Tuesday, June 30, 2009

பிரசன்னம்

சிவநேசனுக்கு வயது அறுபத்தி நான்கு முடிந்து ஏழு மாதம் பன்னிரெண்டு நாட்கள் ஆகிவிட்டன. அன்றுதான் அந்த பிரசித்தி பெற்ற சம்பவம் நிகழ்ந்தது. நாம் நேரடியாகவே கதைக்குள் நுழைந்து விடலாம். சிவநேசனுக்கு கடவுள் நம்பிக்கை நிரம்பவே இருந்தாலும், சாமியார்கள், மந்திரவாதிகள் இன்னபிற‘கள்’ மேல் சுத்தமாக நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் எந்த சாமியார் எங்கே உதயமானாலும், கைக்காசில் பஸ் டிக்கெட் செலவழித்துப் போய் பார்ப்பார். ஆனால் அந்த சாமியார்/ரிணி ஏதாவது அற்புதங்கள் செய்து காட்டுபவராக இருக்க வேண்டும்.

அவர்கள் செய்யும் அற்புதங்களை திரும்பத் திரும்ப கூர்ந்து கவனிப்பார். சில மணி நேரங்களில், சில சமயம் சில நாட்களில், அந்த அற்புத வித்தையின் சூட்சுமம் என்னவென்று தெரிந்து போகும். வேறு சில சமயங்களில் அந்த சாமியார்களிடமே நைச்சியமாகப் பேசி ரகசியத்தை கறந்திருக்கிறார். இப்படி சேகரித்த ரகசியங்களைத் திரட்டி, ”முக்தாலன்” என்ற புனைப்பெயரில் “இந்திய சாமியார்களின் அற்புத ரகசியங்கள்” என்று புத்தகமே போட்டிருக்கிறார்.

இன்றும் அப்படித்தான், பத்திரிக்கையில் ஏழாம் பக்கம் வெளியாகியிருந்த அந்த கிரிதரானந்தரின் அற்புதங்களைப் பற்றி படித்து விட்டு, அந்த ஆசிரமத்துக்குள் நுழைந்தார்.

ஆசிரமம் பைபாஸ் சாலையை ஒட்டியே இருந்தது. சுமாரான கூட்டம் இருந்தது. பெயர்தான் ஆசிரமமேத் தவிர உள்ளே பெரிய ஹாலாக, ஆங்காங்கே நவீன உலகின் ஆடம்பரங்கள் எட்டிப் பார்த்திருந்தன. நடுநாயகமாக ஒரு இலவம்பஞ்சு நிரப்பப்பட்ட வெல்வட் மேடை இருந்தது. சுவாமி, இமயமலை அருகிலிருந்து வருவதாக பக்தக்கோடிகள் பேசிக் கொண்டனர். ’இமயமலையில் எத்தனை சுவாமிகளப்பா?!’ என்று நினைத்துக் கொண்டார்.

சரியாக எட்டு மணிக்கு, கிரிதரானந்தர் அந்த நடு மேடையில் திடீரென்று தோன்றினார். ஆமாம். திடீரென்றுதான். புரான பட வெடி சத்தமோ, நவீன கால க்ராஃபிக்ஸோ இல்லாமல், சத்தமேயில்லாமல், கண்ணிமைக்கும் நேரத்திற்கும் மிக மிகக் குறைவானதொரு பொழுதில், திடீரென்று.

எவ்வளவோ அற்புதங்களை பார்த்திருக்கிற சிவநேசன் கூட அயர்ந்து விட்டார். அதற்கப்புறம் நிகழ்ந்த பிரார்த்தனையிலோ, வெறுங்கையில் விபூதி வழங்கும் அற்புதத்திலோ அவர் மனம் செல்லவேயில்லை. சரியாக அரைமணி நேரம். எட்டரைக்கு கிரிதரானந்தர் மீண்டும் அதே தீடீரென்று மேடையிலிருந்து காணாமல் போனார்.

கூட்டம் இப்பொழுது கலையத் தொடங்கியது. சிவநேசனுக்கு இது ஒரு சவாலாகவேத் தோன்றியது. பிரதான சீடராகத் தோன்றியவரை அணுகினார்.
“குருஜியை பார்க்கனும்.”

“மறுபடி மதியம் மூனு மணிக்கு தரிசனம் இருக்கு சாமி.”

“இல்லை. கொஞ்சம் தனிமையில் பேசனும்.”

அந்த சீடர் அவரை ஒருமுறை முழுவதுமாகப் பார்த்தார். சிவநேசன் வசதியாகத் தெரிந்தாரோ, என்னவோ? “கொஞ்ச நேரம் அந்த ரூம்புல உக்காருங்க. குருஜிட்ட அனுமதி வாங்கிட்டு வர்ரேன்.”

வாங்கிவிட்டு வந்தவர், “குருஜி வரச் சொல்றார்” என்றார்.

கிரிதரானந்தர் இருந்த அறை வெளிச்சம் குறைவாக இருந்தது. கிரிதரானந்தரே கொஞ்சம் மங்கலாகத்தான் தெரிந்தார். ஆனாலும் அவர் கழுத்தில் தொங்கிய உருத்திராட்சத்தை பொறித்திருந்த தங்கக் குண்டு கண்களை உறுத்தியது.

“வா சிவநேசா. வா”.

சிவநேசன் ஆச்சர்யப்படவில்லை. இதெல்லாம் பால பாட வித்தை என்பது அவருக்குத் தெரியும்.

சிறிது கண்களை மூடிய குருஜி, “உன் சின்னப் பெண்ணைக் கட்டிக் கொடுத்த இடத்தில் கொஞ்சம் பிரச்சனை. அதற்காகத்தானே வந்தாய்?”

“இல்ல குருஜி. பிரச்சனை இருக்குதான். ஆனா, அதுக்காக நா வரலை.” சிவநேசன் கிரிதரானந்தரை கண்களுக்குள் தீர்க்கமாகப் பார்த்தார்.

“பின்ன?” குரு சீடரின் பக்கம் கண்களை ஓட்டினார்.

“நாம கொஞ்சம் தனியாப் பேசலாமா?”

குருஜி ஒரு கணம் தயங்குவதாகத் தெரிந்தது. அப்புறம் தலையசைக்க, மற்றவர்கள் அகன்றனர்.

“என்னப் பிரச்சனை?”

“குருஜி! நான் நேரடியாவே விஷயத்துக்கு வர்ரேன். காலைல மேடைல திடீர்னு பிரசன்னமானீங்களே! எப்படி குருவே?”

கிரிதரானந்தர் கண்களில் அருளை வரவழைத்துக் கொண்டார். “அது என்னப்பன் எனக்கருளிய சில சித்திகளில் ஒன்று!” என்று மெல்ல சிரித்தார்.

“குருஜி! டோண்ட் ஃப்ளர்ட் மீ. நீங்கள் செய்த மற்ற எல்லா அற்புதங்களையும் என்னால் எப்படின்னு விளக்க முடியும். நாளைக்கே எதிர்த்தாப்லே கூட்டம் போட்டு எல்லா வித்தையையும் நான் பொதுவுல செஞ்சு காட்டினா, நீங்க போலீஸ் ஸ்டேசன் போக வேண்டியிருக்கும். அதனால எப்படின்னு சொல்லிருங்க.”

கிரிதரானந்தர் கண்களில் கலவரம் காட்டினார். இருந்தாலும் நிதானமாக “ஏன் நாளைக்கு? இன்றே செய்ய வேண்டியதுதானே?”

“ஸீ! நீங்க ஊரை ஏமாத்துங்க. சொத்து சேருங்க. என்னமும் பண்ணிட்டுப் போங்க. எனக்கு வேண்டியது அந்த வித்தையை எப்படி செய்றீங்கங்கறதுதான்.”

“அதை நான் உன்கிட்டே சொன்னா, நாளைக்கே நீ என்னை போலீஸ்ல காட்டிக் கொடுத்துருவியே!”

”கண்டிப்பா மாட்டேன். சொல்லுங்க.”

கிரிதரானந்தர் சிறிது நேரம் மௌனமாயிருந்தார். “குருஜி! பைத்தியக்காரத்தனமா என்னை இந்த ஆசிரமத்துக்குள்ளேயே ஏதாவது பண்ணிறலாம்னு ப்ளான் பண்ணாதீங்க. நான் இன்னும் ரெண்டு மணி நேரத்துல திரும்பிப் போகலைன்னா போலீஸ் இங்கே தேடி வந்துரும். எல்லா ஏற்பாடும் பண்ணிட்டுதான் வந்தேன். இப்போ நாம பேசிட்டிருக்கிறதுகூட ஒரு இடத்துல ரெக்கார்டாயிட்டிருக்கு.”

கிரிதரானந்தர் ஒரு கணம் மறுபடி மறைந்தார். ஒரே ஒரு கணம்தான். மீண்டும் தோன்றினார். அந்த ஒரு கணத்தில், சிவநேசனுக்கு தன் உடலை யாரோ வருடி விட்டாற்ப் போல் இருந்தது.

”பொய் சொல்லாதே. ஒங்கிட்ட மைக் எதுவுமில்லை.”

“மைக் இருக்கிற இடத்தை அவ்வளவு ஈஸியா நீங்க கண்டுபிடிச்சுட்டா, என்னை மேலே கூட அனுப்பிருவீங்கன்னு தெரியாதா? பத்திரமா வச்சிருக்கேன். உங்களால கண்டுபிடிக்க முடியாது. இப்ப ரகசியத்தை சொல்றீங்களா? இல்லை நான் கிளம்பட்டுமா?” சமாளித்து விட்டார்.

“ஓகே. சொல்றேன். ஆனால் நீ யார்ட்டையும் சொல்லக்கூடாது. என்னைக் காட்டிக் கொடுக்கக் கூடாது.”

”சொல்ல மாட்டேன். சொல்லுங்க.”

ஒரு குடுவையை எடுத்து மேலே வைத்தார். “இதை தயாரிக்கிறதை என் குருநாதர்தான் சொல்லிக் கொடுத்தார். இதைக் குடிச்சா மனுசன் சாதாரணமா செய்ற எந்த வேலையையும் அசுர வேகத்தில் செய்யலாம். அந்த வேகத்தை உன்னால் அளக்க முடியாது. உண்மையைச் சொன்னால் வெறுங்கண்ணால் அந்த செயல்களை பார்க்கக் கூட முடியாது. அவ்வளவு வேகம். அப்படித்தான் இந்த தீர்த்தத்தைக் குடிச்சுட்டு, இந்த அறையிலிருந்து அசுர வேகத்தில் அந்த மேடையில் போய் உக்காந்துக்குவேன். பார்க்கிறவங்களுக்கு திடீர்னு பிரதட்சனமான மாதிரித் தெரியும். திரும்ப மேடையிலிருந்து மறைஞ்சு போறதும் இதே மாதிரிதான். தாக சாந்தி பண்ற மாதிரி கொஞ்சமா மேடைல குடிச்சுட்டு, இங்கே ஓடியாந்துருவேன். இதுல என்ன பிரச்சனைன்னா, இந்த தீர்த்ததோட வீர்யம் நாலு நிமிஷம்தான். அதனால ஒவ்வொரு முறையும் கொஞ்சம் முழுங்கனும்.”

சிவநேசன் அவரை முறைத்தார். “மறுபடி கதை சொல்றீங்க பாத்தீங்களா? குருஜி! ஐயம் சீரியஸ்! திரும்பத் திரும்ப பொய் சொன்னீங்கன்னா போலீஸ் வந்துடும்.”

“ஐயோ! சிவநேசன். இதுதான் உண்மை. டைம் வார்ப்னு கேள்விப் பட்டிருக்கியா? மூன்று பரிமாணங்கள் கொண்ட ஸ்தூல சரீரத்தோட, காலம்ங்கற நாலாவது பரிமாணம், நிரம்பவும் சுருங்கிப் போகும். அந்த சரீரத்துக்கு நாலு நிமிஷங்கறது நாலு மணி நேரமாயிடும். அதாவது ஒரு சாதாரண ஆளுக்கு நாலு நிமிஷமாத் தெரியறது, அந்த சரீரத்துக்கு மட்டும் நாலு மணி நேரமாத் தெரியும். இந்த மாதிரி ஒரு சூழலில், அந்த சரீரம் அதனோட ஒரு நிமிஷத்தில் நிதானமா செய்ற எந்தக் காரியமுமே, சாதாரணமானவங்களுக்கு அசுர வேகத்தில், கிட்டத்தட்ட கண்ணால் பார்க்க முடியாத வேகத்தில் செய்த காரியமா இருக்கும்.”

“ஹைஸ்பீட் கேமரா மூலமா எடுக்குற ஸ்லோமோஷன் மாதிரி, இல்லையா? குரு! முதல்ல மாய மந்திரம்னு சதாய்ச்சீங்க! இப்போ ஸைன்ஸ் ஃபிக்‌ஷன் கத சொல்றீங்க. கொஞ்சம் நம்பற மாதிரி கத சொல்லுங்க. ட்ரிக் என்ன?”

“என்ன சொன்னாலும் நம்ப மாட்டேன்னா எப்படி? வேண்ணா நீயே ஒரு ஸிப் குடிச்சுப் பாரு. ஒனக்கேப் புரியும்.” குடுவையின் மூடியில் அந்தத் திரவத்தை நிரப்பி நீட்டினார்.

அதை வாங்கப் போன சிவநேசன், சட்டென்று சுதாரித்துக் கொண்டார். ”முதல்ல நீங்க கொஞ்சம் குடிச்சுக் காட்டுங்க.”

“ஓ! நம்பிக்கையில்லையா?!” என்றவாறு குடுவையிலிருந்து நேரடியாகவே வாய்க்குள் சிறிது சரித்துக் கொண்டார்.

கிரிதரானந்தரின் தொண்டைக்குள் இறங்கிவிட்டதை உறுதி செய்தபிறகு, சிவநேசன் மூடியிலிருந்ததை எடுத்துக் குடித்துவிட்டு கிரிதரானந்தரைப் பார்த்தார். ஒன்றும் வித்தியாசமாகத் தெரியவில்லை.

“வெளியே போய் பார்த்துட்டு வா!”

சிவநேசன் வெளியே வந்தார். பிரமித்து விட்டார். ஹாலில் இருந்தவர்கள் அனைவரும் சிலைகள் போல் நின்று/உட்கார்ந்து/குனிந்தவாறு இருந்தனர். யாரிடமும் அசைவில்லை. காவிக்கும் சிகப்புக்கும் நடுவான கலரில் சேலையணிந்திருந்த ஒரு பக்தை, ஹாலை பெருக்கியவாறே உறைந்து போயிருந்தாள். அவள் பெருக்கிய குப்பையிலிருந்து கிளம்பும் அழுக்கு புழுதிகள் காற்றில் ஒரே இடத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. ஆசிரமத்திலிருந்து வெளியே வந்தார். எல்லோரும் அப்படி அப்படியே அவர்கள் செய்யும் காரியங்களில் உறைந்து போயிருந்தனர். திறமையான சிற்பி ஒருவன் செதுக்கிய சிலைகள் போல், ஆனால் உயிருடன் உறைந்து போயிருந்தனர். வெளியே அவ்வளவு கூட்டமிருந்தும் சிறிதும் அவர்களது சத்தம் கேட்கவில்லை. ஆனால் ஒரு மிக சன்னமான ஊளை சத்தம் மட்டும் கேட்டது.

ஹைவேயில் வாகனங்கள் அப்படி அப்படியே நின்று கொண்டிருந்தன. உள்ளே டிரைவர்கள் கவனமாக ரோட்டைப் பார்த்தவாறே உறைந்திருந்தனர். அப்பொழுதுதான் அதைக் கவனித்தார். சுமார் ஐந்து வயது குழந்தை ஒன்று ஹைவேயில் நடுவே ஓடுவது போல் உறைந்திருக்க, அதை இடிப்பதற்கு சரியாக இரண்டு செண்டிமீட்டர்த் தொலைவில் அந்த வேன் - அதுவும் உறைந்திருந்தது. சிவநேசனுக்கும் அந்த இடத்துக்கும், சுமார் ஐநூறு மீட்டருக்கு மேல் இருக்கும்.

சிவநேசன் தாமதிக்கவில்லை. அறுபத்தி நான்கு வயதையும் பொருட்படுத்தாமல் அந்த இடத்தை நோக்கி ஓடினார். இதற்குள் அந்த வேன் மேலும் அரை செண்டிமீட்டர் நகர்ந்திருந்தது. பக்கத்தில் போனதும் நிதானமாக நின்று அந்தக் காட்சியை மறுபடி ஒரு முறைப் பார்த்தார். அந்த வேன் மேலும் அரை செண்டிமீட்டர் நகர்வதை பொறுமையாக கவனித்தார். பின் அந்தக் குழந்தையை மிக மெதுவாக எடுத்துக் கொண்டு சாலையின் ஓரத்திற்கு நடந்தார். அவசரமேப்படவில்லை. அந்தக் குழந்தை பார்ப்பதற்கு தெரிவதை விட கொஞ்சம் கனமாகவே இருந்தது. அதை சாலையோரத்தில் மெதுவாக வைத்தார். இப்பொழுது அந்தக் குழந்தை மீண்டும் சாலையின் குறுக்கே ஓடுவது போலவே நிறுத்தப்பட்டிருப்பதை கவனித்தார். மீண்டும் அதை எடுத்துத், திருப்பி ஆசிரமத்தை நோக்கி ஓடுவது போல் வைத்தார்.

இப்பொழுது சிவநேசனுக்கு திடீரென்று அந்த விநோத ஆசை வந்தது. மீண்டும் அந்த வேன் முன்னால் வந்து நின்றார். டிரைவரை பார்த்துக் கையாட்டினார். டிரைவரின் முகத்தில் குழந்தை குறுக்கே வந்த கலவரமே இன்னும் உறைந்திருந்தது. குழந்தை நின்ற இடத்தையே அவன் கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன. சிவநேசன் அவன் பார்வை திசையை கவனித்து கொஞ்சம் குனிந்து அவன் கண்களுக்குள் பார்க்க முயன்றார். பின் மெதுவாக அந்த வேனின் அருகே சென்று வேனின் தலையை, தன்னுடைய தலையால் செல்லமாக முட்ட....

“ஆஆஆஆ.........”

வேன் க்றீறீறீச் என்று அசிங்கமாக ஹைவேயில் டயரைத் தேய்த்தது. டிரைவர் இன்னமும் ஆச்சர்யமாக பார்த்தான். ’குழந்தை எப்படி கிழவனானது?’. அங்கே ஒரு உடனடி மக்கள் வட்டம் ஒழுங்கில்லாமல் உருவாக, செய்தி மிக விரைவாக கிரிதரானந்தரின் காதுகளை எட்ட....

’அடப்பாவி சிவநேசா! விஞ்ஞானம் கத்துக்கும்போது முழுசா கத்துக்க வேணாமா? கைனடிக் எனர்ஜின்னு ஒன்னு இருக்கே. அது கூட போய் வெளையாடலாமா? சக்தியின் இயக்கம் ஆற்றல் வாய்ந்ததேடா’.

X-----X-----X

'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.

Monday, April 20, 2009

Y4K

டைம் மிஷின் நின்று கொண்டிருந்த இடம், ஆள் அரவமற்று இருந்தது. ‘இலக்கை அடைந்து விட்டோம்’ என்று ஸ்கிரீனில் ஓடிக் கொண்டிருந்தது. என் நெஞ்சம் படபடவென்று அடித்தது. கதவைத் திறப்பதற்கு முன், ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்தேன். யாருமே கண்ணில் தென்படவில்லை. கதவைத் திறந்து, இருவரும் கீழே குதித்தோம்.

டைம் மிஷினை ஒரு மரத்திற்கு பின்னால் பார்க் பண்ணிவிட்டு, கிளை தழைகளை உடைத்து, மறைவாக மூடி வைத்தோம். பிறகு, சென்னை செல்லும் வழியில் நடக்க ஆரம்பித்தோம்.

இரண்டு நிமிடங்கள் கூட நடந்திருக்க மாட்டோம். வாகன ஒலி, சைரன் ஒலி என்று அடுத்தடுத்து கேட்க, ஐந்து கார்கள் எங்கள் அருகே கிறீச்சிட்டு நின்றது. அதில் இருந்து திபுதிபுவென்று யூனிபார்ம் பெண்கள் பலர் இறங்கினர். ஜெராக்ஸ் எடுத்தது போல, அனைவரும் ஒரே மாதிரியாக இருந்தனர். முகத்தில் முரட்டுத்தனம் தெரிந்தது. கைகளில் குழல் போன்ற ஒன்றை பிடித்து இருந்தனர். அவர்கள் அதைப் பிடித்திருந்த ஸ்டைலைப் பார்த்தால், அது லேசர் துப்பாக்கியாக இருக்கலாம்.

எங்களை சூழ்ந்து கொண்ட ஜீனிஸுக்கள், தங்களுக்குள் ஏதோ ஒரு ரகசிய மொழியில் பேசிக் கொண்டனர். அவர்களில் இரண்டு பட்டை சட்டை அணிந்த ஜீனிஸ் பெண் மட்டும் எங்கள் அருகே வந்து, செந்தமிழில் கேட்டாள்.

“யார் நீங்கள்?”

குரல் கர்ண கடூரமாய் ஒலித்தது. அதில் தெரிந்த கடுமை எனக்குள் நடுக்கத்தை உண்டு பண்ணியது.

“நான் ரேகா. இது என் நண்பர் சதீஷ்.”

“ஓ... கடிதப் புகழ் ரேகா. எட்டு கண்ணீர் கடிதங்கள் எழுதி இந்தியாவையே ஒரு கலக்கு கலக்கியவர், இல்லையா?”

அந்தப் பெண் குரலை உயர்த்தி பேசினாலும், அந்த பேச்சிலோ, முகத்திலோ உற்சாகம் எதுவும் தென்படவில்லை. பிறகு எங்களைப் பார்த்து, “ம்...ஏறுங்கள். உங்களை உபசரிப்பதற்காக எங்கள் தலைவி காத்துக் கொண்டிருக்கிறார்”, என்று கூறி எங்களை ஒரு வாகனத்தில் ஏறச் சொல்லி அவசரப்படுத்தினாள்.

“வெயிட். நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரிய வேண்டாமா?”

“நாங்கள் இந்திய பாதுகாப்பு படையினர். உங்களை அழைத்து வரச் சொல்லி, தலைவி எங்களைப் பணித்துள்ளார். ஆகவே, தலைவியை காக்க வைக்காமல், உடனே கிளம்புங்கள்.”

ரேகா உற்சாகமாய் அவர்களின் வண்டியில் ஏறி அமர, நான் அரைமனதோடு, தயங்கி தயங்கி ஏறினேன். இரண்டு பட்டை சட்டைக்காரி, ஒரு ஜீனிஸை மட்டும் தனியாக அழைத்து, அவளிடம் ஏதோ கூற, அவள் தலையை அசைத்து விட்டு, கீழேயே நின்றாள். மற்றவர்கள் வண்டியில் ஏறியதும், வண்டி ஸ்டார்ட் ஆனது. தனியாக விடப்பட்ட ஜீனிஸ் என்ன செய்கிறாள் என்று தெரிந்து கொள்ள தலையைத் திருப்பி பார்த்தேன். அவள் நேராக, டைம் மிஷினை மறைத்து வைத்த இடத்திற்கு சென்று, புதர்களை விலக்கி டைம் மிஷினை விடுவித்தாள். என் மனதில் திக்கென்று ஒரு பயம் ஒட்டிக் கொண்டது. அப்போது என்னருகில் உட்கார்ந்திருந்த ஜீனிஸ், என் காதருகே கூறினாள்.

“பயப்பட வேண்டாம். உங்கள் கால இயந்திரம் பத்திரமாகவே இருக்கும்”. நாங்கள் உட்கார்ந்திருந்த வண்டிக்கு முன்னால் இரண்டு வண்டிகள், பின்னால் இரண்டு வண்டிகள் என்று சென்று கொண்டிருந்தது. நாங்கள் விருந்தாளிகளாய் செல்கிறோமா அல்லது சிறையாளிகளாய் செல்கிறோமா என்ற ஒரே சந்தேகம்தான் என் மனதை வாட்டியது.

ஆனால் ரேகாவோ ஜாலியாக இருந்தாள். வாகன வடிவமைப்பு, வேகம், சுற்றியுள்ள கட்டிடங்கள் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள். நானும் வேகத்தை கவனிக்க, அது மணிக்கு 3500km என்று காட்டியது. அந்த வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்ததை எங்களால் உணரவே முடியவில்லை.

பத்து நிமிடத்தில் எங்களின் வாகன பயணம் முடிந்தது, ஒரு பிரம்மாண்டமான பலமாடி கட்டிடம் முன்பு வண்டி நின்றது. உள்ளே சென்றோம்.

அது ஒரு அலுவலகம். வேலைகள் அனைத்தையும் அங்கு இயந்திரங்களே செய்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட இரண்டாயிரம் இயந்திரங்களுக்கு மேல், அந்த ஆபிஸில் உள்ளது என்று கணக்கிட்டேன். அத்தனை இயந்திரங்களையும் மேற்பார்வையிட, பத்து ஜீனிஸுக்கள் மட்டுமே இருந்தார்கள். இதுதான் இந்திய நாட்டின் தலைமை செயலகமாய் இருக்குமோ?

லிப்டில் பல மாடிகளை எறிய பின்பு, வெளிவந்தோம். அங்கு இருந்த அலுவலக அறையை தாண்டிய பின்பு, ஒரு அலங்கரிக்கப்பட்ட அறை வந்தது. கதவில் ‘இந்திய நாட்டுத் தலைவி’ என்ற தங்க எழுத்துக்கள் மின்னியது. அதன் கதவைத் திறந்து, உள்ளே அழைத்து செல்லப் பட்டோம்.

அது ஒரு விஸ்தாரமான அறையாக இருந்தது. மிக மிக ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த அறைக்குள், நடுநாயகமாய் ஒரு ஜீனிஸ் பெண் உட்கார்ந்திருந்தாள். அவரை சுற்றி மேலும் பத்து ஜீனிஸுக்கள் இருந்தார்கள். பாதுகாப்பு படையினர், எங்களை அறைக்குள் விட்டு விட்டு, ஒன்றுமே பேசாமல் வெளியே சென்று விட்டனர்.

”ஆக, நீங்கள்தான் ரேகாவா?”, என்று நடுநாயக பெண்மணி கேட்டாள்.

“ஆம்”

“உங்களின் வருகை, இன்னமும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது”, என்று அந்த ஜீனிஸ் கூறியது எனக்கு வித்தியாசமாகப்பட்டது.

ஆனால், ரேகா சந்தோஷமான குரலில், “நீங்கள்தான் இந்திய நாட்டுத் தலைவியா?” என்று கேட்டாள்.

“ஆம்”

தலைவிக்கு ரேகா வணக்கம் செலுத்தினாள். ஆனால், அதற்கு தலைவி ரெஸ்பான்ஸ் எதுவும் பண்ணாமல், அருகில் இருந்த ஜீனிஸிடம் ஏதோ கூற, அவர்கள் புன்முறுவலித்தார்கள். எனக்கு சற்று கலக்கமாகவே இருந்தது.

“என் அழைப்பை நம்பி நீங்கள் வந்துள்ளது இன்னமும் என்னை ஆச்சரியமூட்டுகிறது. மனிதர்கள் புகழ்ச்சிக்கு எளிதில் அடிமை ஆகி விடுவார்கள் என்று என் ஆலோசகியான இவர் கூறிய போது, நான் நம்பவே இல்லை”, என்று கூறிய தலைவி இடி இடியென்று சிரித்தாள். மற்ற ஜீனிஸுக்களும் அவளோடு சேர்ந்து சிரிக்க, ரேகாவும் கலவரமடைந்தாள்.

“மேடம், யூ மீன் டு ஸே, நீங்கள் எங்களை ஏமாற்றி வரவழைத்துள்ளீர்களா?”

”பின், உங்களுக்கு விருதும், விருந்தும் கொடுப்பதற்காக வரவழைத்தேன் என்றா நினைத்தீர்கள்?”

தலைவியின் குரலில் கடுமை அதிகரித்தது. எங்கள் முகத்தில் மிரட்சி தெரிந்தது. நான் தலைவியிடம் கேட்டேன்.

“மேடம், என்னுடைய டி.சி. செய்திகள் பொய்யா? மனித வேட்டையை நீங்கள் நிறுத்தி விட்டதாய், அது தவறாக கூறிவிட்டதா?”

“இல்லை, மிஸ்டர் சதீஷ். உங்கள் டி.சி. அருமையாக வேலை செய்திருக்கிறது. உங்களுக்கு கிடைத்த செய்திகள் அனைத்தும் இங்குள்ள தகவல் கேந்திர செய்திகள்தான். மனித வேட்டை எங்கள் நாட்டில் நிகழ்ந்து கொண்டிருந்ததும் உண்மை. ரேகாவின் கடிதத்தால், அது நிறுத்தப்பட்டதும் உண்மை. ரேகாவின் முதல் கடிதம் இங்கு வந்ததுமே, எங்கள் நாட்டில் பல குழப்பங்கள் ஏற்பட்டது. எங்களின் செயலை ஜீனிஸ் பிரஜைகள் கடுமையாக எதிர்த்தனர். நாங்களும், அவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து, மனிதக் கொலைகளை உடனேயே நிறுத்தி விட்டோம். ஆனால்...”

“ஆனால்?”

“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா, மிஸ்டர் சதீஷ்? டி.சி. என்பதே 3037ல் கண்டுபிடிக்கப்பட்ட சாதனம்!”

“புரியவில்லையே”

“3037ம் வருடம் டெல்லியை சேர்ந்த ஒரு ஜீனிஸால், டி.சி. கண்டுபிடிக்கப்பட்டது. அப்படித்தான் எங்கள் வரலாறும் உள்ளது. ஆனால், 2063ம் வருட டி.சி. கதிர்கள், எங்கள் நாட்டு செய்தி கேந்திரத்திற்குள் வந்ததை அறிந்ததும், எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. நிஜமாகவே, உங்களின் கண்டுபிடிப்பு அபாரம். ஆனால், அந்த கண்டுபிடிப்புதான் உங்களை இங்கு வரவழைத்து உள்ளது!”

“இன்னமும் எங்களுக்கு புரியவில்லை, மேடம்”, என்று கூறிய ரேகா, “நீங்கள் எங்களை எதற்காக வரவழைத்தீர்கள்? எங்களை என்ன செய்யப் போகிறீர்கள்? சதீஷின் டி.சி. சர்க்கியூட் வேண்டுமா? எங்களை மீண்டும் 2063க்கு அனுப்புவீர்களா? மாட்டீர்களா”, என்று அடுத்தடுத்து கேள்விகள் கேட்டாள்.

“பொறுமை, ரேகா. சதீஷின் டி.சி. போலவே, உங்களின் கடிதங்களும் மிக மிக அற்புதம். எத்தகைய கொடுங்கோலரின் மனத்தையும் உருக்கி விடக் கூடிய சக்தி படைத்தது. கடவுளின் படைப்பை அடியோடு அழிக்க எந்த வகையிலும் எங்களுக்கு உரிமை இல்லை என்ற உங்களின் கருத்தை பற்றி விவாதித்தோம். அதன் அடிப்படையில் இரண்டு முடிவுகள் எடுத்தோம். முதல் முடிவு, மனித வேட்டையை நிறுத்துவது. இரண்டாவது முடிவு உங்களை இங்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பது!”

ரேகா இடைமறித்து ஏதோ கேட்க முற்பட, தலைவி சைகையால் தடுத்து, மீண்டும் தொடர்ந்தாள்.

“உடனேயே, எங்களின் தகவல் தொடர்பு சாதன அலைவரிசையை மாற்றி விட்டோம். அதனால் உங்களின் மற்ற கடிதங்கள் எங்கள் ஜீனிஸ் பிரஜைகளிடம் சேரவே இல்லை! எங்களின் பழைய அலைவரிசையான 128.4 டெராஹெர்ட்சில் பொய்யான செய்திகளை உலவ விட்டோம். உங்களின் கடிதங்களால் இங்கு மாற்றங்கள் நிகழ்வதாய் பிரமையை உண்டு பண்ணினோம். உங்களுக்கு ஒரு விருது கொடுப்பதாகக் கூறி, வலை விரித்தோம். டி.சி. மூலம் வேறு அலைவரிசையில் நீங்கள் தேடியிருந்தால், எங்களின் குட்டு உடைந்திருக்கும். விதியை மாற்ற யாரால் முடியும்? எங்களை நம்பி, எங்கள் வலையில் விழுந்து விட்டீர்கள்!” என்று கூறி முடித்தார்.

எனக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. வியர்வை ஆறாய் பெருக்கெடுத்து ஓடியது. உடம்பு முழுவதும் உதறலாய் இருந்தது.

“என்ன காரணத்திற்காக எங்களை வரவழைத்து உள்ளீர்கள் மேடம்?”, என்று நாக்குழறலாய் ரேகா கேட்டாள்.

சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு, பின்பு தலைவி கூறினார்.

“தற்பாதுகாப்பிற்காக... உங்கள் வருடத்தில் உள்ள மனிதர்களுக்கு Y4K விஷயம் என்னவென்பதோ, ஜீனிஸ் இனத்தை பற்றியோ எதுவுமே தெரியாது. உங்கள் தலைவர்களுக்கு விஷயம் தெரிந்தால் என்ன செய்வார்கள் என்று யோசித்தீர்களா? தங்களை விட ஒரு உயர் இனம் வரப் போவதை அவர்கள் நிச்சயம் விரும்பமாட்டார்கள். உங்களிடம் கால இயந்திரம் உள்ளது. எங்கள் ஜீனிஸின் ஆதி பிரஜையான குன்னூர் எழிலை நீங்கள் அழிக்க முற்படுவீர்கள். அதன் மூலம் ஜீனிஸ் என்ற இனமே தோன்றாதபடி பார்த்துக் கொள்வீர்கள்.

கடவுளின் படைப்பை அடியோடு அழிக்க எந்த வகையிலும் உரிமை இல்லை என்ற உங்களின் வாசகத்தை நினைவு படுத்திக் கொள்ளுங்கள், ரேகா. எங்களின் தற்பாதுகாப்பிற்காகவே உங்களை இங்கு ஏமாற்றி அழைத்து வந்தோம்.”

“எங்களை என்ன செய்யப் போகிறீர்கள்?”

“பயப்படாதீர்கள். நாங்கள் உங்களை அழிக்க மாட்டோம். நீங்கள் பாதுகாப்பாகவே இருப்பீர்கள். உணவு, தங்கும் வசதி அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். உங்களின் உடல் உழைப்பை சுரண்ட மாட்டோம். நீங்கள் இருவரும் நண்பர்களா காதலர்களா என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும், உங்களை ஒன்றாகவே தங்க வைக்கப் போகிறோம். நீங்கள் இங்கு சந்தோஷமாகவே இருப்பீர்கள்”, என்று தலைவி கூறி முடித்தார்.

எங்களால் பதில் பேச முடியவில்லை. என்ன பதில் சொல்ல முடியும்? திகைத்துப் போய் நின்றோம்.

தலைவி பாதுகாப்பு படையினரை அழைத்து, அவர்கள் மொழியில் ஏதோ கூறினார். அவர்கள் எங்கள் இருவரையும் அழைத்து - மன்னிக்கவும் - இழுத்துக் கொண்டு செல்கின்றனர்.

”விதி...விதி...எல்லாம் என் தலைவிதி! பெண்களோட பேச்சக் கேட்கக் கூடாதுன்னு நானே நிறைய பேருக்கு அட்வைஸ் பண்ணியிருக்கிறேன். அப்படி இருந்தும் இந்த முட்டாள் ரேகா பேச்சக் கேட்டு, இப்படி Y4K பிரச்சனையில் மாட்டிக் கொண்டேனே... இந்த ராட்சசிங்க என்ன பண்ணப் போறாங்களோ? நல்ல வேளை! இந்த ரேகாவும் என்னோட சேர்ந்து மாட்டிகிட்டா! ஏதோ ஒருத்தனா இருந்து கஷ்டப்படுறத விட ரெண்டு பேரா இருப்பது பெட்டர்தானே....! சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்களை நம்பாதேன்னு சும்மாவா சொல்றாங்க...!”

என்று புலம்பிக் கொண்டே நான் சென்று கொண்டிருக்கிறேன். ரேகா என்னை முறைத்துக் கொண்டிருக்கிறாள்.

சில நாட்களுக்குப் பிறகு, வண்டலூர் மிருகக் காட்சி சாலையில், சிங்கம், புலி, சிறுத்தை என்று பலவித மிருகங்களும், நெருப்புக் கோழி, அல்பட்ராஸ் போன்ற பறவைகளும், லேசர் கூண்டுகளில் அடைபட்டு இருக்கின்றது. எல்லா கூண்டுகளும் சிறியதாகவே இருக்கிறது. தென்திசை கடைசியில் ஒரே ஒரு கூண்டு மட்டும் மிக மிக பெரியதாக இருக்கிறது. அதற்கு உள்ளேயே, உணவு அறை, படுக்கை அறை என்று வசதியாக உள்ளது. வெளியே போர்டில் ‘மனித இனம் - ஹோமோ சப்பியன்ஸ்’ என்று எழுதி இருக்கிறது. அந்த கூண்டின் உள்ளே புல்தரையில் நானும் ரேகாவும் வாக்கிங் சென்று கொண்டிருக்கிறோம்! அப்போது, கூண்டுக்கு வெளியே ஒரு ஜீனிஸ் கூட்டம் எங்களை வேடிக்கை பார்க்க வர, அவர்களை அழைத்து வந்த கைடு ஜீனிஸ், “இது மனிதர்கள். நம்முடைய மூதாதையர்கள். இந்த இனத்திலும் நம்மைப் போல, பெண்கள்தான் புத்திசாலிகளாக இருக்கிறார்கள்...! என்று கூறிக் கொண்டு இருக்கிறாள். அந்த சோகமான நிலையிலும், ரேகா என்னைப் பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டு இருக்கிறாள்!
- எழுதியவர் ஸ்ரீதேவி
எழுத்தாளினிளர் ஸ்ரீதேவியை நேரடியாக பாராட்ட/திட்ட :- 9842422928

Monday, April 13, 2009

Y4K

5. ரேகாவின் கடிதங்கள்
“உன்னோட ஐடியா என்ன ரேகா?”, என்று கேட்டேன்.

“டி.சி. மூலமாக, 4000ல் உள்ள செய்தி கேந்திரத்திற்கு உன்னால் ஒரு தகவலை அனுப்ப முடியுமா?” என்று என்னிடம் எதிர் கேள்வி கேட்டாள்.

“உன் மைண்டில் என்ன ஓடுது?”

“முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லு, சதீஷ்”

“முடியும்”, என்றேன்.

“அப்படியானால் நான் கொடுக்கும் கடிதத்தை அங்கு அனுப்பு!”

“யாருக்கு கடிதம் எழுதப் போகிறாய்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

“இந்திய நாட்டு தலைவிக்கு! அவர்களின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து எழுதப் போகிறேன். ஒரு உயிரை அழிக்க, அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை, சதீஷ்”, என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினாள்.

சிறிது நேரம் பேசாமல் இருந்த நான், பின்பு அவளிடம் கூறினேன்.

“இது ஒர்க் அவுட் ஆகாது, ரேகா. அவர்களை பொறுத்தவரையில் நாம் கீழான பிறவிகள்.”

“முயற்சி செய்து பார்ப்போம்”, என்று கூறிவிட்டு ஒரு பேப்பரை எடுத்துக் கொண்டு, தனியே சென்று விட்டாள். நானும் அவளை தொந்திரவு செய்யவில்லை.

பலமுறை வார்த்தைகளை யோசித்து எழுதினாள். அடித்தல், திருத்தல் பின்பு மீண்டும் யோசித்தல் என்று இரண்டு மணி நேரத்திற்கு மேல் அதற்கு செலவிட்டாள். ஒருவழியாய், அவளுக்கு திருப்தி அளிக்கக் கூடிய வகையில் அமைந்த ஒரு மூன்று பக்க கடிதத்தை, என்னிடம் காட்டினாள்.

சும்மா சொல்லக் கூடாது. ரேகா, மிகவும் திறமையாக வார்த்தைகளை தேர்ந்தெடுத்து கடிதத்தை எழுதியுள்ளாள். ’ரேகாவின் கண்ணீர் கடிதம்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ள அந்தக் கடிதம், நிச்சயமாக ஜீனிஸுக்களிடம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது.

மனித உயிர்களின் பாதுகாப்பில்லாத, பயம் நிறைந்த வாழ்க்கையை உருக்கத்தோடு எழுதியிருந்தாள். ஜீனிஸுக்களின் கோபத்தை தூண்டாதவாறு, அவர்களை நாசுக்காக கண்டித்து இருந்தாள். பெண்கள் என்றாலே பொறுமைசாலிகள், இரக்கம் உள்ளவர்கள் என்ற பொதுவான கருத்தையே அழித்து விட்டீர்கள் என்று அங்கலாய்த்து இருந்தாள். ஒரு தனி நபரின் பாவபுண்ணிய பலன்கள், அவரின் குழந்தைகளுக்கு செல்வது போல, ஒரு நாட்டுத் தலைவியின் பாவ புண்ணிய பலன்கள், அந்த நாட்டு பிரஜைகளை போய் சேரும் என்று கூறி, ஜீனிஸ் பிரஜைகளையும் சாடியிருந்தாள்.

இந்தக் கடிதத்தை ஒரு வார்த்தை கூட மாற்றாமல் அப்படியே Y4Kக்கு அனுப்பினேன். ரேகாவின் கடிதம் சென்ற சில மணி நேரங்களிலேயே, அங்கு பரபரப்பு ஏற்பட ஆரம்பித்தது. ஜீனிஸ் பிரஜைகளுக்கு, அப்போதுதான் மனிதக் கொலைகள் நடந்து கொண்டிருந்தது தெரிந்தது. அது அவர்களிடையே கோபத்தை உண்டு பண்ணியது. அரசாங்கம் செய்து கொண்டிருந்த வேட்டையை உடனே நிறுத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் போன்றவை நடக்க ஆரம்பித்தது. மனித இன பாதுகாப்பு இயக்கம், உயிர்வதை எதிர்ப்பு இயக்கம் என்று பல இயக்கங்கள் உருவாகி, ஜீனிஸ் மக்களை, அரசுக்கு எதிராக ஒருங்கிணைத்தது. பொது ஜீனிஸின் திடீர் எதிர்ப்பால் கலங்கிப் போன இந்திய அரசு, இது குறித்து உயர்மட்ட கூட்டம் போட்டு, நல்ல முடிவு எடுப்பதாய் உறுதி அளித்தது.

ரேகா, தன்னுடைய இரண்டாவது கடிதத்தை அனுப்பினாள். இந்தியாவின் வரலாறு, பாரம்பரியம், அஹிம்சா சக்தி முதலியவைகளை சுட்டிக் காட்டி, நம்முடைய உயரிய பண்புகளை சிதைத்து விட வேண்டாம் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்து இருந்தாள்.

ஜீனிஸ் மத்தியில் ரேகாவின் புகழ் அதிகரித்தது. ரே.க.க. பல இடங்களில் பேசப்பட்டது. இதனால் அரசாங்க நிலையிலும் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. மனித வேட்டை முடிவு உலகளாவிய முடிவு என்றும், உலக நாட்டுத் தலைவிகளுடன் இந்தியா தொடர்பு கொண்டுள்ளது என்றும் அரசு அறிவித்தது. ரேகாவின் கருத்தை கருணையோடு பரிசீலித்து கொண்டிருப்பதாய் உறுதி அளித்தது.

ரேகா, தன்னுடைய அடுத்த கடிதத்தில், இந்தியா தன் முடிவை தானாக எடுக்க வேண்டும் என்றும், மற்ற நாடுகளின் நிர்பந்தத்திற்கு பணியக் கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்தாள். இந்தியாவின் இறையாண்மையை பலி போட்டு விடக் கூடாது என்று வலியுறுத்தினாள்.

இவ்வாறு ரேகா, மொத்தம் எட்டு கடிதங்கள் அனுப்பினாள். அரசாங்கமும் அவளின் கோரிகையில் உள்ள நியாயத்தை உணர்ந்தது. தன்னுடைய இரண்டு வருட செயல்களை கண்டு வெட்கம் அடைந்தது. இதை அரசின் செய்தி குறிப்பில் குறிப்பிட்டு, மனித வேட்டைகள் இனி நடக்காது என்றும், இந்திய எல்லைக்குள், மனிதர்கள், பயமில்லாமல், பாதுகாப்பாக தங்களின் உரிமைகளை அனுபவித்துக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தது.

அந்த அறிவிப்பைக் கண்டதும் எங்களின் உற்சாகம் பீறிட்டது.

“சக்ஸஸ்!”, என்று சின்னக் குழந்தை போல ரேகா குதித்தாள். “நாம் சாதித்து விட்டோம், சதீஷ், சாதித்து விட்டோம்.”

“இதை நாம் கொண்டாட வேண்டும்”, என்று கூறினேன்.

“ஆம், கண்டிப்பாக கொண்டாட வேண்டும். சினிமா, டின்னர் என்று ஒரு ரவுண்டு போவோம். அதற்கு முன்பு, அவர்களுக்கு ஒரு நன்றிக் கடிதம் அனுப்பிவிட்டு வருகிறேன்.”

ரேகாவின் நன்றி என்று தலைப்பிட்டு, தன்னுடைய நன்றியை ஒரு அருமையான கடிதமாய் அனுப்பினாள்.

பின்பு மெரினா பீச் சென்று, கடலில் காலை நனைத்துக் கொண்டே, இரண்டு மணி நேரம் நடந்தோம். உற்சாகத்தில் நேரம் போனதே தெரியவில்லை.ரிப்போர்ட் எப்படி தயாரிக்க வேண்டும் என்பதைக் குறித்து யோசித்தோம். எங்களுக்கு கிடைக்கப் போகும் புகழைப் பற்றி பேசினோம். பின்னர் ஒரு சைனீஷ் ரெஸ்டாரண்டில் நன்கு சாப்பிட்டோம். அதன் பின்பு நைட்ஷோ சினிமாவிற்கு சென்றோம். இரவு இரண்டு மணிக்கு, தாஸ்பிரகாஷில் இரண்டு இரண்டு ஐஸ்கிரீம்கள் சாப்பிட்டோம். மூன்று மணிக்கு மேல்தான் தூங்கப் போனோம்.

அடுத்த நாள், எங்களின் ரிப்போர்ட்டை தயாரித்துக் கொண்டிருந்தபோது, டி.சி. மூலம் Y4K தகவல்களை தற்செயலாய் பார்க்க, அதில் உள்ள ஒரு செய்தி எங்களை வியப்பில் ஆழ்த்தியது.

“தொடர்ந்து பல கடிதங்கள் எழுதி, எங்களை மனமாற்றம் செய்ய வைத்த ரேகாவிற்கு, இந்திய அரசு நன்றி தெரிவிப்பதோடு, நம் நாட்டின் உயரிய விருதான ’பாரத ராணி - 4000’ விருதை அவருக்கு அளித்து கௌரவப்படுத்த விரும்புகிறோம். ரேகா எங்கு இருந்தாலும், இங்கு வந்து, என்னை சந்தித்து, விருதை பெற்றுக் கொள்ளவும். ஒப்பம், இந்திய அரசின் தலைவி.” என்று எழுதி கையொப்பமிட்டு இருந்தது.

“இதற்கு என்ன அர்த்தம்?”, என்று கேட்டேன்.

“அதுதான் தெளிவாக கூறியுள்ளதே மடையா”, என்று உற்சாகத்துடன் கூறிய ரேகா, “வாவ்! என்ன ஒரு நல்ல வாய்ப்பு! நம்மை விட உயர் பிறவிகளான ஜீனிஸ் கைகளால் விருது. அதுவும் அவர்கள் நாட்டின் உயரிய விருது. நம்முடைய ரிப்போர்ட்டோடு சேர்த்து, இந்த விருது சர்டிபிகேட்டையும் இணைத்து சமர்ப்பித்தால், உலகமே வாயில் விரலை வைக்காது?” என்று குதூகலித்தாள்.

நான் உடனடியாக பதில் பேசவில்லை. சிறிது நேரம் அமைதியாய் இருந்தேன். அதற்குள் ரேகா ஏதேதோ உற்சாகம் பீறிட பேசிக் கொண்டே இருந்தாள். பிறகு, சட்டென்று நிறுத்தி,
“ஏய், ஏன் அமைதியாக இருக்கிறே?”, என்று கேட்டாள்.

“இந்த விருதை வாங்க நீ Y4Kக்கு போகப் போகிறாயா?”

“போகப் போகிறோம், சதீஷ், போகப் போகிறோம்.”

“ஆர் யூ ஷ்யூர்? இதற்காக Y4kக்கு நேரில் செல்லத்தான் வேண்டுமா?”

“உனக்கு, இன்னமும் ஜீனிஸ் மீது நம்பிக்கை வரவில்லையா?”

“அதில்லை... இருந்தாலும்...” என்று இழுத்தேன்.

“ஷட் அப் சதீஷ். முதலில் உன்னுடைய டி.சி.யை நம்புகிறாயா, இல்லையா?”

“நம்புகிறேன்.”

“அது சரியான தகவலைத்தான் கொண்டு வருகிறது என்பதில் சந்தேகமில்லையே?”

“நிச்சயமாய் இல்லை”

“தென்?”

“என்ன இருந்தாலும், இது யுத்த பூமிக்கு உள்ளே செல்வது போல் அல்லவா?”

“யுத்தம் முடிந்து விட்டது. அவர்கள் மாறிவிட்டார்கள். அவர்கள் கூற்றில் உனக்கு உண்மை தெரியவில்லையா? நேற்றுதான் நம்முடைய வெற்றியை உற்சாகமாய் கொண்டாடினோம். அதற்குள்ளாக மாறி விட்டாயே”, என்று ஆதங்கத்துடன் கேட்டாள்.

சிறிது நேர யோசனைக்குப் பின், தயக்கத்துடன் ஓகே சொன்னேன்.

ரேகாவின் முகம் மீண்டும் மலர்ந்தது. என் கையை குலுக்கினாள். “குட் சதீஷ், தைரியமாக ஒரு முடிவை எடுத்துள்ளாய்”, என்று கூறி விட்டு, என்னை அவள் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.

அங்கு ஒரு மூலையில் டைம் மிஷின் இருந்தது. அதன் கதவைத் திறந்து கொண்டு, உள்ளே இருந்த இருக்கையில் அமர்ந்தோம். செகண்ட் ஹேண்ட் வண்டியாக இருந்தாலும், பிரமாதமாய் இருந்தது. உள்ளே அமர்ந்ததும், டோர் லாக் பட்டனை அழுத்த, கதவு இறுகப் பூட்டிக் கொண்டது. பின்பு செல்ல வேண்டிய தேதி, வருடத்தை டைம் மிஷின் கேட்க, அதை ரேகா டைம் செய்தாள். செல்ல வேண்டிய லொக்கேஷனுக்கு, “எங்கு?” என்று என்னிடம் கேட்டாள். “பிஸி சிட்டி வேண்டாம். சென்னைக்கு அவுட்டரிலியே போய் இறங்குவோம்”, என்றேன். உடனே, அதற்கு தக்கபடி அட்சரேகை, தீர்க்கரேகை டிகிரிகளை டைப் செய்தாள். பிறகு, சிறுசிறு டேட்டாக்களை ஒவ்வொன்றாக எண்டர் பண்ணினாள். டைம் மிஷின் ஸ்கிரீனில், “மிஷின் தயார் நிலையில் உள்ளது. கோ பட்டனை அழுத்தவும்” என்று வந்தது.

“போகலாமா?”, என்று ரேகா கேட்டாள்.

“எதற்கும் ஒருமுறை நன்றாக யோ...” என்று நான் வாக்கியத்தை கூறி முடிப்பதற்குள், ரேகா ’கோ’ பட்டனை அழுத்தி விட்டாள்.
- எழுதிக் கொண்டிருப்பவர் ஸ்ரீதேவி
எழுத்தாளினிளர் ஸ்ரீதேவியை நேரடியாக பாராட்ட/திட்ட :- 9842422928

Wednesday, April 08, 2009

Y4K

நான் போன் பேசி முடித்த பத்து நிமிடங்களுக்குள் ரேகா என் வீட்டிற்கு வந்து விட்டாள். Y4K விஷயத்தை சொல்லு என்று அவசரப்படுத்தினாள்.

“ஹோமோ ஜீனியஸ் தான் காரணம்”, என்றேன்.

“அப்படி என்றால்?”

“முதல்ல அமைதியாக இரு. அதை ஒரு கதை போல சொல்ல வேண்டும்.”

ஆனால், அவளோ பொறுமையில்லாமல், டி.சி. மிஷின் அருகே சென்று, பிரிண்டரில் இருந்து வந்த பேப்பர்களில், 4000ம் வருட பிரிண்ட் அவுட்டை எடுத்து பார்த்தாள். எனக்கு போலவே, அவளுக்கும் எதுவும் புரியவில்லை போலும். அவள் முகமே அதைக் காட்டியது.

“நான் தெளிவாக்குகிறேன், ரேகா. அதற்கு முன்பு உன்னிடம் ஒரு கேள்வி. உனக்கு பரிணாம வளர்ச்சி தத்துவம் தெரியுமா?”

“டார்வின் தியரிதானே? நன்றாகத் தெரியும்.”

“தென், உயிரினங்கள் தோன்றிய வரலாறை கூறு பார்ப்போம்.”

ரேகா சொல்ல ஆரம்பித்தாள்.

“சுமார் முன்னூறு கோடி வருடங்களுக்கு முன்பு, பூமியில் உயிரினமே கிடையாது. ஹைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன், நைட்ரஜன் போன்ற எளிமையான தனிமங்கள் மட்டுமே இருந்தது. அப்போது ஏதோ ஒரு அதிர்வினால் அல்லது மின்னல் தாக்குதலால், இந்த தனிமங்கள் ஒன்று சேர்ந்து, கொழகொழவென்ற ஒரு வஸ்துவாக, கடலில், தற்செயலாய் உருவானது. அதுதான் உலகின் முதல் உயிர். அதற்கு லூக்கா என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளார்கள்.

சூழ்நிலை காரணங்களால், அந்த உயிரினங்கள், தனக்குத் தானே உறுப்புக்களை உருவாக்க ஆரம்பித்தது. இடம் பெயர செதில்கள், வாய், காது போன்றவைகள் உருவானது. கடல் பாசி, பூஞ்சை, முதுகெலும்பில்லாத கடல் உயிரினங்கள், மீன்கள் போன்றவைகள் பல்வேறு காலத்தில் தோன்றியது.”

"குட், ஒரு கட்டத்தில் இந்த நீர்வாழ் உயிரினங்கள் கடலிலிருந்து சுதந்திரம் அடைந்து, நிலத்திற்கு செல்ல விரும்பியது. அப்போது ஒரு பெரிய பரிணாம மாற்றம் ஏற்பட்டு, அம்ஃபிபியன்கள் எனப்படும் கடல்-நில வாழ் உயிரினங்கள் தோன்றியது.”

“தவளை, முதலை போன்றவைகள், இல்லையா?”

“ஆமாம், அவைகள் மேலும் பரிணாம வளர்ச்சி அடைந்ததால், பறவைகள், பூச்சிகள், டைனசர்கள், விலங்குகள் போன்றவை பலப்பல கால கட்டங்களில் உருவானது.”

“அந்த விலங்கினத்தில் உள்ள குரங்கிலிருந்துதான் மனிதன் தோன்றினான், இல்லையா?”, என்று ரேகா கேட்டாள்.

“எக்ஸாக்ட்லி! அனால் அந்த மாற்றம் உடனடி நிகழ்வாய் நடக்கவில்லை. சிம்பன்ஸி, ஏப் முதலிய உயர்ரக குரங்குகள், மரங்களை விட்டு விட்டு, நிலத்தில் வசிக்க பழகியது. அதுதான் குரங்கு மனிதன். பின்பு, அவன் இரண்டு கால்களால் நடக்க ஆரம்பித்தான். ’ஹோமோ எரக்டஸ்’ என்று அழைக்கப்படும் அந்த ஆதிகால மனிதனின் பிரதான தன்மையே நிமிர்ந்த நடைதான். அதனால், அவன் முன்னங்கால்கள் சுதந்திரமடைந்து, வேறு வேலைகளுக்கு பயன்பட ஆரம்பித்தது. அதேசமயம், மற்றொரு பரிணாம மாற்றமும் அவனுள் நிகழ்ந்தது. அதுதான் மூளையின் அளவு அதிகரிப்பு. இதனால், அவனின் புத்திசாலித்தனமும் பெருக பெருக ’ஹோமோ சப்பியன்ஸ்’ எனப்படும் நாகரீக மனிதர்களான நாம் உருவானோம். அந்த புத்திசாலித்தனத்தில் தோன்றியதுதான், நெருப்பு, சக்கரம் முதலிய ஆதிகால கண்டுபிடிப்புகளிலிருந்து, கம்ப்யூட்டர், டைம் மிஷின் போன்ற இந்த கால கண்டுபிடிப்பு வரை!”

“இதெல்லாம் எல்லோரும் அறிந்த விஷயம்தானே?”

சிறிது நேர மௌனத்திற்கு பின்பு அவளிடம் கேட்டேன்.

“வெல், ஹோமோ சப்பியன்ஸ் என்று அழைக்கப்படும் நம்முடைய மனித இனம், மேலும் பரிணாம வளர்ச்சி அடைந்தால் எத்தகைய உயிரினம் தோன்றும்?”

என்னுடைய கேள்வியை உடனடியாக ரேகா மறுத்துக் கூறினாள்.

”நாம்தான் சுப்பீரியர் உயிரினம்! நாம் பரிணாம வளர்ச்சி அடைய அவசியமே இல்லை!”

“இங்குதான் நீ தவறிழைக்கிறாய், ரேகா. பரிணாம மாற்றம் என்பது, நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தானே வந்துவிடும். யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அதில்தான் கடவுளின் செயல் வெளிப்படுகிறது!”

நான் தத்துவம் பேசுவதாக நினைத்தாளோ என்னவோ? ரேகா பதில் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

“இன்னும் நூறு வருடங்களில், நம்மை விட இரண்டு மடங்கு மூளை, பத்து மடங்கு புத்திசாலித்தனத்தோடு உள்ள உயிரினம் தோன்றப் போகிறது!”

“தோன்றப் போகிறதா!”, வியப்புடன் கேட்டாள் ரேகா.

“யெஸ். குன்னூரில் நீ போய் பார்த்தாயே, எழில், அவள்தான் அந்த இனத்தின் முதல் உயிர். அதிக மூளை, அதிக நோய் எதிர்ப்பு சக்தி உடைய குள்ள மனிதர்கள் இனம்... தெளிவாக கூறினால், குள்ளப் பெண்கள் இனம் உருவாகப் போகிறது. பலவித இயந்திரங்கள், ஆயுதங்கள் முதலியவற்றை தயார் செய்து, அதன் உதவியோடு பூமியையே ஆட்சி செய்யப் போகும் அவர்கள், தங்களை ‘ஹோமோ ஜீனியஸ்’ அல்லது ‘ஜீனிஸ்’ இனமாகக் கூறிக் கொள்வார்கள்!”

“எனக்கு இன்னமும் தெளிவாகவில்லை”

மேஜையில் கிடந்த பிரிண்ட் அவுட்டில் ஒன்றை எடுத்து காண்பித்துக் கொண்டே, “இதோ பார். இந்த 2700ம் வருட செய்திகளைப் பார். குள்ளப் பெண்கள் பற்றிய செய்திகள் அங்கொன்றும், இங்கொன்றுமாய் இருப்பதைப் பார். அந்த காலகட்டத்தில், உலக மக்கள் தொகையில், வெறும் ஒன்பது சதவீதத்தினராகவே அவர்கள் இருப்பார்கள். என்றாலும் அவர்களிடம் உள்ள அதீத நோய் எதிர்ப்பு சக்தியால், அவர்களின் சராசரி ஆயுட்காலம் 180 வருடங்களாய் இருக்கும். மேலும், அந்த ஜீனிஸ் இனத்தில், பெண்கள்தான் எண்பது சதவீதம் இருப்பார்கள். இதனால், அவர்களின் எண்ணிக்கை படுவேகமாய் அதிகரிக்கும்.”

“ஆண் ஜீனிஸ்?”

“ஆண் ஜீனிஸுக்கள், பெண்களைப் போல, அதிக புத்தியுடையவர்களாக இல்லை. பெண் ஜீனிஸுக்கள், அவர்களை உடல் உழைப்புக்கும், இனவிருத்திக்கும் மட்டுமே பயன்படுத்துவார்கள்.”

“பெண்களுக்கு புத்திசாலித்தனம் அதிகம் என்பது தெரிந்த விஷயம்தானே!”, என்று ரேகா கூறினாள்.

“நீ உன் புராணத்தை ஆரம்பிக்காதே. இந்த ஜீனிஸ் பெண்களால்தான் Y4K பிரச்சனை பூதாகரமாய் ஆகியுள்ளது.”

“எப்படி?”, என்று கேட்டாள்.

“கி.பி. 3000ம் வருடத்தில் ஜீனிஸின் மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் 17 சதவீதம். இதோ, இந்த பேப்பரில் உள்ள புள்ளிவிபரத்தை பார். ஆனால், அடுத்த முப்பது வருடங்களில் நிலைமை தலைகீழாய் மாறிவிடும். அந்த சமயம், உலகம் முழுவதும் பரவவிருக்கும் ஒரு கொடிய வைரஸ் நோயால், மனித இனமே கொத்து கொத்தாய் மடிந்து விடும். அதே சமயம், ஜீனிஸுக்களை, இந்த நோய் தாக்கப் போவதில்லை. 3050ம் வருட செய்தியைப் பார். அப்போது இந்தியா, மக்கள் தொகையில், உலகில் 86ம் இடத்தில் இருக்கிறது.”

“.......”

“பிறகு, 3100ம் வருடத்தில், ஜீனிஸ் தொகை, நம்மைவிட அதிகமாகி விடும். ஆட்சி, அதிகாரம், தொழில், நிதி, வேலை வாய்ப்பு, விவசாயம், பாதுகாப்பு என்று அனைத்துமே அவர்கள் கைக்கு மாறிவிடும். நம்மவர்கள் இரண்டாம் பட்ச குடிமக்களாக மாறி விடுவர். இந்த நிலை மேலும் உக்கிரமடைந்து, 3500ம் வருடத்தில், நம் மனித இனத்தினர், அடிமை வேலை செய்தால்தான் பிழைக்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப்படுவர். அடிமை வியாபாரத்திற்கென்றே பல கம்பெனிகள் விளம்பரம் செய்திருப்பதை, இந்த பேப்பரில் பார்”, என்று அவளுக்கு 3508ம் வருட செய்தித் தாளை நீட்டினேன்.

அவள் முகத்தில், இப்போது பய ரேகை தெரிந்தது. திகைத்துப் போய் இருந்தாள். நான் மீண்டும் தொடர்ந்தேன்.

“3997ம் வருடம், ஒரு ஜீனிஸ் புண்ணியவதி, ஒரு ஆராய்ச்சி பேப்பர் சமர்ப்பிப்பார். ‘மனித இனத்தில் இருந்துதான் உயர் ரக இனமான ஜீனிஸ் தோன்றியுள்ளது. இதே மனித இனத்தில் இருந்து, மற்றொரு கிளை இனம் பிரிந்து, ஜீனிஸை விட புத்திசாலித்தனம், வலிமை அதிகமான இனம், பரிணாம வளர்ச்சியால் உருவாக வாய்ப்புள்ளது. எனவே ஜீனிஸ் நன்மைக்காக, மனித இனத்தை பூண்டோடு அழிப்பது நல்லது’ என்று அர்த்தம் தொனிக்கும் வகையில், அந்த ஆராய்ச்சி இருக்கும். அதற்காக, அந்த புண்ணியவதிக்கு நம்மூர் நோபெல் பரிசு போன்றதொரு உயரிய விருதான ‘ஜெனிபெல்’ விருது கிடைக்கும்.

அதோடு, அது நின்று விட்டால் பரவாயில்லை. அதே ஆண்டு நவம்பர் கடைசியில், உலக நாட்டு தலைவிகள் அனைவரும், பாரீஸில் ஒன்று கூடி, ஒரு ரகசிய முடிவு எடுப்பார்கள். ‘மனித இனத்தை முழுமையாக வேட்டையாடிக் கொல்ல வேண்டும்’ என்பதே அது. அந்த முடிவு பகிரங்கமாக அறிவிக்கப்படாமல், மேல மட்டத்தில் மட்டும் தெரிவிக்கப்பட்டு ராணுவம், போலீஸ் உதவியுடன் மனித வேட்டை முழுவீச்சில் நடை பெறப் போகிறது. 3998ம் வருட ஆரம்பத்தில், உலகம் முழுவதும் எண்பது கோடி இருந்த மனித இனம், இரண்டே வருடத்தில், வெறும் ஆயிரக் கணக்கில் குறுகிவிடப் போகிறது!

ஆம்... 4000ம் வருடத்தில், இந்தியாவில் வெறும் 500 மனிதர்கள் மட்டுமே இருப்பார்கள். அவர்களும் மலைக் குகைகளிலும், காடுகளிலும் புதர்களிலும், பதுங்கி ஒளிந்து வாழ்வார்கள். Y4K நிலை இவ்வாறுதான் இருக்கப் போகிறது”, என்று கூறி நிறுத்தினேன்.

“அப்படியென்றால் இங்கிருந்து டைம் மிஷினில் சென்றவர்கள் எல்லாம்....”, என்று நடுங்கிய குரலில் இழுத்தாள்.

“கொல்லப்பட்டிருப்பார்கள். சந்தேகமில்லை.”

அவள் மௌனமாகி விட்டாள். நானும் அமைதியாக இருந்தேன். ரேகா, டி.சி. மிஷின் அருகில் சென்று , அதில் இருந்து வந்த பிரிண்டிங் செய்திகளை ஒன்று விடாமல் வாசித்துப் பார்த்தாள். அவள் முகம் வெளிறிப் போய் இருந்தது. நீண்ட நேர நிசப்தத்திற்கு பின்பு என்னிடம் கேட்டாள்.

“ஜீனிஸ் ஏன் குள்ளமாக உள்ளனர்?”

“அதற்கும் மூளைதான் காரணம். மூளையின் எடை அதிகமாக அதிகமாக, உயரம் குறிப்பிட்ட அளவில் நின்று விட்டது. ஜீனிஸுக்களின் சராசரி உயரம் நான்கடிதான். புத்திசாலித்தனத்தை தீர்மானிக்கும் மூளை, உடல் அளவு விகிதத்தை, அவர்களின் குள்ளத்தன்மை மேலும் அதிகரித்து விடுகிறது.”

“அவர்களின் டெக்னிக்கல் முன்னேற்றங்கள்?”

“பல விதத்தில் முன்னேறி விடுவார்கள். பக்கத்து நட்சத்திர மண்டலமான ஆண்ட்ருமீடாவிற்கு ராக்கெட் அனுப்புவார்கள். வினாடிக்கு 1,00,000 கி.மீ. செல்லக் கூடிய ஊர்திகள் கண்டுபிடிக்கப்படும். உணவுகள், மாத்திரைகளாய் தான் சாப்பிடுவார்கள். நாக்கு ருசிக்கென்று, உடலை பாதிக்காத உணவுகள் தனியாக கண்டுபிடிப்பார்கள். லேசர் துப்பாக்கிகள், பயோமீட்டர்கள், பயோ சென்சார்கள் என்று பல உபகரணங்களை கண்டுபிடிப்பார்கள். ஒரு நாட்டிற்குள், அந்நியர்கள் யார் நுழைந்தாலும், அந்நாட்டு தலைவிக்கு நேனோ செகண்ட் நேரத்தில் தெரிந்து, அடுத்த நேனோ செகண்டில் தாக்கப்படுவார்கள். சுருக்கமாய் கூறினால், நம்மை விட ஆயிரம் மடங்கு முன்னேறி இருப்பார்கள்.”

ரேகா, அவளுடைய நகத்தை கடித்துக் கொண்டிருந்தாள். அப்படியென்றால், அவள் தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தாள் என்று அர்த்தம். பிறகு என்னிடம் கேட்டாள்.

“இனி, Y4K விஷயத்தில் என்ன செய்யலாம், சதீஷ்?”

“நாம் கண்டுபிடித்ததை, ஒரு பேப்பராக அரசாங்கத்திடம் சமர்ப்பிப்போம்.”

“நோ, சதீஷ், நோ... அதற்கு முன்பு, அவர்களின் மனித வேட்டையை நிறுத்த, நாம் முயற்சி எடுக்க வேண்டும்.”

“நம்மால் என்ன செய்ய முடியும், ரேகா. ஜீனிஸ் நம்மை விட ஆயுத வலிமை, புத்தி வலிமை அதிகம் உடையவர்கள். அவர்களை எப்படித் தடுக்க முடியும்?”, என்று கேட்டேன்.

“அதற்கு ஒரு வழி உள்ளது”, என்று ரேகா கூறினாள்.
- எழுதிக் கொண்டிருப்பவர் ஸ்ரீதேவி
எழுத்தாளினிளர் ஸ்ரீதேவியை நேரடியாக பாராட்ட/திட்ட :- 9842422928

Friday, April 03, 2009

Y4K

3. கண்டுபிடித்தேன்
”உன்னோட செய்திகளைப் பார்த்தால், பிராடு வேலையாக தெரிகிறதே”, என்று அவள் கூறிக் கொண்டிருந்த போதே ஸ்கிரீனில் தெரிந்த முதல் செய்தியை கிளிக்கினேன்.

நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த மகளிர் மசோதா, எதிர் வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் ராஜா ஜகன்னாதன் அறிவித்துள்ளார். அனைத்து கட்சி கூட்டம் முடிந்து வெளிவந்ததும் இந்த தகவலை அவர் நிருபர்களிடம் கூறினார்.

”இந்த செய்தியே உன் ஆணாதிக்கத்தை காட்டுகிறது, சதீஷ். உன்னுடைய மிஷினே போலி. நீயே உருவாக்கியுள்ள கற்பனை செய்திகளைத் தான் அது காட்டுகிறது.”, என்று ரேகா கோபமாக கூறினாள்.

“ஏன் அப்படி கூறுகிறாய்?”.

“மகளிர் மசோதா, நிச்சயம் அடுத்த மாதத்தில் பாஸாகி விடும். மேலும் பெட்ரோல் விலை, இப்போது லிட்டருக்கு ரூ.370/- தான் உள்ளது. இன்னும் 100 வருடத்தில் அது 150 மடங்கு அதிகரிக்கும் என்பதையும் என்னால் நம்ப முடியவில்லை”.

எனக்கும் குழப்பமாகவே இருந்தது, மற்ற செய்திகளையும் மேலோட்டமாய் பார்த்தேன். எல்லாமே இப்போது பேப்பரில் வரும் செய்திகளைப் போலவே இருந்தது. நாலாவது செய்தியை கிளிக்கினேன்.

குன்னூரை சேர்ந்த எழில் என்ற 35 வயது பெண்மணிக்கு இரண்டு இதயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருடைய உறவுக்கார டாக்டர் பெண் தற்செயலாய் இதை கண்டுபிடித்தார். எழிலுக்கு இதுவரை உடல் நலக் குறைவு ஏற்பட்டதே இல்லை. அவர் ஆஸ்பத்திரிக்கே சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயம் மருத்துவ உலகத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சுற்று வட்டார கிராமங்களிலிருந்து பல பேர் குன்னூருக்கு வந்து, இவரை பார்த்து சென்று கொண்டு இருக்கின்றனர்...

“இதுவும் வழக்கமான இரண்டு தலை ஆடு, ஆறு விரல் மனிதன் போன்ற அப்நார்மல் கேஸ் செய்தி. அடுத்த செய்தியை பார்ப்போம்”.

பிரபல கிரிக்கெட் வீரர் ரஞ்சன் ரண்டேக்கர், அடுத்த உலக கோப்பை போட்டிகள் வரை விளையாட தனக்கு உடல் தகுதியும், திறமையும் உள்ளதாக பேட்டி அளித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 89 சதங்கள், T-20 போட்டிகளில் 68 சதங்களையும் குவித்துள்ள ரண்டேக்கர், 100-100 சதங்கள் அடிப்பதே தன்னுடைய லட்சியம் என்று கூறியுள்ளார். சமீபத்தில் அறிமுகமாகியுள்ள 50 பந்து போட்டிகளால் கிரிக்கெட்டுக்கு பயனே இல்லை என்று காட்டமாக விமர்சித்து உள்ளார். சமீபத்தில் தான், இவர் 20,000 கோடி விளம்பர காண்ட்ராக்டில் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“போடா..உன்னுடைய டி.சி. ஒரு கப்சா பொட்டி உன் சொந்த கற்பனைகள் தான் செய்தியாக வருகிறது. இதை நான் நம்ப போவதில்லை”, என்று கூறி வேகமாய் எழுந்தாள்.

“ஏய், ரேகா. இது நிச்சயமாய் 2150 ம் வருட செய்திகள் தான். டி.சி. சர்க்கியூட் விபரங்களை உனக்கு விவரிக்கிறேன். அப்போது தான் நீ நம்புவாய்”.

“உன் வெட்டிப் பேச்சு எதையும் நான் கேட்க விரும்பவில்லை. யோசிப்பதற்கு உனக்கு ஒரு வாரம் டைம் தருகிறேன். நெக்ஸ்ட் வீக், வெட்னஸ்டே, நான் Y4K போகப் போவது உறுதி. நீ என்னை லவ் பண்ணுவது நிஜம் என்றால், என்னுடன் கண்டிப்பாக வருவாய். ஓகே?”, என்று படபடவென்று கூறிவிட்டு, எனக்கு பதில் கூறக் கூட வாய்ப்பு கொடுக்காமல் எழுந்து சென்று விட்டாள்.

அன்று முழுவதும் எனக்கு வேறு வேலையே ஓடவில்லை. பயங்கர பயங்கர எண்ணங்கள் என்னை பயமுறுத்தியது. கால்கள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது. இது விஷயமாய் மீண்டும் அவளிடம் பேச்சை ஆரம்பித்தால், கோபப்படுவாள். நாளை வரை ஒத்தி போடுவோம். ஆபீஸுக்கு போய் அவளை கன்வின்ஸ் பண்ண வேண்டும் என்று முடிவு செய்தேன்.

அடுத்தநாள் ஆபீஸுக்கு போனவுடன் ரேகாவின் கேபினுக்குத்தான் சென்றேன். ரேகா அங்கு இல்லை. விசாரித்ததில், நேற்றே அவள் லீவு சொல்லி விட்டாளாம். அவள் செல்லுக்கு போன் போட்டேன். தொடர்பு எல்லைக்குள் இல்லை என்று பதில் வந்தது. வீட்டு போனில் கூப்பிட்டால், வாய்ஸ் ரெக்கார்டர் பதில் சொன்னது.

எங்கே போயிருப்பாள்? நான் Y4Kக்கு வரமாட்டேன் என்று நினைத்து, அவள் காலேஜ்மேட் கிருஷ்ணனை துணைக்கு அழைக்க பெங்களூர் சென்றிருப்பாளோ? அந்த எண்ணமே எனக்குள் பொறாமையை ஏற்படுத்தியது. வீட்டிற்கு வந்து டி.சி.யில் கவனம் செலுத்த முயற்சித்தேன். தலை வலித்தது. மூளை சூடானது. என்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. தூக்கமும் வரவில்லை. இரவு 2 மணிக்கு மேல்தான் தூங்கினேன்.

மறுநாள் காலை எட்டு மணிக்கு காலிங்பெல் ஓசை என்னை எழுப்பியது. கதவைத் திறந்தேன். ரேகா நின்று கொண்டிருந்தாள்.

“ஹேய், ரேகா, நேற்று முழுவதும் எங்கே போயிருந்தாய்?”, என்று கேட்டேன்.

“நம்புகிறேன், சதீஷ் நம்புகிறேன்.”

“என்ன சொல்ற?”

“நேற்று என்னுடைய டைம் மிஷினில் 05-08-2150க்கு சென்று, இரண்டு இதயம் உள்ள குன்னூர் எழிலைப் பார்த்தேன். உன் செய்திகள் அனைத்தும் சரிதான். டி.சி. வேலை செய்கிறது, சதீஷ். இதோ அடுத்த நாள் பேப்பரையும் வாங்கி வந்துள்ளேன்.”, என்று கூறி,2150ம் வருடம், ஆகஸ்ட் 6ம் தேதி பேப்பரை என்னிடம் நீட்டினாள். நானும் அதை வாசித்து பார்த்தேன்.

“ஒரு வார்த்தை கூட மாறாமல், அதே செய்திகள், அப்படியே வந்துள்ளது பார்”, என்று உற்சாகமாய் கூறினாள். அவளின் உற்சாகம் எனக்கும் தொற்றிக் கொண்டது. எனக்கு காலை உணவை ரெடி பண்ணிக் கொடுத்தாள்.. இரண்டு பேரும் சாப்பிட்டு முடித்த பிறகு, என்னிடம் கூறினாள்,
“ஸீ... சதீஷ். டி.சி.யை Y4K வரை எக்ஸ்டெண்ட் பண்ணி விடு. உன்னால் கண்டிப்பாக முடியும்.”

“ஆனால்...அதில் சில டெக்னிக்கல் பிரச்சனைகள் உள்ளது ரேகா.”

“அப்படி என்ன பிரச்சனை? சொல்லு. என்னால் ஹெல்ப் பண்ண முடியுமான்னு பார்க்கிறேன்.”

“முதலில், ஃபார்மட்-வடிவமைப்பு. ஏஜன்சிக்கள் மூலம் செய்திகள் பேப்பருக்கு செல்வதும், அச்சு பிரிண்டிங் முறையும் மறைந்து விட்டது என்று நினைக்கிறேன். இ-பேப்பர் முறை வந்திருக்கலாம்.”

“அதாவது, ஒரே டி.வீ.யில் பல சேனல்கள் வருவது போல, செய்தி பேப்பர் வடிவ மின் ஸ்கிரீனில், பல பேப்பர்களின் செய்திகள் வருவதுதான் இ-பேப்பர். சரியா? ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு பொது செய்தி ஏஜன்சி இருக்கும். அதன் மூலமாய், எல்லா செய்தி நிறுவனங்களும், இ-பேப்பருக்கு செய்தி அனுப்பும். இதன் மூலம் ஒரே பேப்பரில், எல்லா நிறுவன செய்திகளும் கிடைத்து விடும். சரியா?”

“எக்ஸாக்ட்லி. அதற்கு தக்கபடி என் ஸெண்டிங் யூனிட்டை மாற்றி வடிவமைக்க வேண்டும். அது கூட அவ்வளவு சிக்கலில்லை. மற்றொரு பிரச்சனை-அலைவரிசை. ரேடியோ அலைக்கதிர்களில் எனக்கு ரிப்ளை கிடைக்க மாட்டேன்கிறது. அவர்களின் கேரியர், வேறு அலைவரிசைக்கு மாறியுள்ளது. அதை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் தலைவலி பிடித்த வேலை.”

சிறிது நேர யோசனைக்குப் பின் ரேகா கேட்டாள்.

“நீ ஏன் IRல் டிரை பண்ணக் கூடாது?”

“என்ன திடீர்னு IR?"

”ஏதோ தோனுகிறது. அவர்கள் IR கதிர்களுக்கு மாறியிருப்பார்களோ என்று. டிரை பண்ணிப் பார் சதீஷ். நீ ஒரு கம்யூனிகேஷன் எக்ஸ்பர்ட்!” என்றாள்.

“முந்தா நாள்தான் என்னை கம்யூனிகேஷன் திருடன் என்று திட்டியதாக ஞாபகம்!”

“அதை மறந்து விடு. டி.சி.யில் மட்டும் கவனம் செலுத்து. நிச்சயம் IR கதிர்கள்தான். இரைச்சலின்மை. நீண்ட தூரம் போன்றவை அதில்தான் கிடைக்கும். நிச்சயம் சக்ஸஸ் ஆகும். ஆல் தி பெஸ்ட்”, என்று சொல்லிவிட்டு, அருகில் வந்து, என் கன்னத்தில் முத்தமிட்டாள்.

நான் ஷாக்காகி நிற்க, என்னிடம் கேட்டாள்,
“ஏய், ஏன் இப்படி இருக்கிற?”

“திடீர்னு கிடைத்த இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டேன்!”

“நீ மட்டும் Y4K தகவலை கொண்டு வந்து விடு. இதை விட இன்ப அதிர்ச்சிகள் எல்லாம் கிடைக்கும்!”, என்று கூறி கண்ணடித்து விட்டுச் சென்றாள்.

ஒரு மனிதனை உற்சாகப்படுத்த இதைவிட வேறென்ன வேண்டும். ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்று இதனால்தான் சொல்கிறார்களோ?

ஆபீஸுக்கு ஒரு வாரம் லீவு போட்டேன். பகல் இரவு தெரியாமல், அறைக்குள்ளேயே முடங்கி கிடந்து டி.சி. ஹார்ட்வேரை மாற்றினேன். இ-பேப்பருக்கு தக்கபடி சர்க்கியூட்டுகளை வடிவமைத்தேன். இதற்கே இரண்டு நாட்கள் சென்று விட்டது. அலைவரிசையை கண்டுபிடிக்க, மாதக் கணக்கில் ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இருந்தாலும் ரேகா கூறியபடி முதலில் IRல் முயற்சி பண்ணுவது என்று முடிவு செய்தேன். IR பிரிக்குவன்சி ரேஞ்ச் 10 டெரா ஹெர்ட்ஸிலிருந்து 400 டெரா ஹெர்ட்ஸ் வரை உள்ளது. இதனை 10 பெரிய ரேஞ்சாகவும், ஒவ்வொன்றையும் 100 உப ரேஞ்ச்களாகவும், ஆக மொத்தம் 1000 சிறு சிறு ரேஞ்ச்களாக பிரித்தேன். ஒவ்வொரு ரேஞ்சிலும் தேட ஆரம்பித்தேன். மேலும் 4 நாட்கள் சென்று விட்டது. இதுவரை இரண்டு பெரிய ரேஞ்ச்கள் மட்டுமே முடிந்துள்ளது. அடுத்த நாள், மூன்றாவது ரேஞ்சில், 128.4 டெரா ஹெர்ட்ஸில், டி.சி. கதிர்கள் திரும்பி வந்தது.

வாவ்! டி.சி. வேலை செய்கிறது! கதிர்கள் 100 வருடத்திற்கு பிறகு உள்ள செய்தி கேந்திரத்தை சென்றடைகிறது. ரேகா வாழ்க! அவளின் IR ஐடியா வாழ்க!

உடனே, ஸெண்டிங் யூனிட்டில், Y4K தகவலைத் தேடி, கதிர்களை அனுப்பினேன். கிடைத்த ரிப்ளை எனக்கு புரிபடவே இல்லை. படிப்படியாக சென்றால்தான் புரியுமோ என்று நினைத்தேன். எனவே, 2700ம் வருடத் தகவல்களை எடுத்தேன்.

வழக்கம் போல, அதே கொலை, கொள்ளை, அரசியல், மோசடி, சவடால் செய்திகள்தான் இருந்தது. ஆனால், அதிலும் ஒரிரு செய்திகள் எனக்கு வித்தியாசமாகப் பட்டது இதுதான் பிரச்சனையின் ஆரம்பகட்டமாக இருக்குமோ? மேலும் இருநூறு வருடம் கழித்து 2900ம் வருடத் தகவலை எடுத்தேன். என் சந்தேகம் அதிகரித்தது. 3000 வருடத் தகவல்களில் அது உறுதியானது. நெஞ்சம் படபடத்தது. கைகள் நடுங்கியது. 3500க்கு சென்றேன். 3800, 3900, 3960, 3990, கடைசியாக 3997ம் வருட நவம்பரில் உள்ள செய்திகள் என்னை திகைப்புக்கு உள்ளாக்கியது. காரணம் என்னவென்று எனக்கு விளங்கி விட்டது. பயத்தில் உறைந்து போனேன். சிறிது நேரத்திற்கு பின்பு, சுதாரித்துக் கொண்டு ரேகாவுக்கு போன் போட்டேன்.

“ரேகா, Y4K பிரச்சனை என்னவென்று கண்டுபிடித்து விட்டேன். நீயோ நானோ எதிர்பார்க்காத விஷயம். ரொம்ப சீரியஸ். உடனே வா”, என்றேன்.

- எழுதிக் கொண்டிருப்பவர் ஸ்ரீதேவி
எழுத்தாளினிளர் ஸ்ரீதேவியை நேரடியாக பாராட்ட/திட்ட :- 9842422928

Monday, March 30, 2009

Y4K

எனக்கு தூக்கி வாரிப் போட்டது. இவள் சுயநினைவோடுதான் பேசுகிறாளா?

“வாட் டூ யூ மீன்?”, என்று கேட்டேன்.

“ஐ மீன் வாட் ஐ ஸே”

“இதென்ன பைத்தியக்காரத்தனமான யோசனையாக இருக்குது.”

“ஸீ.. நான் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் புராஜக்டே Y4Kதான். இதில் மட்டும் எனக்கு வெற்றி கிட்டிவிட்டால், ஒரே நாளில் உலகப் புகழ் பெற்று விடுவேன்.”

“ஆனால், Y4Kக்கு சென்றவர்கள் யாருமே திரும்பி வந்தது கிடையாது ரேகா”

”எனக்குத் தெரியும். இதில் ஏகப்பட்ட ரிஸ்க் உள்ளது. அதுவும் தெரியும். துணிச்சலான முயற்சி மேற்கொள்ளாமல், எந்த ஒரு ஆராய்ச்சியுமே வெற்றி அடையாது.”

“இது சாதாரண துணிச்சல் இல்லை. அசட்டுத் துணிச்சல். எத்தகைய உலகமாய் Y4K இருக்கிறது என்பதே தெரியாமல், அங்கு போவது சுத்த பைத்தியக்காரத்தனம்.”

“எத்தகைய உலகமாய் அது இருக்கும் என்று நீ நினைக்கிறாய்?”

“ஓசோன் ஓட்டை பெரியதாகி, மனிதர்கள் வாழ லாயக்கற்றதாய், பூமி ஆகியிருக்கலாம். ஏதாவது ஒரு பெரிய விண்கல் மோதி, பூமி சுக்கு நூறாக நொறுங்கிப் போயிருக்கலாம். உலகப் போர் நிகழ்ந்து, அணுக் கதிர் வீச்சு, பூமியை நிறைத்து இருக்கலாம். அல்லது சூரிய மண்டலமே ஒரு பிளாக் ஹோலாக மாறியிருக்கலாம்.”

“பரவாயில்லை. நன்றாக யோசிக்கிறாய், என்றாலும் போர்-அணுக்கதிர் வாய்ப்பைத் தவிர, மற்ற வாய்ப்புக்களுக்கு சாத்தியமே இல்லை. அந்த பிரச்சனைகள் இவ்வளவு விரைவில் வராது. கதிர்வீச்சை தடுக்க, அதற்குரிய உடையை நாம் அணிந்து செல்வோம்!”

“நோ...” என்று அலறிய நான், “விஷயம் என்ன என்று தெரியாமல் நான் அங்கு வரப் போவதில்லை”

“வரப் போவதில்லையா?” என்று கோபத்தோடு கேட்டாள்

“இல்லை. அது மட்டுமல்ல. உன்னையும் போக விடாமல் தடுப்பேன்.”

அவளுடைய கோபம் மேலும் அதிகரித்தது. சேரில் இருந்து வேகமாய் எழுந்தாள். படபடவென்று சரவெடியாய் வெடித்தாள்.

“ச்சே.. உன்ன மாதிரி ஐ.டி. பசங்க எல்லாருமே தொடை நடுங்கிகள். ஏ.சி. ரூமில் கம்ப்யூட்டரை தட்டிக் கொண்டு காலம் கழித்தால் போதும்னு நினைக்கிறீங்க. நாட்டு நலனுக்காக கூட ரிஸ்க் எடுக்க மாட்டீர்கள். கவர்ட்ஸ்!”

அவளை இப்போது இடையூறு செய்தால், ஆண் இனத்திற்கே வசை கிடைக்கும். ஆகையால் நான் அமைதியாக இருந்தேன். ஆனால், அவளோ முடிக்கவில்லை.

“ஆபீஸ், டின்னர், டிரிங்க்ஸ் பார்ட்டி. இது மட்டும்தான் வாழ்க்கையா? ஆண் இனமே வேஸ்ட்! எல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான். 33% மகளிர் மசோதா பார்லிமெண்டில் தாக்கலாகப் போகிறது. பவர் எங்க கைக்கு வரப் போகிறது. அதற்கு அப்புறம்தான் நாடு உருப்படப் போகிறது.”

இதற்கு என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

“ஏய்... ஏன் சிரிக்கிறே? என்னோட கோபம் உனக்கு கிண்டலாக உள்ளதா?”, என்று என்னிடம் கேட்டாள்.

”அதில்லை ரேகா, புலிவருது புலிவருது கதையா, மகளிர் மசோதா வரப் போகுது, வரப் போகுதுன்னு, 1990ம் வருடத்தில் இருந்து சொல்கிறார்கள். 70 வருடம் ஆகியும் இன்னமும் மசோதா வந்தபாடில்லை!”

“இம்முறை நிச்சயம் பாசாகிவிடும். அடுத்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்து விடுவார்கள்”, என்றாள்.

“ஸீ ரேகா, முதல்ல கோபத்தை குறை. நான் சொல்கிறதை நன்றாக கவனி. உன்னோட தேவை என்ன? Y4K மர்மத்தை கண்டுபிடிப்பதுதானே? அங்கே சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரிய வேண்டும், அதுதானே?”

“ஆம்.”

“வெல், அதற்கு நாம் Y4Kக்கு போக வேண்டிய அவசியமே இல்லை. என்னோட டி.சி.யால் முடியும்.”

“டி.சி.?”

“என்னோட காலேஜ் புராஜக்ட்!”

“அதுதான் ஒர்க் ஆகவில்லையே”

“அது முன்பு. இப்போது பாதி வேலை செய்கிறது”

அவளுடைய கோபம் குறைந்தது. முகத்தில் ஆர்வம் பிறந்தது. மீண்டும் சேரில் அமர்ந்தாள். டி.சி. பற்றி விபரமாய் என்னிடம் கேட்டாள். நான் கூற அரம்பித்தேன்.

“ஸீ... தொலை தூரத்தில் உள்ள கம்ப்யூட்டரில் இருந்தோ அல்லது ஒரு தகவல் சாதனத்தில் இருந்தோ, தகவல்களை பெற வேண்டுமென்றால், ஒரு இண்டர்நெட் கனெக்‌ஷனோ அல்லது வேறு ஒரு வயர் கனெக்‌ஷனோ தேவை, இல்லையா?”

“ஆமாம்”

“ஆனால், ராணுவங்களில் உள்ள உளவுத் துறைகளில் எதிரி நாட்டுத் தகவல்களைப் பெற, அவர்கள் அனுப்பும் இடத்திலோ அல்லது பெறும் இடத்திலோ உள்ள அலைவரிசையை, தங்களின் ரீசிவிங் யூனிட்டில் ட்யூன் செய்து, வயர் கனெக்‌ஷனே இல்லாமல் தகவல்களை எடுக்கிறார்கள்.”

“அதுவும் தெரிந்த விஷயம்தானே!”

“ஆனால், இப்படி எடுக்கப்படும் தகவல்கள், குறிப்பிட்ட கோடிங் முறையில் இருக்கும். அந்த பாஸ்வேர்டை உடைத்து டிகோட் பண்ணினால் தான், ஒரிஜினல் தகவல்களை அறிய முடியும்.”

“.......”

“என்னுடைய டி.சி. செய்தித் தாள்கள், செய்தி ஏஜென்சிகள் இவைகளை மட்டும் குறி வைத்து செயல்படுகிறது. நான் செய்தி ஏஜென்சிகளின் அலைவரிசையை டியூன் செய்து, அவர்களின் தகவல்களை எடுத்துக் கொள்கிறேன். ஒரே ஒரு வித்தியாசத்தோடு. அவர்கள் எத்தகைய பாஸ்வேர்டு, கோடிங் உபயோகித்து இருந்தாலும், அதை டிகோட் பண்ண வேண்டிய அவசியம் எனக்கில்லை.”

“ஏன்?”

“ஏனென்றால், செய்தி எஜென்சிக்கள், தங்களின் தகவல்களை ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பில் மட்டுமேதான் தகவல் பரிமாற்றம் செய்து கொள்கின்றன. தகவல்கள் தவறு இல்லாமல் செல்ல வேண்டும் என்பதற்காக அல்ட்ரா ஹை பிரீக்குவன்சியை உபயோகிக்கின்றனர். தகவல்களின் வடிவமைப்பை வைத்தும், அது கம்பைலரில் சேகரிக்கப்பட்டிருக்கும் விதத்தை பொறுத்தும் 0,1 என்ற பைனரி தகவல்களாக - அதாவது ரா தகவல்களாக மட்டுமே நான் எடுக்கிறேன். டி.சி.யில் உள்ள கம்பைலர் அதை சரியான தகவல்களாக மாற்றி விடும்.”

“சுத்தமாக புரியவில்லை.”

“என்னோடு வீட்டுக்கு வா” என்று கூறி, ஆபீஸுக்கு லீவு சொல்லிவிட்டு, வீட்டிற்கு சென்றோம். என்னுடைய டேபிளில் பெட்டி பெட்டியாக இருந்த டி.சி. மிஷினை அவளுக்கு காண்பித்தேன்.

“இதுதான் செண்டிங் யூனிட், செய்தி ஏஜென்சிக்களின் அலைவரிசை, மற்றும் தகவல் வடிவமைப்பு இரண்டையும் சேர்த்து வைத்து, அதைத் தேடி, டி.சி. கதிர்கள், இந்த ஆண்டெனா மூலம் புறப்படும். இரண்டும் மேட்ச் ஆகும் சாதனத்தில் உள்ள கம்பைலர் டிஜிட்டல் தகவல்களை, மீண்டும் அது இங்கே கொண்டு வரும்.”

”ரீசிவிங் யூனிட் அதை பெற்றுக் கொண்டு ஒரிஜினல் தகவலை வடிகட்டி, ஸ்கிரீனுக்கு அனுப்பி விடும். புரிகிறதா?”

”ஓரளவிற்கு புரிகிறது.”

“ஒரு உதாரணத்தோடு கூறுகிறேன். சென்ற வாரம் டி.சி.யை, உன்னுடைய பெர்சனல் லேப்டாப் வடிவமைப்பு, மற்றும் அலைவரிசைக்கு டியூன் பண்ணி, அதில் உள்ள தகவலை உனக்குத் தெரியாமல் எடுத்தேன். டைரி என்ற ஃபோல்டருக்கு உள்ளே நீ எழுதியிருந்ததை வாசிக்கிறேன். கேள்!”

“சதீஷ் டார்லிங், உன் முன்னால் நிற்கும் போது மட்டுமல்ல, உன்னை விட்டு பிரிந்து வந்தாலும், அந்த காந்தக் கண்கள் என்னைத் தொடர்ந்து வருவதன் மர்மம் என்ன!?
............
நாம் உறவாக இணைவது
ஒருபுறம் இருக்கட்டும்.
நம் உதடுகள் இணைவது
இப்போது இருக்கட்டுமே!?
....
என் கண்ணில் தெரியவில்லையா காதல்
என் சொல்லை எதிர்பார்க்கிறாயே கள்ளா!
....”

“ஸ்டாப்....ஸ்டாப்” என்று ரேகா கத்தினாள்.

“இதெல்லாம் நீ எழுதியதுதானே?”

அவள் மௌனம் சாதித்தாள்.

“இப்ப புரியுதா? நான் ஒரு கம்யூனிகேஷன் எக்ஸ்பர்ட்ன்னு!”

“மண்ணாங்கட்டி! நீ ஒரு கம்யூனிகேஷன் திருடன்! கிரிமினல்! அடுத்தவர்களின் ரகசியங்களை எட்டிப் பார்க்கும் ரவுடி!”

“ஓகே. ஓகே. நம் லவ் மேட்டரை அப்புறம் பார்ப்போம். முதலில் டி.சி.யை கவனி. இதோட வேலை இத்துடன் முடியவில்லை.”

”டி.சி.ன்னா டெலி கம்யூனிகேஷனா?” என்று கேட்டாள்.

“இல்லை. டைம் கம்யூனிகேஷன்!”

“டைம் கம்யூனிகேஷன்?”

”யெஸ்... இப்ப டைம் மிஷின் எப்படி வேலை செய்கிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்.”

அவள் டைம் மிஷின் வேலை செய்யும் விதத்தை எனக்கு விவரிக்க ஆரம்பித்தாள்.

“முன்னால்-பின்னால், இடது-வலது, மேலே-கீழே என்ற X-Y-Z மூன்று பரிமாணங்களில் இருந்து விலகி, இறந்த காலம்-எதிர்காலம் என்ற நான்காவது பரிமாணமான காலப் பரிமாணத்தில் ஒரு ஊர்தி பயணம் செய்கிறது. இதை செய்ய இன்று பலவித சாப்ட்வேர்கள் உள்ளது.”

“குட். அதாவது, நான்காவது பரிமாணத்தில் ஒரு மிஷின் அல்லது ஒரு ஊர்தி பயணம் செய்யலாம். இல்லையா?

“ஆமாம்”

“கால பரிமாணத்தில் ஒரு திடப் பொருளான ஊர்தியே பயணிக்கும் போது, டி.சி. அலைக் கதிர்களும் பயணம் செய்யும் இல்லையா?”

சட்டென்று அவள் முகம் பிரகாசமானது. அவளுக்கு டி.சி. வேலை செய்யும் வித்தை புரிந்து விட்டது.

“அப்படியென்றால், டி.சி. மூலம் எதிர்காலத் தகவல்களை பெற முடியுமா?”

“அதுதானே என்னுடைய ஆராய்ச்சி. அதில் பாதி வெற்றியும் கிடைத்து விட்டது.”

“அதென்ன பாதி?”

என்னால், இப்போது நூறு வருடத்திற்கு உட்பட்ட தகவல்களை மட்டுமே பெற முடிகிறது. 2170க்கு பிறகு, செய்தி கேந்திரங்களின் வடிவமைப்பு, அலைவரிசை எல்லாமே மாறிவிட்டது. நியூஸ் பேப்பர் வழக்கொழிந்து விட்டது. அதனால் சில டெக்னிக்கல் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்து விட்டால், Y4K தகவல்களை கூட என்னால் பெற முடியும்.”

“கிரேட்... சதீஷ்....கிரேட். எங்கே, 2150ம் வருட செய்திகள் ஏதாவது காட்டு.”

நான் டி.சி.யை ஆன் செய்தேன். தேதிக்கு 05.08.2150 என்று டைப் செய்தேன். நியூஸ் போர்ட்டலில் பாரத் கிரானிக்கள் என்றேன். அலைவரிசை, அலைநீளங்களை கூறினேன். மேலும், சிறு சிறு கட்டளைகளை எண்டர் பண்ணியதும் ஆண்டெனாவில் இருந்து டி.சி. அலைக்கதிர்கள் கிளம்பியது. ஐந்து வினாடிகளில் ரிசீவரில் தகவல்கள் வந்து சேர, நான் ஸ்கிரீனைப் பார்த்தேன். அதில் தெரிந்த தலைப்புச் செய்திகள்,

“அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 33 சதவீத மகளிர் மசோதா தாக்கல் செய்யப்படும். பிரதமர் அறிவிப்பு.”

“பெட்ரோல் விலை அதிகரிப்பு. லிட்டருக்கு ரூ 54000/- ஆனது”

“நடுவானில் இரண்டு ஹெலிகார்கள் மோதல். 8 பேர் உயிரிழந்த பரிதாபம்.”

“குன்னூரில் இரண்டு இதயங்களுடன் ஒரு அதிசய பெண்மணி”

“அடுத்த உலகக் கோப்பை வரை விளையாடுவேன். ரஞ்சன் ரண்டேக்கர் பேட்டி.”
- எழுதிக் கொண்டிருப்பவர் ஸ்ரீதேவி
எழுத்தாளினிளர் ஸ்ரீதேவியை நேரடியாக பாராட்ட/திட்ட :- 9842422928

Tuesday, March 24, 2009

Y4K

1. ரேகாவின் புரோப்போஸல்
”விதி... விதி... எல்லாம் என் தலைவிதி! பெண்களோட பேச்ச கேட்கக் கூடாதுன்னு நானே நிறைய பேருக்கு அட்வைஸ் பண்ணியிருக்கிறேன். அப்படி இருந்தும் இந்த முட்டாள் ரேகா பேச்சக் கேட்டு, இப்படி Y4K பிரச்சனையில் மாட்டிக் கொண்டேனே.. இந்த ராட்சசிங்க என்ன பண்ணப் போறாங்களோ? நல்லவேளை! இந்த ரேகாவும் என்னோட சேர்ந்து மாட்டிக்கிட்டா! ஏதோ ஒருத்தனா இருந்து கஸ்டப்படுறத விட ரெண்டு பேரா இருப்பது பெட்டர்தானே...! சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்களை நம்பாதேன்னு சும்மாவா சொல்றாங்க...!”

என்னடா இவன் திருவிளையாடல் தருமி போல புலம்புகிறானேன்னு யோசிக்கிறீர்களா? என்னோட கதையை சொல்கிறேன். அப்பத்தான் என்னோட புலம்பல் நியாயமானதுன்னு உங்களுக்குப் புரியும்.

என் பேரு சதீஷ். 2056-2060 வருடத்தில் பி.எஸ்.ஜி.யில் கம்யூனிகேஷன் என்ஜினியரிங் படித்து முடித்த உடனேயே கேம்பஸ் இண்டர்வியூவில், எனக்கு பிக்கோ ஸாஃப்ட் கம்பெனியின் சென்னை யூனிட்டில் வேலையும் கிடைத்தது. மூன்று வருடத்தில் சீனியர் எக்ஸிகியூட்டிவ் என்ஜினியராக புரோமோஷன்ம் ஆகி விட்டேன்.
தினமும் ஆபிஸுக்கு வந்து, வீட்டிற்கும், நண்பர்களுக்கும் போன் பேசிவிட்டு, பெர்சனல் இ-மெயில்களை செக் பண்ணி, ரிப்ளை அனுப்பிவிட்டு, சொந்த பிளாகை அப்டேட் பண்ணிவிட்டு, கிடைக்கும் கேப்பில் மட்டும் ஆபீஸ் வேலைகளை பார்க்கும் ஒரு சராசரி ஐ.டி. என்ஜினியராகவே என் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.

அன்றைய தினம், 2063ம் வருடம் ஜூன் மாதம் 18, தேதி, மறக்க முடியாத தினம்; சனி என்னை பிடித்த தினம்! நான் என்னுடைய அலுவலக அறைக்குள் உட்கார்ந்து கொண்டு, பிஸியாக ஒரு மாடல் தயாரிப்பில் இருந்தேன். பக்கத்து வீட்டு எட்டாம் வகுப்பு பானு, தன் ஸ்கூல் சயின்ஸ் எக்ஸிபிஷனில், உயிரியல் பாடத்திற்கு வைப்பதற்காக, ஒரு பரிணாம வளர்ச்சி மாடல் தயாரிக்க சொல்லியிருந்தாள். ஆகவே, என்னுடைய ஆபீஸ் வேலையை ஒதுக்கி விட்டு, டேபிளில் இறைந்து கிடந்த அமீபா, மீன், தவளை, டைனசர், பறவைகள், விலங்குகள் டம்மிகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன். அப்போதுதான் என் அறைக்குள் ரேகா நுழைந்தாள்.

ரேகா - என் கனவுக் கன்னி! காதல் தேவதை! அழகும் அறிவும் ஒரு சேர இருக்கும் அதிசய பெண்களில் ஒருத்தி! டைரியில் அவளைப் பற்றி எழுதாத நாட்களே கிடையாது. யெஸ்! நான் அவளைக் காதலிக்கிறேன்.

கண்ணை காட்டாதே கண்ணே
மன்மதன் உன்னை காணின்
கயல்விழி வில்லாகி விடும் - அவன்
மலர் வில்லுக்கு பதில்
என்று அவளைப் பற்றி கவிதையெல்லாம் எழுதி உள்ளேன்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஆபீஸ் விட்டு திரும்பும்போது, பிட்சா கார்னரில் என் காதலை அவளிடம் கூறினேன். ஆனால், இன்றுவரை, அவள் அதற்கு பதில் எதுவும் சொல்லாமல் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தாள். அவளும் என்னை லவ் பண்ணுகிறாள் என்று எனக்கு நன்றாகத் தெரியும் என்றாலும், அதை அவள் வாய்மொழியாய் சொல்ல மாட்டேன்கிறாள். ஆண்களை அலைய வைப்பதில், பெண்களுக்கு அப்படியென்ன அலாதிப் பிரியமோ? அவளிடம் இது பற்றி கேட்டாலே, “சதீஷ், காதல், கல்யாணம், இதைப் பற்றியெல்லாம் நான் யோசிக்கவே இல்லை. ஐ வாண்டு டு அச்சீவ் சம்திங். ஏதாவது சாதிக்க வேண்டும். புகழ் பெற வேண்டும். அதற்கப்புறம்தான் மற்ற விஷயங்கள் எல்லாம்”, என்று கூறி என் வாயை அடைத்து விடுகிறாள்.

அவள் ஒரு புத்திசாலிப் பெண்தான். புதிய கண்டுபிடிப்புக்கள் செய்யக் கூடிய திறமை உடையவள்தான். சந்தேகமில்லை. ஆனால், பொதுவாகவே பெண்கள் அனைவரும் புத்திசாலிகள் என்ற தவறான கருத்தை உடையவள். தவறான என்ற வார்த்தையை அடிக்கோடு இடுங்கள். என்னைப் பொறுத்தவரை பெண்கள், எந்த செயலையும் முன்யோசனையின்றி செய்பவர்கள் என்ற கருத்தை உடையவன். ஆகவே, அவர்கள் சொல்லை நான் காது கொடுத்தே கேட்பதில்லை. ஆனால், ரேகா மட்டும் இதில் விதிவிலக்கு. அவள் வார்த்தை எனக்கு வேதவாக்கு. காதலியாயிற்றே!

ஒருநாள் அவள் என்னிடம், “நீயும் ஏதாவது சாதனை பண்ணப் பாரேன், சதீஷ்.” என்றாள். அதிலிருந்து, ரிசல்ட் கிடைக்காத என்னுடைய காலேஜ் புராஜக்டான டி.சி.யில் கவனம் செலுத்தினேன். அதில் சிறிதளவு முன்னேற்றமும் ஏற்பட்டது.

வெல், நான் காலேஜ் படித்த சமயங்களில் என் சக நண்பர்கள், தங்களின் புராஜக்டில், பல தில்லுமுல்லு வேலைகள் செய்தார்கள். இது டைம் மிஷின் யுகம் என்று உங்களுக்குத் தெரியும். கால இயந்திரத்தை எல்லாருமே சர்வ சாதாரணமாய் உபயோகிக்கும் காலம் இது. இறந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் தங்கள் இஷ்டப்படி, ஒரு கட்டுப்பாடு இல்லாமல், எல்லாரும் சென்று வந்து கொண்டிருந்தனர்.

கல்லூரி மாணவர்கள், டைம் மிஷினை தங்களுக்கு சாதகமாய் உபயோகித்தார்கள். அதன் மூலம், எதிர்காலத்திற்கு சென்று, அங்குள்ள லேட்டஸ்ட் தொழில் நுட்பங்களை அறிந்து கொண்டு, திரும்பி வந்து, அதை தங்களுடைய சொந்த புராஜக்டாக சமர்பித்தனர். இதனால் பல நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டன. குளறுபடிகள் உருவாயின. இவ்வாறு செய்யக்கூடாது என்று கல்வித்துறை எச்சரிக்கை விடுத்தும், அதனால் பயனில்லை. தங்களுடைய கல்லூரிக்கு புகழ் கிடைக்கிறது என்பதற்காக, கல்லூரி நிர்வாகங்களே இந்த ஏமாற்று செயலை ஊக்குவித்தன!

அந்த சமயத்தில், ஒருநாள், சென்னையைச் சேர்ந்த கல்லூரி ஒன்றின் இரு மாணவர்கள், ஆர்வ மிகுதியால் கி.பி. 4000ம் வருடத்திற்கு டைம் மிஷினில் சென்றனர். சென்றவர்கள் சென்றவர்கள்தான். இன்றுவரை அவர்கள் திரும்பி வரவே இல்லை. அந்தக் கல்லூரி நிர்வாகம், மாணவர்களைத் தேடி இரண்டு ஆசிரியர்களை, மற்றொரு டைம் மிஷினில் அனுப்ப, அவர்களும் மறைந்து போயினர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உறவினர்கள் போலீஸில் புகார் கொடுத்தவுடன்தான் விஷயம் பெரிதானது. கல்லூரிகளின் பொறுப்பற்ற போக்கை பலரும் கண்டித்தனர். அறிவியல் முன்னேற்றங்கள் அழிவுக்குத்தான் இட்டுச் செல்கிறது என்று கூக்குரலிட்டனர். தொலைந்து போன மாணவர்கள், ஆசிரியர்கள் குடும்பங்களின் கண்ணீர் பேட்டி எல்லா மீடியாக்களிலும் வந்தது.

4000ம் வருடத்தில் உள்ள மர்மம் அனைவரையும் வசீகரித்தது. அதை அறிந்து கொள்ள உலகில் உள்ள பல நாடுகளில் இருந்து ஒரு வாரத்திற்குள், சுமார் 3000 பேர் சென்றனர். அந்தோ, பரிதாபம்! அவர்களில் ஒருவர் கூட திரும்பி வரவில்லை! அதன்பின்புதான், 4000 வருட ஆபத்தின் தீவிரம் எல்லா நாட்டிற்கும் புரிந்தது. வருடம் 4000 - சுருக்கமாய் Y4K - உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்கால பயணத்தை பல நாடுகள் தடை செய்தன. டைம் மிஷின்களில் இருந்த எதிர்கால பயண சாப்ட்வேர்கள் அழிக்கப்பட்டன.

என்றாலும், அரசாங்கமே, ரகசியமாய் டைம் டிராவல் மூலம் Y4K மர்மத்தை அறிய முயற்சிப்பதாகவும், அவைகளும் தோல்வியிலேயே முடிவதாகவும், பலவித வதந்திகள் உலவியது.

பல கதைகள் Y4K குறித்து வந்தது. இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் Y4K பற்றிய சினிமா வந்தது. பேப்பர்களிலும், மேகசின்களிலும் Y4K பக்கம் ஒதுக்கப்பட்டது. கோவில்களில் Y4K ஸ்பெஷல் பூஜை நடத்தப்பட்டது. மந்திரிக்கப்பட தாயத்துக்கள், காப்புகள், கற்கள் அமோகமாக விற்பனை ஆனது. SMSன் பிரதான விஷயமாக Y4K இருந்தது.

அந்த பரபரப்பான சூழலில்தான், அன்று ரேகா என் அறைக்குள் வந்தாள். மினி ஷார்ட்ஸ், ஒய்-கட் ஸ்லீவ்லெஸ் ஷர்ட் சகிதம் அமர்க்களமாய் இருந்தாள். என்னுடைய லவ் புரப்போஸலுக்கு பதில் கூறத்தான் வந்துள்ளாளோ என்று நினைத்தேன்.

“சொல்... தேவதையே... சொல். சம்மதம் என்ற அந்த ஒற்றை வார்த்தையை உன் உதடுகள் உச்சரிக்கட்டும். ஐ லவ் யூ என்ற அந்த பொன்மொழி என் காதுகளில் தேனாகப் பாயட்டும்.”

அவள் என்னை மேலும் கீழும் பார்த்தாள்.

“என்ன... இருபதாம் நூற்றாண்டு டிராமா எதற்காவது ரிகர்சல் பண்றியா? இப்படி உளர்றே”, என்றாள்.

“என் லவ் புரப்போஸலுக்குத் தான் பதில் கூற வந்திருக்கிறாயோ என்று நினைத்தேன்”

“அதை ஒரு ஓரத்தில் தூக்கி வை, சதீஷ். நான் வேற ஒரு புரப்போஸலுக்கு வந்துள்ளேன்.”

“வேற புரப்போஸல்னா, லீ மெரிடியனில் டான்ஸ் கம் டின்னர், தென் ஒரு ரூம் ரிசர்வ் பண்ணி...”, என்று நான் இழுக்கவும் ஒரு முறை முறைத்தாள்.

“புத்தி போகுது பாரு. நான் சொல்ல வந்ததே வேறு.”

“சொல்லு, சொல்லு”

ஆனால் அவள் சொல்லத் தயங்கினாள். சுற்றும் முற்றும் திருட்டுப் பார்வை பார்த்தாள். என்னுடைய ஆர்வம் அதிகரித்தது. என்ன சொல்லப் போகிறாள்? மெதுவான குரலில் கூறினாள்.

“என் பிரண்டு கிட்ட இருந்து, செகண்ட் ஹாண்டில் ஒரு டைம் மிஷினை சமீபத்தில் நான் வாங்கினேன். அதில்... அதில் எதிர்கால பயணத்திற்கு உரிய சாப்ட்வேர் அழிக்கப்படாமல் உள்ளது.”

“அதனால் என்ன? கவர்மெண்டில் இன்பார்ம் பண்ணி அதை அழித்து விட வேண்டியது தானே?”

“நான் அதை அழிக்கப் போவதில்லை.”

“பிறகு?”

“அந்த மிஷின் மூலம்”

“மிஷின் மூலம்?”

“நானும் நீயும்....”

“நீயும் நானும்?”

“Y4Kக்கு போகப் போகிறோம்.”
- எழுதிக் கொண்டிருப்பவர் ஸ்ரீதேவி
எழுத்தாளினிளர் ஸ்ரீதேவியை நேரடியாக பாராட்ட/திட்ட :- 9842422928

Friday, February 27, 2009

யுதிஷ்ட்ரா

அந்தக் கலம் சென்று கொண்டிருந்தது. சந்தோஷ் கண் விழித்தான். கண்களின் முன்னால் பல நிறங்களில் திரவங்கள் நடனமாடின. ஸஸ்பெண்டட் அனிமேஷன் தொட்டிக்குள் இருந்து மெதுவாக தலையை மட்டும் வெளியே நீட்டினான். சந்தோஷ் மூச்சுக்குழாய்களில் உடனடியாக கடுமையான இறுக்கத்தை உணர்ந்தான். மீண்டும் தொட்டிக்குள் மூழ்கினான்.

'வெளியே ஏன் இன்னும் காற்று நிரப்பப்படவில்லை? இதற்குள் இருந்தவாறே கணிணியை கேட்கவும் முடியாது.’ ஸஸ்பெண்டட் அனிமேஷன் தொட்டிக்குள் உறங்க வைக்கப்படுமுன் பார்த்த காட்சிகளும், ட்ரெய்னிங்கின் பொழுது படித்த பாடமும் நினைவுக்கு வந்தன.

'சுவாச முகமூடிகள் இணைக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கும் ஆக்ஸிஜன் பெட்டிகள், தொட்டிகளுக்கு அருகில் இருக்கும். ஒரு வேளை ஸஸ்பெண்டட் அனிமேஷன் நிலையிலிருந்து விழித்தெழுந்ததும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால், முகமூடிகளை உடனே அணிந்து கொள்ளவும்'


'ஆக்ஸிஜன் பெட்டி உறங்கும் முன் அருகில்தான் இருந்தது. ஆம். ஞாபகம் இருக்கிறது. வலது புறம். வேகமாக சென்று அணிந்து கொள்ள வேண்டும்.'

ஒரு வினாடி நிதானித்து, சரேலென்று தொட்டியில் இருந்து வலதுபுறமாக வெளியே குதித்தான். முகமூடியை அதன் லாக்கிலிருந்து விடுவித்து, உடனடியாக மூக்கை மூடிக் கொண்டான். மூச்சு விட முடிந்தது. 'அப்பாடா!'.

நிதானமாக முகமூடியை தலையோடு இணைத்துக் கொண்டான். தனக்கான பெட்டியிலிருந்து, உடையை எடுத்து அணிந்து கொண்டான். 'ஏன் இன்னும் மற்றவர்களெல்லாம் விழிக்கவில்லை?'

கணிணியை தொடர்பு கொண்டான். "யுதிஷ்ட்ரா"

கலத்தின் கணிணி யுதிஷ்ட்ரா, "சந்தோஷ். விழித்து விட்டீர்களா?"

"ஆம். விழித்து விட்டேன். ஏன் இன்னும் கலத்தில் காற்று நிரப்பப்படவில்லை?"

"இன்னும் அதற்கான நேரம் வரவில்லை. அதனால் நிரப்பவில்லை."

"நேரம் வரவில்லையா? காற்று நிரப்பப்பட்ட பின்தானே எங்களை விழிப்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும்? அதற்கு முன் ஏன் என்னை விழிக்க வைத்தாய்?"

"நான் விழிக்க வைக்கவில்லை. நீங்களாக விழித்துக் கொண்டிருக்கிறீர்கள்?"

"நானாகவா? அது எப்படி முடியும்?"

"பத்து செகண்ட் பொறுங்கள்..........நீங்கள் உறங்கிக் கொண்டிருந்த ஒன்பதாம் எண் தொட்டியின் வெப்பம் கடைசி ஆறு மணி நேரமாக கணிசமாக உயர்ந்து வந்திருக்கிறது. வெப்பம் 6 டிகிரி அடைந்ததும், இயல்பாக எஸ்.ஏ தொட்டி அனுப்ப வேண்டிய எச்சரிக்கையை, எனக்கு அனுப்பவில்லை. எஸ்.ஏ தொட்டி ஒன்பதின் சென்ஸார்களில் பிரச்சனை. அதுதான் விழித்துக் கொண்டுவிட்டீர்கள்."

"யூ மீன், செயல் திட்டத்தை விட, நான் சீக்கிரமாகவே விழித்தெழுந்து விட்டேனா?"

"ஆமாம்."

"பயண காலம் எவ்வளவு தூரம் முடிந்திருக்கிறது?"

"பூமியிலிருந்து நூற்றிப் பதினாறு வருடங்கள், 206 நாட்கள், நான்கு மணி நேரம், முப்பத்தி ஏழு நிமிடங்கள், ஐம்பத்தி இரண்டு விநாடிகள்."

"வாட்? கிட்டத்தட்ட பாதி தூரம்தான் வந்திருக்கிறோமா?"

"நாற்பத்தி எட்டுப் புள்ளி அறுபத்தி ஏழு சதவிகித தூரம் வந்திருக்கிறோம்."

"யுதிஷ்ட்ரா! நிலைமை சிக்கலானது. எனது எஸ்.ஏ. தொட்டியில் என்ன பிரச்சனை, வெப்பம் ஏன் உயர்ந்தது என்று கண்டுபிடி. சீக்கிரம் சரி செய்"

"சரி சந்தோஷ். இன்னும் ஐந்து நிமிடத்தில் எஸ்.ஏ. தொட்டிப் பிரச்சனை குறித்து ரிப்போர்ட் செய்கிறேன்." அமைதியானது.

சந்தோஷ், பூர்ணா, ....., விஷ்வா ஆகிய ஒன்பது பேரும், அருகிலிருக்கும் எஃப்ஸிலான் எரிடனி சூரியனைச் சுற்றும், பூமியை ஒத்த கோளுக்கு, 'உயிர் வாழ இடம் தேடி' திட்டத்துக்காக, பூமியிலிருந்து பொறுக்கியெடுத்து அனுப்பப்பட்ட விஞ்ஞானிகள். பயண காலம் 239 வருடம் 284 நாட்கள் என்று நிர்ணயிக்கப்பட்டது. அவ்வளவு காலம் பயணிகள் உயிரோடு இருந்தாக வேண்டும். தலைமுறை பயணிகளாக திட்டம் அமைத்தால், உணவு, காற்று, கழிவு என்று பல சிக்கல்கள். அதற்குப் பதிலாக பயணிகளை ஸஸ்பெண்டட் அனிமேஷனில் மூழ்கவைத்து தூங்க வைத்தால், அவர்களது இதயத் துடிப்பை வெகுவாக குறைத்து, ரத்த ஓட்டத்தைக் குறைத்து, திரவ சுவாசம் கொடுப்பதால், அவர்களது வாழ்நாளை நீட்டிக்கலாம். உடல் முதிர்வடையாமல் உயிரையும் பாதுகாக்கலாம். செலவும் தலைமுறைத் திட்டத்தோடு ஒப்பிடுகையில் வெகு குறைவு. பயணம் முடியும் கடைசி மணி நேரங்களில் பயணிகளை எழுப்பினால் போதுமானது. இடைப்பட்டப் பயணத்தைக் கலத்தின் கணிணி யுதிஷ்ட்ராவே கவனித்துக் கொள்ளும்.

'இன்னும் நூறு வருடங்களுக்கு மேல் பாக்கி இருக்கின்றன.' இந்த எண்ணமே சந்தோஷின் மனதில் சுற்றிக் கொண்டிருந்தது.

'எஸ்.ஏ.தொட்டியில் ஏன் திடீரென்று பிரச்சனை வந்தது? நூறு வருடங்கள் கலத்தினுள் கழிக்க முடியாது. அப்படி கழிக்க நேர்ந்தால் முப்பது, நாற்பது வருடங்களுக்குள் வயதாகி இறந்து விடுவேன். எஸ்.ஏ.தொட்டிதான் பாதுகாப்பு.'

"சந்தோஷ்" யுதிஷ்ட்ரா.

"என்ன. சரியாகிவிட்டதா?"

"இல்லை சரி செய்ய முடியவில்லை."

"என்ன பிரச்சனை?"

"தேவையான அளவுக்கு ஹைட்ரஜன் சல்ஃபைடு உற்பத்தியாகவில்லை. தேவையற்ற ஆர்கான் ரஸாயனத் திரவம் தொட்டியில் 19.6 சதவீதம் காணப்படுகிறது. ரஸாயன மாற்றங்கள் திட்டமிட்டபடி ஏற்படவில்லை."

"இப்பொழுது என்ன செய்வது?"

"கேள்வி நேரடியாக இருப்பது நல்லது. பொதுப்படையானக் கேள்விகளுக்கான பதில்கள் ஏராளம்."

"சரி, இப்பொழுது எஸ்.ஏ. தொட்டியை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?"

"ஆர்கான் திரவத்தை தொட்டியிலிருந்து அகற்ற வேண்டும். ஹைட்ரஜன் சல்ஃபைடு உற்பத்தியை சிறிது கூட்ட வேண்டும்."

"அப்படியென்றால் ஆர்கான் திரவத்தை தனியாகப் பிரித்து வெளியேற்று."

"ஆர்கான் திரவத்தை தனியாக பிரிக்க முடியவில்லை."

"இப்பொழுது சரி செய்ய முடியுமா? முடியாதா?"

"முடியலாம். அதற்குத் தேவையான பொருட்களும், ப்ரொசீஜர்களும் என்னிடம் இல்லை."

சந்தோஷிற்கு இப்பொழுது தெளிவாகத் தெரிந்து விட்டது. 'இனி எஸ்.ஏ. தொட்டிப் பயனில்லை.'

"யுதிஷ்ட்ரா, எஸ்.ஏ தொட்டிப் பிரச்சனையை உன்னால் சரி செய்ய முடியாது. தொட்டிக்கு வெளியே நானும் அதிக காலம் வாழ முடியாது. இந்த நிலையில் மாற்றுத் திட்டம் ஏதாவது, பூமி விஞ்ஞானிகள் உனக்குள் ஏற்படுத்தியிருக்கிறார்களா?"

"சந்தோஷ், இந்தப் பிரச்சனை விஞ்ஞானிகளால் எதிர்பார்க்கப்படவில்லை. அதனால் மாற்றுத் திட்டம் ஏதுமில்லை. மாற்றுத் திட்டம் இருந்தால் உங்களுக்கும் அது தெரிவிக்கப்பட்டிருக்கும்."

"அது எனக்குத் தெரியும். இருந்தாலும் உன்னிடம் ஏதாவது ரகசியத் திட்டம் இருக்கிறதா என்பதற்காகக் கேட்டேன்."

"ரகசிய மாற்றுத் திட்டம் ஏதுமில்லை."

"யுதிஷ்ட்ரா, இப்பொழுது நான் என்ன செய்யலாம்?"

"சந்தோஷ். தயவுசெய்து நேரடியான கேள்வி கேட்கவும்."

"மறுபடி நான் எஸ்.ஏ. தொட்டியில் உறங்க முடியாது என்ற நிலையில், நான் என்னவெல்லாம் செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது?"

"இரண்டு சாத்தியக்கூறுகள், இந்தக் கேள்விக்கு, எனது ஹியூரிஸ்டிக் ப்ரோக்ராமில் தோன்றுகிறது."

"அவை என்னென்ன?"

"முதலாவது, என்னிடம், நீங்கள் அதிக காலம் வாழ்வதற்குத் தேவையான ஆக்ஸிஜன் இல்லை; உணவு மாத்திரைகள் இல்லை; இவையெல்லாம் ஒன்பது பேருக்கு, இரண்டு வருடம் தேவையான அளவுக்கு திட்டப்படி உள்ளது. அவையனைத்தையும் உபயோகித்து, சிறிது காலம் இந்தக் கலத்தில் நீங்கள் உயிர் வாழலாம். இந்த சாத்தியக்கூறில், உங்களுக்கு செய்வதற்கு வேலையோ, பொழுதுபோக்கிற்கோ எதுவும் கிடையாது. அதனால் இறப்பதற்கு வெகு காலம் முன்பே மூளை பழுதடைந்து பைத்தியம் பிடித்து விடும்."

’பைத்தியம் பிடிப்பதை விட அபாயமான பிரச்சனை ஒன்றிருப்பதை இந்த இயந்திர மூளை உணரவில்லை. ஒன்பது பேருக்குரிய உணவையும், காற்றையும் நானே உபயோகித்து விட்டால், மற்றவர்கள் விழித்தெழும்பொழுது அவர்களுக்கு உணவோ ஆக்ஸிஜனோ இருக்காது. அல்லது பற்றாக்குறை ஏற்படும். மிஷன் முழுவதுமாக தோல்வியடைவதுடன், மற்ற எட்டு பேரும் ஆக்ஸிஜன் இல்லாமல் இறந்து போவார்கள். எட்டு பேர் - என்னால்.’

“இரண்டாவது சாத்தியக்கூறு?”

“நீங்கள் உடனடியாகவோ, சிறிது காலம் கழித்தோ தற்கொலை செய்து கொள்ளலாம்.” அதன் குரலில் துளியும் வருத்தமில்லை.

“இரண்டில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்.”

“சரி யுதிஷ்ட்ரா. நான் சிறிது சிந்திக்க வேண்டும். முடிந்தவரை எஸ்.ஏ. தொட்டியை சரி செய்ய முயன்று கொண்டே இரு. முன்னேற்றம் தெரிந்தால் எனக்குத் தகவல் கொடு.”

“சரி சந்தோஷ்.”

சந்தோஷ் யோசித்தான். ’யுதிஷ்ட்ரா சொல்வது சரிதான். நான் உயிரைத் தக்க வைத்துக் கொண்டால்கூட வேலையோ, பொழுதுபோக்கோ இல்லாமல் இருந்தால் நிச்சயம் பைத்தியம் பிடித்து விடும். பொழுதுபோக்க ஏதாவது வழி இருக்கிறதா? பென்சில். பென்சில்கள் இருக்கின்றன. எழுதக் காகிதம் இல்லாவிட்டாலும் இந்தக் கலத்தின் பெரும்பகுதி பொருட்கள் பென்சிலால் எழுதப்படக்கூடிய பொருட்களாலேயே செய்யப்பட்டிருக்கிறது. பென்சில்களால் அவற்றில் ஏதாவது எழுதிக் கொண்டு, கிறுக்கிக் கொண்டு பொழுதைப்போக்கலாம். ஆனாலும் இது மட்டும் அதிக உதவி செய்து விட முடியாது. சேமிக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜனைக் கொண்டு, எவ்வளவு மெதுவாக மூச்சு விட்டாலும், இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் உயிரோடிருக்க முடியாது. இடையில் பைத்தியம் வேறு பிடித்துவிட்டால் நிலைமை மோசமாகிவிடும். இருபத்தி ஐந்து வருடங்கள் உயிரோடிருந்து பின் ஆக்ஸிஜன் போதாமல் இறக்க நேர்ந்தாலும், மற்றவர்களுக்கும் அதே கதி, அவர்கள் விழித்தெழுந்ததும் நேரும். எட்டுபேரின் உயிரும் என் ஒருவனால் போய் விடும். 1=8டா?. மிக அநியாயம். அதுவும் அந்த 1க்கு வாழ அர்த்தமேயில்லாதபொழுது. ம்ம்.’

சந்தோஷ் சிறிது நேரம் தீவிரமாக யோசித்துப் பார்த்தான். பின் ஒரு முடிவோடு எவாக்வேஷன் எக்ஸிட்டை நோக்கி சென்றான்.

“யுதிஷ்ட்ரா. நான் வெளியேற வேண்டும். எவாக்வேஷன் எக்ஸிட்டை திற. நான் வெளியேறியதும் மூடிவிடு.”

“சரி சந்தோஷ்.”

கதவு திறந்தது. வெளியே குதிக்குமுன், ‘எனக்கு எதற்கு இந்த ஆக்ஸிஜன் பெட்டி?! உயிரோடிருக்கும் எட்டு பேரில் ஒருவருக்காவது முப்பது நாட்கள் உபயோகப்படுமே!!’, நினைத்ததும் பெட்டியைத் தனியே கழற்றி, வாசலுக்கு அருகே வைத்தான். மூச்சை ஒரு முறை நன்றாக இழுத்து விட்டு, முகமூடியைக் கழற்றிவிட்டு வாசல் சுவற்றில் காலை நன்றாக ஊன்றி பலமாக சுவற்றை உதைத்து,...

கதவு மூடிக்கொண்டது.

யுதிஷ்ட்ரா தனது டேட்டாபேஸை அப்டேட் செய்தது. “கலத்திலிருக்கும் மொத்த உயிர்கள் = 0”.

அந்தக் கலம் சென்று கொண்டிருந்தது.

௨௲௧௧

எனது காலப்பேசி ஒரு முறை கதறி ஓய்ந்தது. எடுத்துப் பார்த்தேன். பூர்ணாதான் தகவல் அனுப்பியிருந்தாள்.

"95BEB2AACDAAC79ABFAFBFB2CD 85B4C895CD95BEA4C7 B59AAEBE95 AEBE9FCD9FBF95CD 95CAA3CD9FC1 B5BF9FCD9FC7A9CD B0BE AA9FCD AAC09FCD 9ABEB2C895CDE7C1 E8F2E7E7 EA E8F0 95BEB2C8 EF E9F095CD95C1 B5BE"

’என்ன இது. ஒன்றுமே புரியவில்லை!? என்ன அனுப்பியிருக்கிறாள்?’ அவள் வீஃபோனுக்கு அழைத்தேன். பூர்ணாவின் டிஜிட்டல் உருவம் திரையில் தோன்றி, "நான் தற்பொழுது இந்த நொடியில் இல்லை. காலப்பயணம் முடிந்து திரும்பியதும் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்." என்று திரும்பத் திரும்பக் கூற ஆரம்பித்தாள்.

’காலப் பயணம் போயிருக்கிறாளா? என்னிடம் ஒரு வார்த்தைக் கூட சொல்லவில்லை. எப்பொழுது இயந்திரத்தை வாங்கினாள்? அல்லது வாடகை இயந்திரத்தில் போயிருக்கிறாளா? அவள் காலப்பேசிக்கு அழைக்கலாமா?’

காலப்பேசியை எடுத்து அவள் பெயரைத் தேடி அழுத்.. ’அந்தத் தகவல்?! அது ஏன் அப்படியிருந்தது? ஒரு வேளை ஏதாவது செய்தியை மறைத்து அனுப்பியிருக்கிறாளா? அப்படியானால் இப்பொழுது அவளை அழைப்பது சரியாக இருக்காது’ என்று தோன்றியது.

அவள் அனுப்பியிருந்த தகவல் என்னைக் குழப்பியது. அதைப் புரிந்து கொள்ள முயன்றேன். ’என்னவாக இருக்கும்? எப்படி டீக்ரிப்ட் பண்ணுவது?’

அந்த செய்தியை எனது கணிணியில் கொடுத்து, தெரிந்த எல்லா முறைகளிலும் அதை உடைக்க முயன்றேன்.

‘ஹெக்ஸா டெசிமல் போல் இருக்கிறது. ஆஸ்கி கோடாக இருக்குமோ?! EA, EF.. E8F0. இரண்டு எண்கள் சேர்த்து ஒரு எண். EA...EF. ஆஸ்கியில் EA என்ன?’ கணிணியில் பார்த்தேன். EA -> ê, EF -> ï. ’இல்லை ஆஸ்கி இல்லை. வேறு ஏதோ..’

ஒரு மணி நேரமானது. ம்ஹூம்! முடியவில்லை. கணிணியில் ஆட்டோ டீக்ரிப்ட் வசதியைத் தொடங்கி விட்டேன். ஆயிற்று மேலும் பதினைந்து நிமிடங்கள். கணிணி பதில் ஒன்றும் சொல்வதாயில்லை. களைப்பாயிருந்தது. அப்படியே மேசையில் தலை வைத்து கண்களை மூடினேன்.

பூர்ணா - இரண்டு வருடங்களாக என் வீட்டில் என்னுடன்தான் இருக்கிறாள். பூர்ணா = அழகு. ஆனால் அவசரக்காரி. அவளைக் காதலிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். டாக்டரேட்டுக்காக பழந்தமிழாராய்ச்சி செய்து கொண்டிருக்கிறாள். நான் அவ்வப்போது உதவுவேன் - தமிழாராய்ச்சியில் மட்டும்தான்.

’தமிழாராய்ச்சி.... ஆங். அப்படியிருக்குமோ?!. B0EA, B0EF இரண்டும் ஆதிகால கணிணி யூனிக்கோடில் பழந்தமிழ் எண்களின் குறியீடுகள்.’ B0EA -> ௪ - நான்கு. B0EF -> ௯ - ஒன்பது. பூர்ணா ஒரு முறை பழந்தமிழ் எண்களின் பழைய யூனிக்கோடுகள் என்னவென்று தேடிக் கொண்டிருந்தபொழுது, நான் தான் கண்டுபிடித்துச் சொன்னேன். ’புரிகிறது. எல்லா எண்களின் முன்பும் B0 சேர்த்து, அதற்கானப் பழைய யூனிக்கோடு குறியீடைப் பார்த்தால் தகவல் என்னவென்று புரிந்துவிடும்.’

பூர்ணாவின் கணிணிப் பகுதியில் மேய்ந்து பழைய யூனிக்கொடு அட்டவணையை திறந்து வைத்துக் கொண்டேன்.

’B095. க. B0BE. துணையெழுத்து. B0B2. ல. B0AA. ப. B0CD. ஒற்றெழுத்து ரொம்ப முக்கியம் இப்ப!!’

”காலப்பேசி்யில் அழைக்காதே வசமாக மாட்டிக் கொண்டு விட்டேன் ரா பட் பீட் சாலைக்கு ௨௲௧௧ ௪ ௨௰ காலை ௯ ௩௰க்கு வா”

’௨௲௧௧ என்றால் ..’ அவளது எண்கள் பற்றிய குறிப்புகளை கிளறினேன்.

‘2011 4 20 காலை 9 30க்கு. மை காட். 2011க்கு போயிருக்கிறாள். ஆயிரம் வருடங்களுக்கு முன்னோ பின்னோ காலப்பயணம் செய்வது சட்டவிரோதம் ஆயிற்றே! எதற்கு அங்கே போனாள்?’. காரில் பறக்கும்பொழுது, செயற்கை டிசி இல்லாத சிக்னல்களில் கூட நின்று பறக்கும் பயந்த குடிமகன் நான். ’விதிமுறைகளை மீறி 2011க்கு போவதா?’

ஆனாலும் பூர்ணாவின் மீது எனக்கு ஒரு கவர்ச்சி இருந்திருக்கிறது. அது என்னைக் கால இயந்திரங்கள் வாடகைக்கு விடும் ஏஜென்சி ஒன்றின் வரவேற்பறைக்கு விரட்டியது.

“மிஸ்டர் பிரவீன். விதிமுறைகளெல்லாம் தெரியுமில்லையா? ஆயிரம் வருடங்களுக்கு முன்னேயோ பின்னேயோ போகக் கூடாது. அடுத்த எழுபது வருடங்களுக்கு போகக் கூடாது. உங்க வயசு என்ன?”

“இருபத்தி ஏழு.”

“ம்ம். முந்தைய இருபத்தியெட்டு வருடங்களுக்குப் போகக் கூடாது. இயந்திரத்தை சேதமில்லாமல் ஒப்படைக்கனும். சின்ன சேதமானாலும், இயந்திரத்தின் முழு விலையையும் செலுத்தனும். இங்கே உங்கள் ஒப்புதலை சொல்லுங்க.” சொன்னேன்.

இயந்திரத்தை அணுகினேன். அது தரையில் ஓடும் ஒரு பழைய மாடல் கார் மாதிரிதான் இருந்தது. ஸ்டீயரிங், கியர், பிரேக் போன்ற பழைய வஸ்துக்களுடன், கண்ட்ரோல் பேனல், ஹோலோகிராஃபிக் டிஸ்பிளேக்கள் போன்ற புதிய சாமாச்சாரங்களும் இணைந்திருந்தன.

உள்ளே ஏறி முதலில் ரா பட்டுக்கு செலுத்தினேன். மனதில் ஒரு பயம். ’நான் எங்கே போகிறேன் என்பதையெல்லாம் கண்காணிப்பார்களா?’. ராஜீவ்; அவனைக் கேட்கலாம். அவன் கால இயந்திரங்கள் ஷோ ரூமில்தான் வேலை செய்கிறான். அவனை வீஃபோனில் அழைத்தேன். குழப்பமான ஒளிக்கோர்வைக்குப் பின் சிக்னல் வீக் என்று சொல்லியது.

யோசித்துக் கொண்டே இயந்திரத்தை செலுத்திக் கொண்டிருந்தேன், ‘பூர்ணா ஏற்கனவே 2011க்கு சென்றிருக்கிறாள். தடை செய்யப்பட்ட வருடம். இதுவரை அவளைப் பற்றி ஏதும் கேள்வியில்லை. ஸோ, கண்டிப்பாக கண்காணிக்கப்படவில்லை.’

ரா பட், பீட் ரோட் வந்து விட்டது. ஒரு ஓரமாக ஒதுக்கி நிறுத்தினேன்.

டெஸ்டினேஷன் பேடில்,’2011-ஏப்ரல்-20 9.30 AM' என்று அமைத்தேன். ’Travel' பட்டனை அழுத்த...
சிலீலீலீங்...
டொம்ம்ம்
க்ளீளீளீஈச்
எனது இயந்திரத்தின் முன்,பின் கண்ணாடி கூரை எல்லாம் திடீரென்று நொறுங்கியது. என்ன நடக்கிறது என்று புரிவத “டாய் ங்...தா எறங்குடா” என்று கத்தியவாறு ஒரு முரட்டு உருவம் என்னை நோக்கி ஓடி வந்தது. கையில் அது என்ன? வாள் மாதிரி பின் பக்கம் வளைந்து கொண்டு?! ஏதோ ஓர் உந்துதலில் இயந்திரத்தின் கதவைத் திறந்து வெளியே குதித்தேன். நிறைய பேர் அதே போல் கும்பல் கும்பலாக அந்த வாள், தீப்பந்தம், கட்டை முதலியவற்றுடன் எல்லாப் பக்கமும் ஓடிக் கொண்டிருந்தனர். “198, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை” என்று எழுதியிருந்த போர்ட் ஒன்று என் அருகே விழுந்து உடைந்தது. எரிந்து கொண்டிருந்த போஸ்டர் ஒன்றில்
“வாழும் தெய்வமே....
வெற்றிக் கனி....
காணிக்கையாக்குகி...”
சர சர சர சர
எனது இயந்திரத்தின் முன்புறம் தீப்பிடித்துக் கொண்டது. தீ வைத்தவன் என்னை நோக்கி ஒரு கட்டையை விட்டெறிந்தான். அது என் மூக்கைத் தொடுமுன் ஒரு பெண் என் மேலே விழுந்து என்னைத் தள்ளிக் கொண்டே ஓட ஆரம்பித்தாள். “சீக்கிரம் ஓடு பிரவீன்.”

“பூர்ணா!? என்ன நடக்குது இங்க?”

“அப்புறம் சொல்றேன். முதல்ல ஓடு.” ஓடினோம். ஒரு குறுகலான கட்டிடத்துக்குள் புகுந்து கொண்ட பின் கொஞ்சம் மூச்சு விட முடிந்தது.

”பூர்ணா, வாட் த ஹெல் ஆர் தீஸ்? நீ எதுக்கு இங்கே வந்தே? என்ன நடக்குது இங்கே?”

”காம். காம். ஒன்னொன்னாக் கேளு.”

“நீ எதுக்கு இந்த தடை செய்யப்பட்ட 2011க்கு வந்தே?”

“ஆராய்ச்சிக்குத்தான். இந்த வருடம் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், தமிழின் உலகப்பொது மொழி முன்னேற்றத்துக்குக் காரணமான பல முக்கிய முடிவுகள் எடுத்தாங்கன்னு ஒரு தகவல் தெரிஞ்சது. ஆனா என்னென்ன முடிவுகள்னு தெரியலை. அதான், நேர்லயே வந்து பார்க்கலாம்னு வந்தேன்.”

“இங்கே மாநாடு எதுவும் நடக்கிற மாதிரித் தெரியலையே?”

“தேதி சரியாத் தெரியலை. ஒரு உத்தேசமா வந்தேன். தேர்தல் கலவரமாம். கலவரம்னெல்லாம் ஹிஸ்ட்ரீலதானே படிச்சிருக்கோம். இப்பத்தான் நேர்ல பாக்குறோம். த்ரில்லிங்கா இல்லை. நம்ம முன்னோர்கள் எவ்வளவு வீரமா சண்டை போடறாங்க பார்த்தியா?” பூர்ணா சில சமயம் இப்படித்தான்.

“வீரமா சண்டையா? காட்டுமிராண்டித்தனமா இருக்கு.”

“நான் கொண்டு வந்த இயந்திரத்தையும் எரிச்சுட்டாங்க. அதான் என்னைக் கூட்டிப்போக உன்னை இங்கே வரச் சொன்னேன். டைரக்டா காலப்பேசியில் கூப்பிட்டாலோ, நேரடியா தகவல் அனுப்பிச்சாலோ, நம்ம காலத்துக் குற்றத்தடுப்புப் பிரிவு அதை ட்ரேஸ் செய்துருவாங்க. அதான் க்ரிப்ட் பண்ணித் தகவல் அனுப்பினேன். ஆனா, இப்ப உன்னோடதையும் எரிச்சுட்டாங்க.”

“அறிவிருக்கா? கலவரம் நடக்குதுன்னு தெரியுதில்ல. அப்புறம் எதுக்கு இங்கே வரச் சொன்னே. வேற ஏதாவது கொஞ்சம் அமைதியான இடத்துக்கு வரச் சொல்லியிருக்கலாம்ல?”

“நான் தகவல் அனுப்பும்போது இந்த இடத்துல கலவரம் ஏதும் இல்லையே. அதான் அப்படி அனுப்பினேன். இப்ப என்ன செய்றது?”

“தெரியலை. எத்தனை நாள் கலவரம் நடக்கும்? எப்படியும் ரெண்டொரு நாள்ல அடங்கிறாதா? அடங்குனப்புறம் யாரையாவது நண்பர்களை அழைக்கலாம்.”

“விளையாடறியா? நாம இங்க ஒரு நாள்கூடத் தங்க முடியாது. இந்தக் காலத்துப் பணம் நம்மகிட்ட இல்லை. ஒன்னும் பண்ண முடியாது. அதனால சீக்கிரம் நாம போயாகனும்.”

வெளியே சத்தம் குறைந்து கொண்டே போனது. இருபது நிமிடங்களுக்குப்பிறகு சத்தமேயில்லை. பூர்ணாவை உள்ளேயே இருக்கச் சொல்லிவிட்டு நான் மட்டும் வெளியே வந்து பார்த்தேன்.

ஆங்காங்கே ஏதேதோ எரிந்து கொண்டிருந்தன. வாகனங்கள் தாறுமாறாக சிதறியிருந்தன. ஆனால் தெருவில் ஆள் நடமாட்டமேயில்லை. கொஞ்ச நேரத்துக்கு முன் ஓடிக் கொண்டிருந்த கும்பல் எதையும் கண்ணுக்கு எட்டிய தூரம்வரைக் காணவில்லை. நான் இன்னமும் பீட்டர்ஸ் சாலையில்தான் இருக்கிறேன் என்று உறுதிப்படுத்திக் கொண்டேன்.

பூர்ணாவை அவசரமாக அழைத்தேன். ”உன் காலப்பேசியைக் கொடு.”

அவள் எனக்கு அனுப்பிய மெஸேஜை எடுத்து திருத்த ஆரம்பித்தேன். “யாருக்குத் தகவல் அனுப்புகிறாய்?”.

“ராஜீவிற்கு.”, ’இப்பொழுது மணி என்ன?’, ”பத்து பதினைந்துக்கு கோட் என்ன?”

“F0 E7 EB. ஏய்? என்ன செய்கிறாய்? மடையா!”

“கவலைப்படாதே! நீ அனுப்பிய முறையில் என்க்ரிப்ட் பண்ணிதான் அனுப்பினேன்.”

“எனக்கு அறிவிருக்கான்னு அப்பக் கேட்டே? இப்ப உனக்கு அறிவிருக்கா?”

“ஏன்? என்ன?”

“இந்த யூனிக்கோட் முறை உனக்கும் எனக்கும்தானே தெரியும். ராஜீவிற்கு எப்படித் தெரியும்? இது பழைய யூனிகோடு. நமது காலத்தில் புழக்கத்திலேயே கிடையாது. இதை ராஜீவ் எப்படி டிக்ரிப்ட் செய்து, இங்கே வந்து, நம்மைக் காப்பாற்றி... ஏய்! அங்கப் பார்”

அங்கே ஒரு கார் வந்து கொண்டிருந்தது. உள்ளேயிருந்தது.... ராஜீவ். ’வந்துவிட்டான். கில்லாடிடா’. கார் வேகமாக எங்கள் அருகே வந்து நின்றது. “சீக்கிரம் ஏறுங்கள்”. தாவிக் கொண்டோம். டெஸ்டினேஷன் பேடில் நிகழ்காலத்தை அமைத்து “டிராவல்”ஐ அழுத்த...

‘அப்பாடா. தப்பித்து விட்டோம்.’

எங்களை வீட்டில் இறக்கிவிட்டு ராஜீவ், “ஸீ யூ படீஸ். கேட்ச் யூ ஸூன்” என்று கிளம்ப எத்தனிக்க, நான் “ராஜீவ்! ஒரு நிமிஷம்டா. நான் வாடகைக்கு எடுத்துட்டுப் போன இயந்திரத்தைத் திரும்பக் கொண்டு வரலையே. இந்த வருடத்துக்குத்தான் போனேன்னு குற்றத்தடுப்புப் பிரிவு டிராக் பண்ணுவாங்களா?”

ராஜீவ் கண்ணடித்தான். “அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. கால இயந்திரத்தை டிராக் செய்யவெல்லாம் நாம் இன்னும் டெக்னிக்கலாக வளரவில்லை. எல்லாம் ஒரு பயமுறுத்தல்தான். நானே பலமுறை அந்த மாதிரிப் போயிருக்கேன்.”

“சரி. வாடகைக் கம்பெனிக்காரன் ஏதாவது ஏடாகூடமா கேள்வி கேட்பானா? இயந்திரம் காணோம்னா எந்த வருடத்துக்குப் போனீங்கன்னு கேள்வி வராதா?”

“கவலைப்படாதே. தப்பித்தவறி அந்தக் கம்பெனிக்காரன் உன்னை காண்டாக்ட் பண்ணினா, தொலைஞ்சு போன இயந்திரம் எங்கேன்னெல்லாம் கேக்க மாட்டான். வேற இயந்திரம் வாடகைக்கு வேணுமான்னு வேணாக் கேட்பான். ஏன்னா, இயந்திரத்தோட விலையை ஏற்கனவே உன்கிட்ட வாடகையா வசூலிச்சிருப்பான். இது ரொம்ப ரிஸ்கான பிஸ்னஸ். வாடகைக்கு எடுத்துட்டுப் போறவனெல்லாம் திரும்ப வருவான்னு நிச்சயமேயில்லாத பிஸ்னஸ். அதுனால முதல்லேயே ஃபுல் அமவுண்டையும் கஸ்டமர்ட்டக் கறந்துடுவாங்க. உன்ன மாதிரி திரும்பக் கொண்டு போய் இயந்திரத்தைக் கொடுக்கிற கேஸ்கள் ரொம்பக் கம்மி. ஸோ. டோண்ட் வொரி. பை”, போய் விட்டான்.

உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாக பூர்ணா, ”சரியான பயந்தாங்கொள்ளிடா நீ. உன்னோட ஸேஃப்டிக்கு இதெல்லாம் அவன்கிட்டே கேட்டியே! ஒரு தாங்ஸ் சொன்னியா?”

’அட, ஆமாம் மறந்தே விட்டேன்.’ “சொல்லிட்டாப் போச்சு.” வீஃபோனில் ராஜீவை அழைத்தேன். ராஜீவைப் போன்ற உருவம் தோன்றி, “ஹாய் ஃபிரண்ட்! நான் அலுவலக நிமித்தம் விண்வெளி நகரத்துக்கு சென்றிருக்கிறேன். அவசர செய்தியென்றால் எனது விண்வெளி நகர எண்ணுக்கு அழையுங்கள். எனது விண்வெளி நகர எண் ஆறு ஒன்று எட்டு எட்டு ....”

“அதுக்குள்ள அடுத்த பிரயாணமா? கலக்குடா! அவசரம் ஒன்னுமில்லை. திரும்பி வந்ததும் தெரியப்படுத்து. ஒரு பார்ட்டி வச்சுக்கலாம்” என்று பதிந்து விட்டுத் துண்டித்தேன்.


ஒரு மாதம் கழித்து, அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில், காற்றில் மிதந்து கொண்டிருந்த மேஜையைச் சுற்றி, நான், பூர்ணா, ராஜீவ் மூவரும் நாற்காலிகளில் மிதந்து கொண்டிருந்தோம்.

“என்னடா திடீர்னு பார்ட்டி? ஏதாவது...?” குறும்பாக சிரித்தான்.

“எல்லாம் ஒரு தாங்ஸ் கிவ்விங்தான்.”

“ராஜீவ், அந்த மெஸேஜை எப்படி நீ டிக்ரிப்ட் பண்ணினே?! அதான் ஆச்சர்யமா இருக்கு” பூர்ணா.

“எந்த மெஸேஜ்?”

“என்னடா, தெரியாத மாதிரிக் கேட்கிறே? உன்னோட காலப்பேசிக்கு அனுப்பினோமே அந்த மெஸேஜ்.”

“ஆமாம் அந்த மெஸேஜைப் பார்த்தேன். ஒன்றும் புரியலை.”

”அப்புறம் எப்படிடா கரெக்டா அன்றைக்கு ரா பட்டுக்கு வந்தே?”

“ரா பட்டுக்கா? என்றைக்கு? எதுக்கு?”

”என்னடா விண்வெளிப் பிரயாணத்துல எல்லாம் மறந்துட்டியா? ஒரு மாதம் முந்தி என்னையும் பூர்ணாவையும் 2011லிருந்து காப்பாற்ற ரா பட் வந்தியே. அதைச் சொல்றேன். அதுக்குதான் இந்த தாங்ஸ் கிவ்விங் பார்ட்டி!”

“அன்னைக்கு என்ன நடந்தது விளக்கமா சொல்லு.”

“ஆமாம். அதை உன்கிட்டே சொல்லவேயில்லேல்ல. அன்றைக்கு எனக்கு ஒரு மெஸேஜ் வந்தது பூர்ணாவிடமிருந்து. அதை டீக்ரிப்ட் செய்து..........அழைத்தேன். அதற்குள் நீ விண்வெளி நகரம் போய்ட்டே.”

“வெய்ட் எ மினிட்.” ராஜீவ் அவனது காலப்பேசியை எடுத்தான். நான் அவனுக்கு அனுப்பிய மெஸேஜை என் முன் நீட்டி, “இதற்கு அர்த்தம் சொல்லு.”

“காலப்பேசி்யில் அழைக்காதே வசமாக மாட்டிக் கொண்டு விட்டேன் ரா பட் பீட் சாலைக்கு ௨௲௧௧ ௪ ௨௰ காலை ௰ ௧௫க்கு வா”

“௨௲௧௧ ௪ ௨௰ காலை ௰ ௧௫க்கு அப்படின்னா?”

”2011 4 20 காலை 10 15க்கு”

“எக்ஸ்கியூஸ்மீ படீஸ். நீங்க சாப்பிட்டுக்கிட்டிருங்க. நான் சீக்கிரம் திரும்பி வந்துடறேன். ஒரு அவசர வேலையிருக்கு.”

“டேய். டேய். பார்ட்டிக்கு வந்துட்டு எங்கடா அவசரமா போற?”

“2011 4 20 காலை 10 15க்கு. உங்க ரெண்டு பேரையும் காப்பாற்ற.”

திரும்பத் திரும்ப

மிஸ்டர் சிவநேசனை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. சென்னைக்கு அருகே ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் சரியாக ஐம்பத்தெட்டு வயது வரை வேலை செய்து, ரிடையரானவர். அவரது இரண்டு பெண்களுக்கும் திருமணம் முடித்தது, அவரது மனைவி சென்ற ஆண்டு ஹிண்டு ஆபிச்சுவரி காலத்தில் இடம் பிடித்தது, அமெரிக்க மாப்பிளைகளுக்கு டிமாண்ட் இருந்த நேரத்திலேயே வளைத்துப் போட்டு, இரு பெண்களையும் அமெரிக்கா அனுப்பியது, போன்ற கதைக்குத் தேவையில்லாத விஷயங்களுக்குள் போய் நாம் நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஞாபகம் இருக்கட்டும், நேரம் மிகவும் முக்கியம்.

இப்படியாக வாழ்ந்து வந்த மிஸ்டர் சிவநேசனின் வாழ்க்கையில், அவருக்கு மட்டுமே தெரிந்த அதிமுக்கியமான/மில்லாத பிரச்சனை ஒன்றிருந்தது. சில விஷயங்கள் நடந்து முடிந்த பின், அவருக்கு அந்த நிகழ்ச்சி ஏற்கனவே முன்பு நடந்திருப்பதாக ஒரு தேசலான ஞாபகம் வரும். நிகழ்ச்சி என்றில்லை. சில சமயம் சில முகங்கள், சில பாதைகள், சில பயணங்கள், இவற்றை வாழ்க்கையில் முதல் முறையாக பார்த்தாலும், 'முன்னாடி பார்த்த மாதிரி இருக்கே!?' என்ற எண்ணம் எழும்.

உதாரணத்திற்கு சொல்வதென்றால், சிவநேசனின் முதல் பேத்தி பிறந்த பொழுது, குழந்தையை கையில் வாங்கியதும், 'இதே மாதிரி குழந்தை இதுக்கு முந்தி யாருக்கோ பிறந்ததே?! எப்போ...? எங்கே..?' என்று ஒரு நாள் பூராவும் மண்டையை உடைத்துக் கொண்டார். கல்யாணமாகி ஹனிமூனுக்கு கொடைக்கானல் சென்றபொழுது, மனைவியுடன் ஏரியை சுற்றும்பொழுது, தான் ஏற்கனவே இதே முறையில் அந்த ஏரியை சுற்றியிருப்பதாக அவருக்குத் தோன்றியது. அவர் அதற்குமுன் கொடைகானல் சென்றதேயில்லை. அவர் இந்தக் கதையை படிக்க நேர்ந்தால் கூட, இதை இதற்கு முன் எப்பொழுதோ படித்ததாக அவருக்கு நினைவிருக்கக் கூடும்.ஆனால் இந்த ஞாபகங்கள் எல்லாமே, அந்தக் குறிப்பிட்ட சம்பவங்கள் நடந்த பிறகோ, அல்லது அந்த முகங்களைப் பார்த்த பிறகோதான் அவருக்குத் தோன்றும். அதற்கு முன்பே இப்படி பார்க்கப் போகிறோம், நடக்கப் போகிறது என்ற ஈ.எஸ்.பி.யெல்லாம் கிடையாது.

அவர் தனது இந்த நினைவுகள் குறித்து பல முறை யோசித்திருக்கிறார். சிறு வயதில், இவையெல்லாம் முன் ஜென்ம ஞாபகங்கள் என்று கூட கொஞ்ச நாள் நம்பிக் கொண்டிருந்தார். கொஞ்சம் அறிவியல் தெரிந்தவுடன், ஸ்கீஸோஃப்ரீனியாவின்(Schizophrenia, சரியாக உச்சரித்துவிட்டால் உங்கள் முதுகில் நீங்களே ஒரு முறை தட்டிக் கொடுத்துக் கொள்ளவும்) அறிகுறியாக இருக்குமோ என்று சந்தேகம் வந்தது. ஆனால் இந்த நினைவுகளால் அவரது வாழ்க்கை இதுவரை ஒரு முறைகூட பாதிக்கப்பட்டதில்லை என்பதால், அதிகம் கவலைப்படுவதில்லை.

இதுவரை பாதிக்கப்பட்டதில்லை, அதாவது இந்த அறுபத்தி இரண்டு வயது வரை. இந்த வருடப் பிறந்த நாளுக்கு அவரது நண்பர்(பெயர் ஏதாவது வைத்துக் கொள்ளுங்கள்) வடநாட்டு யாத்திரைக்கான பேக்கேஜை பரிசளித்தார். மிஸ்டர் சிவநேசனுக்கும் வெகுநாட்களாக வட இந்திய கோயில்களை தரிசிக்கும் ஆசை இருந்ததால், உடனே கிளம்பி விட்டார். பதினாறாவது நாள் காசிக்கும் வந்து இறங்கிவிட்டார்.

விஸ்வநாதர் தரிசனம் முடித்து, கோயிலை சுற்றி வரும்பொழுது, அந்த நினைவு - "இந்தக் கோயிலுக்கு இதற்கு முன் எப்பொழுது வந்திருக்கிறோம்? எப்பொழுதோ பார்த்த மாதிரி இருக்கே?!'. யோசித்தவாறே வாசல் வழியாக வெளியேறப் போனார். அபொழுதுதான் அந்தப் பெண் குறுக்கே வந்தாள்.(கோயிலுக்குள் கெட்டெண்ணமெல்லாம் கூடாது. அதனால் வயது, இன்ன பிற விவரங்கள் தர முடியாது).

"யஹ் ராஸ்தே மே(ங்) நஹீ(ன்) ஜாயியே. உதர் மே(ங்) ஜாஓ."

மிஸ்டர் சிவநேசனுக்கு ஹிந்தி தெரியாதென்றாலும், ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. 'இந்த வழியாகப் போகாதீர்கள் என்கிறாள். மற்ற எல்லோரும் போய்க் கொண்டுதானே இருக்கிறார்கள்?'. அவள் காட்டிய வழியை பார்த்தார். அந்த வாசல் வழியாகவும் பக்தர்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த வாசல் வழியாகத்தானே இவரோடு டூர் வந்தவர்கள் எல்லோரும் வெளியேறினார்கள். 'அவர்களோடு சேர்ந்து கொள்வதே உத்தமம்'. என்று முடிவெடுத்து, மறுபடி அந்த வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

"ஸார் ப்ளீஸ் யூஸ் தட் வே." அந்தப் பெண் இப்பொழுது பாஷை மாறினாள்.

சிவநேசனுக்கு கோபம் வந்தது. ஏனென்றால் அவர் போக நினைத்த வாசல் வழியே நிறைய பேர் வெளியேறினார்கள். ஆனால் அந்தப் பெண் தன்னை மட்டும் வேறு வழியாகப் போகச் சொல்வானேன்?

"வொய் கேன்ட் ஐ யூஸ் திஸ் வே?"

அந்தப் பெண் இவ்வளவு எதிர்ப்பை எதிர்பார்க்கவில்லை. "யூ கேன் ஸார். பட் ப்ளீஸ் யூஸ் தட் ஒன்." என்றாள் மறுபடி.

அவளை ஒரு முறை கோபமாக முறைத்துவிட்டு, அவர் போக நினைத்த வாசலை நோக்கி வேகமாக நெருங்கினார். 'இந்தப் பெண்ணை எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறதே?!' நினைத்தபடி படியில் கால் வைக்... "மிஸ்டர் சிவநேசன், ஒரு நிமிஷம்" அதே பெண்ணின் குரல்தான். திரும்பினார்.

"உனக்கு என் பேர் எப்படித் தெரியும்?" என்றார் ஆச்சர்யமாக.

"அது.., வாங்க பேசிக்கிட்டே போலாம்." என்றவாறு அவள் காட்டிய வாசலை நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தாள்.

"அட நில்லும்மா. எதுவா இருந்தாலும் இங்கேயே பேசு. ஏன் என்னை அந்த வாசல் வழியா அனுப்புறதில இவ்வளவு குறியாக இருக்கே?"

அவள் சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். முகத்தில் சொல்லலாமா வேண்டாமா என்று குழப்பம். பிறகு ஒரு முடிவிற்கு வந்து, "அந்த வழியாப் போனீங்கன்னா நீங்க இறந்து போயிருவீங்க. அதனால்தான் இந்த வழியாப் போகச் சொல்றேன்."

சிவநேசன் அவளை நம்பிக்கையில்லாமல் பார்த்தார். 'இந்த ஊரில் இந்த மாதிரி நிறைய கேஸ் திரியுது'. "என்னம்மா ஜோஷ்யமா? எனக்கு நம்பிக்கையில்லை. வேற யார்கிட்டேயாவது போய்ச் சொல்லு." என்றவாறு திரும்பப் போனார், "மிஸ்டர் சிவநேசன், இது ஜோஷ்யம் இல்லை. நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க." மறுபடி நின்றார், "சரி சொல்லு."

அந்தப் பெண் சிறிது நேரம் சிந்திப்பது தெரிந்தது. பின்னர், "மிஸ்டர் சிவநேசன். என்னோட பெயர் பூர்ணா. இது ஒரு விஞ்ஞான ஆராய்ச்சி. நீங்க அதில ஒரு என்டிட்டி. அதான் சொல்றேன், அந்த வாசல் வழியாப் போங்க."

"என்னம்மா சொல்றே? விஞ்ஞான ஆராய்ச்சிக்கு நான் எதுக்கு அந்த வாசல் வழியாப் போகனும். யாரைக் கேட்டு என்னை என்டிட்டி ஆக்கினே?"

"மிஸ்டர் சிவநேசன். நாங்க யாரையும் கேக்க வேண்டியதில்லை. நான் இப்போ சொல்றது உங்களுக்கு நம்பறதுக்கு கஷ்டமா இருக்கும். ஆனா அதுதான் உண்மை. எங்களோட விஞ்ஞான ஆராய்ச்சி, இந்த பூமிதான். இது எங்களால் உருவாக்கப்பட்டது. இதில் ஏற்பட்ட ஒவ்வொரு மாறுதலும் ஒரு விஞ்ஞான விதிக்குட்பட்டது. உங்களுக்கு எளிமையா புரியற மாதிரி சொல்லனும்னா, இந்த பூமி ஒரு சிமுலேஷன் ப்ரோக்ராம் மாதிரின்னு வச்சுக்கங்களேன். இதில் ஆரம்ப நிலைகளை நாங்கள் உண்டாக்கினோம். இந்த பூமிக்கான விஞ்ஞான விதிகளை ஏற்படுத்தினோம். அந்த விதிகளுக்கேற்ப, இந்த பூமி மாறுதலடைந்து வருகிறது. இந்த மாறுதல்களின் மூலம் எங்களுக்குப் பல கேள்விகளுக்கான விடைகள் கிடைத்திருக்கின்றன. இந்த மாறுதல்களின் முக்கிய தூண்டுகோல்களாக சிலர்/சிலது இருக்கும். அப்படிப்பட்ட சிலதில் நீங்களும் ஒருவர். ஆனால் நீங்கள் இந்த சிமுலேஷன் ப்ரோக்ராமில் ஒவ்வொரு முறையும், இந்த இடம் வந்த பின், இந்த வாசலையே தேர்ந்தெடுக்கிறீர்கள். அடுத்தப் பத்தாவது நிமிடம் இறந்தும் போகிறீர்கள். இந்த முறையும் நீங்கள் அதே வாசல் வழியே வெளியேறினால் அதே முடிவே வரும். சோதனையில் ஒவ்வொரு முறையும் வேறு வேறு தீர்மானங்கள் செய்தால்தான் முடிவுகள் வேறு மாதிரி எங்களுக்குக் கிட்டும். உங்கள் வாழ்க்கையில் இந்தத் தீர்மானங்களை மாற்றி எடுக்கும் வாய்ப்புகள் பல அமைந்திருந்தன. ஆனால் நீங்களோ ஒவ்வொரு முறையும் எப்பொழுதும் எடுக்கும் தீர்மானங்களையே எடுத்தீர்கள். இது உங்களுக்குக் கடைசி வாய்ப்பு. இதிலும் நீங்கள் பழைய தீர்மானத்தை எடுப்பதானால், எங்களுக்கு மேலும் அறுபத்தி இரண்டு வருடங்கள் வீண். அதனால்தான் உங்களைத் தடுத்து, கடைசித் தீர்மானத்தை மாற்றி அமைக்க, நான் இந்த உருவில் வந்திருக்கிறேன்."

மிஸ்டர் சிவநேசன் அவளைக் கிராக்தனமாக, லூஸ்தனமாக, பைத்தியக்காரத்தனமாக, இன்னபிறத்தனமாகப் பார்த்தார், "நீ சொல்றது எதுவும் நம்புற மாதிரி இல்லியேம்மா? அப்ப இதுக்கு முந்தின தடவை நடந்ததெல்லாம் என்னோட முன் ஜென்மமா?"

"முன் ஜென்மமுமில்லை, பின் ஜென்மமுமில்லை. ஒவ்வொன்றும் ஒரு இட்டரேஷன்; சுற்று. அவ்வளவுதான்."

"சரி. நீ சொல்றது உண்மைன்னே வச்சுக்குவோம். உங்களோட இந்த ஒவ்வொரு சுற்றிலேயும், பூமி விஞ்ஞானரீதியா பல முன்னேற்றங்கள் அடைஞ்சிருக்கு. இந்த சுற்றில இருக்கிற விஞ்ஞான வசதிகள் போன சுற்றில் கிடையாது. அப்படியிருக்க போன சுற்றும், இந்த சுற்றும் எப்படி ஒரே மாதிரி இருக்கும்?"

"மிஸ்டர் சிவநேசன், இந்த விஞ்ஞான வளர்ச்சிகள் எல்லாமே சிமுலேஷனில் ஒரு பகுதிதான். வேறு வேறு என்டிட்டிகள் எடுத்த வேறு வேறு தீர்மானங்களால் நிகழ்ந்தவை. அவை உங்களுடைய சுற்றுகளை வேறுபடுத்திக் காட்டினாலும், அவை உங்களது தீர்மானங்களைப் பாதிக்கவில்லை. அதனால் உங்களது சுற்று எப்பொழுதும் ஒரே மாதிரி ஆரம்பித்து ஒரே மாதிரி முடிந்து கொண்டிருக்கிறது. இந்த முறையாவது அதை மாற்றியாக வேண்டும். மிஸ்டர் சிவநேசன். நேரம் அதிகமில்லை. பேசிக் கொண்டே இருக்க முடியாது. நீங்கள் சீக்கிரம் தீர்மானித்தாக வேண்டும். அந்த வாசல் வழியாக வெளியேறுங்கள்."

மிஸ்டர் சிவநேசனுக்கு சரியாக எதுவும் புரியவில்லை. எதையும் தீர்மானிக்க முடியவில்லை. சிறிது நேரம் யோசித்தார்.

அந்தப் பெண்ணை இப்பொழுது காணவில்லை. மிஸ்டர் சிவநேசன் சுற்றிலும் ஒரு முறை பார்த்தார். மெதுவாக நடந்து வாசலைக் கடந்து வெளியேறினார்.