Tuesday, November 27, 2007

மர்டர் மிஸ்ட்ரி - அத்தியாயம் ஈ

நல்லவேளை. காலமித்ரா இந்தமுறை லேண்ட் ஆன இடம் ஆள் அரவமற்று அமைதியாக இருந்தது. லொக்கேஷன் ஸ்கிரீன் "கடம்பூர்" என்று மினுக்கியது. காலமித்ராவை, ஒரு புதரின் பின்னே மறைவாக பார்க் பண்ணினேன். பின்பு அதிலிருந்து இறங்கி, நான் வந்துள்ள இடத்தை சுற்றி பார்த்தேன்.

கடம்பூர் நகர், சம்பூவரையர் என்னும் சிற்றரசர்கள் ஆட்சி செய்த இடம். சோழ நாட்டிற்கு கீழே, கடம்பூர் எல்லைக்குள் மட்டும், வரி வசூலித்து, ஆட்சி நிர்வாகம் செய்ய அனுமதி உடைய சிற்றரசு. தொலைவில் அரண்மனை கோட்டைச் சுவர் நீண்டு, உயர்ந்து இருந்தது. அதற்கு உள்ளே புலிக்கொடி பறந்தது. கோட்டை மதிலுக்கு வெளியே அகலமான அகழி இருக்க, அதனுள்ளே சேறும், நீறும், முதலையும் இருந்தது.

அகழியை ஒட்டி சிறிது தூரம் நடந்தேன். அரண்மனைக்கு உள்ளே எப்படி செல்வது? முகப்பு வாயில் வழியே நுழைந்தால், காவலனின் பல கேள்விகளுக்கு பதில் கூற வேண்டியது வரும். அது ரிஸ்க். காலமித்ராவில் அட்சரேகை டிகிரி செகண்டில் சிறிது மாற்றம் ஏற்படுத்தி உள்ளே செல்லலாம். எனினும், காலமித்ராவை அரண்மனைக்கு உள்ளே பாதுகாப்பாய் மறைத்து வைப்பது எளிதல்ல. என்ன செய்யலாம்? யோசித்துக் கொண்டே நடந்தேன்.

ஒரு பாழடைந்த அய்யனார் கோவில் தென்பட்டது. அந்த இடத்தில் ஒரு கோவில் இருந்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில் அருகில் யாரும் வசிப்பது போலவே தெரியவில்லை. மக்கள் உபயோகிக்கும் வழிப்பாதை கூட அருகில் எதுவும் இல்லை. இத்தகைய இடத்தில், ஒரு கோயில் இருந்தால் இவ்வாறு பாழடைந்துதான் இருக்கும்.

கடவுளை நம்பினோர் கை விடப்படார். அரண்மனைக்கு உள்ளே செல்ல ஒரு மார்க்கம் வேண்டும் என்று மனதில் அய்யனாரிடம் வேண்டினேன். பின்பு அய்யனார் சிலையை இடமிருந்து வலமாய் சுற்றி வந்தேன். அப்போது, சிலையின் கையில் உள்ள வாள் எனக்கு வித்தியாசமாகப்பட்டது. அருகில் சென்று பார்த்தேன். அதன் வாள் பிடி பித்தளையில் செய்திருக்க, கைப்பிடியையும், வாளையும் இறுக்கிப் பிடிக்கும் செம்புக் குமிழ் பெரிய அளவில் வித்தியாசமாய் இருந்தது. குமிழை என் விரல்களால் பற்றினேன். அதில் சிறிது ஆட்டம் இருந்தது. ஏதோ உந்துதலில், அந்தக் குமிழை ஒரு சுழற்று சுழற்றினேன்.

ர்...ர்...ர்...

ஒரு கதவு நகரும் ஓசை கேட்டது. சுற்றும் முற்றும் பார்த்தேன். கோவில் அருகில் உயர்ந்து வளர்ந்துள்ள ஒரு ஆலமரத்தின் அடியில், கீழ்தரை விலகிக் கொண்டிருந்தது. ஆச்சர்யம் மேலிட அதன் அருகில் சென்று பார்த்தேன். உள்ளே ஒரு படிக்கட்டு கீழ் நோக்கி இறங்கியது.

இதயம் படபடக்க, அதனுள் இறங்கினேன். பத்து படிகள் இறங்கியதும், வாளில் உள்ள குமிழ் போன்று, ஒரு செம்புக் குமிழ் சுவரில் இருந்தது. அதனை சுழற்ற, மேல் கதவு மூடிக் கொண்டது! கும்மிருட்டாய் ஆனது.

என் பென் டார்ச்சை எடுத்து ஆன் செய்தேன். பாதையோ மேலும் இறங்கிக் கொண்டே சென்றது. நானும் சத்தமே எழுப்பாமல் இறங்கினேன். ஓரிடத்தில் படிகள் நின்று போய், நேர்பாதையாக செல்ல ஆரம்பித்தது. இது நிச்சயம் அரண்மனைக்குள் செல்லும் சுரங்கப் பாதையாகத் தான் இருக்கும். அய்யனார் நமக்கு சரியானபடி வழி காட்டியுள்ளார் என்று எண்ணிக் கொண்டே நடந்தேன். பத்து நிமிடம் நடந்ததும் நேர்பாதை முடிவுக்கு வந்தது. மீண்டும் படிகள் மேல் நோக்கி ஏறியது. என் கால்களில் மெதுவான நடுக்கத்துடன் மேலே ஏறினேன். இந்த பாதை எங்கு முடிவுறும்? இதன் வாசல் எந்த அறையில் இருக்கும்? சம்புவரையர் அறையிலா? அல்லது அவரது மகள், மணிமேகலையின் அறையிலா?

ஏறிச் சென்ற படிகள் ஒரு இருட்டு அறையில் முடிந்தது. அந்த அறை பழைய உபயோகமில்லாத சாமான்களால் நிரம்பியிருந்தது. இந்த சுரங்கப் பாதை வாசல் எளிதில் தெரியாமலிருக்க ஒரு ஓவியம் மூலம் மறைத்திருந்தது. அதனை சிறிது நகர்த்தி வைத்தேன். அந்த அறையை மேலும் ஒருமுறை நன்கு பார்த்து விட்டு, பின்பு டார்ச்சை அணைத்தேன்.

அந்த அறையோடு சேர்ந்த மற்றொரு அறையில் வெளிச்சம் தெரிந்தது. அதன் வாசல் ஒரு திரையால் மூடப்பட்டு இருந்தது. நான் மெதுவாக பூனை போல நடந்து அந்த வாசலை அடைந்தேன். திரையை சிறிது விலக்கி எட்டிப்பார்த்தேன். உள்ளே, இரண்டு பெண்கள் பேசிக் கொண்டு இருந்தனர். தலையை உடனே உள்ளே இழுத்துக் கொண்டேன். வேறு வழியில் அந்த அறைக்கு செல்லலாமா என்று பார்த்தேன். அந்த அறைக்கு மேலும் ஒரு வாசல் இருந்தது. அதற்கும் திரை இருந்தது. அந்த வாசல் உள்ள இடத்தை, அறையில் உள்ள உடை மாற்றும் நிலைக் கண்ணாடி மூலம் மறைத்து வைத்திருந்தனர்.

நான் திரையை விலக்கி, நிலைக் கண்ணாடியின் பின்புறம் ஒளிந்து கொண்டேன். பின்பு கண்ணாடி பிரேமில் உள்ள டிசைன் இடைவெளி வழியாக அறையை கவனித்தேன்.

ஒரு மிகப்பெரிய படுக்கை அறை. விஸ்தாரமாய், அதே சமயம் அழகாகவும் இருந்தது. அறையின் நடுவே, யானை தந்தங்களினால் அலங்காரம் செய்யப்பட்ட ஒரு உயர்ரக கட்டில் இருந்தது. அதன்மீது மெத்தையும், விலையுயர்ந்த விரிப்பும் விரிக்கப் பட்டிருந்தன. சுவரில் வேட்டையாடி பதப்படுத்தப்பட்ட மிருகங்களின் தலைகள் இருந்தன. சுவர்கள், அழகிய ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நிலைக் கண்ணாடி, மேஜை, நாற்காலி என பலவித பர்னீச்சர்களும் ஆடம்பரமாக இருந்தன. ஆங்காங்கே அழகிய விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.

கட்டிலின் மீது அமர்ந்து கொண்டு இரு பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர். பகட்டான உடைகள், அணிகலன்களால் இருவருமே ஜொலித்துக் கொண்டிருந்தனர். ஒருத்தி பழுவேட்டையர் என்ற சிற்றரசரின் மனைவி நந்தினி. மற்றொருத்தி இந்த அரண்மனையின் செல்லப் பெண், சம்புவரையரின் மகள் மணிமேகலை. இவர்களில் யாரேனும் ஒருவர் கூட கொலைக் குற்றவாளிகளாக இருக்கலாம். ஏனென்றால், இந்த சிற்றரசர் குலத்தினர், ஆதித்த கரிகாலரிடம் வெறுப்பு காட்டியே வந்துள்ளனர்.

அப்போது வெளியே தடதடவென்று மதயானை நடந்து வருவது போல சத்தம் கேட்டது. உடனே மணிமேகலை அவசர அவசரமாய் அந்த அறையினுள் இருந்த ஒரு மறைவிடத்தில் மறைந்து கொண்டாள். கதவை திறந்து கொண்டு ஒரு வாலிபன் கம்பீரமாக நுழைந்தான்.

அட.. இது நம் ஹீரோ அதித்த கரிகாலர்! இவர் கடம்பூர் அரண்மனைக்குள் இருக்கிறார் என்றால்... இன்றுதான் சம்பவம் நடக்கப் போகிறதா?

எனக்குள் பரபரப்பு தொற்றிக் கொண்டது. முகம் குப்பென்று வியர்த்தது. உள்ளே நுழைந்த கரிகாலர், நந்தினியுடன் அமைதியாகவே பேசிக் கொண்டிருந்தார். எனினும் அவர் கையில் ஒரு வாள் இருந்தது. இந்த வாள்தான் அவர் உயிரை குடிக்கப் போகிறதா?

மணிமேகலையைப் பார்த்தேன். அவளோ தன் மறைவிடத்தில் இருந்து சிறிதும் வெளிக்காட்டாமல் இருந்தாள். அப்போது பின்புறம் லேசான சத்தம் கேட்க, திரையை விலக்கிப் பார்த்தேன். 'திக்'கென்று இருந்தது. சுரங்கப்பாதை வாசல் அருகே ஒருவன் நின்று கொண்டிருந்தான். ஆதித்த கரிகாலரும், நந்தினியும் பேசுவதை அவன் ஒட்டு கேட்டுக் கொண்டிருந்தான். யாரிவன்? எப்படி இங்கு வந்தான்? அவனை நன்றாக உற்றுபார்த்தேன். எனக்கு அவனை அடையாளம் தெரிந்தது. வந்தியத் தேவன். குந்தவையின் காதலன். ஆக, இவன்தான் ஆதித்த கரிகாலரை கொல்லப் போகிறானா?

நான் வந்த சுரங்கப் பாதை வழியாகத்தான் வந்தியத்தேவனும் வந்திருக்க வேண்டும். அடேய் வந்தியத்தேவா! நான் சந்தேகப்பட்டது சரியாகத்தான் உள்ளது. நீதான் கொலைகாரனா? ஆனால்... நீ யார் கையாள்? கரிகாலரின் தம்பி அருள்மொழி வர்மனுக்கா? அல்லது கரிகாலரின் சித்தப்பா உத்தமச் சோழருக்கா? இல்லை பழுவேட்டையர்களுக்கா? யாருக்காக நீ இந்த துரோகத்தை செய்யப் போகிறாய்?

இதற்கிடையே கரிகாலரின் பேச்சில் வேகம் கூட ஆரம்பித்தது. உச்சஸ்தாயில் கோபமாக பேசினார். நந்தினி ஏதோ சொல்ல முற்பட்டும், அதனை கவனிக்காமல், வெறித்தனமாய் பேசினார்.. போகப் போக நந்தினியும் கோபமடைய ஆரம்பித்தாள். இருவர் பேச்சிலும் பொறி பறந்தது.

நந்தினியா? வந்தியத்தேவனா? யாரந்த கருப்பு ஆடு? யாருடைய கை கொலை செய்யப் போகிறது? இருவரையும் மாறி மாறி கவனித்தேன்.

திடீரென்று சுரங்கப்பாதை வழியே மற்றொரு ஆஜானுபாகு உருவம் தோன்றியது. அந்த உருவம் வந்தியத்தேவன் பின்புறம் வந்து, இடது கையால், அவன் கழுத்தை சுற்றி இறுக்கியது.

இவர்... இவர்... பழுவேட்டையர் அல்லவா? பழுவூர் குலத்தின் அரசர் அல்லவா? அப்படியென்றால் பழுவேட்டையர்தான் கொலையாளியா? வந்தியத்தேவன் நல்லவன்தானா?

பழுவேட்டையர் குலத்தினர், விஜயாலயச் சோழர் காலத்தில் இருந்தே, சோழ பேரரசிடம் நெருக்கமாக இருந்தனர். விஜயாலயர், ராஜாதித்தர், அரிஞ்சயர், கண்டராதித்தர், சுந்தரச்சோழர் என அனைவர் காலத்திலும், பழுவேட்டையர்கள் உயர்ந்த பதவியில் அமர்த்தப்பட்டு, மரியாதையாக நடத்தப்பட்டனர். சோழ சிம்மாசனத்தை யார் அலங்கரித்தாலும், அவர்களுக்கு அடுத்த ஸ்தானத்தை உடையவர் பழுவூர் குலத்தினராகவே இருந்தனர்.

ஆனால், ஆதித்த கரிகாலர் இளவரசு பட்டத்தை அடைந்ததும், அவருக்கும், அப்போதைய பழுவேட்டையருக்கும் சிறுசிறு உரசல்கள், மனஸ்தாபங்கள் தோன்றின. அதனை பேசி தீர்ப்பதற்கு பதில், இருவருமே அதை மேலும் மேலும் வளர்த்தனர். பழுவேட்டையர், அளவுக்கு அதிகமாய் சோழப் பேரரசில் ஆதிக்கம் செலுத்துவதாய் கரிகாலர் எண்ணினார். நேற்று முளைத்த சிறு பையன் தன்னை மரியாதைக் குறைவாய் நடுத்துவதாக பழுவேட்டையர் எண்ணினார்.

இந்த ஆதிக்க போராட்டம் கொலை வரை இட்டுச் செல்வது ஒன்றும் அதிசயமில்லை.

வந்தியத்தேவன் தன் மீது தொடுக்கப்பட்ட திடீர் தாக்குதலால், முதலில் தடுமாறி நிலை குலைந்தான். பின்பு ஒருவாறு சமாளித்து அவர் பிடியை விலக்க போராடினான். என்ன நடக்கப் போகிறதோ? இருட்டு அறையில் நடப்பதை நன்கு கவனிக்க இரண்டு அடி முன்னே வந்ததும்தான் என் தவறை உணர்ந்தேன். உணர்ச்சிவசப்பட்டு, கண்ணாடி மறைவிலிருந்து வெளியே வர, என் மீது வெளிச்சம் பட்டது.

"ஏய்... யார் நீ?" ஆவேசத்துடன் என்னைப் பார்த்து கேட்டார் கரிகாலர்.

"நான்... நான்..." பதில் வராமல் தடுமாறினேன். பாண்டிய நாட்டு எதிரியாக இருப்பேனோ என்று நினைத்த அவர், என் மீது பாய்ந்து, தன் வலது கையால் என் கழுத்தைப் பிடித்து சுவற்றோடு அமுக்கினார். அவரின் வஜ்ர கைகளில் இருந்து என்னால் நகர முடியவில்லை. அவர் என்னை அப்படியே தூக்கினார். ஹக்... ஹக்... முச்சு திணறினேன். நெஞ்சை அடைத்தது. கண்கள் இருண்டன. எப்படியாவது தப்பிக்க வேண்டும்.. என்ன செய்வது? எப்படி தப்பிப்பது?

தற்பாதுகாப்புக்காக, என் இடுப்பில் இருந்த விஜயாலயர் கத்தியை உருவினேன். ஆதித்த கரிகாலர் இடது மார்பை நோக்கி வேகமாய் பாய்ச்சினேன். கரிகாலர் தன் பிடியை விட்டுவிட்டு, கண நேரத்தில் துடிதுடித்து என் கண் முன்னே இறந்து விழுந்தார். அதிர்ந்து போனேன் நான்.

நடந்த சம்பவங்களை கண்டு நந்தினியும் அதிர்ச்சியடைந்து இருக்க, மணிமேகலையோ நடந்ததே அறியாமல் தன்னிடத்தில் முடங்கி இருக்க, வந்தியத்தேவனும் கீழே மயங்கி கிடந்ததை கவனித்தேன்.

ஆனால், பழுவேட்டையரோ என்னை கவனிக்காமல், நந்தினியை நோக்கி, "அடிபாதகி, உன் கொலைப் பழியை நிறைவேற்றி விட்டாயே..." என்று கத்திக் கொண்டே வந்தார்.

பழுவேட்டையரின் எதிர்பாராத விஜயத்தால், மேலும் குழப்பமடைந்த நந்தினி திணறி நிற்க, நான் சத்தமில்லாமல் நகன்று, வந்த வழியே திரும்பி ஓடி வந்து, காலமித்ராவில் ஏறி 'ரிட்டன்' பட்டனை தட்டி 2058க்கு திரும்பி வந்தேன்.

ஆதித்த கரிகாலரின் சூடான ரத்தம் வழிந்து கொண்டிருந்த கத்தியை, நேப்பியர் பாலத்திற்கு கீழே, கூவத்தில் வீசி எறிந்து விட்டு, காலமித்ராவை TTOவில் ஒப்படைத்து விட்டு, என் வீட்டுக்கு வந்தும், என்னுடைய நடுக்கம் மட்டும் குறையவே இல்லை.

ஹலோ! சரித்திர ஆய்வாளர்களே! கரிகாலரை கொன்ற கத்தியை கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என்று கூவத்தை கிளறி, என்னை மாட்டிவிட்டு விடாதீர்கள்.

- எழுதியவர் ஸ்ரீதேவி
எழுத்தாளினிளர் ஸ்ரீதேவியை நேரடியாக பாராட்ட/திட்ட :- 9842422928

Friday, November 23, 2007

மர்டர் மிஸ்ட்ரி - அத்தியாயம் இ

காலமித்ரா வந்து இறங்கிய இடத்தில், எண்ணிக்கையில் அடங்காத அளவிற்கு மக்கள் இருந்தனர். நூற்றுக்கணக்கில் அல்ல. ஆயிரக்கணக்கில் அல்ல. லட்சக்கணக்கில் இருந்தனர்! அனைவரும் சாதாரண மக்கள் அல்ல. போர் வீரர்கள்! ஆம். கையில் வாளும், கேடயமும் தாங்கி உக்கிரமாக போர் புரிந்து கொண்டிருந்தனர். குதிரைகளோடு குதிரைகளும், யானைகளோடு யானைகளும் கூட, சண்டை போட்டுக் கொண்டிருந்தன. இறந்த உடல்களோ மலை போல குவிந்து கிடக்க, ரத்த சேறுகளும், சதை துண்டுகளும் பல இடங்களில் சிதறி கிடந்தன.

லொக்கேஷன் ஸ்கிரீன் "திருப்புறம்பயம்" என்று காட்டியதை பார்த்ததும், எனக்கு அனைத்தும் விளங்கியது. அடடா! திருப்புறம்பயம் போரின் நடுவே அல்லவா வந்துள்ளேன்! காலமித்ரா காற்றைக் கிழித்துக் கொண்டு இக்களத்தில் தோன்றியதால், மிகப் பெரிய சலசலப்பு ஏற்பட்டது. அதனை விவரிக்கும் முன், இங்கு நடைபெற்று முடிந்த நிகழ்வுகளை விளக்குவது மிக அவசியம்.

லேட்டர் சோழாஸ் என்று அழைக்கப்படும் பிற்காலத்திய சோழர் பரம்பரையின், பிரசித்தி பெற்ற முதல் மன்னர் விஜயாலயச் சோழர். கிபி ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், வடக்கே பல்லவர்களும், தெற்கே பாண்டியர்களும் கோலோச்சி இருந்தனர். சோழ நாடு மிகச் சிறிய அரசாய் அப்போது இருந்தது.

பாண்டியர்களுக்கும், பல்லவர்களுக்கும், சிறு சிறு பிரச்சனைகளில் அடிக்கடி போர் மூள்வது வழக்கம். அதேபோல் இம்முறையும் , பாண்டிய மன்னர் வரகுண வர்மனுக்கும், பல்லவ மன்னர் அபராஜித வர்மனுக்கும், திருப்புறம்பயம் என்னும் கிராமத்தில் போர் நடந்தது. சோழர் குலம் தழைத்தோங்குவதற்கு, பாண்டியர்கள் தோல்வி அடைவது அவசியம் என்பதை உணர்ந்த விஜயாலயர், இந்தப் போரில் பல்லவர்களுக்கு உதவியாய் களம் இறங்கினார். விஜயாலயச் சோழரின் வீரத்தினால்தான் இப்போரில் பல்லவர்களுக்கு வெற்றி கிட்டியது என்பது வரலாறு. இப்போருக்கு பின்பு சோழர்கள் தங்கள் எல்லையை விரிவுபடுத்தி, மேலும் இரண்டு தலைமுறைக்குள் பெரிய சாம்ராஜ்யத்தையே தோற்றுவித்தனர். நானூறு வருடத்திற்கும் மேலாக நீடித்த இந்த சாம்ராஜ்யத்திற்கு அடித்தளமாய் அமைந்ததே திருப்புறம்பயம் போர் வெற்றிதான்.

இத்தகைய பிரசித்தி பெற்ற போரின் நடுவேதான் காலமித்ராவுடன் நான் வந்துள்ளேன். இரண்டு நாட்கள் முடிந்து, மூன்றாவது நாளாக, இப்போது போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. இரண்டு நாட்களாய் நடந்த போரில், பல்லவர்களுக்கும், சோழர்களுக்கும்தான் சேதம் அதிகமாக இருந்தது. பல்லவர்களின் பிரதான தளபதிகள் கடுமையாக தாக்கப்பட்டு பாசறையில் முடங்கிக் கிடந்தனர். வீரத்திலும், எண்ணிக்கையிலும் பாண்டியர்களின் கையே ஓங்கி இருந்தது. மூன்று நாள் போர் களைப்பே தெரியாமல், மீன் படையினர் பல்லவர்களை துவம்சம் செய்து கொண்டிருந்தனர். பாண்டிய நாட்டுத் தளபதிகளும், தங்களுடைய படை வீரர்களை கட்டுக் கோப்பாக நடத்திச் சென்று, சோழர்களை நொறுக்கிக் கொண்டிருந்தனர். எஞ்சியிருந்த சோழர்களும், பல்லவர்களும் தோல்வி முகத்தில், பின்வாங்க தயாராய் இருந்தனர். பாண்டியர்களுக்கு வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் இருந்த அந்தக் கடைசி நேரத்தில்தான், நானும் காலமித்ராவும் திருப்புறம்பயம் போர்க்களத்தில் திடீரென்று தோன்றினோம்.

என்னுடைய திடீர் வருகையால், போர்க்களத்தில் குழப்பமும், சலசலப்பும் தோன்றியது. இவன் பேயா, பிசாசா, தேவனா, மனிதனா என்று பயந்தனர். இது என்ன ரதம்! வித்தியாசமாக இருக்கிறதே! இவன் அணிந்திருக்கும் உடையும் வித்தியாசமாக இருக்கிறதே என்றெல்லாம் பாண்டியப் படையினர் என்னைப் பார்த்து குழம்பினர்! திகைத்தனர்! மிரண்டனர்!

சோழர்களுக்கு உதவ, கடவுளே மனித ரூபத்தில் வந்துள்ளார் என்கிற அளவில் அங்கு பீதி கிளம்பியது. பாண்டியப் படையினர் பின்வாங்கி, பதறி, சிதறி ஓடினர். பலவித வதந்திகளும், கற்பனைக் கதைகளும் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவ, மொத்த பாண்டிய படையினரும், தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடியது. எஞ்சி நின்ற சிற்சில வீரர்களையும், சோழப் படையினர் விரட்ட, நிமிட நேரத்திற்குள் நிலைமை தலைகீழானது. பாண்டியப் படைக்கு தோல்வி! சோழர் படைக்கு வெற்றி! ஆஹா! திருப்புறம்பயம் போர் வெற்றிக்கு, நானும் அல்லவா ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளேன்! நினைக்கவே திரில்லாக இருந்தது.

அதற்குள் சோழ வீரர்கள் என்னை சூழ, காலமித்ராவில் இருந்து இறங்கி, அதன் கதவை பூட்டினேன். காலமித்ரா லாக் ஆகி இருக்கும்வரை, அதற்கு யாராலும் சேதம் விளைவிக்க முடியாது. நான் இறங்கியதும், சுற்றியுள்ள வீரர்களில் தலைவன் போல் இருந்தவன் என்னை அணுகி, தங்கள் அரசர் என்னை அழைப்பதாய் கூறினான்.

விஜயாலயர் என்னை அழைக்கிறார். அவரை நேரில் சந்திக்கப் போகிறேன். போர் வெற்றிக் களிப்பில், எனக்கு பரிசு ஏதும் கொடுப்பாரோ? என்றெல்லாம் யோசித்துக் கொண்டே சோழர் பாசறைக்கு நடந்தேன்.

போரில் தொண்ணூற்றாறு விழுப்புண்களை விஜயாலயர் பெற்றார் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. தொண்ணூற்றி ஆறு இருக்குமா என்று தெரியவில்லை. எனினும் கடுமையான காயங்கள் பல அவர் உடலில் இருக்க, மருத்துவர்கள் குழு, அவருக்கு மருந்து போட்டுக் கொண்டிருந்தது.

கை கூப்பி விஜயாலரை வணங்கினேன். ஆனால், அவரோ என் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் கண்களில் கோபம் கொப்பளித்தது. வார்த்தைகளில் நெருப்பின் சீற்றம் இருந்தது.

"யாரடா நீ?" என்று கேட்டார்.

"ஒரு வழிப் போக்கன்" என்றேன்.

"வழிப் போக்கனுக்கு போர்க்களத்தில் என்ன வேலை?"

"வேடிக்கை பார்க்க வந்தேன்!"

"போர் என்ன வேடிக்கை விஷயமா? எங்களுடைய வாள் பலத்தையும், புஜபலத்தையும் காட்டி வெல்ல வேண்டிய போர் அல்லவா இது? நீ ஏதோ சித்து வேலைகள் செய்து, பயமுறுத்தி அவர்களை விரட்டி விட்டாயே? மாய மந்திரத்தில் வெற்றி பெற்றார்கள் சோழர்கள் என்ற அவச்சொல் வரக் காரணமாக இருந்து விட்டாயே! துரோகி!" என்று கோபத்தில் வெடித்தார் விஜயாலயர்.

எனக்கு உதறல் எடுத்தது. பயத்தில் நடுங்கினேன். வியர்வை ஆறாய் ஓட ஆரம்பித்தது.

"நீ எந்த நாடு?"

"இந்திய நாடு"

"அது எங்கே இருக்கிறது? பல்லவ நாட்டிற்கு அருகிலா?"

"இல்லை. இந்திய நாட்டிற்குள்தான் பல்லவ நாடும், சோழ நாடும் உள்ளது!" என்று நான் கூறியதும், விஜயாலயருக்கு கோபம் தலைக்கேறியது.

"இவன் நிச்சயம் வேற்று நாட்டு ஒற்றன்தான். மாறு வேடத்தில், நம் புகழை கெடுக்க வந்துள்ளான். மந்திரங்கள் கற்றவனாகவும் உள்ளான். இவனை சும்மா விடக்கூடாது. இந்த அதிகப்பிரசங்கியை சிரச்சேதம் செய்யுங்கள்!" என்று தன் வீரர்களுக்கு கட்டளையிட்டார்.

விஜயாலயச் சோழரின் ஆவேசக் கட்டளையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நான், "ஐயா, நான் ஏதோ உளறியதை, பெரிய மனது பண்ணி மன்னிக்க வேண்டும். நான் ஒரு சாதாரண பயணிதான். ஒற்றன் அல்ல. பல்லவத் தலைநகரம் காஞ்சி மாநகருக்கு அருகே உள்ள சென்னை என்னும் குக்கிராமத்தில்தான் நான் வசிக்கிறேன்! நான் செய்த பிழைகளை தயவு கூர்ந்து பொறுத்து அருள வேண்டும்!" என்று மன்னிப்பு கேட்டதும், விஜயாலயச் சோழர் சிறிது நேரம் சிந்தித்தார்.

தன் தொண்டையை செருமிக் கொண்டு, "நீ ஒற்றன் அல்ல என்று ஒப்புக் கொள்கிறேன். எனினும், மாய மந்திரத்தில் சோழன் வெற்றி பெற்றான் என்ற அவச்சொல் வருவதில் எனக்கு விருப்பமில்லை. உனக்கு ஒரு வாய்ப்புத் தருகிறேன். என்னுடைய வீரன் ஒருவனுடன் நீ கத்திச் சண்டை போட வேண்டும்! நீ வெற்றி பெற்றால் உன்னை உயிருடன் விட்டு விடுகிறேன். இல்லையேல், உன்னை வென்று, எங்கள் மீது வரும் அவச்சொல்லை போக்கி விடுகிறேன்." என்று உரத்த குரலில் முழக்கமிட்டு, வஜ்ரவேலன் என்ற ஒரு வீரனை அழைத்தார்.

என்னடா இது! பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் மாறி விட்டது. தண்டனையில் இருந்து தப்பிக்க வழி தேடினால், சிக்கல் அதிகமாகிக் கொண்டே வருகிறது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல, பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. எப்படியாவது இங்கிருந்து தப்பி, காலமித்ராவிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, என் கையில் கத்தி ஒன்று திணிக்கப்பட்டது.

என்னுடன் கத்திச் சண்டை போட வஜ்ரவேலன் தயாரானான். வேறு வழியில்லை. நானும் கத்தியைச் சுழற்றி அவனுடன் சண்டை போட ஆரம்பித்தேன். ஒண்டிக்கு ஒண்டி என்பதால் எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. நானும் சம்மர் கோர்ஸில் சிலம்பம், டேக்வாண்டோ, கராத்தே போன்றவை பயின்றுள்ளேன். எனவே என்னால் முடிந்தவரை நன்றாகவே சண்டை போட்டேன். எனினும் வஜ்ரவேலன்ம் வித்தை தெரிந்தவனாக இருந்ததால், அவன் கையே ஓங்கியிருக்க, நான் தற்காப்பு மட்டுமே பண்ணினேன். பழங்கால எம்ஜியார் பட... இல்லை, இல்லை. எதிர்காலத்தில் வர இருக்கும் எம்ஜியார் பட வாள் சண்டைகள் என் நினைவுக்கு வர, சிறிது ஆக்ரோஷமாக சண்டையிட்டேன்.

நேரம் ஆக ஆக என் வேகம் குறைய ஆரம்பித்தது. இயற்கையிலேயே அவன் வீரனாய் இருந்ததாலும், சுற்றிலும் வீரர்கள் அவனுக்கு சப்போர்ட் பண்ணியதாலும், என் கைகள் தளர ஆரம்பித்தன. வெகு விரைவில், என் கத்தியை தட்டிவிட்டு விட்டு என்னை கொன்று விடுவான் வஜ்ரவேலன், என்று தோன்றியது. ஏதேனும் செய்ய வேண்டும். இல்லையேல் கதை கந்தலாகி விடும். மின்னல் போல ஒரு ஐடியா திடீரென்று தோன்றியது.

"பண்டைய தமிழர்கள் புறமுதுகு காட்டி ஓடும் நபர்களை தாக்க மாட்டார்கள்!"

இந்த எண்ணம் தோன்றியதுமே, சண்டையிலிருந்து சட்டென்று விலகி, சுற்றியுள்ள வீரர்களை தள்ளி விட்டு, திரும்பி பார்க்காமல் ஓட ஆரம்பித்தேன். ஓட்டம் என்றால் ஓட்டம்! அப்படியொரு ஓட்டம்! பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடினேன். ஓடிச்சென்று காலமித்ராவில் ஏறி அமர்ந்து, அதனை ஆர்டினரி மோடிற்கு மாற்றி, வெகு தொலைவிற்கு ஓட்டிச் சென்றேன். சோழ வீரர்கள் சிறிது தூரம் என்னை பின் தொடர்ந்து வந்தனர். பின்பு நின்று விட்டனர்.

ஒரு முப்பது நாற்பது கி..மீ. தொலைவு சென்றதும், ஆள் அரவமற்ற ஓரிடத்தில் நின்று என்னை ஆசுவாசப்படுத்தினேன். ஏதோ, இந்த மட்டிற்கு பிரச்சனை முடிந்ததே! இனி இதேபோல் தவறு செய்யக் கூடாது, என்று எண்ணிக் கொண்டேன். முதலில் என் உடைகளை மாற்ற வேண்டும்.

ஏற்கனவே வாங்கி வந்திருந்த சோழர் கால உடையில் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டேன். விஜயாலயர் கத்தியை இடுப்பில் செருகிக் கொண்டேன். தலைப்பாகையை சுற்றிக் கொண்டேன். ஷூவை கழற்றி விட்டு, மரச் செருப்பிற்கு மாறினேன். தலையை வேறு மாதிரி வகிடு எடுத்து சீவினேன். இப்போது கண்ணாடியில் என்னைப் பார்த்தால் எனக்கே அடையாளம் தெரியவில்லை. அசல் சோழ நாட்டு பிரஜை போலவே மாறி இருந்தேன்.

சோழ நாட்டு மேப்பை விரித்து வைத்து, கடம்பூர் அரண்மனை எங்கு உள்ளது என்று சரியாக குறித்துக் கொண்டேன். காலமித்ராவை டைம் மோடிற்கு மாற்றி, சரியான தேதியை டைப் செய்தேன். லொக்கேஷனுக்கு கடம்பூர் டிகிரியை எண்டர் செய்தேன். மீண்டும் ஒருமுறை அனைத்து டேட்டாவையும் சரிபார்த்துக் கொண்டேன். ஓகேதான் என்று உறுதியானதும், படபடக்கும் நெஞ்சோடு 'கோ' பட்டனை அழுத்தினேன்.

விர்ரூரூம்...

- எழுதிக் கொண்டிருப்பவர் ஸ்ரீதேவி
எழுத்தாளினிளர் ஸ்ரீதேவியை நேரடியாக பாராட்ட/திட்ட :- 9842422928

Monday, November 19, 2007

மர்டர் மிஸ்ட்ரி - அத்தியாயம் ஆ


காலமித்ரா அமைதியாய் ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தது. அதன் ஸ்கிரீனில் "இலக்கை அடைந்து விட்டோம்" என்று டிஸ்பிளே மினுமினுத்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன். தென்னை மரங்களும், பாக்கு மரங்களும் அடர்த்தியாய் வளர்ந்திருந்த ஒரு தோப்பின் நடுவே, காலமித்ரா நிலையாய் நின்று கொண்டிருந்தது. தொலைவிலோ, பச்சை பசேல் வயல்வெளிகளும் வாழைத் தோட்டங்களும், கண்ணைக் கவரும் வண்ணம் செழிப்பாக இருந்தது.

"இது என்ன இடமாக இருக்கும்?" என்று எனக்குள் எண்ணிக் கொண்டே, காலமித்ரா லொக்கேஷன் ஸ்கிரீனை பார்க்க, அது "அரிசிலாற்றங்கரை" என்று காட்டிக் கொண்டிருந்தது.

காலமித்ரா கதவை திறந்து கொண்டு, சோழ மண்ணில் குதித்தேன். உடல் முழுவதும் சிலிர்ப்பு ஏற்பட்டது. தொலைவில் நீர் பிரவாக ஓசை கேட்க, அத்திசையில் நடந்தேன்.

"ஆஹா! என்னவொரு ரம்மியமான காட்சி!" காவிரியின் கிளை நதியான அரிசிலாறு, சலசலவென்று வளைந்து நெளிந்து முழு வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது.

நம்முடைய காலத்திலோ, காவேரித் தண்ணீரை கண்ணால் பார்த்து ஐந்து வருடத்திற்கு மேல் ஆகிறது. நடுவர் மன்றம் என்றார்கள், இந்திய இறையாண்மைக் குழு என்றார்கள், பஞ்சாயத்து மன்றம் என்றார்கள். ஒவ்வொருவரும் ஒரு டி.எம்.சி. அளவை குறிப்பிட்டு, அதை கர்நாடகா திறந்து விட வேண்டும் என்றார்கள். எனினும், கர்நாடகா அசைந்து கொடுக்க வேண்டுமே?! "இந்த காவேரி பிரச்சனை எப்போதுதான் தீருமோ?" என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, "வீல்" என்று ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது.

ஏதோ ஒரு சோழர் குலப் பெண் ஆபத்தில் சிக்கியிருக்க வேண்டும். ஆற்று நீர் இழுத்துக் கொண்டு செல்கிறதா? என்றெல்லாம் பலவித சிந்தனை செய்து கொண்டே சத்தம் கேட்ட திசையை நோக்கி வேகமாகச் சென்றேன். ஆற்றங்கரையை ஒட்டி ஓங்கி வளர்ந்த ஒரு அடர்த்தியான மரத்தின் கீழே, சில பெண்கள் இருப்பதை கண்டேன். அவர்கள் முன் ஒரு இளைஞன், குதிரையோடு நின்று கொண்டிருந்தான். அவன், அந்த பெண்களை கலாட்டா ஏதும் செய்கிறானா? இல்லை, வேறு ஏதும் பிரச்சனையா? நானும் ஒரு மரத்தின் பின்னே மறைந்து கொண்டு அவர்களை கவனித்தேன்.

இப்போது பெண்களோ சிரித்துக் கொண்டிருந்தார்கள். இளைஞனோ ஏமாற்றமடைந்த முகத்தோடு இருந்தான். அந்தப் பெண்கள்தான், இளைஞனை கலாட்டா செய்கிறார்களா? அவர்கள் உற்சாக மிகுதியால் கத்தியதுதான் எனக்கு அலறல் சத்தமாய் கேட்டதா?

மொத்தம் ஆறு பெண்கள் அங்கு இருந்தார்கள். அவர்களின் நடுவே, ஆடம்பர உடைகள், ஆபரணங்களுடன் இரு பெண்கள் இருந்தனர். அதில் ஒரு பெண் மிகுந்த அழகுடன் இருந்தாள். இவள்தான் சோழர் குல இளவரசி குந்தவை தேவியாக இருக்குமோ?

காதை தீட்டி கொண்டு, அவர்கள் பேசுவதை கேட்க ஆரம்பித்தேன். அரைகுறையாய் காதில் விழுந்த வார்த்தைகளை வைத்து, அவள் குந்தவை என்றும், மற்றொரு ஆடம்பர உடை பெண், கொடும்பாளூர் இளவரசி வானதி என்றும், மற்ற பெண்கள் இவர்களின் தோழிகள் என்றும் அறிந்து கொண்டேன்.

குந்தவையின் அழகு என்னை பிரமிக்க வைத்தது. பொன் போன்று ஜொலிக்கும் நிறம், வட்ட வடிவ முகம், அகன்ற மையிட்ட கண்கள், குறும்புச் சிரிப்பு கலந்த பவளச் செவ்வாய், நீண்ட கருங்கூந்தல், கம்பீரத் தோற்றம். ஆஹா! குந்தவையின் அழகை மணியனோ, பத்மவாசனோ முழுமையாக காண்பிக்கவில்லை!

அப்படியென்றால் எதிரே உள்ள இளைஞன்தான் வந்தியத்தேவன் போலும். இவன் தான் குந்தவையின் காதலனாகி கரம் பிடிக்கப் போகும் அதிர்ஷ்டசாலியா? வந்தியத்தேவனை பார்த்தேன். அப்படியொன்றும் இவன் பிரமாதமாக இல்லையே. என்னையும் அவனையும் கம்பேர் பண்ணி பார்த்தேன்.

நானோ முடியை ஏற்றி சீவி, கலர் ஷேடிங் பண்ணி, நடுவில் சிறு பின்னல் போட்டு, லேட்டஸ்ட் ஸ்டைலில் இருந்தேன். அவனோ, வகிடு எடுத்து, முடியை இறக்கிவிட்டு சீவியிருந்தான். சொட்டை இருக்குமோ என்னவோ! என்னிடம் ரே-பென் கூலிங்கிளாஸ் உள்ளது. அவனிடம் பிளாட்பாரம் கிளாஸ் கூட கிடையாது. இரண்டு காதிலும், பாட்டியின் பாம்படம் போல ஏதோ ஒன்றை தொங்க விட்டிருந்தான். பேகி பேண்ட், டீ-ஷர்ட் சகிதம் நான் இருக்க, அவனோ அரைப் பாவாடை போட்டிருந்தான்! என் இடுப்பில், "நேனோ ஸிம்ப்யூட்டர் கம் டீவீ அட்டாச்டு" லேட்டஸ்ட் செல்போன் தொங்கிக் கொண்டிருந்தது. அவன் இடுப்பிலோ, ஒரு பழங்கால வாள் தொங்கிக் கொண்டிருந்தது. இத்தாலியன் லெதர் பூட்ஸை நான் போட்டிருக்க, அவனோ மரத்தால் ஆன செருப்பு போன்ற ஒன்றை போட்டிருந்தான்.

மொத்தத்தில் அவன் டொங்கல் போல் இருந்தான். இவனைப் போயா குந்தவை லவ் பண்ணப் போகிறாள். எந்தவிதத்திலும் இவன் எனக்கு சமானம் கிடையாது. நானே குந்தவையை டிரை பண்ணலாமோ, என்று யோசித்தேன்.

அப்போது விசா ஆபீஸரின் எச்சரிக்கை ஞாபகம் வந்தது.

"நீங்கள் செல்லும் காலத்தின் சம்பவங்களிலோ, நபர்களிடமோ இடையூறு செய்யக் கூடாது..."

உடனே என் மனதை மாற்றிக் கொண்டேன். நாம் வந்த வேலையை மட்டும் கவனிப்போம். குந்தவை, வந்தியத்தேவனை லவ் பண்ணுகிறாள் என்றால், அது அவள் தலைவிதி. அதற்கு நாம் என்ன செய்வது? பாவம் குந்தவை!! என்று பரிதாபப்பட்டுக் கொண்டேன்.

அப்போது வந்தியத்தேவன் கோபமாய் குதிரையில் ஏறிச் சென்றான். ஏதோ ஊடல் போலும். அவன் கண்ணில் பட்டுவிடாமல், மரத்தின் பின்னே ஒளிந்து கொண்டேன்.

இவர்களுக்கிடையே நடந்த பேச்சுக்களை கவனித்ததில், இப்போதுதான் இருவரும் அறிமுகம் ஆகிறார்கள். இனி இவர்கள் நண்பர்களாகி, காதலர்களாகி, அருள்மொழியை வந்தியத்தேவன் சந்தித்து, அதித்த கரிகாலன் கடம்பூர் சென்று, கொல்லப்பட எப்படியும் மூன்று மாதங்கள் ஆகும் என்று நினைக்கிறேன். அதுவரை என்ன செய்வது?

எனக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, இந்த வந்தியத்தேவன் எங்கு செல்கிறான் என்று பின் தொடர்ந்து, ஏதும் சதி செய்கிறானா என்று பார்க்கலாம். எனக்கு என்னவோ இவன்தான் ஆதித்த கரிகாலரை கொன்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது! இளவரசரின் தம்பி அருள்மொழிவர்மனுடன் கூட்டு சதி செய்து, கொலை செய்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இல்லையேல், இவன் உத்தமச் சோழரின் கையாளாக இருக்கலாம். இவனை பின் தொடர்ந்து சென்றால் ஏதும் விஷயம் தெரியும். எனினும், ஆதித்த கரிகாலர் கொலை நடக்க இரண்டு மூன்று மாதங்கள் ஆகும். அதுவரை நானும் இங்கேயே இருந்தால், எனக்கு ஒதுக்கப்பட்ட டைம் முடிந்து விடும். நானோ, உரிய நேரத்தில் காலமித்ராவை திருப்பி ஒப்படைக்க வேண்டும்.

இரண்டாவது வழி, காலமித்ராவிலேயே மூன்று மாதம் எதிர்காலத்தில் சென்று, ஆதித்த கரிகாலர் கொலை செய்யப்பட்ட நாளுக்கு சென்று பார்ப்பது. நான் இரண்டாவது வழியையே தேர்ந்தெடுத்தேன்.

காலமித்ராவிற்கு அருகில் சென்று, கதவை திறந்து, ஏறி அமர்ந்தேன். அது இன்னும் டைம் மோடில்தான் இருந்தது. அதன் 'தேதி இன்புட்'டில் மாற்றம் செய்தேன். காலமித்ரா பயணிக்க தயாரானதும், 'கோ' பட்டனை அழுத்த என் கை நகர்ந்தது. அப்போதுதான் தேதியை கவனிக்க, செல்ல வேண்டிய வருடத்தை நூறு வருடம் முன்பாக, '869' என்று தவறுதலாக டைப் செய்துள்ளது தெரிய வர, அதனை திருத்த வேண்டும் என்று நினைப்பதற்குள், கை தன்னிச்சையாக 'கோ' பட்டனை அழுத்த...

விர்ரூரூம்...


- எழுதிக் கொண்டிருப்பவர் ஸ்ரீதேவி
எழுத்தாளினிளர் ஸ்ரீதேவியை நேரடியாக பாராட்ட/திட்ட :- 9842422928

Thursday, November 15, 2007

மர்டர் மிஸ்ட்ரி - அத்தியாயம் அ

2058ம் வருடம் நவம்பர் மாதம் 18ம் தேதி, நீண்ட க்யூவில் மூன்று மணி நேரமாய் நின்று கொண்டிருக்கும் நான்(பெயர் வேண்டாமே!), அலுத்துப் போயிருக்கும் போது, ஒரு வழியாய் என் முறை வர, கையில் உள்ள அப்ளிகேஷனை, டேபிளில் உட்கார்ந்திருந்த ஆபீஸரிடம் நீட்டினேன். அதனை வாங்கி அவர், கவனமாக வாசிக்கத் தொடங்கினார்.

ச்சே. இந்த க்யூவிற்கு மட்டும் எங்கும் குறைவில்லை. ரேஷனிற்கும், தண்ணீருக்கும்தான் க்யூ என்றால், இதற்குமா? காலத்தில் பயணம் என்பது சமீபகால கண்டுபிடிப்புதான் என்றாலும், இதற்கு விசா வாங்குவதற்கு, இத்தனை பேர் காத்திருக்கிறார்கள். கால இயந்திரம் - கதையிலும் கற்பனையிலும் மட்டுமே வலம் வந்து கொண்டிருந்த டைம் மிஷினை, இரண்டு வருடத்திற்கு முன்பு நெதர்லாந்து விஞ்ஞானி டேரல் ஹாக் கண்டுபிடித்ததும், உலகமே வியப்பில் ஆழ்ந்தது. இந்த மிஷின் மூலம் நாம் விரும்பும் எந்த காலத்திற்கும் பயணம் செய்யலாம். கால இயந்திரத்தில் நாம் செல்ல விரும்பும் தேதி மற்றும் 1000km சுற்றளவிற்குள் உள்ள இடம், இவற்றை கூறிவிட்டு, 'கோ' பட்டனை அழுத்தினால், உடனேயே, வினாடி நேரத்தில், அந்த காலத்தில், அந்த இடத்தில் இருப்போம்.

கிளியோபாட்ரா நிஜமாகவே அழகுதானா என்பதை நேரிலே பார்க்கலாம்! ஹிட்லரின் சிறுவயது வாழ்க்கையை அருகில் இருந்து பார்க்கலாம்! திப்பு சுல்தானின் வீரத்தை வீடியோவில் ஷூட் பண்ணலாம்! எதிர்கால விஞ்ஞான முன்னேற்றங்களை இன்றே பார்க்கலாம். இந்த இயந்திரத்தால் ஏற்பட்டுள்ள நன்மைகள் அளவிட முடியாதது.

எனினும் இதில் பயணம் செல்வதோ, ஓட்டுவதோ அந்தந்த நாடுகளின் அரசாங்க கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அப்ளிகேஷன், புரொசீஜர், மாமூல் என்றுதான் காரியத்தை சாதிக்க வேண்டியுள்ளது. டைம் மிஷினை ஓட்டுவதற்கு ஆறு மாதமாய் பயிற்சி எடுத்து, ஒரு வழியாய், போன வாரம்தான் T.T.O ஆபிஸில் லைசென்ஸ் பெற்றேன். லைசென்ஸ் பெறுவதற்கு ஃ போட வேண்டும். அதாவது, அவர்கள் குறிப்பிடும் இரண்டு எதிர்காலத்திற்கு சென்று அங்குள்ள T.T.O ஆபிஸில் கையெழுத்து மற்றும் ஆபீஸரின் புகைப்படம் முதலியவற்றை பெற்றுக் கொண்டு, நம்முடைய காலத்திற்கு திரும்பி வர வேண்டும். இவை எதிர்கால T.T.O ஆபீஸர்களின் பயோ டேட்டா ஃபைலுடன் ஒப்பிடப்பட்டு, சரியாக இருந்தால் மட்டுமே லைசென்ஸ் கிடைக்கும். வெற்றிகரமாக ஃ போட்டாலும், வழக்கமான மாமூல் கொடுத்துதான் ஆக வேண்டும்.

அடுத்து விசா பெற வேண்டும். அதற்கான அனுமதிக்கு தான், காலையிலேயிருந்து கால் கடுக்க க்யூவில் நின்று, இப்போது ஆபீஸரிடம் அப்ளிகேஷனை கொடுத்து உள்ளேன். விசாவிலும் மூன்று வகைகள் உள்ளன.

"எந்த காலத்திற்கு செல்கிறீர்கள் என்பது தெளிவாக இல்லையே" என்ற ஆபீஸரின் கனத்த குரல், என் சிந்தனை ஓட்டத்தை தடை செய்தது.

"சோழர்களின் காலம் என்று எழுதியுள்ளேனே சார்"

"சங்க காலத்திலும் சோழர்கள் உள்ளனர்! விஜயாலயர் காலமும் சோழர் காலம்தான்!"

"லேட்டர் சோழாஸ்" என்றேன்.

"காரணம்?"

"தஞ்சை கோயிலை கட்டிய ராஜராஜ சோழரையும், கடாரம் வென்ற ராஜேந்திரரையும், குலோத்துங்க சோழரையும் நேரில் பார்க்க யாருக்குதான் ஆசை இருக்காது?"

"டூரிஸ்ட் விசா கேட்டுள்ளீர்கள் இல்லையா?"

"ஆம்" என்றேன்.

விசாவிலும் மூன்று வகைகள் உள்ளன. டூரிஸ்ட், ஸ்டடி மற்றும் ரிசர்ச். பின்னது இரண்டும் பெறுவதற்கு, நிறைய கண்டிஷன்கள் உள்ளன. குறிப்பாக, எக்ஸ்டர்னல் கைடு என்ற பெயரில் ஒரு சோடாபுட்டி பேராசிரியரை உடன் அழைத்துச் செல்ல வேண்டும். இது என்னுடைய நோக்கத்திற்கு இடையூறாக இருக்கும். நான் சோழர்கள் காலத்திற்கு, பயணம் செய்வதற்கு முக்கிய காரணம் சுற்றுலா நோக்கம் அல்ல. சுந்தரச் சோழர் காலத்தின் பட்டத்து இளவரசர், அவரின் மூத்த மகன், ஆதித்த கரிகாலர், கடம்பூர் அரண்மனையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொலை செய்தது யார் என்று அறிந்து கொள்ள ஆசைப்பட்டுதான் சோழர் காலத்திற்கு செல்ல விரும்புகிறேன்.

ஆதித்த கரிகாலரின் மரணம் மர்மம் நிறைந்தது. அன்றிருந்த சிற்றரசர்களுக்குள் உட்பூசல் நிறையவே உண்டு. பழுவேட்டையர்கள், சம்புவரையர்கள் போன்றோர், ஆதித்த காரிகாலரை எதிர்த்து உட்கலகம் செய்தனர். மேலும் வீரபாண்டியன் மரணத்திற்கு பழிக்கு பழி வாங்க பாண்டிய நாட்டு படையினர் முயற்சித்து வந்தனர். எனவே ஆதித்த கரிகாலரை கொலை செய்தது பழுவேட்டையர்களா? சம்புவரையர்களா? பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளா? அல்லது சுந்தர சோழருக்கு அடுத்து பட்டத்திற்கு வந்த உத்தமச் சோழரா? இதை தெரிந்து கொள்வதே என்னுடைய உண்மையான நோக்கம்.

எனினும் இந்த காரணம் ஆராய்ச்சி வகையைச் சேர்ந்தது என்பதால், இதனை மறைத்து, டூரிஸ்ட் என்று குறிப்பிட்டுள்ளேன்.

"டூரிஸ்ட்டாக செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் அனைத்தும் தெரியுமல்லவா?" என்று என்னிடம் கேட்டார் ஆபீஸர்.

"நன்கு தெரியும் சார்"

"நீங்கள் அங்குள்ள நபர்களையோ, சம்பவங்களையோ இடையூறு செய்யக் கூடாது. வெறுமனே பார்வையாளராக மட்டும்தான் செல்கிறீர்கள் என்பதை எந்நேரமும் கவனத்தில் கொள்ள வேண்டும். O.K.?"

"O.K."

"வெல், உங்கள் விசாவை ஒன்பதாவது கவுண்டரில் பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய வெகிக்கிள் எண் 34. பெயர் காலமித்ரா. நீங்கள் செல்லும் காலம் கி.பி. 800ல் இருந்து 1300 வரை செட் செய்யப்பட்டுள்ளது. இன்றிலிருந்து மூன்று மாதம் உங்களுக்கு டைம். அதற்குள் நீங்கள் திரும்பி வந்து "காலமித்ரா"வை ஒப்படைக்க வேண்டும். நீங்கள் உங்கள் சுற்றுலா காலத்தில் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகளை மீண்டும் ஒருமுறை வாசித்துக் கொள்ளுங்கள். தவறு ஏதும் நிகழ்ந்தால், கடும் தண்டனை கிடைக்கும் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். யூ கேன் கோ நௌ", என்ற வழக்கமான எச்சரிக்கைகளை கூறிவிட்டு என்னை அனுப்பினார்.

விசாவை பெற்றுக் கொண்ட பின்பு, 34ம் எண்ணுடைய "காலமித்ரா" அருகில் சென்றேன். விசா கார்டை, காலமித்ரா கதவில் தேய்க்க, அதன் கதவு திறந்து கொண்டது. அதன் உள்ளே ஏறி அமர்ந்தேன்.

காலமித்ரா மிக அருமையான வாகனம். ஒரு நபர் மட்டுமே உட்கார வசதி உடையது என்றாலும், மிகவும் சொகுசான குஷன் மற்றும் லேட்டஸ்ட் வசதிகளுடன் இருந்தது. நான் பயிற்சி மேற்கொண்டதோ, ஒரு பழைய காயலான் கடை வாகனம்.

கால மித்ராவில் இரண்டு மோடு இருந்தது. ஒன்று ஆர்டினரி மோடு, மற்றொன்று டைம் மோடு. ஆர்டினரி மோடில், இது சாதாரண கார் போன்றே இருக்கும். டைம் மோடில் மட்டுமே காலத்தில் பயணிக்க முடியும்.

காலமித்ராவை ஆர்டினரி மோடில் வைத்துக் கொண்டு, நகரின் மிகப் பெரிய "T.T. மால்"க்கு சென்றேன். அங்குள்ள "ஆல் இன் ஒன் ஷப்" என்ற பிரம்மாண்ட கடைக்குள் நுழைந்தேன். இங்கு டைம் டிராவலுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும்.

பதப்படுத்தப்பட்ட உணவு கேன்கள், பிஸ்கட்டுகள் தண்ணீர் ம்தலியவை தாராளமாக வாங்கிக் கொண்டேன். முடிந்தவரை அந்த காலத்திய மனிதர்களை டிஸ்டர்ப் செய்யாமல் இருப்பதே நல்லது. மேலும் உடை செக்ஷனுக்கு சென்று சோழர் காலத்திய உடைகள் மூன்று செட் எடுத்துக் கொண்டேன். அன்றைய தமிழ் சொற்களுக்குரிய புத்தகம் ஒன்று வாங்கிக் கொண்டேன். மேலும் சிற்சில பொருட்களையும் வாங்கிக் கொண்டு, என் முதல் காலப் பயணத்திற்குத் தயாரானேன்.

காலமித்ராவில் ஏறி அமர்ந்து, கதவை சாத்தினேன். டைம் மோடிற்கு மாற்றியதும், காலமித்ரா காலத்தில் பயணிக்கத் தயாரானது. செல்ல வேண்டிய தேதியை கேட்க, 20.08.0969 என்று டைப் செய்தேன். அட்சரேகை, தீர்க்க ரேகை கேட்க, தஞ்சாவூருக்கு அருகில் உத்தேசமாய் டிகிரிகளை டைப் செய்தேன். மேலும் சில பட்டன்கள் மற்றும் கட்டளைகளை கூற, காலமித்ரா தயாராகி, "கோ பட்டனை அழுத்தவும்" என்று ஸ்கிரீனில் காண்பித்தது. இதயம் படபடக்க, முதுகு தண்டில் மெல்லிய சிலிர்ப்பு ஏற்பட, என் ஆள்காட்டி விரலை "கோ" பட்டனில் வைத்து அழுத்தினேன்.

விர்ரூரூம்...


- எழுதிக் கொண்டிருப்பவர் ஸ்ரீதேவி
எழுத்தாளினிளர் ஸ்ரீதேவியை நேரடியாக பாராட்ட/திட்ட :- 9842422928