Tuesday, August 12, 2008

அவனைத் தேடி...

நாங்கள் மூன்று பேரும் ஒருவனை தேடிச் சென்று கொண்டிருந்தோம். தலைவி உத்தரவு.
எங்கள் மூவரைத் தவிர இன்னும் பலர் வெவ்வேறு திசைகளில் சென்றிருந்தனர். தலைவியின் சொல் மீறி நாங்கள் ஒரு முறை கூட நடந்து கொண்டதில்லை.

நாங்கள் தேடிக் கொண்டிருப்பவன் சரக்கு இருக்குமிடம் அறிந்து வரப் போனவன். போனவன், போனவன்தான். திரும்பி வரவில்லை. எங்களுக்குத் தெரியும்; வராமல் இருப்பவன் எப்போதுமே வரமாட்டான் என்று. ஆனாலும் இது எங்கள் கடமை. எனவே தேடினோம்.

சரக்கு நிலையாக ஒரு இடத்தில் இராது. குறிப்பிட்ட ஐந்தாறு இடங்களில் 2 அல்லது 3 இடங்களில் தான் கிடைக்கும். ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் அதிகமாக கிடைக்கும். ஆனால் அதில் ஆபத்து அதிகம்.

அவர்களிடம் சிக்காமல் சரக்கெடுப்பது மிக கடினம்.

நாங்கள் இதுவரை தேடிய இடங்களில் அவனும் இல்லை, சரக்கும் இல்லை. முடிவில் வேறு வழியில்லாமல், ஆபத்தான பகுதிக்குச் சென்று தேட ஆரம்பித்தோம். ஆனால் அங்கு, நாங்கள் நடக்கக்கூடாது என்று நினைத்திருந்தது, நடந்திருந்தது. ஆம், அவன் சடலமாகிக் கிடந்தான். சிறிதேனும் உயிர் இருக்காதா என்ற ஆவலுடன் வேகமாக அவனை நோக்கிச் சென்றோம். ஆனால் அவன் இறந்து வெகு நேரம் ஆகிவிட்டது.

அவர்கள் உயர்ஜாதியினராவே இருக்கட்டும். அதற்காக, நாங்கள் திருடுகிறோம் என்ற ஒன்றிற்காக, இப்படி கண்மண் தெரியாமல் நடந்து கொள்ளவேண்டிய அவசியம் என்ன? வந்த கோபத்தில் அவனை கொன்றவர்களை அப்படியே கடித்துக் குதற வேண்டும் போல் இருந்தது. ஆனால் அப்படி செய்வதால் என்ன பயன்?

நாங்களும் அவன் கதிக்கு ஆளாக வேண்டியது தான்.

அடுத்தகட்ட நடவடிக்கையாக, மூவரும் சேர்ந்து அவனை புதைப்பதற்காக தூக்கிச் சென்றோம். யாரும் பார்க்காத வண்ணம் கொண்டு சென்று அவனைப் புதைத்தோம். பின் தலைவியிடம் சென்று விஷயத்தைக் கூறினோம். எங்களுக்காக வருத்தபடுவதற்கு அவருக்கு நேரமில்லை. அவன் வேலைக்கு வேறு ஒருவனை நியமித்து விட்டார்.

ஆனால் அவனும் திரும்பி வருவான் என்பது நிச்சயமல்ல. எங்கள் வாழ்க்கை அப்படி. ஏனெனில் நாங்கள் சாதாரண கட்டெறும்புகள் தானே!

-எழுதியவர் மீனு

2 comments:

Anonymous said...

:-) நல்லா இருக்கு.

இப்பதான் உங்களோட பழைய கதைகளையும் படித்தேன். நிறைய வித்தியாசமாக யோசிக்கிறீர்கள். வாழ்த்துகள்.

தொடர்ந்து எழுதுங்கள் :-)

காஞ்சனை said...

கதை நேர்த்தி நன்றாக இருக்கிறது.