Friday, January 14, 2005

சாக்ராஸ் தொடர்ச்சி

ப்ராஸஸருக்கு அருகிலிருந்த பச்சை LED எரிந்து சக்ஸஸ் என்றது.

வாவ்! சக்ஸஸ்! சாக்ராஸ் சக்ஸஸ்!! விஷ்வா மனம் பூராவும் சந்தோஷத்தில் துள்ளியது. அவன் இப்போது கி.பி.8032ம் வருடத்தில் அல்லவா இருக்கிறான். ஆனால் இந்த சந்தோஷம் சில நொடிகள்தான்.

மீட்டர்களை கவனித்த விஷ்வா மிகவும் குழம்பிவிட்டான். பயோ மீட்டர் 1 என்று காட்டிக் கொண்டிருந்தது.

லைஃப் மீட்டர் இரண்டு என காட்டியது.

'மனிதர்கள் அனைவரும் எங்கே போயினர்?' தனக்குள்ளே கேட்டுக் கொண்டே விஷ்வா வாகனத்திலிருந்து வெளியே வந்தான். ஒருபக்கம் அடர்ந்த மரங்களடங்கிய காடு. மறுபக்கம் மணல்வெளி. மணல்வெளியின் முடிவில் ஒரு ஆறு. இரண்டுக்கும் நடுவே சாக்ராஸ் நின்று கொண்டிருந்தது.
இங்கே எப்படி ஆறு வந்தது?

ஆறாயிரம் வருடங்களில் அவனது லேப் இருந்த இடம் இப்படி மாறிவிடும் என அவனது விஞ்ஞான மூளை உணர்த்தினாலும், அவனது மனதால் அதை ஜீரணிக்க முடியவில்லை.

பைனாக்குலரை கண்களில் வைத்து மணல் வெளியை பார்த்துக் கொண்டே நடந்தான். தூரத்திலிருந்து ஒரு புள்ளி தன்னை நோக்கி வேகமாக முன்னேறுவதை கவனித்தான்.

'வேகம் மணிக்கு நூறு மைல் இருக்கும்' மனதிற்குள் கணக்கு போட்டவன் சிறிது நேரத்தில் அது என்னவென்று கண்டுபிடித்து விட்டான்.

அது ஒரு மிருகம். உயரம் 25 அடி இருந்தது. அதன் முகம் கறுப்பாக நாயைப் போல் இருந்தது. உடல் ஒட்டகச் சிவிங்கி போல இருந்தாலும், பானை போல குண்டாக இருந்தது. வால் முதலையின் வால் போல் பத்தடி இருந்தது. அதன் வாயோரம் தெரிந்த பற்களில் மாமிச பட்சிணி என எழுதி ஒட்டியிருந்தது.
அது தன்னை நோக்கி வருவதை கண்டவுடன், மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற வெறியில் காட்டுக்குள் ஓட ஆரம்பித்தான். அவனைத் தொடர்ந்து காட்டுக்குள் நுழைந்த அந்த மிருகத்தின் வேகம் மரங்களின் அடர்த்தியால் வெகுவாக குறைந்துவிட்டது. அதைப் பயன்படுத்தி ஒரு பெரிய புதருக்குள் ஒளிந்துகொண்டான்.

இரவு வரை புதரில் ஒளிந்திருந்தவன், நடுநிசியில் தட்டுத் தடுமாறி காட்டை விட்டு வெளியேறினான்.

''சீக்கிரமாய் சாக்ராஸை கிளப்பி நமது காலத்திற்கு சென்றுவிட வேண்டும்'' யோசித்துக் கொண்டே சாக்ராஸை அடைந்து உள்ளே நுழைந்தவன் திடுக்கிட்டான்.

சர்க்யூட்ஸ் எல்லாம் சிதறியிருந்தன. பயோமீட்டரின் கண்ணாடி நொறுங்கியிருந்தது. ப்ராஸஸர் இரண்டு துண்டாகியிருந்தது. தன்னை பிடிக்க முடியாததால், அந்த மிருகம் சாக்ராஸின் உள்ளே அட்டகாசம் செய்திருக்கிறது.

''எப்படியும் திரும்பி போய்விடவேண்டும்'' மனதினுள் மீண்டும் மீண்டும் ஒலிக்க, சர்க்யூட்டுகளை மீண்டும் பொருத்த ஆரம்பித்தான். அனைத்து சர்க்யூட்டுகளையும் மீண்டும் அசெம்பிள் செய்ததும், ப்ராஸஸரை என்ன செய்வது என்று தெரியவில்லை.

ப்ராஸஸர் ஸ்பேர் கூட இல்லை. அதனை கையாலும் சரிபார்க்க முடியாதே. அது இல்லாமல் ஒன்றுமே இயங்காதே. இருந்தாலும் உடைந்த துண்டுகளைக் கொண்டு ஏதேனும் செய்ய முடியுமா என்று ஒரு மணிநேரம் ஆராய்ந்தான்.
வேஸ்ட்! அட்டர் வேஸ்ட்!! ப்ராஸஸர் இனி காயலான் கடைச் சமாச்சாரம்தான்!

''இனி நம் காலத்திற்குத் திரும்பி செல்லவே முடியாது!''

உண்மை பயங்கரமாய் மனதினுள் இறங்க இடிந்து போய் உட்கார்ந்தவன், வாழ்வில் முதன்முதலாய் வாய்விட்டு அழுதான்.

''சே! டெஸ்டிங்கிற்கு ஏன் ஆறாயிரம் ஆண்டுகள் முன்னோக்கி வந்தேன். எவ்வளவு பெரிய மடத்தனம்!

அழுகையினூடே புலம்பிக் கொண்டிருந்தவன், அப்படியே உறங்கிவிட்டான்.

காலையில் கண் விழித்ததும் மணி பார்த்தான். மணி பத்தை தாண்டியிருந்தது. அடுத்து என்ன செய்வது? பசி வேறு வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருந்தது.
எழுந்து வெளியே வந்தான். ஆற்றில் முகம் கழுவ எண்ணி ஆற்றை நோக்கி நடந்தான். களைப்பும், பசியும் ஒருசேர உடலை இமயமாய் அழுத்த, ஆற்றை நோக்கி தட்டு தடுமாறி முன்னேறினான்.

மெள்ள ஆற்றை அடைந்து, ஆற்றின் நீரால் முகத்தை அலம்பியவன், வாய் நிறைய நீரை அள்ளி அள்ளி குடித்தான். அப்படியே ஆற்றின் கரையிலேயே விஷ்வா சற்றுநேரம் அமர்ந்திருந்தான்.

தன்னருகே யாரோ வருவது போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. திரும்பி பார்த்தான். அவன் அருகில் ஒரு அழகிய பெண் வந்து கொண்டிருந்தாள்.
''யாரிவள்? ஆளில்லாத இவ்வுலகத்திலும் மனித உயிரா?'' வியப்போடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்தப் பெண் அவனருகே வந்தாள். பசியின் கிறக்கத்தில் விஷ்வா இருப்பதை அறிந்தவள், தன்னிடம் உள்ள இரண்டு பழங்களை நீட்டி..

''முதல் சாப்பிடு'' என்றாள்.

''தமிழ்தான் பேசுகிறாளா? இல்லை வேறு மொழியா?'' யோசித்துக் கொண்டே பழத்தை வாங்கியவன், உடனே விழுங்கியும் விட்டான்.

''வேற என்ன வேன்ம்?'' அவள் பேசியது தமிழ் தெரியாதவள் தமிழ் பேசியது போல் இருந்தது.

''போதும்'' என்றான் விஷ்வா.

இப்போதுதான் அவளை முழுதாக கவனித்தான். அவள் உடை வித்தியாசமாக அமைந்திருந்தது. பேண்ட் போல் ஒன்றை காலில் அணிந்திருந்தாலும் அது என்ன துணி என அவனால் கணிக்க முடியவில்லை. மேலே வழுவழுப்பான பொருளில் ஜிப்பா போன்ற ஒன்றை அணிந்திருந்தாள். மணிக்கட்டில் வெள்ளி போன்ற ஒரு உலோகத்தில் காப்பு போல் ஒன்றை அணிந்திருந்தாள்.

விஷ்வாவிடம் அவள் அவனைப் பற்றி விசாரித்தாள்.

அவனும் தான் டைம் மிஷின் கண்டுபிடித்தது, அதில் 8032ம் வருடத்திற்கு வந்தது, மிருகம் துரத்தியது, அவனது டைம் மிஷின் உடைந்தது எல்லாவற்றையும் தெளிவாகக் கூறினான்.

அவன் கூறி முடித்ததும் அவள் பெரிதாக சிரிக்க ஆரம்பித்தாள்.

''ஏன் சிரிக்கிறாய்?''

''உன்க்கும் என்க்கும் எவ்ளோ ஒற்றுமை. நான்ம் உன் போல்வே ஓர் டைம் மிஷினில் இந்த வருடத்திற்கு வந்து மாட் கொண்ட்ன். நீ 6000ம் வருசம் முன்னடி வந்திற்கே. நான் 3000ம் வர்சம் பின்னாடி வந்திர்கேன்.'' என்று சொல்லி மீண்டும் மீண்டும் சிரித்தாள்.

''என்ன சொல்கிறாய்? விவரமாகச் சொல்'' என்று கேட்டான் விஷ்வா.

அவள் கூறியதின் சாராம்சம் இதுதான்.

''என் பெயர் சிமி. நான் 11032 ஆண்டை சேர்ந்தவள். எங்களுக்கு ஒரு டைம் மிஷின் மிகவும் சேதமான நிலையில் கிடைத்தது. அதனை சரிசெய்து, நானும் உன்னைப் போல ஆர்வக் கோளாறால் 3000ம் வருடம் பின்னோக்கி வந்துவிட்டேன். நான் இங்கு வந்ததும் என்னுடைய டைம் மிஷினையும் ஒரு மிருகம் உடைத்துவிட்டது. நான் அந்த மிருகத்திற்கு சோர்ஸ் என பெயரிட்டுள்ளேன்.'' சொல்லி முடித்தவள் மறுபடியும் சிரித்தாள்.

''என்ன அழகாக சிரிக்கிறாள்?''

இப்போது அவனும் அவள் சிரிப்பில் கலந்து கொண்டான். சிரித்தவாறே அவள் கையைப் பிடித்தான். அவள் ஒன்றும் கூறவில்லை.

அவள் கையை தன் கைகளுக்குள் அணைத்துக் கொண்டு எதேச்சையாகக் கேட்டான்.

''ஆமாம் நீ வந்த டைம் மிஷினின் பெயர் என்ன சிமி?''

சிமி அவன் கண்களுக்குள் பார்த்துவிட்டு அழுத்தமாய் சொன்னாள்.

''சாக்ராஸ்.''

3 comments:

நவீன் ப்ரகாஷ் said...

படிக்கத்தூண்டுகிறது சாக்ராஸ் !

காஞ்சனை said...

நன்றாக உள்ளது. கால இயந்திரம் தவிர்த்து வித்தியாசமாக யோசியுங்களேன்.

கவிதைகளுடன்,
சகாரா.

யோசிப்பவர் said...

சகாரா,
கால இயந்திரம் தவிர்த்தும் நிறைய யோசித்திருக்கிறேன். படித்திருப்பீர்களே!