Friday, November 23, 2007

மர்டர் மிஸ்ட்ரி - அத்தியாயம் இ

காலமித்ரா வந்து இறங்கிய இடத்தில், எண்ணிக்கையில் அடங்காத அளவிற்கு மக்கள் இருந்தனர். நூற்றுக்கணக்கில் அல்ல. ஆயிரக்கணக்கில் அல்ல. லட்சக்கணக்கில் இருந்தனர்! அனைவரும் சாதாரண மக்கள் அல்ல. போர் வீரர்கள்! ஆம். கையில் வாளும், கேடயமும் தாங்கி உக்கிரமாக போர் புரிந்து கொண்டிருந்தனர். குதிரைகளோடு குதிரைகளும், யானைகளோடு யானைகளும் கூட, சண்டை போட்டுக் கொண்டிருந்தன. இறந்த உடல்களோ மலை போல குவிந்து கிடக்க, ரத்த சேறுகளும், சதை துண்டுகளும் பல இடங்களில் சிதறி கிடந்தன.

லொக்கேஷன் ஸ்கிரீன் "திருப்புறம்பயம்" என்று காட்டியதை பார்த்ததும், எனக்கு அனைத்தும் விளங்கியது. அடடா! திருப்புறம்பயம் போரின் நடுவே அல்லவா வந்துள்ளேன்! காலமித்ரா காற்றைக் கிழித்துக் கொண்டு இக்களத்தில் தோன்றியதால், மிகப் பெரிய சலசலப்பு ஏற்பட்டது. அதனை விவரிக்கும் முன், இங்கு நடைபெற்று முடிந்த நிகழ்வுகளை விளக்குவது மிக அவசியம்.

லேட்டர் சோழாஸ் என்று அழைக்கப்படும் பிற்காலத்திய சோழர் பரம்பரையின், பிரசித்தி பெற்ற முதல் மன்னர் விஜயாலயச் சோழர். கிபி ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், வடக்கே பல்லவர்களும், தெற்கே பாண்டியர்களும் கோலோச்சி இருந்தனர். சோழ நாடு மிகச் சிறிய அரசாய் அப்போது இருந்தது.

பாண்டியர்களுக்கும், பல்லவர்களுக்கும், சிறு சிறு பிரச்சனைகளில் அடிக்கடி போர் மூள்வது வழக்கம். அதேபோல் இம்முறையும் , பாண்டிய மன்னர் வரகுண வர்மனுக்கும், பல்லவ மன்னர் அபராஜித வர்மனுக்கும், திருப்புறம்பயம் என்னும் கிராமத்தில் போர் நடந்தது. சோழர் குலம் தழைத்தோங்குவதற்கு, பாண்டியர்கள் தோல்வி அடைவது அவசியம் என்பதை உணர்ந்த விஜயாலயர், இந்தப் போரில் பல்லவர்களுக்கு உதவியாய் களம் இறங்கினார். விஜயாலயச் சோழரின் வீரத்தினால்தான் இப்போரில் பல்லவர்களுக்கு வெற்றி கிட்டியது என்பது வரலாறு. இப்போருக்கு பின்பு சோழர்கள் தங்கள் எல்லையை விரிவுபடுத்தி, மேலும் இரண்டு தலைமுறைக்குள் பெரிய சாம்ராஜ்யத்தையே தோற்றுவித்தனர். நானூறு வருடத்திற்கும் மேலாக நீடித்த இந்த சாம்ராஜ்யத்திற்கு அடித்தளமாய் அமைந்ததே திருப்புறம்பயம் போர் வெற்றிதான்.

இத்தகைய பிரசித்தி பெற்ற போரின் நடுவேதான் காலமித்ராவுடன் நான் வந்துள்ளேன். இரண்டு நாட்கள் முடிந்து, மூன்றாவது நாளாக, இப்போது போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. இரண்டு நாட்களாய் நடந்த போரில், பல்லவர்களுக்கும், சோழர்களுக்கும்தான் சேதம் அதிகமாக இருந்தது. பல்லவர்களின் பிரதான தளபதிகள் கடுமையாக தாக்கப்பட்டு பாசறையில் முடங்கிக் கிடந்தனர். வீரத்திலும், எண்ணிக்கையிலும் பாண்டியர்களின் கையே ஓங்கி இருந்தது. மூன்று நாள் போர் களைப்பே தெரியாமல், மீன் படையினர் பல்லவர்களை துவம்சம் செய்து கொண்டிருந்தனர். பாண்டிய நாட்டுத் தளபதிகளும், தங்களுடைய படை வீரர்களை கட்டுக் கோப்பாக நடத்திச் சென்று, சோழர்களை நொறுக்கிக் கொண்டிருந்தனர். எஞ்சியிருந்த சோழர்களும், பல்லவர்களும் தோல்வி முகத்தில், பின்வாங்க தயாராய் இருந்தனர். பாண்டியர்களுக்கு வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் இருந்த அந்தக் கடைசி நேரத்தில்தான், நானும் காலமித்ராவும் திருப்புறம்பயம் போர்க்களத்தில் திடீரென்று தோன்றினோம்.

என்னுடைய திடீர் வருகையால், போர்க்களத்தில் குழப்பமும், சலசலப்பும் தோன்றியது. இவன் பேயா, பிசாசா, தேவனா, மனிதனா என்று பயந்தனர். இது என்ன ரதம்! வித்தியாசமாக இருக்கிறதே! இவன் அணிந்திருக்கும் உடையும் வித்தியாசமாக இருக்கிறதே என்றெல்லாம் பாண்டியப் படையினர் என்னைப் பார்த்து குழம்பினர்! திகைத்தனர்! மிரண்டனர்!

சோழர்களுக்கு உதவ, கடவுளே மனித ரூபத்தில் வந்துள்ளார் என்கிற அளவில் அங்கு பீதி கிளம்பியது. பாண்டியப் படையினர் பின்வாங்கி, பதறி, சிதறி ஓடினர். பலவித வதந்திகளும், கற்பனைக் கதைகளும் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவ, மொத்த பாண்டிய படையினரும், தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடியது. எஞ்சி நின்ற சிற்சில வீரர்களையும், சோழப் படையினர் விரட்ட, நிமிட நேரத்திற்குள் நிலைமை தலைகீழானது. பாண்டியப் படைக்கு தோல்வி! சோழர் படைக்கு வெற்றி! ஆஹா! திருப்புறம்பயம் போர் வெற்றிக்கு, நானும் அல்லவா ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளேன்! நினைக்கவே திரில்லாக இருந்தது.

அதற்குள் சோழ வீரர்கள் என்னை சூழ, காலமித்ராவில் இருந்து இறங்கி, அதன் கதவை பூட்டினேன். காலமித்ரா லாக் ஆகி இருக்கும்வரை, அதற்கு யாராலும் சேதம் விளைவிக்க முடியாது. நான் இறங்கியதும், சுற்றியுள்ள வீரர்களில் தலைவன் போல் இருந்தவன் என்னை அணுகி, தங்கள் அரசர் என்னை அழைப்பதாய் கூறினான்.

விஜயாலயர் என்னை அழைக்கிறார். அவரை நேரில் சந்திக்கப் போகிறேன். போர் வெற்றிக் களிப்பில், எனக்கு பரிசு ஏதும் கொடுப்பாரோ? என்றெல்லாம் யோசித்துக் கொண்டே சோழர் பாசறைக்கு நடந்தேன்.

போரில் தொண்ணூற்றாறு விழுப்புண்களை விஜயாலயர் பெற்றார் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. தொண்ணூற்றி ஆறு இருக்குமா என்று தெரியவில்லை. எனினும் கடுமையான காயங்கள் பல அவர் உடலில் இருக்க, மருத்துவர்கள் குழு, அவருக்கு மருந்து போட்டுக் கொண்டிருந்தது.

கை கூப்பி விஜயாலரை வணங்கினேன். ஆனால், அவரோ என் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் கண்களில் கோபம் கொப்பளித்தது. வார்த்தைகளில் நெருப்பின் சீற்றம் இருந்தது.

"யாரடா நீ?" என்று கேட்டார்.

"ஒரு வழிப் போக்கன்" என்றேன்.

"வழிப் போக்கனுக்கு போர்க்களத்தில் என்ன வேலை?"

"வேடிக்கை பார்க்க வந்தேன்!"

"போர் என்ன வேடிக்கை விஷயமா? எங்களுடைய வாள் பலத்தையும், புஜபலத்தையும் காட்டி வெல்ல வேண்டிய போர் அல்லவா இது? நீ ஏதோ சித்து வேலைகள் செய்து, பயமுறுத்தி அவர்களை விரட்டி விட்டாயே? மாய மந்திரத்தில் வெற்றி பெற்றார்கள் சோழர்கள் என்ற அவச்சொல் வரக் காரணமாக இருந்து விட்டாயே! துரோகி!" என்று கோபத்தில் வெடித்தார் விஜயாலயர்.

எனக்கு உதறல் எடுத்தது. பயத்தில் நடுங்கினேன். வியர்வை ஆறாய் ஓட ஆரம்பித்தது.

"நீ எந்த நாடு?"

"இந்திய நாடு"

"அது எங்கே இருக்கிறது? பல்லவ நாட்டிற்கு அருகிலா?"

"இல்லை. இந்திய நாட்டிற்குள்தான் பல்லவ நாடும், சோழ நாடும் உள்ளது!" என்று நான் கூறியதும், விஜயாலயருக்கு கோபம் தலைக்கேறியது.

"இவன் நிச்சயம் வேற்று நாட்டு ஒற்றன்தான். மாறு வேடத்தில், நம் புகழை கெடுக்க வந்துள்ளான். மந்திரங்கள் கற்றவனாகவும் உள்ளான். இவனை சும்மா விடக்கூடாது. இந்த அதிகப்பிரசங்கியை சிரச்சேதம் செய்யுங்கள்!" என்று தன் வீரர்களுக்கு கட்டளையிட்டார்.

விஜயாலயச் சோழரின் ஆவேசக் கட்டளையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நான், "ஐயா, நான் ஏதோ உளறியதை, பெரிய மனது பண்ணி மன்னிக்க வேண்டும். நான் ஒரு சாதாரண பயணிதான். ஒற்றன் அல்ல. பல்லவத் தலைநகரம் காஞ்சி மாநகருக்கு அருகே உள்ள சென்னை என்னும் குக்கிராமத்தில்தான் நான் வசிக்கிறேன்! நான் செய்த பிழைகளை தயவு கூர்ந்து பொறுத்து அருள வேண்டும்!" என்று மன்னிப்பு கேட்டதும், விஜயாலயச் சோழர் சிறிது நேரம் சிந்தித்தார்.

தன் தொண்டையை செருமிக் கொண்டு, "நீ ஒற்றன் அல்ல என்று ஒப்புக் கொள்கிறேன். எனினும், மாய மந்திரத்தில் சோழன் வெற்றி பெற்றான் என்ற அவச்சொல் வருவதில் எனக்கு விருப்பமில்லை. உனக்கு ஒரு வாய்ப்புத் தருகிறேன். என்னுடைய வீரன் ஒருவனுடன் நீ கத்திச் சண்டை போட வேண்டும்! நீ வெற்றி பெற்றால் உன்னை உயிருடன் விட்டு விடுகிறேன். இல்லையேல், உன்னை வென்று, எங்கள் மீது வரும் அவச்சொல்லை போக்கி விடுகிறேன்." என்று உரத்த குரலில் முழக்கமிட்டு, வஜ்ரவேலன் என்ற ஒரு வீரனை அழைத்தார்.

என்னடா இது! பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் மாறி விட்டது. தண்டனையில் இருந்து தப்பிக்க வழி தேடினால், சிக்கல் அதிகமாகிக் கொண்டே வருகிறது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல, பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. எப்படியாவது இங்கிருந்து தப்பி, காலமித்ராவிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, என் கையில் கத்தி ஒன்று திணிக்கப்பட்டது.

என்னுடன் கத்திச் சண்டை போட வஜ்ரவேலன் தயாரானான். வேறு வழியில்லை. நானும் கத்தியைச் சுழற்றி அவனுடன் சண்டை போட ஆரம்பித்தேன். ஒண்டிக்கு ஒண்டி என்பதால் எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. நானும் சம்மர் கோர்ஸில் சிலம்பம், டேக்வாண்டோ, கராத்தே போன்றவை பயின்றுள்ளேன். எனவே என்னால் முடிந்தவரை நன்றாகவே சண்டை போட்டேன். எனினும் வஜ்ரவேலன்ம் வித்தை தெரிந்தவனாக இருந்ததால், அவன் கையே ஓங்கியிருக்க, நான் தற்காப்பு மட்டுமே பண்ணினேன். பழங்கால எம்ஜியார் பட... இல்லை, இல்லை. எதிர்காலத்தில் வர இருக்கும் எம்ஜியார் பட வாள் சண்டைகள் என் நினைவுக்கு வர, சிறிது ஆக்ரோஷமாக சண்டையிட்டேன்.

நேரம் ஆக ஆக என் வேகம் குறைய ஆரம்பித்தது. இயற்கையிலேயே அவன் வீரனாய் இருந்ததாலும், சுற்றிலும் வீரர்கள் அவனுக்கு சப்போர்ட் பண்ணியதாலும், என் கைகள் தளர ஆரம்பித்தன. வெகு விரைவில், என் கத்தியை தட்டிவிட்டு விட்டு என்னை கொன்று விடுவான் வஜ்ரவேலன், என்று தோன்றியது. ஏதேனும் செய்ய வேண்டும். இல்லையேல் கதை கந்தலாகி விடும். மின்னல் போல ஒரு ஐடியா திடீரென்று தோன்றியது.

"பண்டைய தமிழர்கள் புறமுதுகு காட்டி ஓடும் நபர்களை தாக்க மாட்டார்கள்!"

இந்த எண்ணம் தோன்றியதுமே, சண்டையிலிருந்து சட்டென்று விலகி, சுற்றியுள்ள வீரர்களை தள்ளி விட்டு, திரும்பி பார்க்காமல் ஓட ஆரம்பித்தேன். ஓட்டம் என்றால் ஓட்டம்! அப்படியொரு ஓட்டம்! பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடினேன். ஓடிச்சென்று காலமித்ராவில் ஏறி அமர்ந்து, அதனை ஆர்டினரி மோடிற்கு மாற்றி, வெகு தொலைவிற்கு ஓட்டிச் சென்றேன். சோழ வீரர்கள் சிறிது தூரம் என்னை பின் தொடர்ந்து வந்தனர். பின்பு நின்று விட்டனர்.

ஒரு முப்பது நாற்பது கி..மீ. தொலைவு சென்றதும், ஆள் அரவமற்ற ஓரிடத்தில் நின்று என்னை ஆசுவாசப்படுத்தினேன். ஏதோ, இந்த மட்டிற்கு பிரச்சனை முடிந்ததே! இனி இதேபோல் தவறு செய்யக் கூடாது, என்று எண்ணிக் கொண்டேன். முதலில் என் உடைகளை மாற்ற வேண்டும்.

ஏற்கனவே வாங்கி வந்திருந்த சோழர் கால உடையில் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டேன். விஜயாலயர் கத்தியை இடுப்பில் செருகிக் கொண்டேன். தலைப்பாகையை சுற்றிக் கொண்டேன். ஷூவை கழற்றி விட்டு, மரச் செருப்பிற்கு மாறினேன். தலையை வேறு மாதிரி வகிடு எடுத்து சீவினேன். இப்போது கண்ணாடியில் என்னைப் பார்த்தால் எனக்கே அடையாளம் தெரியவில்லை. அசல் சோழ நாட்டு பிரஜை போலவே மாறி இருந்தேன்.

சோழ நாட்டு மேப்பை விரித்து வைத்து, கடம்பூர் அரண்மனை எங்கு உள்ளது என்று சரியாக குறித்துக் கொண்டேன். காலமித்ராவை டைம் மோடிற்கு மாற்றி, சரியான தேதியை டைப் செய்தேன். லொக்கேஷனுக்கு கடம்பூர் டிகிரியை எண்டர் செய்தேன். மீண்டும் ஒருமுறை அனைத்து டேட்டாவையும் சரிபார்த்துக் கொண்டேன். ஓகேதான் என்று உறுதியானதும், படபடக்கும் நெஞ்சோடு 'கோ' பட்டனை அழுத்தினேன்.

விர்ரூரூம்...

- எழுதிக் கொண்டிருப்பவர் ஸ்ரீதேவி
எழுத்தாளினிளர் ஸ்ரீதேவியை நேரடியாக பாராட்ட/திட்ட :- 9842422928

5 comments:

காஞ்சனை said...

கதை விறுவிறுப்பா போய்ட்டு இருக்கு. பண்டைய வரலாற்றோடு சம்மந்தப்படுத்தி எழுதுவதால் நிறைய தெரிஞ்சுக்கணும்னு ஆவலா இருக்கு. தொடர்ந்து பதிவிடுங்கள். எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள். :)

- சகாரா.

காஞ்சனை said...

கதைக்கு சற்றும் தொடர்பில்லாத ஒரு பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். :(((

//பூமிக் கொரு
சூரியன் போதவில்லை
நிலவையே எரிக்கலாம்
இப்போதைக்கு//

ஏங்க இப்படி. இப்ப இருக்கற வெயிலயே தாங்க முடியல. இதுல நிலாவ வேற எரிக்கவா? அப்பப்பா???

இதுல நீங்க சொல்ல வந்தது என்னங்க? கொஞ்சம் தெளிவுபடுத்த முடியுமா?

- சகாரா.

யோசிப்பவர் said...

சமீபத்தில் ஆர்தர் கிளார்க்கின் "Sands of Mars" என்ற கதை படித்தேன். அதனுடைய ஒரு சின்ன தாக்கம்தான் இந்த சைக்கூ(?!?). அந்தக் கதையில் மார்ஸுக்கு சூரிய வெப்பம் போதாமல்(இன்னும் ஒரு முக்கிய காரணத்துக்காகவும்), மார்ஸின் பெரிய நிலவான ஃபோபோஸை எரிக்கிறார்கள்.

காஞ்சனை said...

விளக்கம் தந்ததற்கு நன்றி. :)

- சகாரா.

gundumama said...

அபாரம்! நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல வரலாறு சம்பந்தமான கதை. அற்புதமான எழுதொவியம். வளர்க நின் பணி. வாழ்த்துக்கள்!