Friday, February 27, 2009

திரும்பத் திரும்ப

மிஸ்டர் சிவநேசனை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. சென்னைக்கு அருகே ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் சரியாக ஐம்பத்தெட்டு வயது வரை வேலை செய்து, ரிடையரானவர். அவரது இரண்டு பெண்களுக்கும் திருமணம் முடித்தது, அவரது மனைவி சென்ற ஆண்டு ஹிண்டு ஆபிச்சுவரி காலத்தில் இடம் பிடித்தது, அமெரிக்க மாப்பிளைகளுக்கு டிமாண்ட் இருந்த நேரத்திலேயே வளைத்துப் போட்டு, இரு பெண்களையும் அமெரிக்கா அனுப்பியது, போன்ற கதைக்குத் தேவையில்லாத விஷயங்களுக்குள் போய் நாம் நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஞாபகம் இருக்கட்டும், நேரம் மிகவும் முக்கியம்.

இப்படியாக வாழ்ந்து வந்த மிஸ்டர் சிவநேசனின் வாழ்க்கையில், அவருக்கு மட்டுமே தெரிந்த அதிமுக்கியமான/மில்லாத பிரச்சனை ஒன்றிருந்தது. சில விஷயங்கள் நடந்து முடிந்த பின், அவருக்கு அந்த நிகழ்ச்சி ஏற்கனவே முன்பு நடந்திருப்பதாக ஒரு தேசலான ஞாபகம் வரும். நிகழ்ச்சி என்றில்லை. சில சமயம் சில முகங்கள், சில பாதைகள், சில பயணங்கள், இவற்றை வாழ்க்கையில் முதல் முறையாக பார்த்தாலும், 'முன்னாடி பார்த்த மாதிரி இருக்கே!?' என்ற எண்ணம் எழும்.

உதாரணத்திற்கு சொல்வதென்றால், சிவநேசனின் முதல் பேத்தி பிறந்த பொழுது, குழந்தையை கையில் வாங்கியதும், 'இதே மாதிரி குழந்தை இதுக்கு முந்தி யாருக்கோ பிறந்ததே?! எப்போ...? எங்கே..?' என்று ஒரு நாள் பூராவும் மண்டையை உடைத்துக் கொண்டார். கல்யாணமாகி ஹனிமூனுக்கு கொடைக்கானல் சென்றபொழுது, மனைவியுடன் ஏரியை சுற்றும்பொழுது, தான் ஏற்கனவே இதே முறையில் அந்த ஏரியை சுற்றியிருப்பதாக அவருக்குத் தோன்றியது. அவர் அதற்குமுன் கொடைகானல் சென்றதேயில்லை. அவர் இந்தக் கதையை படிக்க நேர்ந்தால் கூட, இதை இதற்கு முன் எப்பொழுதோ படித்ததாக அவருக்கு நினைவிருக்கக் கூடும்.ஆனால் இந்த ஞாபகங்கள் எல்லாமே, அந்தக் குறிப்பிட்ட சம்பவங்கள் நடந்த பிறகோ, அல்லது அந்த முகங்களைப் பார்த்த பிறகோதான் அவருக்குத் தோன்றும். அதற்கு முன்பே இப்படி பார்க்கப் போகிறோம், நடக்கப் போகிறது என்ற ஈ.எஸ்.பி.யெல்லாம் கிடையாது.

அவர் தனது இந்த நினைவுகள் குறித்து பல முறை யோசித்திருக்கிறார். சிறு வயதில், இவையெல்லாம் முன் ஜென்ம ஞாபகங்கள் என்று கூட கொஞ்ச நாள் நம்பிக் கொண்டிருந்தார். கொஞ்சம் அறிவியல் தெரிந்தவுடன், ஸ்கீஸோஃப்ரீனியாவின்(Schizophrenia, சரியாக உச்சரித்துவிட்டால் உங்கள் முதுகில் நீங்களே ஒரு முறை தட்டிக் கொடுத்துக் கொள்ளவும்) அறிகுறியாக இருக்குமோ என்று சந்தேகம் வந்தது. ஆனால் இந்த நினைவுகளால் அவரது வாழ்க்கை இதுவரை ஒரு முறைகூட பாதிக்கப்பட்டதில்லை என்பதால், அதிகம் கவலைப்படுவதில்லை.

இதுவரை பாதிக்கப்பட்டதில்லை, அதாவது இந்த அறுபத்தி இரண்டு வயது வரை. இந்த வருடப் பிறந்த நாளுக்கு அவரது நண்பர்(பெயர் ஏதாவது வைத்துக் கொள்ளுங்கள்) வடநாட்டு யாத்திரைக்கான பேக்கேஜை பரிசளித்தார். மிஸ்டர் சிவநேசனுக்கும் வெகுநாட்களாக வட இந்திய கோயில்களை தரிசிக்கும் ஆசை இருந்ததால், உடனே கிளம்பி விட்டார். பதினாறாவது நாள் காசிக்கும் வந்து இறங்கிவிட்டார்.

விஸ்வநாதர் தரிசனம் முடித்து, கோயிலை சுற்றி வரும்பொழுது, அந்த நினைவு - "இந்தக் கோயிலுக்கு இதற்கு முன் எப்பொழுது வந்திருக்கிறோம்? எப்பொழுதோ பார்த்த மாதிரி இருக்கே?!'. யோசித்தவாறே வாசல் வழியாக வெளியேறப் போனார். அபொழுதுதான் அந்தப் பெண் குறுக்கே வந்தாள்.(கோயிலுக்குள் கெட்டெண்ணமெல்லாம் கூடாது. அதனால் வயது, இன்ன பிற விவரங்கள் தர முடியாது).

"யஹ் ராஸ்தே மே(ங்) நஹீ(ன்) ஜாயியே. உதர் மே(ங்) ஜாஓ."

மிஸ்டர் சிவநேசனுக்கு ஹிந்தி தெரியாதென்றாலும், ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. 'இந்த வழியாகப் போகாதீர்கள் என்கிறாள். மற்ற எல்லோரும் போய்க் கொண்டுதானே இருக்கிறார்கள்?'. அவள் காட்டிய வழியை பார்த்தார். அந்த வாசல் வழியாகவும் பக்தர்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த வாசல் வழியாகத்தானே இவரோடு டூர் வந்தவர்கள் எல்லோரும் வெளியேறினார்கள். 'அவர்களோடு சேர்ந்து கொள்வதே உத்தமம்'. என்று முடிவெடுத்து, மறுபடி அந்த வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

"ஸார் ப்ளீஸ் யூஸ் தட் வே." அந்தப் பெண் இப்பொழுது பாஷை மாறினாள்.

சிவநேசனுக்கு கோபம் வந்தது. ஏனென்றால் அவர் போக நினைத்த வாசல் வழியே நிறைய பேர் வெளியேறினார்கள். ஆனால் அந்தப் பெண் தன்னை மட்டும் வேறு வழியாகப் போகச் சொல்வானேன்?

"வொய் கேன்ட் ஐ யூஸ் திஸ் வே?"

அந்தப் பெண் இவ்வளவு எதிர்ப்பை எதிர்பார்க்கவில்லை. "யூ கேன் ஸார். பட் ப்ளீஸ் யூஸ் தட் ஒன்." என்றாள் மறுபடி.

அவளை ஒரு முறை கோபமாக முறைத்துவிட்டு, அவர் போக நினைத்த வாசலை நோக்கி வேகமாக நெருங்கினார். 'இந்தப் பெண்ணை எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறதே?!' நினைத்தபடி படியில் கால் வைக்... "மிஸ்டர் சிவநேசன், ஒரு நிமிஷம்" அதே பெண்ணின் குரல்தான். திரும்பினார்.

"உனக்கு என் பேர் எப்படித் தெரியும்?" என்றார் ஆச்சர்யமாக.

"அது.., வாங்க பேசிக்கிட்டே போலாம்." என்றவாறு அவள் காட்டிய வாசலை நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தாள்.

"அட நில்லும்மா. எதுவா இருந்தாலும் இங்கேயே பேசு. ஏன் என்னை அந்த வாசல் வழியா அனுப்புறதில இவ்வளவு குறியாக இருக்கே?"

அவள் சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். முகத்தில் சொல்லலாமா வேண்டாமா என்று குழப்பம். பிறகு ஒரு முடிவிற்கு வந்து, "அந்த வழியாப் போனீங்கன்னா நீங்க இறந்து போயிருவீங்க. அதனால்தான் இந்த வழியாப் போகச் சொல்றேன்."

சிவநேசன் அவளை நம்பிக்கையில்லாமல் பார்த்தார். 'இந்த ஊரில் இந்த மாதிரி நிறைய கேஸ் திரியுது'. "என்னம்மா ஜோஷ்யமா? எனக்கு நம்பிக்கையில்லை. வேற யார்கிட்டேயாவது போய்ச் சொல்லு." என்றவாறு திரும்பப் போனார், "மிஸ்டர் சிவநேசன், இது ஜோஷ்யம் இல்லை. நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க." மறுபடி நின்றார், "சரி சொல்லு."

அந்தப் பெண் சிறிது நேரம் சிந்திப்பது தெரிந்தது. பின்னர், "மிஸ்டர் சிவநேசன். என்னோட பெயர் பூர்ணா. இது ஒரு விஞ்ஞான ஆராய்ச்சி. நீங்க அதில ஒரு என்டிட்டி. அதான் சொல்றேன், அந்த வாசல் வழியாப் போங்க."

"என்னம்மா சொல்றே? விஞ்ஞான ஆராய்ச்சிக்கு நான் எதுக்கு அந்த வாசல் வழியாப் போகனும். யாரைக் கேட்டு என்னை என்டிட்டி ஆக்கினே?"

"மிஸ்டர் சிவநேசன். நாங்க யாரையும் கேக்க வேண்டியதில்லை. நான் இப்போ சொல்றது உங்களுக்கு நம்பறதுக்கு கஷ்டமா இருக்கும். ஆனா அதுதான் உண்மை. எங்களோட விஞ்ஞான ஆராய்ச்சி, இந்த பூமிதான். இது எங்களால் உருவாக்கப்பட்டது. இதில் ஏற்பட்ட ஒவ்வொரு மாறுதலும் ஒரு விஞ்ஞான விதிக்குட்பட்டது. உங்களுக்கு எளிமையா புரியற மாதிரி சொல்லனும்னா, இந்த பூமி ஒரு சிமுலேஷன் ப்ரோக்ராம் மாதிரின்னு வச்சுக்கங்களேன். இதில் ஆரம்ப நிலைகளை நாங்கள் உண்டாக்கினோம். இந்த பூமிக்கான விஞ்ஞான விதிகளை ஏற்படுத்தினோம். அந்த விதிகளுக்கேற்ப, இந்த பூமி மாறுதலடைந்து வருகிறது. இந்த மாறுதல்களின் மூலம் எங்களுக்குப் பல கேள்விகளுக்கான விடைகள் கிடைத்திருக்கின்றன. இந்த மாறுதல்களின் முக்கிய தூண்டுகோல்களாக சிலர்/சிலது இருக்கும். அப்படிப்பட்ட சிலதில் நீங்களும் ஒருவர். ஆனால் நீங்கள் இந்த சிமுலேஷன் ப்ரோக்ராமில் ஒவ்வொரு முறையும், இந்த இடம் வந்த பின், இந்த வாசலையே தேர்ந்தெடுக்கிறீர்கள். அடுத்தப் பத்தாவது நிமிடம் இறந்தும் போகிறீர்கள். இந்த முறையும் நீங்கள் அதே வாசல் வழியே வெளியேறினால் அதே முடிவே வரும். சோதனையில் ஒவ்வொரு முறையும் வேறு வேறு தீர்மானங்கள் செய்தால்தான் முடிவுகள் வேறு மாதிரி எங்களுக்குக் கிட்டும். உங்கள் வாழ்க்கையில் இந்தத் தீர்மானங்களை மாற்றி எடுக்கும் வாய்ப்புகள் பல அமைந்திருந்தன. ஆனால் நீங்களோ ஒவ்வொரு முறையும் எப்பொழுதும் எடுக்கும் தீர்மானங்களையே எடுத்தீர்கள். இது உங்களுக்குக் கடைசி வாய்ப்பு. இதிலும் நீங்கள் பழைய தீர்மானத்தை எடுப்பதானால், எங்களுக்கு மேலும் அறுபத்தி இரண்டு வருடங்கள் வீண். அதனால்தான் உங்களைத் தடுத்து, கடைசித் தீர்மானத்தை மாற்றி அமைக்க, நான் இந்த உருவில் வந்திருக்கிறேன்."

மிஸ்டர் சிவநேசன் அவளைக் கிராக்தனமாக, லூஸ்தனமாக, பைத்தியக்காரத்தனமாக, இன்னபிறத்தனமாகப் பார்த்தார், "நீ சொல்றது எதுவும் நம்புற மாதிரி இல்லியேம்மா? அப்ப இதுக்கு முந்தின தடவை நடந்ததெல்லாம் என்னோட முன் ஜென்மமா?"

"முன் ஜென்மமுமில்லை, பின் ஜென்மமுமில்லை. ஒவ்வொன்றும் ஒரு இட்டரேஷன்; சுற்று. அவ்வளவுதான்."

"சரி. நீ சொல்றது உண்மைன்னே வச்சுக்குவோம். உங்களோட இந்த ஒவ்வொரு சுற்றிலேயும், பூமி விஞ்ஞானரீதியா பல முன்னேற்றங்கள் அடைஞ்சிருக்கு. இந்த சுற்றில இருக்கிற விஞ்ஞான வசதிகள் போன சுற்றில் கிடையாது. அப்படியிருக்க போன சுற்றும், இந்த சுற்றும் எப்படி ஒரே மாதிரி இருக்கும்?"

"மிஸ்டர் சிவநேசன், இந்த விஞ்ஞான வளர்ச்சிகள் எல்லாமே சிமுலேஷனில் ஒரு பகுதிதான். வேறு வேறு என்டிட்டிகள் எடுத்த வேறு வேறு தீர்மானங்களால் நிகழ்ந்தவை. அவை உங்களுடைய சுற்றுகளை வேறுபடுத்திக் காட்டினாலும், அவை உங்களது தீர்மானங்களைப் பாதிக்கவில்லை. அதனால் உங்களது சுற்று எப்பொழுதும் ஒரே மாதிரி ஆரம்பித்து ஒரே மாதிரி முடிந்து கொண்டிருக்கிறது. இந்த முறையாவது அதை மாற்றியாக வேண்டும். மிஸ்டர் சிவநேசன். நேரம் அதிகமில்லை. பேசிக் கொண்டே இருக்க முடியாது. நீங்கள் சீக்கிரம் தீர்மானித்தாக வேண்டும். அந்த வாசல் வழியாக வெளியேறுங்கள்."

மிஸ்டர் சிவநேசனுக்கு சரியாக எதுவும் புரியவில்லை. எதையும் தீர்மானிக்க முடியவில்லை. சிறிது நேரம் யோசித்தார்.

அந்தப் பெண்ணை இப்பொழுது காணவில்லை. மிஸ்டர் சிவநேசன் சுற்றிலும் ஒரு முறை பார்த்தார். மெதுவாக நடந்து வாசலைக் கடந்து வெளியேறினார்.

6 comments:

நாமக்கல் சிபி said...

!?

!?

!?

!?!?

!?!?

!?!?

!?!?

!?

நாமக்கல் சிபி said...

ஏன் இந்த கொலைவெறி?

Bleachingpowder said...

//மிஸ்டர் சிவநேசன் சுற்றிலும் ஒரு முறை பார்த்தார். மெதுவாக நடந்து வாசலைக் கடந்து வெளியேறினார்//

எந்த வாசல்னு சொல்லாம சஸ்பன்ஸா முடிச்சுடீங்களே :(, இல்ல எனக்கு தான் புரியலையா.

யோசிப்பவர் said...

சிபி,
நானும் அதையேதான் கேட்கிறேன். ஏன் இந்த கொலைவெறி?!?!

யோசிப்பவர் said...

//எந்த வாசல்னு சொல்லாம சஸ்பன்ஸா முடிச்சுடீங்களே :(, இல்ல எனக்கு தான் புரியலையா.//

ப்ளீச்சிங்,
அது எந்த வாசலா இருக்கும்? நீங்களே சொல்லுங்களேன்!

sarav said...

//இன்னபிறத்தனமாகப் பார்த்தார்//