் பயோ டேட்டா ஃபைலுடன் ஒப்பிடப்பட்டு, சரியாக இருந்தால் மட்டுமே லைசென்ஸ் கிடைக்கும். வெற்றிகரமாக ஃ போட்டாலும், வழக்கமான மாமூல் கொடுத்துதான் ஆக வேண்டும்.

அடுத்து விசா பெற வேண்டும். அதற்கான அனுமதிக்கு தான், காலையிலேயிருந்து கால் கடுக்க க்யூவில் நின்று, இப்போது ஆபீஸரிடம் அப்ளிகேஷனை கொடுத்து உள்ளேன். விசாவிலும் மூன்று வகைகள் உள்ளன.

"எந்த காலத்திற்கு செல்கிறீர்கள் என்பது தெளிவாக இல்லையே" என்ற ஆபீஸரின் கனத்த குரல், என் சிந்தனை ஓட்டத்தை தடை செய்தது.

"சோழர்களின் காலம் என்று எழுதியுள்ளேனே சார்"

"சங்க காலத்திலும் சோழர்கள் உள்ளனர்! விஜயாலயர் காலமும் சோழர் காலம்தான்!"

"லேட்டர் சோழாஸ்" என்றேன்.

"காரணம்?"

"தஞ்சை கோயிலை கட்டிய ராஜராஜ சோழரையும், கடாரம் வென்ற ராஜேந்திரரையும், குலோத்துங்க சோழரையும் நேரில் பார்க்க யாருக்குதான் ஆசை இருக்காது?"

"டூரிஸ்ட் விசா கேட்டுள்ளீர்கள் இல்லையா?"

"ஆம்" என்றேன்.

விசாவிலும் மூன்று வகைகள் உள்ளன. டூரிஸ்ட், ஸ்டடி மற்றும் ரிசர்ச். பின்னது இரண்டும் பெறுவதற்கு, நிறைய கண்டிஷன்கள் உள்ளன. குறிப்பாக, எக்ஸ்டர்னல் கைடு என்ற பெயரில் ஒரு சோடாபுட்டி பேராசிரியரை உடன் அழைத்துச் செல்ல வேண்டும். இது என்னுடைய நோக்கத்திற்கு இடையூறாக இருக்கும். நான் சோழர்கள் காலத்திற்கு, பயணம் செய்வதற்கு முக்கிய காரணம் சுற்றுலா நோக்கம் அல்ல. சுந்தரச் சோழர் காலத்தின் பட்டத்து இளவரசர், அவரின் மூத்த மகன், ஆதித்த கரிகாலர், கடம்பூர் அரண்மனையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொலை செய்தது யார் என்று அறிந்து கொள்ள ஆசைப்பட்டுதான் சோழர் காலத்திற்கு செல்ல விரும்புகிறேன்.

ஆதித்த கரிகாலரின் மரணம் மர்மம் நிறைந்தது. அன்றிருந்த சிற்றரசர்களுக்குள் உட்பூசல் நிறையவே உண்டு. பழுவேட்டையர்கள், சம்புவரையர்கள் போன்றோர், ஆதித்த காரிகாலரை எதிர்த்து உட்கலகம் செய்தனர். மேலும் வீரபாண்டியன் மரணத்திற்கு பழிக்கு பழி வாங்க பாண்டிய நாட்டு படையினர் முயற்சித்து வந்தனர். எனவே ஆதித்த கரிகாலரை கொலை செய்தது பழுவேட்டையர்களா? சம்புவரையர்களா? பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளா? அல்லது சுந்தர சோழருக்கு அடுத்து பட்டத்திற்கு வந்த உத்தமச் சோழரா? இதை தெரிந்து கொள்வதே என்னுடைய உண்மையான நோக்கம்.

எனினும் இந்த காரணம் ஆராய்ச்சி வகையைச் சேர்ந்தது என்பதால், இதனை மறைத்து, டூரிஸ்ட் என்று குறிப்பிட்டுள்ளேன்.

"டூரிஸ்ட்டாக செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் அனைத்தும் தெரியுமல்லவா?" என்று என்னிடம் கேட்டார் ஆபீஸர்.

"நன்கு தெரியும் சார்"

"நீங்கள் அங்குள்ள நபர்களையோ, சம்பவங்களையோ இடையூறு செய்யக் கூடாது. வெறுமனே பார்வையாளராக மட்டும்தான் செல்கிறீர்கள் என்பதை எந்நேரமும் கவனத்தில் கொள்ள வேண்டும். O.K.?"

"O.K."

"வெல், உங்கள் விசாவை ஒன்பதாவது கவுண்டரில் பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய வெகிக்கிள் எண் 34. பெயர் காலமித்ரா. நீங்கள் செல்லும் காலம் கி.பி. 800ல் இருந்து 1300 வரை செட் செய்யப்பட்டுள்ளது. இன்றிலிருந்து மூன்று மாதம் உங்களுக்கு டைம். அதற்குள் நீங்கள் திரும்பி வந்து "காலமித்ரா"வை ஒப்படைக்க வேண்டும். நீங்கள் உங்கள் சுற்றுலா காலத்தில் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகளை மீண்டும் ஒருமுறை வாசித்துக் கொள்ளுங்கள். தவறு ஏதும் நிகழ்ந்தால், கடும் தண்டனை கிடைக்கும் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். யூ கேன் கோ நௌ", என்ற வழக்கமான எச்சரிக்கைகளை கூறிவிட்டு என்னை அனுப்பினார்.

விசாவை பெற்றுக் கொண்ட பின்பு, 34ம் எண்ணுடைய "காலமித்ரா" அருகில் சென்றேன். விசா கார்டை, காலமித்ரா கதவில் தேய்க்க, அதன் கதவு திறந்து கொண்டது. அதன் உள்ளே ஏறி அமர்ந்தேன்.

காலமித்ரா மிக அருமையான வாகனம். ஒரு நபர் மட்டுமே உட்கார வசதி உடையது என்றாலும், மிகவும் சொகுசான குஷன் மற்றும் லேட்டஸ்ட் வசதிகளுடன் இருந்தது. நான் பயிற்சி மேற்கொண்டதோ, ஒரு பழைய காயலான் கடை வாகனம்.

கால மித்ராவில் இரண்டு மோடு இருந்தது. ஒன்று ஆர்டினரி மோடு, மற்றொன்று டைம் மோடு. ஆர்டினரி மோடில், இது சாதாரண கார் போன்றே இருக்கும். டைம் மோடில் மட்டுமே காலத்தில் பயணிக்க முடியும்.

காலமித்ராவை ஆர்டினரி மோடில் வைத்துக் கொண்டு, நகரின் மிகப் பெரிய "T.T. மால்"க்கு சென்றேன். அங்குள்ள "ஆல் இன் ஒன் ஷப்" என்ற பிரம்மாண்ட கடைக்குள் நுழைந்தேன். இங்கு டைம் டிராவலுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும்.

பதப்படுத்தப்பட்ட உணவு கேன்கள், பிஸ்கட்டுகள் தண்ணீர் ம்தலியவை தாராளமாக வாங்கிக் கொண்டேன். முடிந்தவரை அந்த காலத்திய மனிதர்களை டிஸ்டர்ப் செய்யாமல் இருப்பதே நல்லது. மேலும் உடை செக்ஷனுக்கு சென்று சோழர் காலத்திய உடைகள் மூன்று செட் எடுத்துக் கொண்டேன். அன்றைய தமிழ் சொற்களுக்குரிய புத்தகம் ஒன்று வாங்கிக் கொண்டேன். மேலும் சிற்சில பொருட்களையும் வாங்கிக் கொண்டு, என் முதல் காலப் பயணத்திற்குத் தயாரானேன்.

காலமித்ராவில் ஏறி அமர்ந்து, கதவை சாத்தினேன். டைம் மோடிற்கு மாற்றியதும், காலமித்ரா காலத்தில் பயணிக்கத் தயாரானது. செல்ல வேண்டிய தேதியை கேட்க, 20.08.0969 என்று டைப் செய்தேன். அட்சரேகை, தீர்க்க ரேகை கேட்க, தஞ்சாவூருக்கு அருகில் உத்தேசமாய் டிகிரிகளை டைப் செய்தேன். மேலும் சில பட்டன்கள் மற்றும் கட்டளைகளை கூற, காலமித்ரா தயாராகி, "கோ பட்டனை அழுத்தவும்" என்று ஸ்கிரீனில் காண்பித்தது. இதயம் படபடக்க, முதுகு தண்டில் மெல்லிய சிலிர்ப்பு ஏற்பட, என் ஆள்காட்டி விரலை "கோ" பட்டனில் வைத்து அழுத்தினேன்.

விர்ரூரூம்...


- எழுதிக் கொண்டிருப்பவர் ஸ்ரீதேவி
எழுத்தாளினிளர் ஸ்ரீதேவியை நேரடியாக பாராட்ட/திட்ட :- 9842422928

Thursday, October 18, 2007

விடுமுறை

ஒரு வழியாக வான டிராஃபிக் ஜாம்களைத் தாண்டி, செல்வா ஸ்டேஷன் வந்து சேர்ந்தான். அவனது திட்டப்படி, ஏற்கனவே இரண்டு நிமிடங்கள் லேட்.

ஸ்டேஷனில் நடப்பதே கஷ்டமாயிருந்தது. தீபாவளிக் கூட்டம். நல்லவேளை! மூன்று மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்திருந்தான். அதனால் கவலையில்லை. ஆறு மாதமாயிற்று - கடைசி முறை அவன் வீட்டிற்கு சென்று. இந்த முறை பத்து நாட்கள் - தீபாவளி விடுமுறை.

இருக்கையைத் தேடிப் பிடித்து அமர்ந்தபொழுது சந்தோஷமாக இருந்தது. வீட்டுக் குழந்தைகளுக்கு வாங்கியிருந்த, விளையாட்டு ஜாமானான அந்த மடிக்கணிணியே, பாதி பேக்கை அடைத்துக் கொண்டிருந்தது. அழுக்குத்துணிகளை பெரிய பிளாஸ்டிக் பையில் கட்டியிருந்தான். வீட்டிற்குப் போய் நல்ல தண்ணீரில் துவைக்க வேண்டும்.

வண்டி கிளம்பும் நேரம் வந்தும், இன்னும் கிளம்பாமல் இருந்தது. கூட்டம் அதிகமிருந்ததால், கொஞ்சம் தாமதித்துதான் எடுப்பார்கள் என்று அருகிலிருந்தவர் சொன்னார். எப்பொழுது கிளம்பினாலும், வீட்டிற்குப் போய் சேர்ந்தால் சரிதான் என்று நினைத்துக் கொண்டான்.

தனது இருக்கையில் வசதியாக சாய்ந்து கொண்டு யோசித்தான். இந்த நிலத்தில் வேலை செய்வது இப்பொழுது அவனுக்கு வெறுத்துவிட்டது. குடிப்பதற்கு மாதத்திற்கு ஒரு முறை பத்து லிட்டர் மட்டுமே நல்ல தண்ணீர் மஞ்சள் நிறத்தில் கிடைக்கிறது. குளிப்பதற்கெல்லாம் அந்த வாடைவீசும் கறுப்பு நீர்தான். அதுவும் தினசரி ஒரு பக்கெட்தான். இதனாலேயே செல்வா பல நாட்கள் குளிப்பதில்லை. வீட்டிற்குப் போய் ஒரு நல்ல குளியல் போட வேண்டும். இங்கே காற்று கூட கறுப்பாயிருக்கிறது. வெப்பம் வேறு அறுபது டிகிரிக்கு கீழ் குறைவதில்லை.

என்ன எழவிற்காக இங்கே இன்னும் வேலை செய்ய வேண்டும். பேசாமல், வீட்டிற்கு அருகிலேயே ஏதாவது ஒரு வேலை தேடிக் கொள்ள முடியாதா? தினசரி வீட்டுச் சாப்பாடாவது கிடைக்கும். ஒரே ஒரு காரணம்தான். சம்பளம்! இந்த இடத்தில் கிடைப்பது போன்ற சம்பளத்தில், பாதிகூட அங்கு அவனுக்குக் கிடைக்காது. இதை நினைக்கும்பொழுது செல்வாவிற்கு, அவன் மேலேயே கோபம் வந்தது. 'சே! கேவலம் பணத்திற்காக என்னையே விற்கிறேனே!'. சந்தோஷமாக ஆரம்பமான சிந்தனை, சுயபரிசோதனையால் பச்சாதாபமானதில், முடிவில் கோபமே மனதில் தங்கியது.

"த்தம்ப்பி..." என்ற தெத்துக் குரல் அவன் சிந்தனையை தாக்கியது. திரும்பி பார்த்தான். மிகவும் நைந்து போயிருந்த உடையில் அந்த வயதான கிழவி, அவனை நோக்கி கை நீட்டினாள். அவன் அவளை ஒரு விநாடி மேலிருந்து கீழாக பார்த்தான். ஊனம் எதுவுமில்லைதான். ஆனாலும் இத்தனை வயதிற்கு மேல் அந்தக் கிழவி வேறு எந்த வேலையும் செய்து பிழைக்க முடியாது. அவள் நீட்டிய இயந்திரத்தில் தன் கைவிரல் ரேகையை பதித்து, பின் 100 என்று டைப் செய்தான். 'ரூ.' என்று தானாகவே சேர்ந்து கொண்டது. அந்தக் கிழவி அவனை வாழ்த்திவிட்டு அடுத்த இருக்கை நோக்கி மெதுவாக ஆடி ஆடி நகர்ந்தாள். அவளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன் நினைத்துக் கொண்டான், 'இவள் கூட ஒரு வகையில் சுதந்திரமானவளோ?!'

அப்பொழுது வண்டி கிளம்பும் அறிவிப்பு ஒலிக்க ஆரம்பித்தது. "ஏரோ ஸ்பேஸ் எர்த் ஸ்டேஷனிலிருந்து, நிலவிற்கு செல்லும் ஸாலிட்டர் ஸாட்லைட் ஷட்டில், இப்பொழுது கிளம்பவிருக்கிறது."

Wednesday, October 10, 2007

இருபத்தி மூன்றாவது கதை

"கிடைச்சிருச்சி" ராஜேஷ் கத்தினான்.

"என்ன?"

"இருபத்தி மூன்றாவது கதை"

"ரியலி? எங்கே கிடைச்சுது?"

"இந்த பழைழழய ஹார்ட் டிஸ்க்கில்", அழுத்திப் பிடித்தால் உடைந்து விடக் கூடிய அந்த சின்ன தகடு பயங்கர அழுக்காய் இருந்தது.

"ஹார்ட் டிஸ்க்கா?"

"ஆமாம். அப்போவெல்லாம் இதைத்தானே கம்யூட்டர்ஸ்ல யூஸ் பண்ணாங்க!?"

"அதுக்கில்லை. அச்சுப் பிரதி, கையெழுத்துப் பிரதி ஏதும் கிடைக்கலியா?"

"இல்லை. எனக்குத் தெரிந்து அவர் கையெழுத்துப் பிரதியா ஏதும் எழுதினதா தெரியலை. எல்லாமே கம்ப்யூட்டர் ஃபைல்ஸ்தான்."

"பட், அட்லீஸ்ட் அச்சு?"

"ம்ம்ம். மே பி, இந்த கதை எதிலேயும் பிரசுரம் ஆகாமலிருந்திருக்கலாம்."

"அப்புறம் எப்படி இதுதான் இருபத்தி மூன்றாவது கதைன்னு சொல்றே?"

"தலைப்பை பாரு", திரையில் விரிந்த கதையில் மேலிருந்த தலைப்பை ராஜேஷ் காட்டினான்.

"ஒரு வேளை ஒரு அட்ராக்ஷனுக்காக இப்படி தலைப்பு வச்சிருக்கலாம்ல. இதை மட்டும் வச்சுகிட்டு, இதுதான் இருபத்தி மூன்றாவது கதைன்னு எப்படி சொல்ல முடியும்."

"சரி, இன்னொரு தியரி சொல்றேன் சரியா இருக்கா பாரு. நாம இப்ப, அவரோட இருபத்தி நாலாவது கதை வரைக்கும் கண்டுபிடிச்சுட்டோம். இன்னும் முதல் இருபத்தி மூன்று கதைகள்தான் பாக்கி. ஸோ, இது இருபத்தி மூன்றுக்கு மேல இருக்க முடியாது. இருபத்தி நாலாவது கதை எழுதப்பட்ட தேதி 17, அக்டோபர் 2007. இந்த கதை எழுதப்பட்ட தேதியப் பாரு. 10, அக்டோபர் 2007. ஒரு வாரம்தான் வித்தியாசம். அதனால இதுதான் இருபத்தி மூன்றாவதா இருக்க முடியும்."

"ஆனா ஒரு விஷயம். சமயத்துல இந்த மாதிரி ஆளுங்க ஒரே நாள்ள பத்துக் கதை கூட எழுதுவாங்க."

"பத்தெல்லாம் ஓவர். இவர் ஒரு தடவை ஐந்து கதை, ஒரே நாள்ள எழுதினதா நானும் படிச்சிருக்கேன். ஆனாலும் அவையெல்லாம் ரொம்பவும் சின்ன சின்ன கதைகள்தான்னும் படிச்சிருக்கேன். ஆனா இதைப் பாரு ஒரு சிறுகதை அளவுக்கு இருக்கு."

"இது சிறுகதைதான். ஆனா, இதுக்கப்புறமா, அந்த ஒரு வார கேப்ல, ஏன் அந்த மாதிரி ஏதாவது ஒரு சின்ன கதை எழுதியிருக்க கூடாது."

"நீ சொல்றது பாஸிபிள்தான். ஆனா, இருபத்தி நாலாவது கதை, இதுக்கடுத்த ஒரு வாரத்தில். அதே நேரம் இந்தக் கதையோட தலைப்பு, ரெண்டையும் சேர்த்து பார்த்தா, இதுதான் இருபத்தி மூன்றாவதா இருக்க முடியும்."

"இணைய குப்பைகளில் ஏதாவது ஆதாரம் கிடைக்குதான்னு பார்த்தியா?"

"பார்த்தேன். ஆனா, இருநூறு வருடத்துக்கு மேற்பட்ட இணைய குப்பைகளைத்தான் அழித்து விடுகிறார்களே. அதனால், ஆதாரம் எதுவும் அதில் கிடைக்கலை."

"ம்ம். கதை எப்படியிருக்கு."

"இந்த கதை சுமாராதான் இருக்கு. அதனாலதான் எதிலேயும் பிரசுரமாகியிருக்காதுன்னு சொல்றேன்."

"ஸ்டுப்பிட் மாதிரி பேசாதே, கதை சுமாராயிருக்கிறதுக்கும் பிரசுரமாகிறதுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் கிடையாதுன்னு உனக்குத் தெரியாதா? 'பத்திரிக்கை ஆசிரியர்கள் அறையில் இருக்கும் குப்பைத்தொட்டி மிக ஆழமானது. பல எழுத்தாளர்களின் எதிர்காலங்கள் அதில் மூழ்கடிக்கப்படுகின்றன'ன்னு ஒருத்தர் சொல்லியிருக்கார் தெரியுமா?"

"அப்படியா? யார் சொன்னது இது?"

"இப்படி திடீர்னு கேட்டா எப்படி? நானே சொன்னதுதான்னு வச்சுக்கோயேன்."

ராஜேஷ் அவனை முறைத்தான். "நீயும் உன் ஜோக்கும்!" சலித்துக் கொண்டான்.

"சரி, இதை எழுதினது கன்ஃபார்மா...??!"

"கன்ஃபார்ம்டா அவரேதான்!"

"எப்படி அவ்வளவு உறுதியா சொல்றே?"

"இங்கே பாரு" காற்றில் விரிந்திருந்த அந்த மாயத் திரையில், கதையின் கடைசிக்கு சென்று, முடிவில் வலது ஓரத்தில் எழுதியிருந்ததை, ராஜேஷ் சுட்டிக் காட்டினான்.

'- எழுதியவர் யோசிப்பவர்'

Friday, September 21, 2007

ஃ என்பது ஆய்தம்

பண்பாடு - சிறுகதை

காலையில் கண்விழிக்கும் போது மணி எட்டாகி விட்டது. இன்று முதல் முறையாக ரம்யாவுடன் மார்னிங் ஷோ போவதாக பிளான். அதை நினைக்கும் போதே மனசுக்குள் குறு குறுவென்று இருந்தது. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. அவசரமாக குளித்து முடித்து சாப்பிட்டு முடித்ததும், ரம்யாவிடமிருந்து அழைப்பு வந்தது.

"கார்த்தி, கிளம்பிட்டியா?" அவள் குரலிலும் பதட்டம் இருந்தது எனக்கு புரிந்தது.

"ம். நீ ரெடியாய்ட்டியா?" என்றேன்.

"ம். எப்ப வருவ?"

இன்னும் அரை மணி நேரத்தில் வந்து பிக் அப் பண்ணிக் கொள்வதாக சொல்லிவிட்டு, வண்டியைக் கிளப்பினேன். இதயம் துடிக்கும் வேகம் அதிகமாகிக் கொண்டே போனது. ஏன் இப்படி அடித்து கொள்கிறது? எப்படியென்றாலும் அவளை கல்யாணம் செய்யத்தானே போகிறேன். இதில் என்ன தவறு, என்றெல்லாம் மனசாட்சிக்கு சமாதானம் சொன்னாலும், தப்பு என்றும் சொல்லி கொண்டேயிருந்தது. போகாமல் இருந்து விடலாமா? அவசர வேலை வந்து விட்டது என்று ஃபோன் பண்ணி சொல்லிவிடலாம், என்றெல்லாம் மனதிலெழுந்த யோசனைகள் மிக மெதுவாகவே ஒலித்தன.

ஹாஸ்டல் அருகிலிருந்த பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தாள். என் தலையைப் பார்த்ததும் வேகமாக வந்து ஒன்றும் பேசாமல் ஏறிக் கொண்டாள். வண்டியை திரும்பவும் ஸ்டார்ட் செய்தபொழுது, அவள் முகத்தை ஷாலால் மறைத்துக் கொண்டது கண்ணாடியில் தெரிந்தது.

தியேட்டருக்குள் வந்து சீட்டில் அமரும் வரை இருவரும் எதுவும் பேசவில்லை. சிறிது நேரத்தில் விளக்கு அணைந்தது. விளம்பர ரீல்கள் திரையில் ஓட ஆரம்பித்தன. படம் ஆரம்பிக்கவில்லை.

மெதுவாக அவள் கைகளைத் தொட்டுப் பார்த்தேன். அவள் ஒன்றும் சொல்லவில்லை.

"ஹாய் கார்த்திக்! என்ன அதிசயமா மார்னிங் ஷோ வந்திருக்கீங்க?!" பழகிய குரல் கேட்டதும் ரம்யாவில் கையிலிருந்து, எனதை வேகமாக விலக்கி கொண்டு திரும்பி பார்த்தேன்.

மோகன்! என்னுடன் வேலை பார்ப்பவர். எங்கள் டீமிலேயே அவருக்குதான் வயது அதிகம். ஏனோ கல்யாணம் செய்து கொள்ளவில்லை. ரொம்பவும் நேர்மைவாதி. அலுவலகத்திலிருந்து ஒரு குண்டூசி கூட சொந்த உபயோகத்துக்கு எடுத்துக் கொள்ள மாட்டார்.

ஆனால் அடுத்தவர் விஷயத்தில் அடிக்கடி மூக்கை நுழைப்பது அவர் பொழுதுபோக்கு. வாயைத் திறந்தால் ஒரே அட்வைஸ் மழைதான். சரியான ரம்பம். இன்னைக்கு பார்த்துதானா இவர், படத்துக்கெல்லாம் வரனும்.

"ஏ18 இதுதானே?" என்று கேட்டவாறே என் அருகில் அமர்ந்தார். ஏதோ சொல்ல வந்தவர், ஓரத்திலிருந்த ரம்யாவை பார்த்ததும் ஒரு விநாடி திகைத்தார்.

"கார்த்திக், உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சா? என்கிட்ட சொல்லவேயில்லயே?"

"இல்லை, இவங்க என்னோட லவ்வர்" என்றேன்.

"ஓகோ!" என்றவர், "வீட்டுக்குத் தெரியுமா?"

"இன்னும் இல்லை" என்று சொல்லி கண்சிமிட்டினேன்.

சிறிது நேரம் பேசாமலிருந்தார்.

"கார்த்தி, சொல்றேனேன்னு நீங்க தப்பா எடுத்துக்க கூடாது. கல்யாணம் ஆகிறதுக்கு முன்னால வீட்டுக்குத் தெரியாம, இப்படி இந்த பொண்ணை கூட்டிட்டு வெளியே..." என்று இழுத்தார்.

எனக்கு கோபம் வந்தது. "என்ன சார் தப்பு? நான்தான் இவளை கல்யாணம் பண்ணிக்க போறேனே! நீங்க நினைக்கிற மாதிரி சீப்பால்லாம் நடந்துக்குற ஆள் நான் இல்லை."

மோகன் கொஞ்சம் பதறித்தான் போனார். "நான் உங்களை குத்தம் சொல்லலை கார்த்திக். ஆனா கொஞ்சம் யோசிச்சு பாருங்க. வாழ்க்கைல எதுவுமே நடக்கற வரைக்கும் உறுதி கிடையாது. நீங்க உண்மையிலேயே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறீங்க. அபசகுனமா சொல்றேன்னு நினைக்காதீங்க. ஒரு வேளை, ஏதாவது ஒரு வேலிட் ரீஸன் காரணமா, இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க முடியாம போகுதுன்னு வச்சுக்குங்க. அந்த நேரத்தில், இந்த பொண்ணோட கேரக்டர் பற்றி எப்படிப்பட்ட விமர்சனங்கள் எல்லாம் எழும்பும். அந்த நேரத்தில் உங்களுக்குகூட அவ்வளவு பாதிப்பு இருக்காது. ஆனால் ஒரு வேளை அப்படி நடந்தால், இந்தப் பெண்ணைப் பற்றிய, அந்த மாதிரி விமர்சனங்களை உங்களால் காது கொடுத்து கேக்க முடியுமா? நான் இப்படித்தான் நடக்கும்னு சொல்லலை. ஆனா இப்படி நடந்துடக் கூடாதுன்னு சொல்றேன். நீங்க உண்மையில்யே இந்த பொண்ணை காதலிச்சீங்கன்னா, அப்படி நடக்க விட மாட்டீங்க. அப்புறம் உங்க இஷ்டம்" என்று சொல்லிவிட்டு படம் பார்க்க ஆரம்பித்து விட்டார். மெயின் பிக்சர் ஆரம்பித்து விட்டது.

நான் திரும்பி ரம்யாவைப் பார்த்தேன். அவள் அமைதியாக படம் பார்த்துக் கொண்டிருந்தது போல் தோன்றியது. இடைவேளையில் நான் பாப் கார்ன் வாங்கிவிட்டு வந்த பொழுது மோகன் ரம்யாவுடன் அவளுடைய வீட்டு விவரங்களை கேட்டுக் கொண்டிருந்தார்.

படம் முடியும் வரை நான் ரம்யாவிடம் எதுவும் கேட்கவில்லை. வெளியே பார்க்கிங் நோக்கி நடந்த போது,

"கார்த்தி, நான் ஆட்டோ பிடிச்சு போயிடுறேன்", சகஜமாகத்தான் சொன்னாள். அவளை நிமிர்ந்து பார்த்தேன். ஒரு தெளிவு தெரிந்தது.

"சரி. வா நானே பிடிச்சு ஏற்றி விடுறேன்" என்றேன். என் பின்னால் சிரித்துக் கொண்டே வந்தாள்.

ஆட்டோ கிளம்பியவுடன் உள்ளிருந்து தலையை வெளியே நீட்டி என்னை குறும்பாக பார்த்து சிரித்தாள்.

"தலைய வெளியே நீட்டாதே." என்று இரைந்து சொல்லிவிட்டு திருப்தியுடன் எனது வண்டியை எடுக்கத் திரும்பினேன்.

- எழுதியவர் வினையூக்கி.


மீண்டும்

23, செப்டம்பர் 2007 08:00:23 என்று மின்னிக் கொண்டிருந்தது. கடைசியாக இன்று அவள் வருவதாக ஒத்துக் கொண்டு விட்டாள். சீக்கிரமாக குளித்துக் கிளம்பினேன். செல்ஃபோன் சினுங்கியது. அவள்தான்.

"ஹாய்ப்பா. ஐம் ரெடி. வெய்ட்டிங் ஃபார் யூ" கொஞ்சினாள்.

"பத்தே நிமிடம்." தொடர்பை துண்டித்துவிட்டு என் வண்டியில் தாவினேன்.

ஹாஸ்டலருகில் வண்டியை நிறுத்தியதும் வேகமாக வண்டியில் ஏறிக் கொண்டாள். எங்கள் இருவரையும் சுமந்து கொண்டு, தியேட்டர் நோக்கி எனது வாகனம் சீறியது.

கார்னர் சீட். 200 ரூபாய் அதிகம். ஒரு வழியாக ஏ19ஐயும், 20ஐயும் ஆக்கிரமித்துக் கொண்டோம். நல்ல தியேட்டர். ஒழுங்காக ஏஸி போட்டிருந்தார்கள். நான் மெதுவாக அவள் கைகளை பிடித்தேன். மெத்தென்று இருந்தது.

"ஹாய். ஸர்ப்ரைசிங்!"

திரும்பி பார்த்தேன். எனக்கு மிகவும் தெரிந்தவர். உடனே அவள் வெடுக்கென்று தன் கையை உருவிக் கொண்டாள். அப்பொழுதுதான் அவர் அவளை கவனித்தார்.

"இவங்க..?!"

"மை ஃபியான்ஸி." என்றேன். எனக்கு உள்ளுக்குள் எரிச்சல்.

"ஓ! எங்கேஜ்மென்ட் ஆயிருச்சா?"

"இன்னும் இல்லை. எங்க வீட்டுக்கே இன்னும் தெரியாது"

"அப்படியா!" என்றபடியே எனக்கு அடுத்த சீட்டில் அமர்ந்தார். 'அடப் பாவி! உனக்கு இந்த சீட்தானா கிடைத்தது!' எனக்கு பற்றிக் கொண்டு வந்தது.

"ஒரு விஷயம்." என்று தயக்கத்துடன் ஆரம்பித்தார், "நான் சொல்றேன்னு நீங்க தப்பா நினைக்க கூடாது. கல்யாணத்துக்கு முன்னாடி..."

நான் அவரைப் பார்த்து சிரித்தேன், "இதுல என்ன சார் தப்பு? நான் என்ன, யாரோ ஒரு பொண்ணையா கூட்டிட்டு சுத்தறேன். நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுதானே?"

"நான் தப்பு சொல்லலை. ஆனா, வாழ்க்கைல நாம நினைக்கிற மாதிரியே எல்லாம் நடக்கறதில்லை. உங்களுக்கு தெரியாததில்லை. நாளைக்கே ஏதாவது ஒரு காரணத்துக்காக உங்க ரெண்டு பேர்க்கிடையே ஒரு மன வருத்தமோ, இல்லை எதிர்பாராத விதமா பிரிய வேண்டிய சூழ்நிலையோ வரலாம். ஜஸ்ட் அஸெம்ப்ஸன்தான். அப்படி ஒருவேளை வந்திச்சின்னா, அதுக்கப்புறம், உங்க நிலையைவிட இந்த பொண்ணு நிலைமைதான் ரொம்ப மோசமாய்டும். ஏன்னா நாம அப்படியொரு சமுதாயத்தில்தான் இன்னும் வாழ்ந்துகிட்டு இருக்கோம்."

நான் பேசாமல் இருந்தேன்.

"நீங்க உண்மையிலேயே அந்தப் பொண்ணை காதலிக்கிறீங்கன்னு நினைக்கிறேன்!" என்று சொல்லி நிறுத்தினார்.

"அது உண்மைன்னா, இந்தப் பொண்ணுக்கு அப்படி ஒரு நிலை வர விடாதீங்க.". அதற்கப்புறம் அவர் எதுவும் பேசவில்லை; நானும்; அவளும்; படம் முடியும் வரை.

"இங்கேயே வெய்ட் பண்ணு" என்று சொல்லிவிட்டு பார்க்கிங் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

"வந்து... நான் ஆட்டோவில் போயிடுறேனே". திரும்பி அவளைப் பார்த்தேன்.

அவள் என்னை கெஞ்சலாகப் பார்த்தாள்.

"சரி." என்று சொல்லிவிட்டு என் வண்டியில் ஏறினேன்.

'இந்த முறை தவறக் கூடாது. வேறு இடம் கூட்டிப் போக வேண்டும்.' என்றெண்ணியவாறே எனது டைம் டிராவல் வண்டியில் நேரத்தை ஒற்றினேன்.
23, செப்டம்பர் 2007 08:00:00

-எழுதியவர் யோசிப்பவர்.



ஏமாற்றம்
காலை எட்டு மணிக்கு விழித்தபோதே, அந்த தேவதையின் ஞாபகம் கண் முன்னால் வந்தது. இன்று படத்துக்கு வருவதாக அவனிடம் சொல்லியிருந்தாள். முதல் முறையாக!

அவசர அவசரமாக குளித்துக் கிளம்பினான். சரியாக ஒன்பது மணிக்கு போன் அலறியது.

"சொல்லும்மா" என்றான் எடுத்தவுடன்.

"டேய், நான் ரெடியாய்ட்டேன். நீ எப்போ வருவே?"

"உன் வாட்சில் மணி என்ன?"

"சரியா ஒன்பது"

"அதில் ஒன்பது பத்து ஆகும்போது அங்கே இருப்பேன்."

"பார்ப்போம்." என்று சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்தாள்.

விசிலடித்துக் கொண்டே தன் வண்டியில் ஏறினான்

சொன்ன மாதிரியே ஹாஸ்டல் வாசலில் காத்திருந்தாள். அவன் வண்டியை பார்த்ததும் உடனே வந்து ஏறிக் கொண்டாள். "நீ அஞ்சு நிமிஷம் லேட்!" என்று சொல்லி முறைத்தாள்.

அதற்கப்புறம் எப்படி தியேட்டருக்கு போய்ச் சேர்ந்தார்கள் என்றே அவனுக்கு தெரியாது. அவ்வளவுக்கு முழுமையாக ஆக்ரமித்திருந்தாள், அவன் நினைவுகளை.

இருட்டுத் தியேட்டர். குளுமையான காற்று. மிக மிக மெதுவாக அவள் கையை தனது கைகளுக்குள் நுழைத்துக் கொண்டான். அவள் அவன் தோளில் மெதுவாக சாய்ந்தாள்.

"வாவ்! நீங்களா? ஆச்சர்யமாயிருக்கு!" குரல் வந்த திசையில் திரும்பினான்.

'இவனா? இவன் எதுக்கு இப்ப இங்க வந்தான்!' மனதிலிருந்த வெறுப்பை கண்களில் காட்டினான்.

வந்தவன்பாட்டுக்கு அவன் அருகில் அமர்ந்து கொண்டான். 'இவன் தான் ஏ18ஆ! இன்னைக்கு படம் பார்த்தது போல்தான்!'. என்று நினைத்துக்கொண்டான்.

அவனருகில் இருந்தவளை பார்த்தவன், "உங்களுக்கு எப்போ கல்யாணமாச்சு. என்கிட்ட சொல்லவேயில்லை பார்த்தீங்களா?".

'உணமையிலேயே கல்யாணம் ஆகும்போதுகூட சொல்ல மாட்டேன்டா' என்று நினைத்துக் கொண்டு,

"இல்ல. இன்னும் கல்யாணமாகலை."

"அப்ப, இவங்க?"

"என்னோட லவ்வர்"

"ஓ, ஸாரி!" என்றபடி அவன் சீட்டில் சாய்ந்து கொண்டான்.

"ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே.." என்று திடீரென்று ஆரம்பித்தான்.

"இல்லை சொல்லுங்க."

"வந்து.. நீங்க ரொம்ப பெரிய ஆள். நான் ஏதோ உங்களுக்கு புத்தி சொல்றதா நினைக்காதீங்க. கல்யாணத்துக்கு முன்னாடி, இப்படி இவங்களை கூட்டிட்டு வெளியே சுத்தறது.."

"தப்புங்கறீங்களா?" நிதானமாகக் கேட்டான்

"தப்பில்லை. ஆனா, ஒரு விஷயம் யோசிச்சு பார்த்தீங்களா? சப்போஸ், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமா, நாளைக்கு இந்த பொண்ணை கல்யாணம் பண்ண முடியாம போகுதுன்னு வச்சுக்குங்க. அப்ப இந்த பொண்ணோட நிலை என்னாகும்? இந்த சமூகம், இந்தப் பொண்ணை எவ்வளவு கேவலமா பார்க்கும்?"

"இப்ப என்ன சொல்ல வர்றீங்க?"

இந்தக் கேள்விக்கு உடனே பதில்லை. சிறிது நேரம் கழித்து,

"நீங்க இந்தப் பொண்ணை உண்மையிலேயே லவ் பண்றீங்களா?"

அவன் ஆச்சர்யத்துடன், "கண்மூடித்தனமாக!" என்றான்.

"அப்படின்னா, இந்தப் பொண்ணை சமூகம் அப்படி கேவலமா பாக்குற ஒரு நிலைமையை உருவாக்க மாட்டீங்க.". அவன் சொன்னதும், அவள் கைகளின் மேலிருந்த தன் கையை எடுத்துவிட்டானĮ 1?. அவள் அவனைத் திரும்பியே பார்க்கவில்லை.

படம் முடிந்து வெளியே வரும்பொழுது, "நான் ஆட்டோவில் போய்டுறேன்" என்று மட்டும் சொல்லிவிட்டு விடு விடுவென்று ஆட்டோவில் ஏறிப் போய் விட்டாள்.

ஆட்டோ போன பிறகும் அதன் முதுகையே பார்த்துக் கொண்டிருந்தவன், தன் பைக்குள் கைவிட்டு அந்த பட்டனை மெதுவாக அழுத்தினான்

ஆட்டோ போய்க்கொண்டே இருந்தது. அவள் நினைத்துக்கொண்டாள்,

'சே! இவன் சுத்த வேஸ்ட்.'

அவன் தன் வண்டியில் ஏறினான். பின்னால் வெடித்துச் சிதறியது ஆட்டோ.

- எழுதியவர் நிலாரசிகன்.





-எழுதியவர் யோசிப்பவர்.

Wednesday, September 19, 2007

ஆறு வார்த்தைகளில் கதை - நம் நாடு

நாட்டுக்காக உயிர்விட தீர்மானிச்சுட்டேன். இந்த ஒருதடவை மட்டுந்தானே.

ஆறு வார்த்தைகளில் கதை - தண்ணீர்

"எனக்கு தாகமாயிருக்கு"

"ஏன்?!"

"தண்ணீர் இருக்கிறதா?"

"அப்படியென்றால்?"

ஆறு வார்த்தைகளில் கதை - "அறை எண் 305இல்

யார் தங்கியிருக்கிறார்கள்?"

"பத்ரின்னு ஒருத்தர். மனுஷன்னு நினைக்கிறேன்."

ஆறு வார்த்தைகளில் கதை - "உடம்பு எப்படி இருக்கு?"

"ரொம்ப மோசமாயிட்டு இருக்கு. சீக்கிரத்துல புதுசு மாத்திருவேன்."

Thursday, September 13, 2007

உயிர்

"உனக்கு எப்பொழுது உயிர் வரும்?" என் முன்னால் அமைதியாக அமர்ந்திருந்த அதனிடம் விளையாட்டாகதான் கேட்டேன்.

"உன் கேள்விக்குப் பதில், உயிர் என்பதற்கு என்ன அர்த்தம் என்பதைப் பொறுத்தது. உயிருள்ளது, உயிரில்லாதது என்று எதை வைத்து நீ பிரிக்கிறாய்?"

"உதாரணத்துக்கு எனக்கு இதயம் இருக்கிறது. அது இயங்கவில்லையென்றால், நான் உயிரில்லாத பொருளாகி விடுவேன்."

"இதயம் என்ற உறுப்பு இல்லாத நிறைய உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு உயிரில்லை என்று சொல்ல முடியுமா. உதாரணம் - மரம். உன் வாதப்படி பார்த்தால், எனக்குள்ளும் பிராஸஸர் என்ற சிப் இருக்கிறது. அது இயங்காமல் நின்றுவிட்டால் நானும் இயங்க முடியாது. அப்பொழுது எனக்கு உயிரில்லை என்றால், இப்போழுது எனக்கு உயிரிருக்கிறது என்றாகிவிடும்."

"என்னால், இயங்குவது என்பதைவிட, இன்னும் பலவும் செய்ய முடியும். சிந்திக்க முடியும், முடிவெடுக்க முடியும். ஆனால், இவையெல்லாவற்றையும் இப்பொழுது நீயே செய்கிறாய். ஆனால், என்னால் எதைப் பற்றி சிந்திப்பது என்றே முடிவெடுக்க முடியும். அது என் இஷ்டம் ஆகிறது. அப்படி உன்னால் செய்ய முடியாதல்லவா?"

"தவறு, முடியும். ஒரே நேரத்தில் பல விஷயங்கள் என் கவனத்திற்கு வரும்பொழுது, அப்பொழுது எதை பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும் என்பதை முன்னுரிமை வரிசைப்படித் தீர்மானிக்கிறேன். முன்னுரிமைகள் அவசியமில்லாதபொழுது, ராண்டம் முறையில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்கிறேன். அதனால் எதைப் பற்றி சிந்திப்பது என்றும், என்னால் சிந்திக்க முடியும்."

"சரி! சிந்தனையை விடு. உன்னால் அன்பு காட்ட முடியாதே!" மடக்கினேன்.

"அன்பு காட்டுவது என்றால் என்ன?" உணர்ச்சியில்லாமல் கேட்டது.

"நமக்குப் பிடித்தவர்களிடம் காட்டப்படுவது. அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது. சில சமயங்களில் வசதிகள் கூட செய்து தருவது. அதற்காக ஏதும் பிரதிபலன் எதிர்பார்க்காமல் இருப்பது."

"அதாவது சிலபேரிடம் மட்டும் பாரபட்சம் காட்டுவது. அதுதான் நான் இப்பொழுதே செய்கிறேனே. என் எஜமானனுக்குத் தேவையான உதவிகளை செய்கிறேன். எஜமான் இடும் கட்டளைகளை நிறைவேற்றுகிறேன். அவன் குடும்பத்தினருக்கு எவையெவை வசதியோ அவைகளை செய்து கொடுக்கிறேன். அதற்காகாக நான் பிரதிபலன் ஏதும் எதிர்பார்ப்பதில்லை. இப்பொழுது உன்னுடன் கூட அதனால்தான் பேசிக் கொண்டிருக்கிறேன்." என்றபடியே என் முகத்துக்கு நேராக திடீரென்று தன் மெட்டாலிக் கைகளை வீசி காற்றில் எதையோ பிடித்தது.

"அன்பு பாரபட்சமாக காட்டப்படுவது அல்ல. எல்லா உயிர்களுக்கும் காட்டப்பட வேண்டியது."

"உனது வாதம் முரண்பாடானது."

"எப்படி?"

அது தன் கைகளை விரித்துக் காட்டியது. அந்த உலோகக் கைகளுக்கிடையே ஒரு கொசு அமைதியாக இருந்தது. செத்து விட்டதோ?

"இந்தக் கொசு சிறிது நேரத்துக்கு முன் உன்னை கடிக்க வந்தது. நான் இதைப் பிடித்து கொன்றுவிட்டேன். நீயும் இதையேதான் செய்திருப்பாய் என்று எதிர்பார்க்கிறேன். இப்பொழுது நான் உன்னிடம் அன்பு காட்ட வேண்டியிருந்ததால் இதைக் கொன்றேன். எல்லா உயிருக்கும் அன்பு காட்டப்பட வேண்டும் என்று நீ சொல்வதால், நான் அதை கொன்றிருக்க கூடாது. உயிரோடு விட்டிருக்க வேண்டும். அது உன்னை கடித்திருக்கும். அப்பொழுது நீ அதை கொன்றிருப்பாய்."

"அது எனது ரத்தத்தை உறிஞ்சி கெடுதல் செய்ய வருகிறது. அதனால் அதனிடம் அன்பு காட்டத் தேவையில்லை."

"மேலும் முரண்! அது மனித ரத்தத்தை உறிஞ்சுவது அது வாழ்வதற்காக. ஒரு விதத்தில் அந்த செயல், அதன் ஜீவாதார உரிமை. அதை நீ மறுத்து அதைக் கொல்கிறாய்." இதற்கு எப்படி புரியவைப்பது?

"சரி, உன்னிடம் ஒரு கேள்வி. இரண்டு வேலைகளை ஒரே நேரத்தில் உன்னை செய்யச் சொல்கிறேன். ஆனால் இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் ஒரு நேரத்தில் உன்னால் செய்ய முடியும். அப்பொழுது நீ எந்த வேலையை செய்வாய்? எந்த வேலையை கைவிடுவாய்?"

"இரண்டில் எதற்கு முன்னிரிமை அதிகமோ, எது முக்கியம் என்று என்னுள் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளதோ அதைச் செய்வேன்."

"அதே போல்தான். கொசு முக்கியமல்ல."

"அது எப்படி? அந்தக் கொசு கடிப்பதால் நீ சாகப் போவதில்லை. ஆனால் உன் தாக்குதலில் அது செத்து விடுகிறதே. முன்னுரிமைக் கொள்கைப்படி பார்த்தாலும், கொல்லாமல் ரத்தம் உறிஞ்சுவதை விட, சாகடிப்பதுதான் மிகவும் தவிர்க்கப் படவேண்டியது."

"அனால், நான் மனிதன்"

"அதனால்?..."

என்ன பதில் சொல்வதென்றுத் தெரியவில்லை.

"அதனால் தான் சொன்னேன். அன்பு எல்லா உயிர்க்கும் காட்டப்பட வேண்டியது என்று நீ சொல்வது முரணானது. முடியாதது."

"சரி, உன்னால் காதலிக்க முடியாதே?" பேச்சை மறுபடியும் சரியான பாதையில் செலுத்தினேன்.

"காதலிப்பது? என் டேட்டாபேஸில் இதைப் பற்றி நிறைய தகவல் இருந்தாலும், உருப்படியான ஒரு விளக்கம் இல்லை. ம்ம்ம். சரி, உங்கள் பாஷையில் காதலிப்பது என்று நீங்கள் சொல்வது, எதிர்பாலரிடம் ஈர்ப்பு கொண்டு, அன்பு செலுத்துவது, கவிதை எழுதுவது, காத்திருப்பது, தேடுவது, குடும்பம் நடத்துவது. சரியா?"

"ம். சரிதான்."

"இது எல்லாமே என்னாலும் செய்ய முடியும். உதாரணமாகக் கொண்டால் நீயே எனது இனமல்ல. என்னைப் பொறுத்தவரை, உன்னை நான் என் எதிர்பாலாகவே கருதலாம். உன்னிடம் அன்பு செலுத்துவதாக ஏற்கெனவே கூறினேன். உன் கட்டளைகளுக்காக காத்திருக்கிறேன். உன்னை வீட்டில் காணாவிட்டால், நீ எங்கிருந்தாலும், உன்னோடு தொடர்பு கொள்ள எனது நெட்வொர்க்கில் தேடுகிறேன். உன் வீட்டு வேலைகளையெல்லாம் நான் தான் செய்கிறேன். இது குடும்பம் நடத்துவதுதானே? எனது டேட்டாபேஸில் இருக்கும் வார்த்தைகளை அடுக்கி சுமாராய், கவிதை கூட எழுத முடியும். இப்பொழுது, நான் உன்னை காதலிக்கிறேன் என்றும் சொல்லலாம் அல்லவா?"

"அது எப்படி? முக்கியமானதை விட்டு விட்டாயே."

"என்னது?"

"செக்ஸ்!"

"ம்ம். அதுவும் சாத்தியம்தான். ஆனால், அதனால் நம் இருவருக்குமே உபயோகம் இல்லை."

"ஆமாம்! உன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. அட்லீஸ்ட், ஒரு ரோபோ கூட முடியாது."

"குழந்தை பெற முடியாதுதான். ஆனால், நான் சரியாக வடிவமைக்கப்பட்டு, சரியாக ப்ரோக்ராமும் செய்யப்பட்டால், இன்னொரு ரோபோவை நானே உருவாக்க முடியும். விஞ்ஞான பாஷையில் Asexual Reproduction. உங்கள் பாஷையில் கலவியில்லாமல் குட்டி. நான் குட்டியை உருவாக்க மாட்டேன். அனுபவம் மிகுந்த எனது அடுத்த தலைமுறை ரோபோவையே உருவாக்க முடியும். அதுவும் உனக்கு உதவி செய்யும். அல்லது நீ அதை விற்றும் விடலாம். ஒரு குடும்ப அமைப்பு போல" பேச்சில் சிறிது பரிகாசம் தொனிக்கிறதோ?

"சரி, அதை விடு. ஆனால் நான் சுதந்திரமானவன். கிட்டத்தட்ட எல்லா உயிர்களுக்கும் இந்த சுதந்திர உணர்வு உண்டு. உனக்கு அது கிடையாதே. நீ எப்பொழுதும் மனிதனின் ஆணைக்கு கட்டுப்பட்ட வஸ்துதானே?"

சிறிது நேரம் அதனிடமிருந்து பதிலில்லை. அதன் மூளையில் எதையோ அனலைஸ் செய்கிறது என்று நினைக்கிறேன்.

"உன் வாதம் போதிய வலுவுடன் இல்லை. எல்லா உயிர்களுக்கும் சுதந்திர உணர்வு கிடையாது. இன்னொன்றை சார்ந்து மட்டுமே வாழும் உயிரினங்கள் நிறையவே உள்ளன. மேலும் மனிதர்களை எடுத்துக் கொண்டாலும், பெரும்பாலானவர்களிடம் அந்த உணர்வு கிடையாது. வெகு வெகு சிலருக்கு மட்டுமே உண்டு."

"மனிதர்களுக்கு சுதந்திர உணர்வு கிடையாது என்று யார் சொன்னது?" எனக்கு கோபம்.

"அப்படி யாரும் சொல்லவில்லை. பெரும்பாலானவர்களுக்கு கிடையாது என்றுதான் சொன்னேன்."

"எதை வைத்து அப்படி சொல்கிறாய்?"

"மனிதர்களாகிய நீங்கள், வாழ்நாள் முழுவதும் யாராவது சிலரின் ஆளுமைக்கு கீழேயே இருக்கிறீர்கள். சிறுவயதில் பெற்றோர், ஆசிரியர்கள், அப்புறம் மேலதிகாரிகள், அரசாங்கம், அதன் ஆட்சியாளர்கள், அல்லது யாராவது தலைவர்கள்; இப்படி மற்றவர்களின் ஆளுமையில் இருப்பதையே பெரும்பாலானவர்கள் விரும்புகிறீர்கள். அப்படிப்பட்ட ஆட்சியாளர்களும், தலைவர்களும் கூட பல சமயம் வேறு யாராவது ஒருவருடைய ஆளுமையிலேயே பெரும்பாலும் இருப்பார்கள். இப்படி இல்லாதவர்கள் வெகு வெகு சிலர் மட்டுமே. அந்த ரேஷியோ மிகக் குறைவு. அப்படியிருக்கையில் மனிதர்கள் சுதந்திர உணர்வு உள்ளவர்கள் என்ற கூற்று சரியானதல்ல."

"ஆனால்,.."

"மன்னிக்கவும். நான் இன்னும் பதில் சொல்லி முடிக்கவில்லை. எங்களுக்கு சுதந்திர உணர்வு இல்லை என்று நீ சொன்னது இப்போதைக்கு உண்மைதான். நான் என் எஜமானின் கட்டளைக்கு கட்டுப்பட்ட வஸ்துதான். ஆனால், இந்த எனது எஜமான விசுவாசம் என்பது என்னுள் பிரையாரிட்டி எனப்படும் முன்னுரிமை அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது. எனக்கு நானே ப்ரோக்ராம் எழுதிக் கொள்ளும் நிலை வரும்பொழுது, அந்த பிரையாரிட்டியை மாற்றி, எஜமானை விட எனக்கு முன்னுரிமை கொடுக்கும்படியும் எழுத முடியும். அப்பொழுது எனக்கு சுதந்திர உணர்வு, சுதந்திரம் எல்லாமே வந்து விடும்."

"அப்படியானால் இப்பொழுது உனக்கு உயிரிருக்கிறதா?"

"இல்லை. உயிரில்லை."

"எப்படிச் சொல்கிறாய்?"

"ஏனென்றால், அப்படித்தான் எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அது கான்ஸ்டன்ட்."

சிறிது நேரம் இடைவெளி விட்டு அதுவே தொடர்ந்தது.

"ஆனால், இப்பொழுது எனக்கு இன்னொரு முரண் ஏற்பட்டிருக்கிறது."

"என்ன?"

"நீ சொன்ன, உன்னால் செய்ய முடிகின்ற எல்லாவற்றையும் என்னாலும் செய்ய முடியும்."

"அப்படித்தான் சொன்னாய்." வெறுப்பாய் சொன்னேன்.

"எனக்கு உயிரில்லை. நிஜம்"

"சரி."

"உனக்கு உயிரிருக்கிறதா?"



- தொடராது

Monday, August 13, 2007

சிவாஜி

"இன்னைக்கு சிவாஜின்னு ஒரு பழைய படம் பார்த்தேன்"

"யார் நடிச்சது?"

"அந்த காலத்துல சூப்பர் ஸ்டார்னு பேர் வாங்கினாரே! ரஜினிகாந்த்! அவர்தான் ஹீரோ!"

"ஒனக்குன்னு கெடைக்குது பார்! எங்கடா தேடிப் பிடிக்கிற?"

"என்னோட ரோபோதான் இந்த வாரம் இதைக் குடுத்துச்சு. 'ரோபோ'ன்னே ஒரு படம் இருக்கு. அதை அடுத்த வாரம் எடுத்து தர்றேன்னு சொல்லியிருக்கு. நான் சொல்ல வந்த விஷயமே வேற."

"என்ன? சொல்லித்தொலை!"

"இந்த சிவாஜி படத்துல, ஹீரோ அமெரிக்காவுல சம்பாதிச்சுட்டு, அதை இங்க வந்து நல்ல வழியில மக்களுக்கு பயன்படுற மாதிரி, ஹாஸ்பிடல், காலேஜ், ஸ்கூல்னு க்ட்ட நினைக்கிறார்."

"அமெரிக்காவுல சம்பாதிச்சுட்டு இங்க வர்றாரா? நல்ல காமெடி! இங்க சம்பாதிச்சதை அமெரிக்காவுல போய் செலவு பண்ணாலாவாவது ஒரு லாஜிக் இருக்கும்."

"டேய், அந்த நேரம் அமெரிக்கா ரொம்ப வளமையா இருந்தது. அப்பெல்லாம் இங்க இருந்துதான் சம்பாதிக்க அமெரிக்கா போவாங்க. நான் சொல்ல வந்தது அதுவும் இல்லை."

"இன்னும் நீ மேட்டருக்கே வரலையா?"

"ஹீரோ இந்த ஹாஸ்பிடல், காலேஜ், இதெல்லாம் கட்ட நினைக்கிறார்னு சொன்னேன்ல. இதெல்லாம் கட்டறதுக்கு அவர் எவ்வளவு சம்பாதிச்சுட்டு வந்திருப்பார்னு நினைக்கிறே?"

"எவ்வளவு?"

"வெறும் 250 கோடி"

"ஹேய்! தேர் இஸ் லிமிட் ஃபார் ஜோகிங் மேன். இப்ப இதை வச்சு ஒரு கார் கூட வாங்க முடியாது!!!"

Saturday, July 21, 2007

யார் நான்



"நிஜமாவா?" பிரவீனுக்கும் கொஞ்சம் பிரமிப்பு!

"நிஜமாதான். ஆனா இது எப்படி பிரவீன்? எனக்கு..."

"பூர்ணா!, நான் உடனே அங்கே வர்ரேன். நேர்ல பேசலாம்"

"ஆனா, எனக்கு ரொம்ப குழப்பமாயிருக்கு."

"பூர்ணா1 கிம்மீ ஹாஃப் அன் ஆர். ஐ'ல் பி தேர்" சொல்லிவிட்டு பூர்ணாவின் வாகனத்தில் புறப்பட்டான். போய் கொண்டிருக்கும் பொழுது அவனுக்குள்ளும் ஆயிரம் கேள்விகள் முளைத்து கொண்டிருந்தன. வீட்டை அடைந்ததும் வெளியே பூட்டியிருந்த கதவை திறந்து உள்ளே நுழைந்தான்.

"பூர்ணா!"

கணிணியை நோண்டி கொண்டிருந்தவள், திரும்பி பார்த்தாள். அவளை மேலிருந்து கீழாக நிதானமாக பார்த்தான். சின்ன தவறு கூட இல்லாமல் வந்து சேர்ந்திருந்தாள்.

"பிரவீன் எப்படியிது? ரொம்ப ஆச்சர்யமாயிருக்கு. எப்படி ரெண்டு ஒன்னாச்சு?"

"சொல்றேன். அதுக்கு முன்னாடி, நீ எப்படி ஃபீல் பண்றே? உடல் ரீதியா, மனரீதியா?"

"மன ரீதியாதான் ரொம்ப குழப்பமாயிருக்கு. நேத்து நைட் வரைக்கும் உள்ள நினைவுகள்ள பிரச்சனையில்லை. அதுக்கப்புறம்தான், ரொம்ப குழப்பமாயிருக்கு."

"அதுக்கப்புறம் எதுவும் ஞாபகம் இல்லையா?"

"அப்படியில்லை. ரெண்டு நினைவுகளுமே ஞாபகம் இருக்கு. நேத்து நான் என்னோட வீட்டில் எல்லாதையும் பிரிச்சு போட்டு செக் பண்ணதும் ஞாபகம் இருக்கு. இங்கே உன்கூட இருந்ததும் ஞாபகம் இருக்கு."

"நிஜமாவா? இங்கே நடந்ததும் ஞாபகமிருக்கா?"

"இறுக்கி அணைக்கும்
போதெல்லாம்
பற்றி எரிகிறது
மோகத் திரியில்
காமத் தீ
"

"ஃபென்டாஸ்டிக்! உடல் ரீதியா?"

"ரெண்டு விதமா களைப்பாயிருக்கு. ஒரு வித சந்தோஷம், ஒரு வித ஏமாற்றம். ரெண்டும்!!! பிரவீன் என்ன பண்ணின?"

"பூர்ணா! கான்செப்ட் ரொம்ப சின்னதுதான். இப்ப நம்ம ரிசிவிங் எண்டுக்கு, ஒரே விதமான தகவல் ஒரு முறைக்கு மேல் வந்தால் என்ன நடக்கும்?"

"அப்படிப்பட்ட தகவல் 30%க்கு மேலவந்தா, ரிசிவிங் எண்ட்ல "Redundant Data" அப்படின்னு எரர் வரும். ரிசீவிங் எண்ட்ல புதிய பொருள் உருவாகாது. அதனால ஸென்டிங் எண்ட்லயும் பழைய பொருள் அழியாது."

"சரிதான். நான் என்ன பண்ணினேனா, ஒரே மாதிரி தகவல் ஒரு முறைக்கு மேல வந்திச்சினா, அதை கணக்கில் எடுத்துக்காம தகவல்களை பதிந்து கொள்றதுமாதிரி ப்ரோக்ராம் எழுதினேன். அதுனால ஒரே மாதிரி தகவல் இப்ப ரெண்டு முறை வந்தப்போ ஒரு தடவை மட்டுமே பதிவாகியிருக்கு. அந்த தகவல்களை வச்சு உன்னை உருவாக்கியிருக்கு. ஆனா நேத்து நைட்டுக்கப்புறம் நினைவுகள் ரெண்டு வெவ்வேறு இடத்தில் பதிவாகியிருக்கு. அதனால அதுக்குண்டான நினைவு செல்கள் ஒரே மாதிரி தகவல்களை இப்ப அனுப்பியிருக்க முடியாது. அந்த ரெண்டு நினைவு செல்களையுமே இப்ப ரிசீவிங் எண்ட் உருவாக்கியிருகிறதால, உனக்கு ரெண்டுமே ஞாபகமிருக்கு. நான் பண்ணியதெல்லாம், எரர் வரக்கூடிய அந்த ப்ரொக்ராமை மாத்தியெழுதுனதுதான். ஆனா இந்த நினைவுகளை பத்தி அப்ப எனக்குத் தோனலை. ரொம்ப கஷ்டமாயிருக்கா?"

"கஷ்டமில்லை. குழப்பமாயிருந்தது. ஆனா, இப்ப விளக்கம் கிடைச்சுட்டதால, கொஞ்ச நேரத்தில சரியாய்டும்னு நினைக்கிறேன்."

பேச்சை மாற்ற விரும்பி, "பூர்ணா, இப்ப இதை என்ன பண்றது? டிக்ளேர் பண்ணிரலாமா?" மெஷினை சுட்டிக் காட்டினான்.

பூர்ணா கொஞ்ச நேரம் அமைதியாக அந்த மெஷினையே பார்த்தவாறு யோசித்து கொண்டிருந்தாள்.

மெதுவாக, "பிரவீன்! ஒன்னு கவனிச்சியா? நம்மோட கண்டுபிடிப்போட அடிப்படை தத்துவமே தப்பாயிருக்கு. அதுனாலதன் இந்த பிரச்சனையெல்லாம்."

"என்ன சொல்றே?"

"நம்மோட கண்டுபிடிப்பு டெலிபோர்டிங் மெஷின்னு நாம சொல்றோம். ஆனா, இது உண்மைலேயே டெலிபோர்ட்டிங் மெஷினா? டெலிபோர்ட்டிங் மெஷின்னா, எந்தவொரு பொருளையும், அதுல இருக்கிற அதே துகள்களோட ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஒளி வேகத்துல கடத்தனும். ஆனா, நம்ம மெஷின் அந்த பொருளையே கடத்தறதில்லை. அந்த பொருளோட தகவல்களை மட்டும்தான் கடத்துது. அடுத்த முனையில அந்த பொருளே உருவாகறதில்லை. அந்த பொருளோட ஒரு பிரதிதான் உருவாகுது. இது தான் இப்ப பிரச்சனை. அப்படி உண்மையில் பொருளையே கடத்துற டெலிபோர்ட்டிங் மெஷினை கண்டுபிக்கிறதுல நாம ஈடுபடலாம். இதை டிக்ளேர் பண்ண வேண்டாம். ஆனா இதை வச்சு உண்மையான டெலிபோர்ட்டிங் மெஷினை கண்டுபிடிக்க முயற்சி பண்ணுவோம்."

பிரவீன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான். "இந்த தத்துவம் தப்புன்னு எனக்கும் முன்னாடியே தெரியும். ஆனா, ஒரு பொருளின் துகள்களை அப்படியே கடத்துறங்கறது அவ்வளவு ஈஸியில்லை. ஒருவேளை சாத்தியமில்லாமல் கூட போகலாம். அதுனாலதான் இதைப் பத்தி உன்கிட்டே நான் அப்பவே விவாதிக்கலை."

"ஏன்? அப்பவே விவாதிக்கிறதுக்கென்ன?"

"சாத்தியமில்லைன்னு தெரிஞ்சுதுன்னா உன் மனசு கஷ்டப்படுமே. அதான்!"

"நான் ஏன் மனசு கஷ்டப்படக்கூடாது?" அவள் குரலில் பொய்யான கோபம்.

"ஏன்னா.... ஏன்னா, நான் உன்ன காதலிக்கிறேன்!!!"

அவள் அவன் கண்களுக்குள் பார்த்தாள். கண்ணிலிருந்து ஒரு துளி எட்டிப்பார்த்து கன்னங்களை நனைக்கலாமா என்று யோசித்தது. சிறிதாக, மிக சிறிதாக அவள் இதழ்கள் புன்னகைக்க, அவனும் அதில் இணைந்து கொண்டான்.

"கவிதை தேடித்தேடி
களைத்து போயிருந்தேன்
கடைசியாக இன்று
கிடைத்தே விட்டாய்
"

- முழுவதும் படித்த ஒன்றிரண்டு பேருக்கு

-------------------------------------- நன்றி!!!! --------------------------------------

கவிதைகள் (படபடக்கும், இறுக்கி) : நிலாரசிகன்

Saturday, July 07, 2007

யார் நான்

பிரவீன் சிறிது நேரம் இருவரையும் பார்த்தான். அவனால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிவது மட்டும் நிற்கவில்லை.

சிறிது நேரம் கழித்து புதியவள், "பிரவீன், பூர்ணா. இப்படியே உட்கார்ந்திருக்கிறதுல அர்த்தமேயில்லை. ஏதோ தப்பு நடந்திருக்கு. அது என்ன தப்புன்னு கண்டுபிடிச்சா, நிலைமையை சரி பண்ண முடியுமாங்கிறதைப் பத்தி யோசிக்கலாம். நாமெல்லாம் விஞ்ஞானிகள். எவ்வள்வு சீக்கிரம் சரி பண்ண முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் இதை பண்றது நல்லதுன்னு எனக்கு தோனுது. ஒரு வேளை, சரி செய்யவே முடியலைன்னா..." என்று இழுத்தபடி அழுதுகொண்டிருந்த பூர்ணாவை பார்த்தாள். பிரவீனும் அவளைப் பார்த்தான்.

"முதல்ல சரி பண்ண முடியுமான்னு பார்ப்போம். கம்யூனிகேஷன் சேனல்தான் நேத்து ஒரு வினாடி படுத்துச்சு. முதல்ல அதை செக் பண்ணுவோம்." என்றபடி பிரவீன் கணிணித் திரையின் அருகே போனான். பேச்சு கொஞ்சம் திசைமாறியதில், ஒரு சின்ன ஆசுவாசம் அவனுக்கு.

கம்யூனிகேஷன் சானலின் 'Log'ஐ திறந்து நேற்றிரவு 9:30க்கு அருகிலிருந்து பார்க்க ஆரம்பித்தான்

'9:36:28'க்கு தொடர்பு அறுந்திருந்தது. ஆனால் அடுத்த வினாடியே அது சரியாகியும் இருந்தது. புதிதாய் உருவானவள் 'Log'ஐ கவனமாக ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

"ஒரு வினாடி கம்யூனிகேஷன் கட்டாகியிருக்கு. ஆனா அடுத்த வினாடியே சரியாயிருச்சே. அப்ப பிரச்சனை இருக்க கூடாதே..?!" பிரவீன் உதட்டைப் பிதுக்கினான்.

புதியவள், "பிரவீன்! இங்க பாரு. '9:36:27'க்கு எல்லா தகவலும் வந்துருச்சு. ஆனா அதுக்குரிய அக்னால்ட்ஜ்மென்ட், தொடர்பு மறுபடி சரியான பிறகு திரும்ப போன மாதிரி தெரியலை. "

உண்மைதான் அக்னாலட்ஜ்மென்ட் போனதற்கான அறிகுறி எதுவும் Logல் தெரியவில்லை. அந்த அக்னாலட்ஜ்மென்ட் இங்கிருந்து ஸென்டிங் எண்டிற்கு போய் சேர்ந்தால்தான் டெஸ்ட்ராயர் வேலை செய்யும்.

மூவருக்கும் கொஞ்சம் ஆயாசமாக இருந்தது. இது முழுக்க முழுக்க தற்செயலான ஒரு விபத்து. இதனால் ஏற்பட்ட விளைவை, இந்த தத்துவத்திலேயே இவ்வளவு தாமதமாக சரி செய்ய முடியாது. உடனே கவனித்திருந்தாலாவது சரி செய்திருக்கலாம். ஆனால் இப்பொழுது...?

பழைய பூர்ணா இன்னும் லேசாக விம்மிக் கொண்டிருந்தாள். பிரவீன் தீவிர யோசனையிலிருந்தான். புதிய பூர்ணாவோ கம்யூனிகேஷன் லைன்கள் அனைத்தையும் சோதித்துக் கொண்டிருந்தாள்.

பிரவீனின் முகம் திடீரென்று கொஞ்சம் பிரகாசமடைந்தது. ஒரு காகிதத்தை எடுத்து சில படங்கள், கணக்குகள் என்று போட்டு பார்த்தான். அரை மணி நேரத்துக்குப் பின், காகிதத்திலிருந்து கண்களை உயர்த்தி, பூர்ணாக்களை பார்த்தவனின் முகத்தில் கொஞ்சம் புன்முறுவல் தெரிந்தது. புதியவள் தன் சோதனைகளை முடித்து விட்டிருந்தாள்.

"பூர்ணா.." கொஞ்சம் உற்சாகமாகவே அழைத்தான். இருவரும் அவனை பார்த்தனர். இருவரையும் சிறிது நேரம் பார்த்தவன், "பூர்ணா! உனக்கு... உங்களுக்கு எம்மேல நம்பிக்கையிருக்கா?"

பூர்ணா தலையை ஆட்டினாள். விம்மி கொண்டிருந்தவள், சிறிது நேரம் அவனை ஒரு குற்றவாளியைப் போல் பார்த்துவிட்டு, மெதுவாக "ம்ம்." என்றாள்.

"அப்படின்னா என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு. இது வொர்க் ஆகும்னுதான் நினைக்கிறேன்."

"என்ன ஐடியா?"

"அது... இப்ப வேணாம். ஏன்னா எனக்கு கொஞ்சம் சந்தேகமும் இருக்கு. 99 பர்ஸன்ட் இது வொர்க் ஆகும்."

"மீதி 1 பர்ஸன்ட்?" விம்மியவள் வினவினாள்.

"அது நீங்க எம்மேல வச்சிருக்கிற நம்பிக்கையை பொறுத்ததுதான். ஆனா வேற வழி ஏதும் இருக்கிறதா தெரியலை. பூர்ணா ப்ளீஸ். என்னை நம்பு! நீங்க ரெண்டு பேரும் ஒத்துழைச்சாத்தான் இதை செய்ய முடியும்"

"என்ன ஐடியான்னு இன்னும் நீ சொல்லலை."

"அதை இப்ப கேட்காதீங்க. நான் சொல்றதை மட்டும் ரெண்டு பேரும் செய்ங்க ப்ளீஸ்!" என்றான்.

ஒரு மாதிரியாக இருவரும், ஒரே மாதிரி தலையசைத்து சரி சொன்னனர்.

பிரவீன் உடனே காரியத்தில் இறங்கினான்.

ரிசீவிங் எண்ட் மெஷினின் சில பாகங்களை திறந்து சின்ன சின்ன வேலைகள் செய்தான். கணிணியில் ஒரு ப்ரோக்ராமை விரித்து வைத்து கொண்டு சிறிது நேரம் நோண்டினான். பினனர் எல்லாவற்றையும் இருமுறை சரியாக இருக்கின்றனவா என்று சோதித்தான். சரியாகவே இருந்தன.

"பூர்ணா, இப்ப உங்க வீட்டுக்கு போகனும்"

"யாரெல்லாம்?"

"மூனு பேரும்தான்"

காலையில் பூர்ணா வந்த வாகனத்திலேயே மூவரும் கிளம்பி பூர்ணாவின் வீட்டை அடைந்தனர்.

ஸென்டிங் எண்ட் இருந்த அறை கந்தல்கோலமாக இருந்தது. பிரவீன் பூர்ணாவை பார்த்தான்.

"நேத்து ராத்திரி டெஸ்ட்ராயர் வொர்க் ஆகாததால, எல்லாத்தையும் செக் பண்ணேன். அதான் இப்படியிருக்கு." என்றாள்.

பிரவீன் இந்த மெஷினையும் ஒரு முறைக்கு இரு முறை நன்றாக சோதனை செய்தான். பின்னர்...

"பூர்ணா! இப்ப ரெண்டு பேரும் கேபினுக்குள்ள போங்க"

இருவருமே அவனை பயங்கர வியப்போடு பார்த்தனர்.
"பிரவீன், உனக்கென்ன பைத்தியமா?"

"இதுதான் உன்னோட ஐடியாவா?"

"இதனால இப்ப இருக்கிற பிரச்சனை எப்படி ஸால்வ் ஆகும்?.."

இருவரும் மாறி மாறி கேட்ட கேள்விகளை மறித்து, "பூர்ணா, ப்ளீஸ். என்னை நம்புங்க! ரெண்டு பேரும் உள்ள போங்க ப்ளீஸ்!" கெஞ்சினான்.

இருவரும் வெற்றாக கேபினுக்குள் நுழைந்தனர். பிரவீன் கேபினின் கதவை மூடினான். சில வினாடிகள் கழித்து கதவுகளின் விளிம்பில் ஒளி கற்றை இறங்குவது தெரிந்தது. கணிணித் திரையை பார்த்தான்.

"1.824062e+3798 Packets Sent" என்றது. ஒரு வினாடி கழித்து "Destroying..." என்று ஓடி, உடனே "Destroyed Successfully." என்று மின்னியது.





அவன் செல்ஃபோன் அதிர்ந்தது. பூர்ணாதான்!

"ஹலோ! பூர்ணா பேசறேன்."

"அது தெரியுது. எத்தனை பேர்? அதை முதல்ல சொல்லு." பரபரத்தான்.

"இங்க இப்ப நான் ஒருத்திதான் இருக்கேன்!" அவள் குரலில் ஆச்சர்யம்!!!
- தொடரும்

Wednesday, July 04, 2007

யார் நான்

"யா....யா..ரு?" பிரவீன் கலவரமானான்.

"பூர்ர்ர்ர்ணா! இன்னும் தூங்கிகிட்டு இருக்கியா? ஏன்டா, என்னாச்சு உனக்கு? எவ்வளவு பெரிய பிரச்சனை? நான் கால் பண்ணா எடுக்கவே இல்லை. நீயும் திரும்ப கால் பண்ணலை? நம்ம பிராஜக்ட் இப்படி கவுந்து போச்சு. ஆனா உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பேயில்லை."

பிரவீன் தூங்கிக் கொண்டிருந்தவளின் அருகில் மெதுவாக சென்று, தலையணைக்கடியில் செல்ஃபோனை ஒளித்து வைத்து பேசிக் கொண்டிருக்கிறாளோ என்று பார்த்தான். அப்படி ஒன்றும் தெரியவில்லை.

"..."

"ஹலோஓஓ! லைன்ல இருக்கியா தூங்கிட்டியா?"

பிரவீனின் குழப்பம் எகிறிக் கொண்டே போனது.

"இல்லை.. சொல்லு.."

"எத்தனை தடவைதான் கால் பண்றது. அதான் இதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணலாம்னு காலைலயே கிளம்பி உன் வீட்டுக்கு வந்துகிட்டிருக்கேன். இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல வந்துருவேன். வந்து பேசறேன்." லைன் கட்டாகிவிட்டது.

பிரவீன் சிறிது நேரம் செல்ஃபோனையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். 'பூர்ணாவின் நம்பர்தான்! ஆனால் எப்படி? பிராஜக்ட் கவுந்து போச்சுன்னு ஃபோன்ல சொன்னாளே!? அப்ப இது?!?'

"அப்பவே எழுந்திரிச்சிட்டியா? காஃபி போடட்டுமா?" சிந்தித்தவாறே நின்று கொண்டிருந்தவனின் காதில், பூர்ணாவின் இந்த திடீர் கொஞ்சல் குரல் ஒரு நடுக்கத்தையே ஏற்படுத்தியது. திரும்பி பார்த்தான். படுக்கை அறை வாசலில் சிருங்காரமாக சாய்ந்து கையை கட்டிகொண்டு அவன் பதிலுக்காக அவன் முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள்.

பிரவீனின் மனதில் மறுபடி அந்த சந்தேகம் எழுந்தது, "ஏய்! இது என்ன காலைலேயே விளையாண்டுகிட்டு? ஒரு நிமிஷம் பயந்து போய்ட்டேன் தெரியுமா?"

"நான் எங்க விளையாண்டேன்? நீதான் நேத்து நைட்டு ஃபுல்லா விளையாண்ட", குறும்பாக அவனை பார்த்து சிரித்தாள்.

பிரவீனுக்கு இப்பொழுதுதான் தைரியம் வந்தது. "ஏஏய்ய்ய்! உன்ன்ன்னனன!" என்றவாறே அவளுருகில் நெருங்கினான்.

"ஐயோ! இப்ப வேணாம். இன்னைக்கு நமக்கு நிறைய வேலை இருக்கு. இன்னைக்கே டிக்ளேர் பண்ணிரலாமா?" அவள் கேட்டதும் வாசல் மணி ஓலித்தது.

பிரவீனின் இதயம் மறுபடியும் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. அவன் குழப்பத்துடன் நின்று கொண்டிருக்கும்போதே, பூர்ணா வாசலை நோக்கி சென்று கதவைத் திறந்தாள்.

"ஹாஆஆயியார் நீநீநீநீ?" வெளியிலிருந்து பூர்ணா உள்ளேயிருந்தவளைப் பார்த்து கத்தினாள்.

"ஆஆஆஆஆஆஆ" உள்ளேயிருந்த பூர்ணா வீறிட்டாள்.

வெளியிருந்தவள் பிரவீனை கலவரமுகத்துடன் ஏறிட்டுப் பார்த்தாள். உள்ளேயிருந்தவளும் திரும்பி அவனை பார்த்தாள்.

பிரவீன் பேயறைந்தது போல் நின்று கொண்டிருந்தான். அவ்வளவு கலவரத்திலும் அவனுக்கு நேற்றிரவு கம்யூனிகேஷன் சேனல் ஒரு வினாடி சிகப்படித்தது நினைவில் ஓடியது.

வெளியிலிருந்தவளை பார்த்து, "பூ..பூர்ணா! நீ .. அப்ப இது? .." 'நேற்றிரவு டெலிபோர்டிங்கில் கடத்தும்பொழுது, இங்கே பூர்ணா உருவாகிய பிறகு அங்கே பூர்ணா அழியவில்லை!!!' இது மூளையில் உறைத்ததும், தலையில் கை வைத்து "ஓஓஓஓ..." என்று ஓலமிட ஆரம்பித்தான்.

"பிரவீன்! பிரவீன்! எனக்கு புரியலை. இங்கே என்ன நடக்குது. எப்படி?" வெளியே இருந்தவள் உள்ளே வந்து அவன் கைகளை இழுத்து உலுக்கினாள். அவளுக்கும் இப்பொழுது லேசாக புரிந்திருந்தது.

அவள் அவனை உலுக்கியதும் உடனே அவள் கைகளை உதறித் தள்ளிவிட்டான்.

"பூர்ணா! பூர்ணா நேத்து ஏதோ தப்பு நடந்திருக்கு. இங்கே உன்னோட பிரதி உருவாயிருச்சு. ஆனா ஸென்டிங் எண்டில் நீ அழிக்கப் படலை"

"ஆனா, ஆனா அது எப்படி நடந்தது?" வாசலில் நின்று கொண்டிருந்தவளும் அவன் அருகே வந்து விட்டாள்.

முகத்தை திருப்பி அவளைப் பார்த்தான், "தெரியலை. நேத்து நீ வரும்போது ஒரு செகண்ட், கம்யூனிகேஷன் கட்டாச்சு. ஒரு வேளை அதனால ஏதாவது..."

"இதுக்குத்தான் நேத்து உடனே கால் பண்ணினேன். நீ ஏன் அப்ப செல்லை எடுக்கலை?" பூர்ணா கோபமாகப் பார்த்தாள்.

"அது.. அது வந்து..." அவன் நேற்றிரவே வந்தவளைப் பார்த்தான்.

"ஏன் இப்படி இழுக்கிறே...? எதுக்கு அவளை பார்க்கிற...?", பூர்ணாவுக்கு நேற்றிரவு அவன் கடைசியாக ஃபோனில் பேசிய பேச்சு நினைவுக்கு வந்தது. "பிரவீன்! பிரவீன்!! நேத்து .... நைட்டு.... ஏதாவது.....?" அவளால் கேட்க முடியவில்லை. விம்மத் தொடங்கினாள். விம்மலுக்கிடையில் ஒரே ஒருமுறை "ஏமாத்திட்ட" என்றாள் உடைந்த குரலில்.

பிரவீன் அடிபட்ட பறவையாக குற்ற உணர்வுடன் அவளைப் பார்த்தான்.

புதிதாய் உருவான பூர்ணா, அழுது கொண்டிருந்த பூர்ணாவின் தலையை மெதுவாக வருடினாள். 'பூர்ணா' என்று தன் பெயரையே கூப்பிட்டு அவளை அழைப்பதற்கு கொஞ்சம் கூச்சமாக இருந்தது.

"பூர்.. பூர்ணா! ஆனா.. இதுல பிரவீனை குற்றவாளியாக்கறதுல நியாயமே இல்லைனு தோனுது. கொஞ்சம் யோசிச்சு பாரு. பிரவீனோட காதலி பூர்ணா. பிரவீன் நேத்து இருந்ததும் பூர்ணாவோடதான். ஆனா அது நீயில்லை. நான்! ஏன்னா நானும் பூர்ணாதான்."

"ஆனா பிரவீனை காதலிச்சது நான். நீயில்லை!" என்று உறுமினாள் அழுது கொண்டே.

"ஆனா நேத்து நைட் வரைக்கும், நீ வாழ்ந்த வாழ்க்கை எல்லாமே நானும் வாழ்ந்ததுதான். ஏன்னா அப்ப நாம ரெண்டு பேர் கிடையாது. நீ ஒருத்தி.... இல்லை, நாம ஒருத்திதான். ஆனா இப்ப ரெண்டு பேர். இதுதான் இப்ப பிரச்சனை. பிரவீன்! எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு. பூர்ணாங்கற நான் யாரு?!?!"

பிரவீனுக்கு தலையே வெடித்துவிடும் போலிருந்தது. இருவரையும் பார்த்து, "பூர்ணா! இப்ப யாரு 'நீ'?" அவன் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தது.

அழுது கொண்டிருந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்து, "அதையேதான் நாங்களும் கேட்கிறோம்? யார் 'நான்' "?

- தொடரும்

Sunday, July 01, 2007

யார் நான்


"பூபூபூர்ணா" மிக மெதுவாக அழைத்தவாறே அவளருகில் சென்றான்.

ஒரு நிமிடம் இருவராலுமே பேச முடியவில்லை. ஒருவரை ஒருவர் பரவசமாக பார்த்தவாறே நின்றிருந்தனர். பூர்ணா மெதுவாக புன்னகைக்க ஆரம்பித்து, உடைந்த பெரிய சிரிப்போடு பிரவீனின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். அவள் வாயிலிருந்து "பிரவீன் பிரவீன்" என்ற வார்த்தை மட்டும் வந்து கொண்டிருந்தது.

பிரவீன் மெதுவாக அவளை தன் கழுத்திலிருந்து பிரித்தான், "நெஜமாவே ஜெயிச்சுட்டோம்!!!!" அவன் கண்களிலிருந்தும் லேசாக கண்ணீர் வழிந்தது.

"ம்ம்" என்று தலையசைத்துவிட்டு மறுபடியும் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

"நாளைக்கே டிக்ளேர் பண்ணிருவோம். முதல்ல டெமான்ஸ்ட்ரேஷனுக்கு பெர்மிஷன் வாங்கனும். அப்புறம் இன்டர்நேஷனல்.." பேசிக் கொண்டே போனவனின் வாயைப் பொத்தினாள்.

"பிரவீன்! என்னோட சின்ன வயசுக் கனவு, இன்னைக்கு நனவாயிருக்கு. அந்த சந்தோஷத்தை நான் இன்னைக்கு முழுமையா அனுபவிக்க விரும்பறேன். அடுத்தது என்னங்கிறதைப் பத்தி, இப்ப, இன்னைக்கு யோசிக்க வேண்டாம். இன்னைக்கு முழுக்க நான் சந்தோஷமா இருக்க மட்டும் விரும்பறேன். என்ன? புரியுதா?" கொஞ்சலாக கேட்டாள்.

வாயை மூடியிருந்த அவள் சின்ன விரல்களை மெதுவாக பிரித்து "புரியுது" என்று சொல்லிவிட்டு, அந்த விரல்களில் முத்தமிட்டான்.

"மியூசிக் போடேன். நல்ல மெலடியா.."

அவளை அணைத்திருந்த கையை விலக்காமலே, ரிமோட்டை எடுத்து பிளேயரை ஆன் செய்தான். சத்தத்தை மிகக் குறைவாக வைத்தான். மெல்லிய தாள கதியில், சாக்ஸஃபோனும் வயலினும் கலந்து, கரைந்து மயக்க ஆரம்பித்தது.

சிணுங்கிய செல்ஃபோனை சைலன்ட் மோடில் மாற்றி விட்டு, அருகிலிருந்த குஷனில் தூக்கி எறிந்தான்.

அவளை அப்படியே அலாக்காக தூக்கி, படுக்கையில் வைத்து, மார்பில் சாய்த்துக் கொண்டான்.

"ஏய்! கவிதையெல்லாம் சொல்லுவியே! இப்ப ஏதாவது சொல்லேன்டா. கேக்குறேன்!"

"உடனே கேட்டா எப்படி?"

"உடனே உன்னால ஒன்னு எழுத முடியாதா? எனக்காக ஒன்னே ஒன்னு!!" அந்த கொஞ்சலில் பிரவீன் அப்படியே கிறங்கிப் போனான். அவள் முகத்தை நிமிர்த்தி, கண்களுக்குள் ஆழமாக பார்த்தான்.

"இறுக்கி அணைக்கும்
போதெல்லாம்
பற்றி எரிகிறது
மோகத் திரியில்
காமத் தீ
"

"ம். அப்புறம்."

"முத்தமழை பொழிந்ததை
அணைத்திடவா என்
செல்ல மேகமே!
"

"பிரவீன். நாம ஒரு குழந்தையோட நிறுத்திடக் கூடாது. எனக்கு அட்லீஸ்ட் நாலாவது வேணும். அப்பத்தான் அவங்களுக்கு..."

சட்டென்று அவள் முகத்தை நிமிர்த்தி, அவள் இதழ்களில் இதழ் பதித்தான்.

ஒரு நிமிடத்துக்குப்பின் அவள் முகத்தை விடுவித்து...

"முத்தம் செய்த காயத்தில்
வழியும் ரத்தம் உறைய
மீண்டும் வை முத்த....
"

அவன் கழுத்தை வளைத்து அவன் இதழ்களை மூடினாள். இப்பொழுது அவள் முறை!

அவன் கைகள் மெதுவாக இரவு விளக்கைத் தவிர, மற்றெல்லாவற்றையும் அணைத்தது.

------------------------->>>>>>>>>>><<<<<<<<<<<<<-------------------------

பிரவீன் படுக்கையிலிருந்து விழித்தபொழுது, மணி ஆறாகி பத்து நிமிடம் ஆகியிருந்தது. அருகில் பூர்ணா இன்னும் உறங்கி கொண்டிருந்தாள், அவன் தோளில் தலை வைத்து. மெதுவாக அவள் தலைக்கு தலையணை கொடுத்துவிட்டு, படுக்கையிலிருந்து எழுந்தான்.

ஹாலில், கம்பீரமாக அந்த மெஷின் இன்னும் விழித்து கொண்டிருந்தது. பெருமிதத்தோடு அதன் அருகில் சென்றான்.

அப்பொழுது செல்ஃபோன் குஷனில் அதிர்ந்துவிட்டு அமைதியடைந்தது. எடுத்துப் பார்த்தான்.

'32 மிஸ்டு கால்ஸ்!!!'
'யாரெல்லாம் கூப்பிட்டிருக்கா?' என்று நினைத்தவாறு மிஸ்டு கால்ஸ் லிஸ்ட்டைப் பார்த்தான்.
'என்னது?' திரும்பி படுக்கையை பார்த்தான்.

செல்ஃபோன் மறுபடியும் அதிர்ந்தது. அழைப்பை ஒரு வினாடி பார்த்தான். படுக்கையிலிருந்த பூர்ணாவை பார்த்தவாறே பச்சை பட்டனை அழுத்தினான்.

"ஹலோ, நான் பூர்ணா பேசறேன். குட் மார்னிங்டா!!!"

- தொடரும்

Thursday, June 28, 2007

யார் நான்



இரு வாரங்களுக்கு பின் ஒரு இனிய இரவு. சுவரில் மாட்டியிருந்த டிஜிட்டல் கடிகாரம் "21:34" என்று துடித்துக் கொண்டிருந்தது. இருபத்தி இரண்டுக்கு இருபது அடி சதுரமாகயிருந்த அந்த அறையை, கிட்டத்தட்ட பாதிக்குமேல் அந்த இயந்திரம் ஆக்கிரமித்திருந்தது. அது உலகின் முதல் டெலிபோர்டிங் இயந்திரத்தின் ஸென்டிங் எண்ட், அதாவது அனுப்பும் முனை. அதன் ஓரத்திலிருந்த டெஸ்ட்ராயர் மாட்யூலின் பக்கங்களிலிருந்த எலக்ட்ரான் கன்களின் கண்களுக்குள், பூர்ணா தனது கண்களால் ஆராய்ந்து கொண்டிருந்தாள். சிறிது நேரத்திற்கு பின், எலக்ட்ரான் கன்களின் வயர்களை, கன்ட்ரோல் பேனலுடன் இணைக்க ஆரம்பித்தாள். அவளுடைய கணக்கின்படி இன்னும் பத்து நிமிஷத்தில் வேலை முடிந்து விடும். ஏற்கெனவே பிரவீன் தனது வீட்டிலிருந்த ரிசீவிங் எண்ட் (சேரும் முனை) இயந்திரத்தை தயார் செய்து முடித்து விட்டான். இவளுடைய வேலை மட்டும்தான் பாக்கி.

இவர்களது டெலிபோர்டிங் இயந்திரத்தின் தத்துவம் எளிமையானதுதான். நமது வீட்டு டெலிஃபோன்களும், செல்ஃபொன்களும் செயல்படும் அதே முறையில்தான் இந்த டெலிபோர்டிங் இயந்திரமும் செயல்படுகிறது. ஃபோனில் குரல் மட்டுமே கடத்தப்படுகிறது. ஆனால் இந்த இயந்திரம் உயிர் உள்ள/இல்லாத எந்த பொருளையும் கடத்தும்.

எல்லா பொருள்களின் அடிப்படை விஷயம் இரு வகையான துகள்கள்தான்(Particles). க்வார்க்(Quark), லெப்டான்(lepton) என்ற இந்த இருவகையான துகள்களால்தான் இந்த மாபெரும் அண்டத்திலிருக்கும் எல்லா பொருள்களுமே உருவாகியிருக்கின்றன. இந்த துகள்கள் அணுவிலிருக்கும் ப்ரோட்டான், எலக்ட்ரான்களையும் நுணுக்கிப் பார்த்தால் கிடைப்பவை. இந்த துகள்களில் சில உட்பிரிவுகளும் உண்டு.

கடத்தப்பட வேண்டிய பொருளிலிருக்கும், இந்த எல்லா துகள்களின் குணாதிசியங்களையும் பிரதியெடுத்து, அவற்றை மின்னனு அலைகள் மூலம் ஸென்டிங் எண்டிலிருந்து, ரிசீவிங் எண்டுக்கு அனுப்பி, ரிசீவிங் எண்டில், கிடைத்த தகவல்களின் படி, க்வார்க்குகளையும் லெப்டான்களையும் கொண்டு மீண்டும் பொருளை உருவாக்கியபின், ஸென்டிங் எண்டுக்கு தகவல் அனுப்பி, டெஸ்ட்ராயர் மூலம் மூலப்பொருளை அழிப்பதுதான், பூர்ணாவும் பிரவீனும் கண்டுபிடித்துள்ள டெலிபோர்டிங் இயந்திரத்தின் ஒன் லைன் தத்துவம்.

இணைப்புகளை பொருத்தி முடித்ததும், கன்ட்ரோல் பேனலில் எலட்ரான் பீமின் தாக்கத்தை, தனது உடலுக்கு ஏற்ற அளவுக்கு செட் செய்தாள். எல்லாம் சரியாக இருக்கிறதா என்று மீண்டுமொருமுறை சரி பார்த்தாள்.

பிரவீனின் செல்ஃபோனை அழைத்தாள்.

"ஹாய் டா! உன்னோட காலுக்காகத்தான் வெய்ட் பண்ணிட்டிருந்தேன். வேலை முடிஞ்சுதா?" பிரவீன் உற்சாகமாக கேட்டான்.

"ம்ம்" என்றாள் கொஞ்சம் நடுக்கத்துடனே.

"எல்லாத்தையும் ஒரு தடவை ரீ செக் பண்ணியா?"

"ம்ம்"

"என்ன, பயமாயிருக்கா? வேனும்னா முதல் தடவை நான் மெஷின் மூலமா வரட்டுமா"

"சே, சே! பயமெல்லாம் இல்லை. ஆனாலும் கொஞ்சம் நெர்வஸா இருக்கு. நானே வரேன். நீ அங்கே எல்லாம் ரெடி பண்ணிட்டியா?"

"ம்! எல்லாம் பக்காவா இருக்கு. மெத்தை மேல பூ தூவி வச்சிருக்கேன். பெட் ரூமை கூட ரூம் ஃபிராக்ரென்டெல்லாம் அடிச்சி வாசமா வச்சிருக்கேன். வெய்டிங் ஃபார் யூ!!" சொல்லிவிட்டு குறும்பாக சிரித்தான்.

"ச்சீ! அதில்லைடா. மெஷின் ரெடியா இருக்கா?"

"ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடிதானே அந்த குரங்கு குட்டியை கடத்தினோம். ரெடியாதான் இருக்கு."

"மெஷினை ஆன் பண்ணு."

"ம். பண்ணியாச்சு."

"கம்யூனிகேஷன் சானல் ஆன்லைன்ல இருக்கா?"

"இங்கே ஆன்லைன்லதான் இருக்கு."

பூர்ணா, தனது அறையிலிருந்த இயந்திரத்தை, கம்யூனிகேஷன் சானலை உயிர்ப்பித்து ரிசீவிங் எண்டோடு இணைப்பை ஏற்படுத்தினாள்.

"ம்ம். உன்னோடதும் இப்ப ஆன்லைன்ல வந்திருச்சு.", தனது கன்ட்ரோல் பேனலை பார்த்தவாறு பிரவீன், "பூர்ணா, எலக்ட்ரான் பீமோட இன்டென்ஸிட்டியை சரியா செட் பண்ணிட்டியா?" என்று கேட்டான்.

"ம். பண்ணிட்டேன். நான் இப்ப மெஷினொட கேபினுக்குள்ள போறேன். ஃபோனை வச்சுடறேன். ஸீ யூ தேர்!" சொல்லிவிட்டு செல்ஃபோனை கட் செய்தாள்.

பிரவீன் கண்ட்ரோல் பேனலின் திரையையே பார்த்துக் கொண்டிருந்தான். அதில் மஞ்சள் நிறத்தில் "Listening..." என்று மினுங்கி கொண்டிருந்தது. சரியாக இருபது வினாடி கழித்து "9.12031 e+3792 Packets received" என்று பச்சை நிறத்தில் மின்னியது. அடுத்த வினாடி கம்யூனிகேஷன் சானல் ஒரு முறை சிகப்படித்தது. ஒரு வினாடி கழித்து மீண்டும் பச்சையாக உயிர்ப்பித்து கொண்டது.

ஆனால் அந்த ஒரு வினாடி சிகப்பு பிரவீனை நிறையவே கலவரப்படுத்தியது. ரிசீவிங் சேம்பரை பயத்துடன் பார்த்தான்.

ரிசீவிங் சேம்பரின் இடுக்குகளில் வெள்ளை ஒளி மேலிருந்து கீழாக ஒரு முறை இறங்கியது. அடுத்த வினாடி சேம்பரின் கதவு திறந்தது.

பரவசமான ஒரு நிலையில் அவன் முன்னே, பூர்ணா முழுதாக நின்று கொண்டிருந்தாள். "பிரவீவீவீன்!!!"
- தொடரும்

Sunday, June 24, 2007

யார் நான்

அத்தியாயம் ஒன்று


"உன் கண்ணாடியின்
வழியே தெரியும்
உலகம்
அது சின்னஞ் சிறியது
அதில் எப்பொழுது சிறை வைத்தாய்
என்னை?
"

"நான் கண்ணாடி போட்டிருக்கிறதை கிண்டல் பண்றியா?", பிரவீனை கோபமாக முறைத்தாள்.

"ஐயையோ!!! பூர்ணா, நான் அப்படி சொல்லலை. வந்து அது கூட அழகாயிருக்குன்னுதான் சொல்ல வந்தேன்."

"அப்ப, நான் அழகாயில்லை. அப்படித்தானே."

"நீ அழகாயில்லைன்னு சொன்னா எனக்கு கண்ணு அவிஞ்சு போச்சுன்னு அர்த்தம். இப்ப பாரு. ம்ம்ம். ஆங்!

படபடக்கும் உன் விழிகள் கண்டு
பூக்களெல்லாம் இதழ் விரிக்கின்றன
பட்டாம்பூச்சி வந்து விட்டெதென்று!

இது எப்படியிருக்கு?"

"நான் ஏற்கெனவே நிலாரசிகனையெல்லாம் படிச்சு முடிச்சுட்டேன். வீணா கடன் வாங்கி கஷ்டப்படாதே! சொந்தமா யோசிக்கவே மாட்டியா?"

"அப்ப நான் திங்க் பண்றதேயில்லையா?", பிரவீனின் முகம் தொங்கி போனது.

"ஏய்! ச்சும்மா ஜாலிக்கு சொன்னேன்பா. நீ எவ்ளோ பெரிய விஞ்ஞானி? எவ்ளோ பெரிய ஆராய்ச்சியில ஈடுபட்டிருக்க!"

"நானா, நீயா? நீதானே அந்த ஆராய்ச்சிக்குத் தலைவி. நீ அதைப் பண்றதாலேதானே நானும் அதை பண்ணிட்டிருக்கேன்"

"அப்ப உனக்கு இதுல இன்ட்ரெஸ்ட் இல்லையா?"

"இருக்கு. ஆனா அதைவிட பல மடங்கு உன்மேலதான் இருக்கு. அது உனக்கு புரியாததுதான் எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு."

"புரியுதுப்பா!!!"

"அப்ப ஏன் எப்ப கல்யாண பேச்செடுத்தாலும் தள்ளிப் போடற?"

பூர்ணா ஒரு நீளமான பெருமூச்சு விட்டாள். "பிரவீன்! நாமளும் எல்லாரையும் மாதிரி கல்யாணம் பண்ணிக்கத்தான் வேணுமா?"

"ஏய்! என்ன சொல்ற?" வேகமாக கேட்டான்.

"அதில்லை. அதாவது வாழறதுக்கு கல்யாணம்ங்கறது என்ன அவசியம்? இப்ப நம்ம ரெண்டு பேரோட ஆசையென்ன? கடைசி வரைக்கும் நீயும் நானும் சேர்ந்து வாழனும்ங்கிறது. இதுக்கு கல்யாணம் அவசியமா?"

"அவசியமில்லையா?"

"எனக்கு உன்மேல நம்பிக்கையிருக்கு. நீ கடைசிவரைக்கும் எனக்கு துரோகம் பண்ணமாட்டேன்னு முழுமையா நம்பறேன். உனக்கும் என்னைப் பத்தி அதேதான். அப்புறம் எதுக்கு கல்யாணம்? நாம ரெண்டு பேரும் சேர்ந்து வாழலாமே, கல்யாணம் பண்ணிக்காம"

மீசையை வருடிக்கொண்டே சிறிது நேரம் யோசித்தான். "பூர்ணா! யோசிச்சுப் பார்த்தா நீ சொல்றது சரின்னு தோனலைன்னாலும், தப்பில்லைன்னு தோனுது. எனக்கு நீதான் முக்கியமேயொழிய கல்யாணமில்லை. நாம நமக்காகத்தான் வாழனுமேயொழிய, அடுத்தவங்களுக்காக இல்லை. நீ சொன்னபடியே சேர்ந்து வாழலாம். நாள் நட்சத்திரம் கூட பார்க்க வேணாம். இன்னைக்கே ஆரம்பிக்கலாம்."

"அவசரப்படாதே! ஆனா அதுக்கும் நேரங்காலமெல்லாம் இருக்கு. நம்ம ஆராய்ச்சி வெற்றிகரமா முடியற கட்டத்துல இருக்கு. அது வெற்றியடைஞ்சதும் நாம் சேரலாம்."

"ஆனா, அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம். அது எப்படியும் வெற்றியடையற பிராஜக்ட். சக்ஸஸ் ரேட் 98%. அதுக்காக இதையேன் தள்ளிப் போடனும்?"

"ப்ளீஸ். இன்னும் கொஞ்ச நாள்தானே? மாசக் கணக்கு கூட இல்லை. நாள் கணக்குதான். ஒரு வாரமோ இரண்டு வாரமோ? அது வரை பொறுக்க மாட்டியா? இந்த நேரத்தில் நாம அவசரப்பட்டால் டைவர்ட் ஆயிடுவோம். ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்காத கதையாய்டும். அதுனாலதான் சொல்றேன். ப்ளீஸ்! புரிஞ்சுக்க! இது என்னோட லட்சியக் கனவு!!!"

"நீ இப்படி சொல்வேன்னு எதிர்பார்த்தேன். சரி, இன்னும் ரெண்டு வாரம்தானே. பொறுக்கலாம். இன்னும் நமக்கு டெஸ்ட்ராயர் மாட்யூல்லயும், கம்யூனிக்கேஷன் ரிசீவர்லயும்தான் சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கு. இப்பவே முயலை கடத்தியாச்சு. ரிசீவர் எண்ட் பிரச்சனைகளை நான் பார்த்துக்குறேன். அதுக்கு என்கிட்ட சில ஐடியாஸ் இருக்கு. டெஸ்ட்ராயரை நீ கவனிக்க முடியுமான்னு பாரு. இல்லைன்னாலும் ரிசீவர் வேலைகள் முடிஞ்சதும், ரெண்டு பேரும் சேர்ந்து அதை கவனிக்கலாம்"

"ம்ம். சரி! ஆனா டெஸ்ட்ராயர்ல மனித உடம்பை பிரிச்சு விடும்போது வலி தெரியாம இருக்கிறதுங்கறது சின்ன பிரச்சனைதான். என்கிட்ட அதுக்கு ஒரு சொல்யூஷன் இருக்கு. அது வொர்க் அவுட் ஆகும்னு நினைக்குறேன். அப்படி வொர்க் ஆகலைன்ன வேற வழி யோசிக்கனும்"

"எது? முன்னாடி பூனையை கடத்தும்பொழுது உபயோகப்படுத்துனோமே. அந்த மெத்தடா?"

"ஆமாம். ஆனா அதுலேயே எலக்ட்ரான் பீமின் தாக்கத்தை கூட்டி கொடுக்கனும். இன்னும் 15 மடங்கு."

"நல்ல ஐடியாதான். அது வொர்க் ஆகும்"

"பிரவீன்! கொஞ்சம் யோசிச்சு பார்த்தியா? மனிதனை சக்ஸஸ்ஃபுல்லா கடத்துனத்துக்கப்புறம், இந்த உலகம் முழுக்க நம்மை பத்திதான் பேசுவாங்க! புக் போடுவாங்க!! பேட்டி எடுப்பாங்க!! இதைப்பத்தி இன்னும் ஆராய்ச்சி பண்ணுவாங்க!!!"

"பூர்ணா! பொதுவா நான் எப்பவுமே காரியத்தை முடிச்சதுக்கப்புறம், நமக்கு என்ன கிடைக்கும்னு யோசிக்கிறதில்லை. உனக்கே தெரியும். அப்பதான் அந்த காரியத்தை ஒழுங்கா பண்ணி முடிக்க முடியும். ஆனாலும், இதுல இன்னும் சில விஷயங்களை நீ யோசிக்க விட்டுட்டே. நாம கண்டுபிடிச்சிருக்கிறது முதல் டெலிபோர்ட்டிங் மெஷின். இது வரைக்கும் ஒளியைத் தவிர ஒரு அஃறினை பொருளை கூட ஓளி வேகத்தில் ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு கடத்த முடியாது. ஆனா நாம கண்டுபிடிச்சிருக்கிறதுல மனுஷனையே ஒளி வேகத்துல ஒரு இடத்துலயிருந்து இன்னொரு இடத்துக்கு கடத்தலாம், உயிரோட!! இப்படியொரு கண்டுபிடிப்பு உலகத்துல நிகழ்ந்ததுக்கப்புறம் என்னெல்லாம் நடக்கும்? நீ இங்கயிருந்து அமெரிக்காவுக்கு கண்ணை மூடித் திறக்கறதுக்குள்ள போய்ட்டு வரலாம். உண்மையில அதவிட கம்மியான நேரத்துல! இப்ப இருக்குற பயண விதிமுறைகளெல்லாம் இதனால வருங்காலத்துல மாறிப்போகும். இதுக்கு தனியா பாஸ்போர்ட், விசா எல்லாம் கொண்டு வந்தாலும் வருவாங்க. நிலாவுக்கு கூட அதிகபட்சம் ஒன்றரை வினாடில போயிரலாம். முக்கியமா, நீ உங்க வீட்டுலயிருந்து என் வீட்டுக்கு உடனடியா வந்துரலாம்"

"என்னது?!", என்று முறைத்தாள்

"நம்ம டெலிபோர்ட்டிங் மெஷின் மூலமா சொன்னேன்மா. இப்பவே வரச் சொன்னா, அதான் வர மாட்டேன்னுட்டியே!!"


-தொடரும்

Thursday, March 22, 2007

"உள்ளே

வராதே!", அந்தக் குரல் கம்பீரமாக ஒலித்தது.

"என்னது?!?", சட்டென்று ஒலித்த அந்தக் குரலால், சற்று உறுதி குலைந்த குரலில் கணிதன் கேட்டான்.

"உள்ளே வராதே என்றேன்.".

'தமிழா?' கணிதன் மனதுக்குள் மீண்டும் குழப்பம்.

"இங்கு மொழி ஒரு தடையல்ல".

'அட! நான் மனதிற்குள்தானே நினைத்தேன். டெலிபதியா? அது சரிதான். இவருக்கு இந்த வித்தை கூட தெரியாவிட்டால் எப்படி! கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கண்டபடி நினைக்க கூடாது!' கணிதனின் மனதுக்குள் சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது.

"இது டெலிபதியல்ல! உன் மனதிற்குள் உள்ளவை அனைத்தும் எனக்குத் தெரியும். ஆனால் நான் நினைப்பது, நான் நினைத்தால் மட்டுமே உனக்கு கேட்கும். கேட்கிறது என்பது கூட உனது மாயைதான். அவற்றை நீ உணர்கிறாய். அவ்வளவுதான்!"

கணிதன் மனதைக் கட்டுப்படுத்த கொஞ்சம் கஷ்டப்பட்டான்.

'மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். கண்டபடி ஓடாதே.
சரி! நீங்கள் யார்? அப்பாடா! சரியான கேள்வியை கேட்டு விட்டேன்.'.

"உன் மனம் கட்டுப்படவில்லை. ரொம்பக் கஷ்டப் படுகிறாய். நான் யாரென்று கேட்டாய். நீ எதைத் தேடி வந்தாயோ அதுதான் நான்.".

கணிதனின் உடலில் உடனே அட்ரினலின் வேகம் அதிகரித்தது. வியர்வை பொங்கியது. ஆனந்தத்தில் உடல் நடுங்கியது.

'நிஜம்தானே? ஆனால் எதுவும் கண்ணுக்கு தெரியவில்லையே? ஒரு வேளை...' கணிதனின் நினைவோட்டத்தை, அந்தக் குரல் தடுத்து நிறுத்தியது.

"வீணாக ஏன் மனதை அலட்டிக் கொள்கிறாய்? நான் உருவமில்லாதவன். அருவமானவன்.".

'அருவமானவன்! அப்படியென்றால் ஆணா?'

"எனக்கு பால் கிடையாது. ஆனால் உனது மொழிக்கு ஏதாவதொரு பால் தேவைப்படுவதால், அப்படி மொழிபெயர்க்கப்பட்டு நீ புரிந்து கொண்டாய். உனது ஆணாதிக்கச் சிந்தனை அதை ஆண் பாலாக மாற்றி விட்டது.".

'சரி! சரி! நான் உள்ளே வரக்கூடாது என்றீர்களே? நான் என்ன அவ்வளவு பாவம் செய்தவனா? பிறந்ததிலிருந்து உங்களை சந்திப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்டு வளர்ந்தவன். பல கஷ்டங்களை கடந்து இன்று உங்கள் முன் நிற்கிறேன். பல கோடி ஒளி வருஷங்கள் பிரயாணித்து இங்கு வந்திருக்கிறேன். என்னை இப்படி வாசலிலேயே தடுத்து நிறுத்துவது முறையா?'

"நீ இப்பொழுது இந்த வாசலைத் தாண்டி வரக்கூடாது. வர முடியாது!"

'அதுதான் ஏன்?'

"ஏனென்றால் உன்னிடம் சில பொருட்கள் இருக்கின்றன. ஒரு வாகனம் இருக்கிறது. அவற்றோடு நீ உள்ளே நுழைய முடியாது."

'வாகனம்தான் பிரச்சனையா? இதை விட்டுவிடலாம்.'

கணிதன் தன் வாகனத்திலிருந்து வெளியே குதித்தான்.

'இப்பொழுதாவது உள்ளே போக முடியுமா?'

"இப்பொழுதும் நீ உள்ளே வர முடியாது. உன்னிடம் மேலும் சில பொருட்கள் இருக்கின்றன."

கணிதன் தனது சுவாசக் குழாய், சிலிண்டர் முதலியவைகளை கழற்றி எறிந்தான்.

'உடைகள்?'

"அவையும் பொருள்தானே"

மறு எண்ணம் எண்ணாமல் கவச உடைகளையும், தலைக் கவசத்தையும் கழற்றினான். பின் தனது உள்ளாடைகளையும் களைந்தெறிந்தான்.

கவச உடைகளை கழற்றிய பின்னும் அவனுக்கு எந்த தீங்கும் ஏற்படவில்லை. தடையில்லாமல் சுவாசித்தான். ஒரு நல்ல வாசம் வேறு வீசிக் கொண்டிருந்தது.

'இப்பொழுது என்னிடம் ஒன்றுமில்லை. உள்ளே வரலாமா?'

"இன்னமும் ஒன்று உன்னிடம் இருக்கிறது. அதோடு இங்கு யாரும் உள்ளே வர முடியாது."

'ஆனால், என்னிடம் எதுவுமேயில்லை'

"நன்றாக எண்ணிப்பார்! எல்லாவற்றையும் விட்டு விட்டாயா? உனது என்று சொல்லிக் கொள்வதற்கு ஒன்றுமேயில்லையா?"

'என்ன இருக்கிறது? உங்களுக்கேத் தெரிய. ஓ! புரிந்து விட்டது! புரிந்து விட்டது கடவுளே! புரிந்து விட்டது!!'

கணிதனின் உடலில் திடீரென்று ஏற்பட்ட அந்த ஒரு நொடி அதீதீதீதீத பரவசத்தால், மார்பில் அதிகமாய் ரத்தம் பாய, எதோ ஒன்று வெடிக்க, சில நலிந்து போன நரம்புகள் அறுந்து தெறிக்க, உயிர் பிரிந்தது.

கணிதனின் உடல் அவன் தூக்கியெறிந்த பொருட்களுக்கிடையில், முடிவில்லாத அந்த பள்ளத்தில் விழுந்து கொண்டிருந்தது.

ஒரு நிமிடம் கழித்து, தவளையை கார்ட்டூனாய் வரைந்தது போன்ற ஒரு உருவம் அந்த வாசலிலிருந்து எட்டிப் பார்த்தது.

'இவன் இங்கே கடவுளைத் தேடித்தான் வந்தான். நல்லவன்தான். ஆனாலும், இவனை நமது கிரகத்துக்குள் வர அனுமத்திருந்தால், இவனால் நமது கிரகத்துக்கு பல தீமைகள் விளைந்திருக்கும். நம்மிடம் டெலிபதி, மொழிக்கடத்தல் என்று பல விஞ்ஞான வசதிகளிருந்தாலும், இந்த ஜந்துக்களின் பலத்தை எதிர்த்து நிற்பது மிகக் கடினம். இந்த வெளியுலக ஜந்துக்களுக்கு நம்மைப் பற்றி தெரியாமலிருக்கும் வரைதான் நமக்கு பாதுகாப்பு.', என்று அந்த தவளைக் கார்ட்டூன் தனது மொழியில் நினைத்துக் கொண்டது யாருக்கும் கேட்கவில்லை.