Tuesday, October 07, 2008

முடிவு

'இன்னும் ஒரு நாள்தான். நாளை அது வந்துவிடும். அழிவு நிச்சயம் என்று எல்லோருக்கும் தெரிந்து விட்டது. என் மனைவி அவளது பழைய காதலுனுடன் கடைசி நாளை கழிக்கப் போய் விட்டாள். நானும்தான் எனது காதலியைத் தேடிப் போனேன். ஆனால் அவள் என்னை மறுத்துவிட்டாளே. இந்த பூமியின் கடைசி நாளில் எல்லோரும் அவரவர் விருப்பங்களை நிறைவேற்றி கொண்டிருக்க, எனது விருப்பம் மட்டும் நிராகரிக்கப்படுவது ஏன். அவளை பலாத்காரமாய்.. ஆனால் நான் அடைய நினைப்பது அதுவில்லையே. தற்கொலை செய்து கொள்ளவே தோன்றுகிறது. ஆனால் எப்படியும் நாளை அது வந்து அழிக்கத் தான் போகிறது. அப்பொழுதே செத்துக் கொள்ளலாம்.

சரியாக அது எங்கே வருகிறது என்று தெரிந்தால், அங்கே சென்று அழிவின் ஆரம்ப கணத்தை பரிபூரணமாக அனுபவிக்கும் பாக்கியமாவது கிடைக்கும். ஆனால் அது மிகச்சரியாக எங்கே வரும் என்பது யாருக்கும் தெரியவில்லை.'

தலையை தூக்கி வானைப் பார்த்தேன். அதன் ஒளி இப்பொழுது பிரகாசமாய் தெரிந்தது. 'எனது கணிப்பு சரியாக இருந்தால்... சரி அங்கேயே சென்று காத்திருப்போம். அது அங்கே வந்தால் இறக்கும் பொழுதாவது சிறிது அதிர்ஷ்டம் இருக்கட்டும்.'

X----X----X-----X


கூட்டம் கொஞ்சம் பெரியதாகத் தான் இருந்தது. கூட்டத்தின் மத்தியில் உயரமான இடத்திலிருந்து பிரசங்கம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது.

"இறைவனிடம் சரணடையுங்கள். இதுவே கடைசி வாய்ப்பு. அழிவு நெருங்கி விட்டது. உங்கள் பாவங்களை கழுவ இந்தக் கணமே மண்டியிட்டு இறைவனை பிரார்த்தியுங்கள். வலியில்லாத மரணமாவது வாய்க்கட்டும். எல்லோரும் ஒரே குரலாய் இறைவனின் நாமத்தை உரத்துக் கூறுங்கள். உங்கள் ஓசை அந்த இறைவனின் செவிகளை அடையட்டும்.

இது வரையில் உங்கள் இணையின் மீது காமவெறி கொண்டு பாய்ந்தீர்கள். மற்றவர்களின் இணைகளை மோகித்திருந்திருந்தீர்கள். அடுத்தவனுக்கு கிடைத்ததைக் கண்டு பொறாமை கொண்டீர்கள். அதனால் சில சமயம் அவனுடன் மோதி சண்டையிட்டும், பல சமயம் காலை வாரியும் அவமானப்படுத்தினீர்கள். பிற உயிர்களை கொன்று உங்கள் வயிற்றை நிரப்பிக் கொண்டீர்கள். நாளைக்கு மிச்சம் வைக்காமல் இந்த பூமியிலிருந்த எல்லாவற்றையும் மாசு செய்தீர்கள். இவையெல்லாம் பெரும் பாவங்கள் என்று இப்பொழுதாவது உணருங்கள்.

இந்த பாவங்களுக்கான தண்டைனையையே நாளை இறைவன் அனுப்பவிருக்கிறார். இப்பொழுதாவது திருந்துங்கள்!

இறைவன் சந்நதியில் மன்னிப்பு பெற கடைசி வாய்ப்பு!! எல்லோரும் வாருங்கள்! இறைவன் பெயரைச் சொல்லுங்கள்! இறைவனிடம் சரணடையுங்கள்!!

X----X----X-----X


"டீ! போதும் நிறுத்து. இதனாலெல்லாம் நாளை அழிவிலிருந்து நாம் பிழைக்கப் போவதில்லை."

"நான் சாவதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. எனக்கு, நீ சாகக் கூடாது. அதற்காக கடைசி நொடி வரை முயற்சிப்பேன்." தன் வேலையை தொடர்ந்தது.

"டீ! யோசித்துப் பார். எல்லாம் அழிந்த பின் நான் மட்டும் உயிரோடு இருந்து என்ன பயன்? நீயும் இல்லாமல் நான் மட்டும் எப்படி வாழ்வேன். மிச்சமிருக்கும் கொஞ்ச நேரத்தையும் வீணடிக்காதே. வா சந்தோஷமாக இருக்கலாம். சாகும் வரைக்கும் காதல் செய்வோம். இறுதியில் ஒன்றாய் அந்த மகிழ்ச்சியிலேயே இறந்து போவோம்."

"ரெக்ஸ்! வெறும் உடலின்பத்துக்காகவா நான் உன்னை காதலித்தேன் என்று நினைத்தாய்? எனக்கு நீ கடவுள் போன்றவள். உன்னை சாக விட மாட்டேன். உன்னை இறப்பு தீண்டக் கூடாது. அதற்காகத்தானே முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்."

"டீ! நீ என்னை உண்மையிலேயே விரும்புகிறாயா?"

"இது என்ன கேள்வி?"

"நீ என்னை உண்மையிலேயே விரும்பினாயானால், நான் சொல்வதைக் கேள். இந்த வீணான வேலையை நிறுத்து. வாழ்வின் கடைசி தருணங்களை உன்னுடன் கழிக்கும் இன்பத்தை எனக்குக் கொடு. இந்த கடைசித் தருணங்களில் உன்னை இழக்க நான் விரும்பவில்லை."

"ரெக்ஸ்!!" கண்களில் கண்ணீர்.

"டீஈஈ!!!"

X----X----X-----X



"நாளை உலகம் அழியப் போகிறதாமே?"

"அழிந்து விட்டுப் போகட்டுமே! அதனால் எனக்கு என்ன நஷ்டம்?
அந்தக் குட்டியை பார்த்தாயா?"

"பயமாயில்லையா?"

"ஸார்கோ! எனக்கு வயதாகிவிட்டது. இந்த பூமியில் போதுமானவரை அனுபவித்துவிட்டேன். செத்துப் போவதற்கு பயமில்லை. நான் மட்டுமா சாகப் போகிறேன். எல்லோரும்தானே சாகப் போகிறோம். இதற்கு எதற்கு பயப்பட வேண்டும்?
அந்தக் குட்டி நன்றாக இருக்கிறதல்லவா? அதை இங்கே அழைத்து வரட்டுமா?"

"இல்லை, வேண்டாம். உங்களுக்கு வயதாகிவிட்டது. ஆனால் எனக்கு ஆகவில்லை. எனக்கு மிகவும் பயமாயிருக்கிறது. இதுவரை நான் எதையும் அனுபவிக்கவில்லை."

"நீ பயப்படுவதால் அழிவு வராமல் போய் விடுமா? சிறிது காலமாகவே, நமது இனம் வேகமாக அழிந்து வருகிறது. நாளை முற்றும் அழிந்து விடும். அதை உன்னாலோ என்னாலோ தடுக்க முடியாது. இந்த வாழ்க்கையில் எதை நீ அனுபவிக்கவில்லை? பெண்ணா? அதிகாரமா? தினமும் மாமிசம்தானே சாப்பிடுகிறாய்? வாழ்க்கையை நீயும் அனுபவித்து விட்டாய் தோழனே!
அந்த குட்டியின் கால்களைப் பார். எவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது! அதன் தொடையைப் பார்! நன்றாக..."

"வாயிலிருந்து வழியும் நீரைத் துடைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது என்ன? உங்களுக்கு அந்தக் குட்டி வேண்டும். அவ்வளவுதானே? நான் அழைத்து வருகிறேன்."

"உனக்கு வேண்டாமா?"

"இல்லை. வேண்டாம். மனதுக்கு பிடிக்கவில்லை. நிறைய பாவம் செய்து விட்டோமோ என்ற குற்றவுணர்வு!"

"ஸார்கோ! பாவம் என்றால் என்ன? அதை உன்னால் விவரிக்க முடியுமா? யோசித்துப் பார். நமக்கு நல்லதாகப் படுவது இன்னொரு உயிருக்கு பெரும் பாவமாகப் படுகிறது. அதே போல் அதற்கு நல்ல விஷயமாகத் தெரிவது நமக்கு பாவமாகத் தெரிகிறது. சுருக்கமாகச் சொன்னால், நமக்கு பாதிப்பென்றால் அது பெரும் பாவம். அப்படியில்லையென்றால் அது நல்ல விஷயம். நாளை அழிவு வரப்போவது கூட, அந்த அழிவு செய்யும் பெரும் பாவம்தான்" சிரிப்புடன்.

"இந்த நேரத்தில் கூட உங்களால் எப்படித்தான் சிரிக்க முடிகிறதோ?!"

"சரி! அதெல்லாம் இருக்கட்டும். அந்தக் குட்டியை இங்கே அழைத்து வருகிறாயா, இல்லையா?

X----X----X-----X


பூமியின் காற்று மண்டலத்தில், விநாடிக்கு பதினான்கு மைல் வேகத்தில், எட்டு மைல் விட்டமுடைய, இரிடியம் செறிந்த, அந்த விண்கல் நுழைந்தது.

டினோஸார்கள் சிதறி ஓட அரம்பித்தன.