முன்கதை - ஒன்று, இரண்டு, மூன்று
==================================
நல்ல வேளையாக ஏற்றி கொண்டாள். உள்ளே நுழைந்ததுமே முக்கால்வாசி இளகிவிட்ட ஃபில்டரை பிய்த்து வெளியே எறிந்து விட்டேன். அவள் என்னை பரிதாபமாக பார்த்துக் கொண்டே, பேசி கொண்டு வந்தாள்.
------------------------><---------------------
நுங்கம்பக்கம். என் வீட்டிற்குள் நுழைந்து எனது கம்ப்யூட்டரை கழட்டி வெளியே பால்கனியில் வைத்தேன். ஆராய்ச்சி குறிப்புகள் அத்தனையும் பொறுக்கி கம்ப்யூட்டர் அருகில் போட்டேன். கம்ப்யூட்டரை சுற்றி மலை மலையாக காகிதம். என்னுடைய ஃபெராரியின் பெட்ரோல் ட்யூபை உருவி, கேனை நிரப்பி, சுற்றிலும் ஊற்றி, தீ வைத்தேன்.
பத்து வருட உழைப்பு கண் முன்னால் எரிவதை பார்த்து கொண்டே யோசித்தேன்.
'ராஜீவ்! தெரிந்து செய்வானா? தெரியாமல் செய்வானா? எனது குறிப்புகளை ஏற்கெனவே திருடியிருப்பானோ? அப்படியே எனது குறிப்புகளை திருடியிருந்தாலும் எதற்காக அறுபத்தி மூன்று வரை அதை செய்ய வில்லை? எனது ஆராய்ச்சி சம்பதப்பட்ட சில பாகங்களின் டிஸைன்கள் ராஜீவிடம் இருக்கின்றன. அவற்றையும் அழிக்க வேண்டும். தேவையென்றால் ராஜீவை கொல்லவும் தயங்க கூடாது. முதலில் ராஜீவை போய் பார்க்கலாம்.'
முழுதும் எரிந்து முடித்தது. சின்ன துண்டுகாகிதம் கூட மிஞ்சவில்லை. ராஜீவ் நம்பருக்கு அழைத்தேன். எடுக்கவேயில்லை. அவன் கம்பெனிக்கு ஃபோன் போட்டேன்.
"ஹலோ"
"ஹலோ! நான் சந்தோஷ் பேசறேன். அங்க ராஜீவ் இருக்கானா?"
"அவர் இல்லையே சார்! செல்லுக்கு பண்ணினாலும் எடுக்க மாட்டேங்கறார். நானும் அவரைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்."
"அப்படியா? சரி நான் இப்ப அங்கே வர்றேன். அவன் வந்தா அங்கேயே இருக்க சொல்லுங்க."
"சரி சார்!"
நான் அங்கே போனபோதும் ராஜீவ் அங்கேயில்லை. 'எங்கே போயிருப்பான்?'. அவன் அறையிலிருந்த அவன் கம்ப்யூட்டரை ஆன் செய்தேன். 'எனது டிஸைன்களை எங்கே வைத்திருக்கிறான்?' 'Search' ஆன் செய்ததும், மேனேஜர் உள்ளே வந்தார்.
"ராஜீவ் எங்கே கண்ணன்?"
"தெரியலை சார்! நான் உங்களை கேக்கனும்னு நினைச்சேன்"
"என்னையா?"
"உங்க ஷெட்ல ஒரு கார் வச்சிருந்தீங்களே! அதுலதான் ஒருத்தர் வந்து கூட்டிட்டு போனார்."
"என்னது!!! அந்த காரிலா??? எப்போ வந்தார்?"
"சுமாரா ரெண்டரைக்கு வந்து கூட்டிட்டு போனார்?"
"ஆள் பார்க்க எப்படியிருந்தான்?"
"கொஞ்சம் குள்ளமா, வழுக்கை தலை. டைட்டா டிரெஸ் பண்ணிருந்தார். ஏன் சார் எதாவது பிரச்சனையா?"
"தெரியலை. ராஜீவ்டயிருந்து ஃபோன் வந்தா உடனே எனக்கு கூப்பிட சொல்லுங்க."
"சரி சார்!" குழப்பமான முகத்துடன் வெளியேறினார்.
கம்ப்யூட்டர் திரையை பார்த்தேன்.
'அடப்பாவி!!!'
மொத்த குறிப்புகளும் அவன் கணினியிலிருந்தன!!! 'எப்பொழுது எடுத்தான்?' பயங்கரமாக கோபம் வந்தது.
ஒவ்வொன்றாக அழித்து கொண்டிருக்க நேரமில்லை!
'DEMOLISH SYSTEM' என்று அடித்து 'Enter' தட்டினேன். இனிமேல் இந்த கம்ப்யூட்டர் யாருக்கும் உபயோகப்படாது.
'ராஜீவ் எங்கே போனான்? அவனை கூட்டி போனவன் யார்? என்னுடைய கார்... ஒருவேளை அவனாயிருக்குமோ? ஆனால் எதற்கு?' யோசித்து யோசித்து எனக்கு மூளையே வெடித்து விடும் போலிருந்தது. யோசித்துவாறே நடக்க ஆரம்பித்தேன்.
'எனக்கு சதி செய்வது யாரென்றே புரியவில்லை? ராஜீவா? என்னிடம் லிஃப்ட் கேட்டவனா? இல்லை இவன் வேறொருவனா?'
விடை வராத கேள்விகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
'எனது காரில் கடத்தி போயிருந்தால், கண்டிப்பாக ராஜீவ் வேறு ஏதோ ஒரு வருடத்துக்குதான் போயிருக்க வேண்டும். எந்த வருடம் 1963ஆ? 3000மா? தேடிப் பார்க்க எனக்கு ஒரு வண்டி வேண்டும். ராஜீவின் உதவியில்லாமல் அதை மீண்டும் உருவாக்கவும் முடியாது! என்ன செய்வது? இந்த காலத்தில்ருந்து லிஃப்ட் கொடுக்க கூட வண்டி கிடைக்காதே!!'
'அட வர்ஷிதா! இவள் எதற்கு இங்கே நிற்கிறாள்?' சுற்றிலும் பார்த்தபொழுது சாலிகிராமம் என்று புரிந்தது. 'இவள் என்னை இறக்கி விட்டு
போகவில்லையா? ஒருவேளை இவள்தான் ராஜீவை?..'
"ஹாய்! என்ன இங்கே நின்னுகிட்டு இருக்கீங்க? பதினெட்டு இருபத்தி மூனுக்கு போகலை?"
அவள் பதில் கூறாமல் என்னையே கூர்ந்து பார்த்தாள்.
"எதுக்கு அப்படி பாக்கறீங்க?"
"நீங்கள்தானே டைம் டிராவல் வண்டியை கண்டுபிடித்த சந்தோஷ்? முன்பே ஏன் சொல்லவில்லை?"
"தேவையில்லைன்னு நினைச்சேன்"
அவள் ஏதோ யோசித்துவிட்டு பெரிதாக சிரிக்க ஆரம்பித்தாள்.
"எதுக்கு சிரிக்கிறீங்க?" எரிச்சலாக கேட்டேன்.
"இல்லை! 'விதி வழி மதி செல்லும்'னு ஒரு பழமொழி உண்டு, கேள்விபட்டிருக்கீங்களா?"
"அதுக்கென்ன இப்போ?"
"உங்கள் அராய்ச்சி குறிப்பையெல்லாம் அழித்திருப்பீர்களே?"
எனக்கு சந்தேகம் அதிகமானது. "உங்களுக்கு எப்படி தெரியும்?"
"உங்கள் நண்பர் ராஜீவ் காணாமல் போயிருப்பாரே? உங்கள் வண்டியும் தொலைந்து போயிருக்கனுமே!"
"ராஜீவ் எங்கே இருக்கான்னு உங்களுக்கு தெரியுமா?"
"தெரியும். இருபது ஐம்பத்தியெட்டிலிருக்கிறார்."
"அமபத்தி எட்டா? எதுக்கு?"
"சரி! சரி! ரொம்ப குழம்பாதீர்கள்! எல்லாவற்றையும் விளக்கமாக சொல்கிறேன்."
"உங்கள் வண்டியை திருடியவந்தான், ராஜீவையும் கடத்திருக்கிறான். கடத்தி ஐம்பத்தி எட்டுக்கு கொண்டுபொய் விட்டு விட்டான்."
"அம்பத்தி எட்டுக்கு எதுக்கு?"
"'டைம் டிராவல் மெஷின்' என்ற ஒரு கண்டுபிடிப்பே இல்லாமல் போக அவன் விரும்பவில்லை. அதற்கு நீங்கள் ஒத்துழைக்க மாட்டீர்கள் என்று அவனுக்கு நன்றாக தெரியும். அதனால் ராஜீவை தேர்ந்தெடுத்தான். ராஜீவ் கையில் உங்கள் ஆராய்ச்சி குறிப்புகள் அத்தனையும் கொடுத்திருக்கிறான். அதை வைத்து இருபது அறுபத்தி மூன்றில் ராஜீவ் டைம் டிராவல் மெஷினை உருவாக்கி காட்டுவார். உலகம் ராஜீவை கொண்டாடும்."
"அதற்கு அம்பத்தி எட்டு வரைக்கும் ஏன் போக வேண்டும்?"
"ஏனென்றால் ஐம்பத்தி ஏழு வரைதான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள். ஐம்பத்தி எட்டு உங்களால் எட்ட முடியாத வருடம்."
ஒரு நிமிடம் மூளையில் அறைந்தது போலிருந்தது.
"யார் அவன்? அவனுக்கு இதனால என்ன லாபம்?"
"அவனுக்குத்தான் எல்ல லாபமும். ராஜீவை கடத்தியது வேறு யாருமில்லை. கார்கோ! கார்கோவை தெரியுமில்லையா? டைம் டிராவல் மெஷின் உருவானால்தானே, பிற்காலத்தில் அவனால் அதில் மாற்றம் செய்ய முடியும்."
எனக்கு சகலமும் இப்பொழுது புரிந்தது, ஒன்றை தவிர.
"உங்களுக்கு எப்படி எல்லா விஷயமும் தெரியும்?"
"நான் தான் ஏற்கெனவே உங்களிடம் சொன்னேனே, எனக்கு இந்த மாதிரி பழைய விஷயங்களையெல்லாம் தோண்டி பார்ப்பதில் இடெரெஸ்ட்ன்னு. அப்படி தோண்டியதில் கார்கோவின் டைரிகள் எனக்கு கிடைத்தன. அதில் எல்லாவற்றையுமே அவன் எழுதிருந்தான். அதை படித்ததுமே உங்களுக்கு உதவ வேண்டும் என்று தோன்றியது. அதனால் தான் வந்தேன்."
"அதுக்கெதுக்கு பதினெட்டு இருபத்தி மூனுக்கு போனீங்க?"
"எனக்கு உங்களை பற்றி அதிகமாக தெரியாது. உங்கள் பெயர் தெரியும். பதினெட்டு இருபத்தி மூன்றில் உங்களது வம்சாவழி திரு.பொன்சாமுவேல் என்பவர் கலப்பு மணம் செய்ததால் மாறிப்போனது என்ற குறிப்பு மட்டும் கார்கோவின் டைரியில் கிடைத்தது. அதனால் பதினெட்டு இருபத்தி மூன்றிலிருந்து உங்கள் வம்சாவளியை பிடித்து கொண்டு வந்தேன். அப்படி வந்த பொழுது இருபது ஒன்பதில், உங்களது சிறு வயது புகைப்படம் கிடைத்தது. அதை வைத்துதான் உங்களை கண்டு பிடித்தேன். முதலிலேயே நீங்கள்தான் அந்த கண்டு பிடிப்பாளர் என்று சொல்லியிருந்தால், இந்நேரம் எல்லாவற்றையுமே தடுத்திருக்கலாம்!! அதனால்தான் சொன்னேன், 'விதி வழி மதி செல்லும்'னு"
"எனக்காக ரொம்பவும் மெனக்கெட்டிருக்கிறீர்கள். ரொம்ப நன்றி. நாம உடனே ராஜீவ்ட்ட இருக்கிற அந்த குறிப்புகளையும் அழிக்கனும்."
"எப்படி அழிப்பீர்கள்?" அவள் கேள்வியில் கிண்டல் தொனித்தது.
"நீங்க உதவ மாட்டீங்களா? இருபது அம்பத்தி எட்டுக்கு உங்க வண்டியில் கொஞ்சம் லிஃப்ட் கொடுக்க முடியுமா, ப்ளீஸ்!"
அவள் ஒருமாதிரி புன்னகைத்து கொண்டே, ஃப்யூவல் கம்பஸ்ஸன் சேம்பரை நோக்கி கை காட்டினாள். பார்த்தேன்.
'ZRD அனலைஸர்' சுத்தமாக எரிந்து போயிருந்தது. அப்படியே தலையில் கைவைத்து ரோட்டில் உட்கார்ந்து விட்டேன்.
"எழுந்திருங்கள்! நடக்க இருப்பதை யாராலும் மாற்ற முடியாது.". என்னை தூக்கி விட்டு, அந்த பக்கமாக வந்த ஒரு காரை கை காட்டி நிறுத்தினாள்.
"எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? நுங்கம்பாக்கம் போக வேண்டும்."
- பொறுமையாக படித்தவர்களுக்கு நன்றி.