Thursday, March 03, 2005

கண்ணுக்கு தெரியாத கபோதி

'என்ன இது! எதையோ மெத்துனு மிதிச்சது மாதிரி இருந்ததே! பாம்பா இருக்குமோ?!?', மனதில் எழுந்த கேள்வியுடன் சரவணன் ஸ்டேசனில் இருந்து வெளியே வந்த பொழுது,"ஹல்ல்ல்ல்லோ சரவணா!!!", குரல் கேட்ட திசையில் குறுந்தாடியுடன் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

"நீஈஈ..! அருண் இல்லே! டேய்ய்ய்ய்! எப்படி இருக்கே? பெரிய ஆளாய்ட்ட போலருக்கு. அடிக்கடி பேப்பர்ல பார்க்கிறேன் உன்னை."

"என்ன போட்டிருக்கு?"

"கலாமுக்கு அடுத்து இவர்தான்னு."

அருண் லேசாய் சிரித்துக் கொண்டான்.

"வீட்டுக்கு வாயேன். எதிர்தாப்லேதான் வீடு." - அருண்.

"சரி வர்றேன். ஆனால் காபி கொடுக்கனும். அப்பதான் நான் விஞ்ஞானி அருண் வீட்ல காபி குடிச்சிருக்கேன்னு சொல்லிக்க முடியும்."

"கண்டிப்பா."

அருண் வீடு பெரிதாய் இருந்தது. வலது பக்கத்து கதவு
'LAB'
'Not Allowed'
என்றது. அதன் உள்ளே சென்றார்கள். விதவிதமான அளவுகளில் கூண்டுகள். அதில் எலிகள், முயல்கள், குரங்குகள், etc.,. ஒரு பெரிய கூண்டு காலியாய் இருந்தது.

"அருண்! நீ என்ன ஆராய்ச்சி பண்றே? நீ ராக்கெட் அனுப்பிக்கிட்டு இருப்பேன்னு நினைச்சேன். இங்கே ஒரே எலியும், முயலுமா இருக்கு? நீ பிஸிக்ஸ் தானே?"

"நான் ஒரு பயோ பிஸிக்கல் விஞ்ஞானி. அதுனாலதான் இதெல்லாம்."

"இப்ப நீ என்ன ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கே?"

"நீ Hollow Man படம் பார்தியா?"

"பார்த்தேன். ஏன் நீயும் அதே மாதிரி மனுஷனை மாயமா மறைய வைக்கப் போறியா?"

"ஆமாம்."

"எப்படி? சிவப்பு கலர் மருந்தை இன்ஞெச்ட் பண்ணா மறையற மாதிரியா!?!"

"இல்ல. இது கதிர்களின் வேலை. அதோ இருக்கு பார்த்தியா? அந்த மெஷினுக்குள்ள ஒரு மனுஷனையோ, இல்ல வேற ஏதாவது உயிரையோ வைச்சுட்டு, ஒரு பட்டனை அமுக்கினா, அவங்க கண்ணுக்கு தெரியாம மறைஞ்சிடுவாங்க."

"நிஜமாவா!!! இது எப்படி சாத்தியம்?!?"

"சாத்தியம். நீ H.G.Wells எழுதின Invisible Man படிச்சிருக்கியா?"

"படம் பார்த்திருக்கேன்."

"இதுவும் அதே கான்சப்ட்தான். ஒரு பொருள் ஏன் உன் கண்ணுக்கு தெரியுது தெரியுமா? அந்த பொருளின் மேல் படுகிற ஒளி அலைகள் ஒளி பிரதிபலிப்பும், ஒளி விலகலும் செய்யப்பட்டு, சுற்றிலுமுள்ள ஒளி அலைகளில் இருந்து வித்தியாசப்பட்டு உன் கண்களை அடைகிறது. நீ பார்ப்பது அந்த ஒளி வித்தியாசங்களைத்தான். இந்த வித்தியாசங்கள் இல்லாமல் செய்து விட்டால், அந்த பொருள் உன் கண்ணுக்குத் தெரியாது. இந்த வித்தியாசங்களை ஒளி விலகு விகிதம் என்று சொல்வார்கள். உதாரணத்துக்கு, தண்ணீரின் ஒளி விலகு விகிதமும், கண்ணாடியின் ஒளி விலகு விகிதமும் ஏறக்குறைய சமம். அதனால் கண்ணாடியை தண்ணீரில் வைத்தால், அது கண்ணுக்கு தெரியாது."

"இப்ப நீ என்ன சொல்ல வர்ரே?"

"எப்படி கண்ணாடி தண்ணீரில் தெரியாதோ, அதே மாதிரி மனித உடல் காற்றில் தெரியாமல் செய்யனும். அதுக்கு மனித உடலின் ஒளி விலகு விகிதத்தை, காற்றின் ஒளி விலகு விகிதத்துக்கு மாத்தனும். அப்ப மனித உடல் ஒளி ஊடுருவக் கூடியதா மாறிடும். கண்ணுக்கு தெரியாம மறைஞ்சிடும்!!"

"சரியா புரியலை. இருந்தாலும் நல்லாருக்கு. உன் வேலை எவ்வளவு முடிஞ்சிருக்கு?"

"முடிஞ்சிருச்சி, ஆனா,"
"சார், பால்ல்ல்..."

"கொஞ்சம் இரு, பால் வாங்கிட்டு வந்துர்றேன்."- அருண்.

சரவணன் அந்த மெஷினை ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தான். அது ஒரு டெலிபோன் பூத் போலத்தான் இருந்தது. சிறிய வாசல். மூன்றுக்கு மூன்று அறை. அதன் உள்ளே போய், அதன் சுவர்களில் குறுக்கும் நெடுக்குமாக பொருத்தியிருந்த பைப் முனைகளைத் தொட்டுப்பார்த்தான்.

'இதிலிருந்துதான் கதிர்கள் வெளிப்படும் போல!!!'

அதிலிருந்து வெளியேற அதன் வாசல் வெளிச்சுவரில் கை வைத்தான். அப்பொழுது அங்கேயிருந்த சிவப்பு பட்டனில் தவறுதலாய் கைப்பட்டு அழுத்தி விட, அடுத்த வினாடி அவன் மண்டைக்குள் வெடி வெடித்தாற்போல இருந்தது.

. . . . . . .

கொஞ்ச நேரம், ஒன்றும் புரியவில்லை! ஒன்றும் தெரியவில்லை! தெரிந்ததெல்லாம் வெள்ளை. வெள்ளையை தவிர வேறோன்றும், வெள்ளைதான் தெரிந்தது.

"சரவணா! சரவணாணா!" அருண் குரல் மட்டும் கேட்டது.

"அருண்! அருண்ண்ண்!!!!"

"எங்கே இருக்கிறாய்?"

"இங்கே! இங்கே மெஷினுக்குள் இருக்கிறேன்."

"என்ன செய்தாய்?" சொன்னான். "ஓ! காட்!!!"

"ஏன் ஒரே வெள்ளையாய் இருக்கிறது? ஒன்றுமே தெரியவில்லையே!"

"ஸாரி மை பிரெண்ட். நீ கண்ணுக்கு தெரியாதவனாகிவிட்டாய்! அதே நேரத்தில் கண்ணும்!!"

சரவணன் மனதில் கலவரம் மூண்டது.

"ஏ..ன்? மெஷினில் தப்பா?"

"இல்லை. சரவணா, கொஞ்சம் பொறுமையாய் நான் சொல்வதைக் கேள். Physicsபடி உன் கண்களில் உள்ள லென்ஸ் ஒளியை உன் ரெட்டினாவில் குவிக்கிறதுனாலதான் உனக்கு கண் தெரியுது. இப்ப ஒளி உன் உடலில் பட்டு விலகாததால், அதாவது ஒளியை உன் கண்ணில் உள்ள லென்ஸ் குவிக்காததால், ஒளி உன் ரெட்டினாவில் குவியவில்லை. மேலும் உன் ரெட்டினாவினால் ஒளி தடுக்கப்பட்டால்தான் உன் மூளை அந்த பிம்பத்தை புரிந்து கொள்ளும். இப்போ ஒளி உன் ரெட்டினா வழியா ஊடுருவி போயிடறதுனால, உன்னால பார்க்க முடியாது."

"எவ்வளவு நேரத்துக்கு?"

"இனிமே எப்பவும்."

"அடப்பாவி! போச்சே!! என்ன செய்வேன்? நீயும் உன் ஆராய்ச்சியும் நாசமாய் போக!!!"

சரவணன் கத்த ஆரம்பிக்க...

"சரவணா! அவசரப்படாதே. இப்ப நீ இருக்கிற நிலைமைல உனக்கு இன்னொருத்தரோட உதவி தேவை. உன்னை நான் பார்த்துக்கிறேன். நீ பதற்றபடாமல் இரு. இப்ப இதுக்கு மாற்று கண்டுபிடிக்க உன்னைத்தான் உபயோகப்படுத்தியாகனும். நீ என் கூட கொஞ்சம் கோ-ஆபரேட் பண்ணனும். சரவணா இப்ப எங்கே இருக்கே?"

சரவணனுக்கு ஏனோ குரங்கு கூண்டுக்கு பக்கத்தில் பார்த்த காலிக்கூண்டு ஞாபகம் வந்தது.

"உன்னை நம்ப..." அவன் ஆரம்பிப்பதற்க்குள், அருண் அவனை இரும்புப்பிடியாய் பிடித்தான்.

ரிப்ளெக்ஸ் ஆக்ஸனில் சரவணன் உத்தேசமாய் குறி வைத்துக் குத்த, அருண் மூக்கில் விழுந்தது. அருண் பிடி தளர... உத்தேசமாய் வாசலை நோக்கி ஒட ஆரம்பித்து, தட்டு தடுமாறி வாசலை கண்டுபிடித்தபொழுது பின்னால்"சரவணா! ஓடாதே! சொன்னாக் கேளு."

ஸ்டேசன் வலது பக்கம். ஸ்டேசனை குறிவைத்து குருட்டுத்தனமாய் ஓடினான். வழியில் ஒரு கல்லை எத்தி, நாயை மிதித்து, தாத்தாவை இடித்து...

'எவ்வளவு இரைச்சல்! மெயின் ரோட்டுக்கு வந்து விட்டேனோ?!?...'

கேள்வி அவன் மனதில் எழுந்தபொழுது, எதிரே வந்த அரசு பேருந்து அவனை அடித்து ஸ்டேசன் வாசலில் வீழ்த்தியது.

'என்ன இது! எதையோ மெத்துனு மிதிச்சது மாதிரி இருந்ததே! பாம்பா இருக்குமோ?!?', மனதில் எழுந்த கேள்வியுடன் முரளி ஸ்டேசனில் இருந்து வெளியே வந்தான்.

4 comments:

ROSAVASANTH said...

//கலாமுக்கு அடுத்து இவர்தான்னு.// இது ரொம்ப ஓவரா இல்லை? கலாம் விஞ்ஞானத்தில் அப்படி என்ன சாதித்தார்?

(மத்தபடி கதை சுவாரசியமா இருந்தது.)

பினாத்தல் சுரேஷ் said...

base theme suttufied from Ya.Perelman's Fun With Physics!

வீ. எம் said...

பாராட்டுக்கள். நல்ல கதை

V M

ஓவியன் said...

If its your original theme ;-) .. then its a good one .