Friday, August 30, 2013

Y4K

1. ரேகாவின் புரோப்போஸல்

”விதி... விதி... எல்லாம் என் தலைவிதி! பெண்களோட பேச்ச கேட்கக் கூடாதுன்னு நானே நிறைய பேருக்கு அட்வைஸ் பண்ணியிருக்கிறேன். அப்படி இருந்தும் இந்த முட்டாள் ரேகா பேச்சக் கேட்டு, இப்படி Y4K பிரச்சனையில் மாட்டிக் கொண்டேனே.. இந்த ராட்சசிங்க என்ன பண்ணப் போறாங்களோ? நல்லவேளை! இந்த ரேகாவும் என்னோட சேர்ந்து மாட்டிக்கிட்டா! ஏதோ ஒருத்தனா இருந்து கஸ்டப்படுறத விட ரெண்டு பேரா இருப்பது பெட்டர்தானே...! சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்களை நம்பாதேன்னு சும்மாவா சொல்றாங்க...!”

என்னடா இவன் திருவிளையாடல் தருமி போல புலம்புகிறானேன்னு யோசிக்கிறீர்களா? என்னோட கதையை சொல்கிறேன். அப்பத்தான் என்னோட புலம்பல் நியாயமானதுன்னு உங்களுக்குப் புரியும்.

என் பேரு சதீஷ். 2056-2060 வருடத்தில் பி.எஸ்.ஜி.யில் கம்யூனிகேஷன் என்ஜினியரிங் படித்து முடித்த உடனேயே கேம்பஸ் இண்டர்வியூவில், எனக்கு பிக்கோ ஸாஃப்ட் கம்பெனியின் சென்னை யூனிட்டில் வேலையும் கிடைத்தது. மூன்று வருடத்தில் சீனியர் எக்ஸிகியூட்டிவ் என்ஜினியராக புரோமோஷன்ம் ஆகி விட்டேன்.

தினமும் ஆபிஸுக்கு வந்து, வீட்டிற்கும், நண்பர்களுக்கும் போன் பேசிவிட்டு, பெர்சனல் இ-மெயில்களை செக் பண்ணி, ரிப்ளை அனுப்பிவிட்டு, சொந்த பிளாகை அப்டேட் பண்ணிவிட்டு, கிடைக்கும் கேப்பில் மட்டும் ஆபீஸ் வேலைகளை பார்க்கும் ஒரு சராசரி ஐ.டி. என்ஜினியராகவே என் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.

அன்றைய தினம், 2063ம் வருடம் ஜூன் மாதம் 18, தேதி, மறக்க முடியாத தினம்; சனி என்னை பிடித்த தினம்! நான் என்னுடைய அலுவலக அறைக்குள் உட்கார்ந்து கொண்டு, பிஸியாக ஒரு மாடல் தயாரிப்பில் இருந்தேன். பக்கத்து வீட்டு எட்டாம் வகுப்பு பானு, தன் ஸ்கூல் சயின்ஸ் எக்ஸிபிஷனில், உயிரியல் பாடத்திற்கு வைப்பதற்காக, ஒரு பரிணாம வளர்ச்சி மாடல் தயாரிக்க சொல்லியிருந்தாள். ஆகவே, என்னுடைய ஆபீஸ் வேலையை ஒதுக்கி விட்டு, டேபிளில் இறைந்து கிடந்த அமீபா, மீன், தவளை, டைனசர், பறவைகள், விலங்குகள் டம்மிகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன். அப்போதுதான் என் அறைக்குள் ரேகா நுழைந்தாள்.

ரேகா - என் கனவுக் கன்னி! காதல் தேவதை! அழகும் அறிவும் ஒரு சேர இருக்கும் அதிசய பெண்களில் ஒருத்தி! டைரியில் அவளைப் பற்றி எழுதாத நாட்களே கிடையாது. யெஸ்! நான் அவளைக் காதலிக்கிறேன்.

”கண்ணைக் காட்டாதே கண்ணே
மன்மதன் உன்னைக் காணின்
கயல்விழி வில்லாகி விடும் - அவன்
மலர் வில்லுக்குப் பதில்”
என்று அவளைப் பற்றி கவிதையெல்லாம் எழுதி உள்ளேன்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஆபீஸ் விட்டு திரும்பும்போது, பிட்சா கார்னரில் என் காதலை அவளிடம் கூறினேன். ஆனால், இன்றுவரை, அவள் அதற்கு பதில் எதுவும் சொல்லாமல் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தாள். அவளும் என்னை லவ் பண்ணுகிறாள் என்று எனக்கு நன்றாகத் தெரியும் என்றாலும், அதை அவள் வாய்மொழியாய் சொல்ல மாட்டேன்கிறாள். ஆண்களை அலைய வைப்பதில், பெண்களுக்கு அப்படியென்ன அலாதிப் பிரியமோ? அவளிடம் இது பற்றி கேட்டாலே, “சதீஷ், காதல், கல்யாணம், இதைப் பற்றியெல்லாம் நான் யோசிக்கவே இல்லை. ஐ வாண்டு டு அச்சீவ் சம்திங். ஏதாவது சாதிக்க வேண்டும். புகழ் பெற வேண்டும். அதற்கப்புறம்தான் மற்ற விஷயங்கள் எல்லாம்”, என்று கூறி என் வாயை அடைத்து விடுகிறாள்.

அவள் ஒரு புத்திசாலிப் பெண்தான். புதிய கண்டுபிடிப்புக்கள் செய்யக் கூடிய திறமை உடையவள்தான். சந்தேகமில்லை. ஆனால், பொதுவாகவே பெண்கள் அனைவரும் புத்திசாலிகள் என்ற தவறான கருத்தை உடையவள். தவறான என்ற வார்த்தையை அடிக்கோடு இடுங்கள். என்னைப் பொறுத்தவரை பெண்கள், எந்த செயலையும் முன்யோசனையின்றி செய்பவர்கள் என்ற கருத்தை உடையவன். ஆகவே, அவர்கள் சொல்லை நான் காது கொடுத்தே கேட்பதில்லை. ஆனால், ரேகா மட்டும் இதில் விதிவிலக்கு. அவள் வார்த்தை எனக்கு வேதவாக்கு. காதலியாயிற்றே!

ஒருநாள் அவள் என்னிடம், “நீயும் ஏதாவது சாதனை பண்ணப் பாரேன், சதீஷ்.” என்றாள். அதிலிருந்து, ரிசல்ட் கிடைக்காத என்னுடைய காலேஜ் புராஜக்டான டி.சி.யில் கவனம் செலுத்தினேன். அதில் சிறிதளவு முன்னேற்றமும் ஏற்பட்டது.

வெல், நான் காலேஜ் படித்த சமயங்களில் என் சக நண்பர்கள், தங்களின் புராஜக்டில், பல தில்லுமுல்லு வேலைகள் செய்தார்கள். இது டைம் மிஷின் யுகம் என்று உங்களுக்குத் தெரியும். கால இயந்திரத்தை எல்லாருமே சர்வ சாதாரணமாய் உபயோகிக்கும் காலம் இது. இறந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் தங்கள் இஷ்டப்படி, ஒரு கட்டுப்பாடு இல்லாமல், எல்லாரும் சென்று வந்து கொண்டிருந்தனர்.

கல்லூரி மாணவர்கள், டைம் மிஷினை தங்களுக்கு சாதகமாய் உபயோகித்தார்கள். அதன் மூலம், எதிர்காலத்திற்கு சென்று, அங்குள்ள லேட்டஸ்ட் தொழில் நுட்பங்களை அறிந்து கொண்டு, திரும்பி வந்து, அதை தங்களுடைய சொந்த புராஜக்டாக சமர்பித்தனர். இதனால் பல நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டன. குளறுபடிகள் உருவாயின. இவ்வாறு செய்யக்கூடாது என்று கல்வித்துறை எச்சரிக்கை விடுத்தும், அதனால் பயனில்லை. தங்களுடைய கல்லூரிக்கு புகழ் கிடைக்கிறது என்பதற்காக, கல்லூரி நிர்வாகங்களே இந்த ஏமாற்று செயலை ஊக்குவித்தன!

அந்த சமயத்தில், ஒருநாள், சென்னையைச் சேர்ந்த கல்லூரி ஒன்றின் இரு மாணவர்கள், ஆர்வ மிகுதியால் கி.பி. 4000ம் வருடத்திற்கு டைம் மிஷினில் சென்றனர். சென்றவர்கள் சென்றவர்கள்தான். இன்றுவரை அவர்கள் திரும்பி வரவே இல்லை. அந்தக் கல்லூரி நிர்வாகம், மாணவர்களைத் தேடி இரண்டு ஆசிரியர்களை, மற்றொரு டைம் மிஷினில் அனுப்ப, அவர்களும் மறைந்து போயினர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உறவினர்கள் போலீஸில் புகார் கொடுத்தவுடன்தான் விஷயம் பெரிதானது. கல்லூரிகளின் பொறுப்பற்ற போக்கை பலரும் கண்டித்தனர். அறிவியல் முன்னேற்றங்கள் அழிவுக்குத்தான் இட்டுச் செல்கிறது என்று கூக்குரலிட்டனர். தொலைந்து போன மாணவர்கள், ஆசிரியர்கள் குடும்பங்களின் கண்ணீர் பேட்டி எல்லா மீடியாக்களிலும் வந்தது.

4000ம் வருடத்தில் உள்ள மர்மம் அனைவரையும் வசீகரித்தது. அதை அறிந்து கொள்ள உலகில் உள்ள பல நாடுகளில் இருந்து ஒரு வாரத்திற்குள், சுமார் 3000 பேர் சென்றனர். அந்தோ, பரிதாபம்! அவர்களில் ஒருவர் கூட திரும்பி வரவில்லை! அதன்பின்புதான், 4000 வருட ஆபத்தின் தீவிரம் எல்லா நாட்டிற்கும் புரிந்தது. வருடம் 4000 - சுருக்கமாய் Y4K - உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்கால பயணத்தை பல நாடுகள் தடை செய்தன. டைம் மிஷின்களில் இருந்த எதிர்கால பயண சாப்ட்வேர்கள் அழிக்கப்பட்டன.

என்றாலும், அரசாங்கமே, ரகசியமாய் டைம் டிராவல் மூலம் Y4K மர்மத்தை அறிய முயற்சிப்பதாகவும், அவைகளும் தோல்வியிலேயே முடிவதாகவும், பலவித வதந்திகள் உலவியது.

பல கதைகள் Y4K குறித்து வந்தன. இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் Y4K பற்றிய சினிமாக்கள் வந்தன. பேப்பர்களிலும், மேகசின்களிலும் Y4K பக்கம் ஒதுக்கப்பட்டது. கோவில்களில் Y4K ஸ்பெஷல் பூஜை நடத்தப்பட்டது. மந்திரிக்கப்பட தாயத்துக்கள், காப்புகள், கற்கள் அமோகமாக விற்பனை ஆனது. SMSன் பிரதான விஷயமாக Y4K இருந்தது.

அந்த பரபரப்பான சூழலில்தான், அன்று ரேகா என் அறைக்குள் வந்தாள். மினி ஷார்ட்ஸ், ஒய்-கட் ஸ்லீவ்லெஸ் ஷர்ட் சகிதம் அமர்க்களமாய் இருந்தாள். என்னுடைய லவ் புரப்போஸலுக்கு பதில் கூறத்தான் வந்துள்ளாளோ என்று நினைத்தேன்.

“சொல்... தேவதையே... சொல். சம்மதம் என்ற அந்த ஒற்றை வார்த்தையை உன் உதடுகள் உச்சரிக்கட்டும். ஐ லவ் யூ என்ற அந்த பொன்மொழி என் காதுகளில் தேனாகப் பாயட்டும்.”

அவள் என்னை மேலும் கீழும் பார்த்தாள்.

“என்ன... இருபதாம் நூற்றாண்டு டிராமா எதற்காவது ரிகர்சல் பண்றியா? இப்படி உளர்றே”, என்றாள்.

“என் லவ் புரப்போஸலுக்குத் தான் பதில் கூற வந்திருக்கிறாயோ என்று நினைத்தேன்”

“அதை ஒரு ஓரத்தில் தூக்கி வை, சதீஷ். நான் வேற ஒரு புரப்போஸலுக்கு வந்துள்ளேன்.”

“வேற புரப்போஸல்னா, லீ மெரிடியனில் டான்ஸ் கம் டின்னர், தென் ஒரு ரூம் ரிசர்வ் பண்ணி...”, என்று நான் இழுக்கவும் ஒரு முறை முறைத்தாள்.

“புத்தி போகுது பாரு. நான் சொல்ல வந்ததே வேறு.”

“சொல்லு, சொல்லு”

ஆனால் அவள் சொல்லத் தயங்கினாள். சுற்றும் முற்றும் திருட்டுப் பார்வை பார்த்தாள். என்னுடைய ஆர்வம் அதிகரித்தது. என்ன சொல்லப் போகிறாள்? மெதுவான குரலில் கூறினாள்.

“என் பிரண்டு கிட்ட இருந்து, செகண்ட் ஹாண்டில் ஒரு டைம் மிஷினை சமீபத்தில் நான் வாங்கினேன். அதில்... அதில் எதிர்கால பயணத்திற்கு உரிய சாப்ட்வேர் அழிக்கப்படாமல் உள்ளது.”

“அதனால் என்ன? கவர்மெண்டில் இன்பார்ம் பண்ணி அதை அழித்து விட வேண்டியது தானே?”

“நான் அதை அழிக்கப் போவதில்லை.”

“பிறகு?”

“அந்த மிஷின் மூலம்”

“மிஷின் மூலம்?”

“நானும் நீயும்....”

“நீயும் நானும்?”

“Y4Kக்கு போகப் போகிறோம்.”

பயணம் தொடரும்....

4 comments:

Vadielan R said...

தெய்வமே நல்ல கதை தொடங்கியுள்ளீர்கள் ஒரு திரில் Sci-Fi தொடர்கதையாக மாற்றி தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் எழுத்துக்களை ஆவலோடு படிக்கும் ஒரு வாசகன். நன்றி

varsha hiran mahi said...

Nice thrilling story...! Starting itself is in full gear..!

ஸ்ரீ தேவி said...

நன்றி வடிவேலன்!

ஸ்ரீ தேவி said...

நன்றி வர்ஷா!